Wednesday, 4 March 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-111: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-111:   
திருக்குறளில் அரசியல்:
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 . இந்த வாரம் ‘தெரிந்து செயல்வகை” என்னும் அதிகாரத்தில் அரசியல் குறித்து திருவள்ளுவர் என்ன குறிப்பிட்டுள்ளார் என்பதின் கடைசி விரத்தினை தொடர்ந்து பார்ப்போம். 
அரசியலில் ஒரு சிலரே தீர்க்கமாக ஆராய்ந்து தெளிந்த் பின்பு முடிவுகளை எடுக்கின்றனர். பலர் ஆராயாமல், பிறர் சொல்லைக் கேட்டு அல்லது தன்னை விட மூத்தவர்கள் அல்லது தன்னை விட அதிகாரம் மிகுந்தவர்களின் அழுத்தத்தினால், பல வித வாக்குறுதிகளை, தன்னால் செய்ய முடியாது என்றும் தெரிந்தும் கூட சில சமயங்களில் சொல்லி விடுவதுண்டு. தன்னுடைய தவறை இயலாமையை மறைக்க அரசியல் தந்திரம் என்று கூட மழுப்புவது உண்டு. இதுபோன்று ஆராயாமல் செயலை அறிவுடையோர் செய்ய மாட்டார் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் பின்வரும் குறளில்,
தெளிவிலதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சுபவர்-464
அதாவது தெளிவில்லாத செயலை அறிவுடையவர் தொடங்கமாட்டார் என்று குறிப்பிடுகிறார். அவ்வாறு சொல்வது அரசியலில் தோல்வியை ஏற்படுத்தும் என்று உணர்த்துகிறார்.  அப்படி திட்டமிடாமல் செயல்படும் செயல்கள் மற்றவர்கள் முன்பு தோல்வியை ஒப்புக் கொண்டது போல அமையும், குறிப்பாக எதிர்க் கட்சியினரும், எதிரிக் கட்சியினரும் எள்ளி நகையாடுவர். இதனையே அடுத்தக் குறளில், 
வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு.-465 என்று குறிப்பிடுகின்றார். அதாவது திட்டமிடாமல் செயல்படுவது, எதிரிகளுக்கு உதவுவது போன்றது என்று குறிப்பிடுகின்றார். 
அரசியலில தூங்கும் போது கூட காலை ஆட்டிக் கொண்டே தூங்க வேண்டும். இலை;லை எனில் இறந்து விட்டார் என்று கூறி எடுத்து அடக்கம் செய்து விடுவார்கள் என்று அரசியல்வாதிகள் கூறுவதுண்டு. ஆகவே, நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் அரசியல் தலைவர்கள் அதற்கு பதிலளிக்க வேண்டும். அதே போல, எந்த விடயம் செய்ய வேண்டும் எதனை செய்யக் கூடாது என்பதனை அறிந்திருக்கும் தெளிவும் அவசியம் இருக்க வேண்டும். இல்லையெனில் அரசியல் வாழ்வில் பல தீமைகளை சந்திக்க நேரிடும். இதனை பின்வரும் குறளில் திருவள்ளுவர் அவர்கள் அழகாக விளக்கியுள்ளார்.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் -466
அதாவது, செய்யக் கூடாததைத் செய்தாலும் தீமை தரும் அதே போல செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்தாலும் தீமை தரும் என்கிறார். அரசியல் ரீதியாகச் சொல்ல வேண்டுமெனில் ஒரு அரசானது தவறான முடிவுகள் எடுத்தாலும் அல்லது தேவையான நடவடிக்கை எடுக்காமல் இருந்தாலும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்கிறார். 
அரசியலில் நீடித்திருப்பதற்கும் தன் கட்சியினர் தன்னை மதிப்பதற்கும் முக்கிய அம்சமாக இருப்பது முடிவெடுக்கும் திறன். தீர்க்கமான முடிவினை எடுக்கும் தலைவர்கள் தங்களுடைய தொண்டர்களால் மதிக்கப்படுவர். முடிவுகளை மாற்றிக் கொண்டே இருப்பவரால் கட்சிக்குள்ளும் சிக்கல் ஏற்படும். தொண்டர்களும் என்ன செயல் செய்வது என்று தெரியாமல் தவிப்பர். இதனை நம்மில் பலரும் அறிந்த கீழ்க்காணும் திருக்குறளில் கூறியுள்ளார். 
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவது இழுக்கு-467  என்று குறிப்பிடுகிறார். அதாவது எந்த ஒரு செயலுக்கு முன் யோசிக்க வேண்டும். செய்தபின் யோசிப்பது தவறு என்று குறிப்பிடுகிறார். அரசியலில் முன் திட்டமிடலின் அவசியத்தை வலியுறுத்துகிறார். 
சிலர் தவறினை செய்து விட்டு அது தவறு என்று தெரிந்தும் அதனை 
எற்றுக்கொள்ளாமல், அவதூறு பரப்புதலும், பிறர் மீது பழியினை போடுதல் போன்ற கீழ்த்தரமான வேலைகளைச் செய்கின்றனர். இவ்வாறு செய்வது மக்களிடம் இருந்து ஆட்சியாளர்களை விலக்கி வைக்க நேரிடும் வாய்ப்பாக அமைகின்றது. ஆகவே, கவனமாக இருக்க வேண்டும் என்பதனை பின்வரும் குறளில் வலியுறுத்துகின்றார். 
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.-468 அதாவது முன்னே யோசிக்காமல் செய்த தவறு பின்னர் திருத்த முடியாது என்கிறார். உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு தவறான அரசியல் முடிவு நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கலாம்.
ஆரசியலில் பல விடயங்கள் கவனிக்க வேண்டும் அதில் குறிப்பாக எந்தச் செயலை எப்போது செய்ய வேண்டும் என்ற காலம் அறிந்து செய்யப்பட வேண்டும். வறட்சி சமயத்தில் தான் வறட்சியைப் போக்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். அந்த சமயத்தில் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டால் அது கேலிக் கூத்தாகிவிடும். ஆகவே நற்செயல் முக்கியம் அதனை மனிதர்களின் இயல்பை அறிந்து செய்வதும் முக்கியம் ஆகும். புpன்வரும் குறளில் அவர் குறிப்பிடுவதாவது:
நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை.-469
நற்செயலும் தவறாகலாம், மனிதர்களின் இயல்பை அறியாமல் செய்தால் என்கிறார். அரசியல் ரீதியாக சொல்ல வேண்டுமென்றால் மக்களின் மனநிலையை அறியாமல் எடுக்கின்ற முடிவு தோல்வியடையும். 
இறுதியாக, மக்களின் ஆதரவோடு இயங்கும் அரசே நல்ல அரசு என்று தெளிவுபடுத்துகிறார். 
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.-470
அதாவது உலகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் யோசித்துச் செயல்பட வேண்டும் என்கிறார். மக்களின் அூதரவு இல்லாத அரசு ஒருபோதும் நீடிக்க இயலாது என்பதனை வலியுறுத்துகின்றார் திருவள்ளுவர். இந்த அதிகாரத்தின் மொத்த சாராம்சங்களை வரும் வாரத்தில் பார்ப்போம். 
தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு


No comments:

Post a Comment