Sunday, 1 March 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-110: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-110:  
திருக்குறளில் அரசியல்:
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 அரசியலில் சிற்றினம் சேராமை என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் ‘தெரிந்து செயல்வகை” என்னும் அதிகாரத்தில் அரசியல் குறித்து திருவள்ளுவர் என்ன குறிப்பிட்டுள்ளார் என்று பார்ப்போம். 
தெரிந்து செயல்வகை என்பது எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக அந்தச் செயலின் விளைவுகள், நன்மை-தீமைகள், அதன் சூழல், காலம், வலிமை மற்றும் எதிரிகள் ஆகியவற்ளை ஆராய்ந்து பிறகு செயல்படுதலைக் குறிப்பிடுகிறது. 
அரசியலில் தலைவராக இருப்பதற்கு இந்த விடயம் மிக முக்கியமானது ஆகும். அரசியல் மற்றும் ஆட்சித் திறனில் முடிவெடுப்பதற்கு இது அவசியமாகிறது. ஏனெனில், ஒரு தலைவன் எடுக்கக் கூடிய முடிவுதான் அந்த நாட்டை வளமானதாகவோ அல்லது வீழ்ச்சிக்கோ கொண்டு செல்வதற்குக் காரணமாக அமைகின்றது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், அரசியல் சூழலில், ஒரு சிறு தவறு அல்லது தவறான கணக்கீடு முழு நாட்டையும் பேரிடருக்கு உள்ளாக்கும் என்பதால், "தெரிந்து செயல்" என்பது ஆட்சியாளர்களுக்கு மிக முக்கியமான தகுதியாகக் கருதப்படுகிறது.

இந்த அதிகாரம் வெறும் தார்மீக ஆலோசனைகளை மட்டும் வழங்காமல், நவீன மேலாண்மைத் தத்துவங்களில் கூறப்படும் ‘வியூகத்துடன் திட்டமிடல்”; (Strategic Planning), 'இடர் மேலாண்மை' (Risk Management) மற்றும் 'ஆற்றல் பகுப்பாய்வு' (SWOT Analysis) போன்ற உயர்நிலை நிர்வாகக் கோட்பாடுகளைத் தன்னுள் கொண்டுள்ளது.
ஏந்த ஒரு அரசின் செயல்பாட்டிற்கு நிதி ஆதாரம் முக்கியமானதாகவும். சரியான முறையில் திட்டமிட்டால் ஒரு அரசால் நிறைய வருவாயினை மக்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஏற்படுத்த முடியும். சரியாக திட்டமிடவில்லையெனில் கடன் சுமை அதிகரிக்கும் அதனைச் சமாளிக்க மக்கள் மீது வரிச் சுமை அதிகரிக்கும். 
முதல் குறளில் என்ன கூறியிருக்கிறார் என்று பார்ப்போமா?
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.-461  என்கிறார்.  அதாவது எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் முன்பாது, அது தரும் நன்மை, அது தரும் தீமை மற்றும் அதன் விளைவுகள் ஆகிய எல்லாவற்றையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்கிறார். அரசியல் நோக்கில் சொல்ல வேண்டுமெனில், ஒரு அரசாங்கம் புதிய சட்டம் கொண்டு வரும் போது, அதன் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகளை ஆராய வேண்டும் என்று நாம் கொள்ளலாம். முன்பே குறிப்பிட்டது போல வரி உயர்த்துவது அரசுக்கு வேண்டுமானால் ஆதாயம் தரலாம். ஆனால், மக்களுக்கு அது பெருஞ்சுமையை ஏற்படுத்தும் .
அரசியல் தலைப்பின் முந்தைய அதிகாரங்களில் நாம் பார்த்ததுபோல எந்த ஒரு தலைவனும் தகுதியான நபர்களைப் பக்கத்தில் வைத்துக் கொள்ளுவதும் சிறுமை எண்ணம் கொண்டவர்களிடம் இருந்தும் விலகி இருந்து பேரினத்துடன் தங்களை இணைத்துக் கொள்வது சாலச் சிறந்தது என்று பார்த்தோம். பின்வரும் குறளிலும் அக்கருத்திற்கு வலு சேர்க்கிறார். 
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.-462
அதாவது, தெரிந்தவர்களுடன் ஆலோசித்து, ஆராய்ந்துசெயல்படுபவர்களுக்கு முடியாதது என்று எதுவும் இல்லை. அனைத்தும் எளிதில் கை கூடும்.
ஒரு நல்ல தலைவர் என்பவர் தங்களுடைய அமைச்சர்கள், நிபுணர்கள், ஆலோசகர்கள் இவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்க வே;;ண்டும் என்கிறார் திருவள்ளுவர். குறிப்பாக, பாதுகாப்பு, பொருளாதாரம், கல்வி போன்ற துறைகளில் நிபுணர்களின் கருத்து அவசியம் என்பதனை உணர வேண்டும். 
சிலபேர், மிகப் பெரிய இலாபம் வரும் என்று கருதி தன்னுடைய சொத்தை விற்றுக் கூட பங்குச் சந்தையில் முதலீடு செய்வர், சரியான கணக்கீடு இல்லாதநிலையில் அவர் பங்குச் சந்தையில் சரிவை எதிர் கொள்ளும் போது, தன்னுடைய சொத்தையும் சேர்த்து இழக்கும் நிலை உருவாகிறது. இதுபோன்ற நிகழ்களை முன்னரே நமது திருவள்ளுவர் சாடுகிறார். 
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடையார்-463  என்கிறார். அதாவது, எதிர்கால இலாபத்திற்காக அடிப்படையை இழக்கும் செயலை அறிவுடையார் செய்யமாட்டர் என்கிறார். அரசியல் தலைவரானவர் தன்னுடை தற்கால இலாபத்திற்காக நாட்டின் நீண்ட கால நலனை இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை வாக்குறுதிகள் பெறுவதற்காக அளிப்பதைக் கூட இதன் கணக்கில் கொள்ளலாம். 
தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் மற்றும் தாமதத்திற்கும் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு


No comments:

Post a Comment