Tuesday, 17 February 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-109:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-109:  
திருக்குறளில் அரசியல்:

திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 அரசியலில் சிற்றினம் சேராமை என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம். 
கடந்த வாரம் சிற்றினத்துடன் சேர்வதனால் என்ன மாதிரியான துன்பங்களை சிறந்த ஆளுமை உடையவராக இருந்தாலும் அனுபவிக்க நேரிடும் என்பதனைப் பார்த்தோம். இந்த வாரம், சரியான இனத்தாரோடு இனங்கியிருப்பதில் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம்.
ஒருவர் எப்பேர்பட்ட அவதூறுகளை எதிர்கொண்டாலும், தான் வயதான காலத்தில் தன்னுடைய பெற்ற பிள்ளைகளே அவரை சுயநலத்தால் ஒதுக்கினாலும், தான் செய்த நல்ல காரியங்கள், சாதனைகள் எப்போதும் அவரை உத்வேகமாகவே வைத்திருக்கும். சோர்ந்து விட மாட்டார். 
அதே போன்று ஒருவர் துவக்கத்தில் இருந்தே மனதளவில் உண்மையாகவும் அதனை நோக்கியே தன் அணியையும் வழிநடத்தும் போது, அவருக்கு அவராலும் அவருடைய அணியினாலும் இருவருக்குமே பெருமை சேர்க்கும். ஆவர்கள் அனைவருக்குமே இதனால் நன்மை பயக்கும் என்பதனை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். 
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை -456 என்கிறார். அதாவது, மனத்தூய்மையாக உள்ளவர்களுக்கு எஞ்சி நிற்பது அவருடைய புகழ் ஆகும். அவர் சேர்ந்த இனத்தின் தூய்மையால் அவருக்கு நன்மை இல்லாமல் போகாது என்கிறார்.  
மேலும், அரசியல் வாதியின் மனம் தெளிவாகவும் நல்ல நிலையில் இருந்தால் தான் அவரால் நல்ல பல திட்டங்களை இயற்ற முடியும், அதன் மூலம் மக்களுக்கும் நன்மைகள் நடந்தேறும். அவர் சார்ந்த இனத்தினால் அதன் மூலம் பெரும் புகழ் கிடைக்கும் என்கிறார் பின்வரும் குறளில்,
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் 
எல்லாப் புகழும் தரும் -457
அதாவது, மனத்தின் நலம் உயிர்களுக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் கொண்டு வரும் என்கிறார். 
சிற்றினம் சேராமை அதிகாரத்தின் முற்பகுதியில் நாம் கண்டவாறு ஒருவர் எவ்வளவு திறமையாளராக இருந்தாலும் சேராத இடத்தில் சேரும் போது, அவரால் சிறப்பானவராக இருக்க இயலாது என்பதனை மீண்டும் வலியுறுத்துகிறார். கர்ணன் படத்தில் ஒரு பாடல் வரிகளை நாம் கேட்டிருப்போம், ‘செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயாடா, கர்ணா...” என்று, கர்ணன் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும், கதையின் படி அவன் தவறான இடத்தில் சேர்ந்ததனால், அவன் பலவீனப்படுத்தப்பட்டு வீழ்த்தப்பட்டான் என்கிறது இதிகாசம்.  இதுபோன்ற, அக்பர் சிறந்த ஆட்சியாளராக இருந்தாலும், அவருடைய அமைச்சரவையில் இருந்தவர்கள் அனைவரும் மிகுந்த திறமைசாலிகளாக இருந்ததால் மிகப் பெரிய வலிமையுடன் இருந்தார். இக்கருத்தை, திருவள்ளுவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.  
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து -458
மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே  வலிமை வந்து சேரும் என்கிறார். 
அடுத்தக் குறளில் இந்த நிலையை மேன்மைப் படுத்துகிறார்.
மனநலத்தின்  ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து -459 என்கிறார். 
ஒருவனுக்கு மனநலத்தின் செம்மையாலே மறுமை இன்பம் உண்டாகும். அதுவும் கூடஅவர் சேர்ந்துள்ள இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும் என்று குறிப்பிடுகிறார். 
அடுத்தக் குறளில், ஒட்டுமொத்தமாக இவ்வதிகாரத்தின் குறட்பாக்களை தொகுத்து சுருக்கமாக ஒரே குறளில் குறிப்பிடுகிறார். 
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல் -460 என்கிறார். 
ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையாக இருப்பதும் இல்லை, தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் கொடுப்பதும் எதுவும் இல்லை. 
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நாம் எப்பேர்பட்டவர்களாக இருந்தாலும் நம்முடைய சேர்க்கை நம்முடைய நிலையை உணர்த்தும் எனக் கொள்ளலாம். 
தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

No comments:

Post a Comment