Wednesday, 11 February 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-108: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-108:  
திருக்குறளில் அரசியல்: 
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 அரசியலில் சிற்றினம் சேராமை என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம். 

உன் நண்பன் யாரென்று சொல், நீ எப்படிப்பட்டவன் என்று சொல்கிறேன் என்ற சொல்லாடலைக் கேள்விப்பட்டிருப்போம். உளவியலில் Peer influence என்போம். ஏதார்த்தமாக பேசுவதென்றால் சேர்க்கை என்று வைத்துக் கொள்ளலாம். குற்றவாளிகள் குற்றம் செய்து தப்பிக்கும் போது முதலில் அவர்கள் ஆய்வு செய்வது அவர்கள் செய்கையையும் சேர்க்கையையும் கொண்டே அமைகிறது. இதைத் தான் திருவள்ளுவரும் குறிப்பிடுகிறார். பின்வரும் குறளில்,
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல் -453
மனிதர்க்கு உணர்ச்சி என்பது அவருடைய மனத்தின் தன்மையால் உண்டாகிறது. ஆனால், அவர் இப்படிப்பட்டவர் என்பது உலகத்தாரால் அழைக்கப்படுவது அவர் சேர்ந்திருக்கும் இனத்தால் உண்டாகிறது என்கிறார். இது கூட்டணி அமைப்பதற்கும் பொருத்தமுடையதாக இருக்கின்றது. ஆனால், இது அரசியலுக்கு மட்டும் பொருத்தமானதாக ஒன்று என்று முடிவிற்கு வந்துவிட வேண்டாம். இது பிள்ளைகளைக் கவனிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் பெற்றோருக்கு உதவும் என்பதனை மறந்து விட வேண்டாம். ஏனென்றால், என்னதான் பிள்ளைக்கென்று தனியாக அறிவு இருந்தாலும், முடிவெடுக்கையில் சேர்ந்துள்ள கூட்டத்தின் அடிப்படையிலே எடுக்கும் சூழல் ஏற்படும். சேர்ந்திருக்கும் கூட்டம் தவறானதெனில் விளைவுகளும் அபாயகரமானதாக இருக்கும். அரசியலிலும் அப்படித்தான் இதனை இன்னும் கூடுதலாக அடுத்தக் குறளில் குறிப்பிடுகிறார், ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு, ‘Student is good, students are bad” இதனை பின்வரும் குறளில் முன்னரே விளக்கியுள்ளார் திருவள்ளுவர்.
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு -454
அதாவது, ஒருவனுடைய அறிவு என்பது அவனுடைய மனதின் இயல்பு என்பது போலத் தோன்றினாலும், உண்மையில் அது அவர் சேர்ந்துள்ள கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவது ஆகும் என்கிறார். ஆக, சரியான கூட்டத்தோடு இல்லையென்றால், விளைவுகள் சரியானதாக இருப்பதில்லை.
அப்படியெனில், ஒருவன் இயல்பில் எப்படிப்பட்டவனாகிலும், அவன் சேர்க்கையே அவனை முடிவு செய்கிறது என்பதனை தெளிவாக விளக்குகிறார். 
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்-455 என்கிறார், அதாவது ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தொடர்பு தூய்மையானதாக இருந்தால் தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானதாக அமையும் என்கிறார். பல படங்களில் நாம் பார்த்திருப்போம், தன்னுடைய எதிரியை பழிவாங்க, அவருடைய மகனையோ மகளையோ நல்லவர் போல நடித்து நம்ப வைத்து அவருக்கு எதிராக அவர்களை தூண்டிவிடும் உத்தி!. சிலர் இந்த உத்தியை நட்பிலும் காட்டுகின்றனர். அரசியலில் பலர் மிகச் சிறப்பாகச் செய்கின்றனர். 
தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

No comments:

Post a Comment