Wednesday, 4 February 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-107: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-107:  திருக்குறளில் அரசியல்: 
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம், அரசியலில் பெரியாரை துணைக்கோடல் என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் சிற்றினம் சேராமை என்னும் அதிகாரத்தில் அரசியல் சார்ந்த என்ன கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளார் என்று பார்ப்போம். 

பிறக்கும் போது அனைத்துக் குழந்தைகளுமே நல்ல குழந்தைகள் தான் ஆனால், அவர் எப்படிப்பட்டவராக வளருகிறார் என்பதை பல விடயங்கள் தீர்மானிக்கின்றன, அவர்களின் டி.என்.ஏ, வளர்க்கும் விதம், கூடும் நட்பு, கலாச்சாரம், சுற்றுச்சூழல் (இயற்கை மற்றும் வாழும் சூழல்) ஏற்படுத்தும் தாக்கம் என்று பல வித காரணிகள் ஒரு நபரின் பண்புகளைக் கட்டமைக்கின்றன. ஒவ்வொரு தனிமனிதருக்கும் இவ்வளவு விடயங்கள் இருக்கும் போது அரசிற்கும் அது போன்ற தாக்கங்கள் என்ன விளைவுகளைக் கொண்டுவரும்? ஒரு அரசு திறமையானதாகவோ அல்லது திறமையற்றதாகவோ இருப்பதற்கு எவை காரணமாக அமைகின்றன?
இந்த வாரம் நாம் காணும், 'சிற்றினம் சேராமை', என்னும் இந்த அதிகாரத்தில் ஒரு தலைவன் அல்லது ஆட்சியாளன் தன் இலக்கை அடைவதற்கும், தன்னுடைய புகழைத் தக்கவைப்பதற்கும் அவனது சுற்றுப்புறம் எவ்வளவு முக்கியமானது என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்குகிறது.  நாம், சிற்றினம் சேராமையின் அரசியல் முக்கியத்துவத்தையும்இ அதன் உளவியல் தாக்கங்களையும்இ நவீன மேலாண்மைக் கோட்பாடுகளுடன் அதன் தொடர்பையும் விரிவாகப் பார்ப்போம். 
அரசியல் களத்தில் சிற்றினம் சேராமை: ஒரு அறிமுகம்
திருக்குறளின் பொருட்பால்இ ஒரு நாட்டின் நிர்வாகம்இ தூதுஇ அமைச்சரவை மற்றும் ஒரு அரசனின் தனிப்பட்ட பண்புகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. இதில் 46-வது அதிகாரம்இ ஒரு ஆட்சியாளன் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களைத் தேர்ந்தெடுப்பதில் காட்ட வேண்டிய விழிப்புணர்வை வலியுறுத்துகிறது. 'சிற்றினம்' என்பது அறிவில் குறைந்தவர்களையோ அல்லது வறுமையில் உள்ளவர்களையோ குறிப்பதல்ல; மாறாகஇ குறுகிய நோக்கம் கொண்டவர்கள்இ அறநெறியில் நம்பிக்கையற்றவர்கள் மற்றும் ஒரு தலைவனின் சிந்தனையைத் திசைதிருப்பக்கூடிய 'கீழ்மைக் குணம்' கொண்டவர்களைக் குறித்தே இது குறிப்பிடுகிறது.    
ஒரு ஆட்சியாளனின் வெற்றி என்பது அவனது தனிப்பட்ட திறமையை விடஇ அவன் யாரை ஆலோசனைக் குழுவில் வைத்திருக்கிறான் என்பதிலேயே தங்கியுள்ளது என்பதை வள்ளுவர் இந்த அதிகாரத்தின் பத்து குறட்பாக்களின் மூலம் நிறுவுகிறார். சிற்றினத்தைச் சேர்ந்தவர்களைக் கண்டால் பெரியோர்கள் அஞ்சி ஒதுங்குவார்கள் என்ற கருதுகோளில் தொடங்கிஇ நல்லினத்தைச் சேர்வதே ஒருவனுக்குப் பெரிய துணை என்ற இறுதி உண்மை வரை இந்த அதிகாரம் ஒரு முழுமையான அரசியல் தத்துவத்தை முன்வைக்கிறது.
அரசியல் சூழலில் 'சிற்றினம்' யார் என்பதைப் புரிந்துகொள்வது மிக அவசியம். பரிமேலழகர் உரையின்படிஇ "சிற்றினம்" என்பது அறிவைத் திரித்துஇ இம்மைக்கும் மறுமைக்கும் பலன் இல்லாமல் செய்பவர்களைக் குறிக்கும். இது வெறும் தனிப்பட்ட நட்பு சார்ந்தது மட்டுமல்லஇ ஒரு நாட்டின் கொள்கை முடிவுகளை எடுக்கும் ஆலோசனைக் குழுவில் இடம்பெறும் 'தவறான நபர்களை' இது குறிக்கிறது.
இனி சிற்றினம் சேராமை அதிகாரத்தில் திருவள்ளுவர் என்ன குறிப்பிட்டுள்ளார் என்று காணலாம். 
பொதுவாகவே, பயமறியான் என்று தன்னைச் சொல்லிக் கொள்வதை ஒவ்வொருவரும் விரும்புவதுண்டு. ஆனால், திருவள்ளுவர் அறிவுடைமை என்னும் அதிகாரத்தில் ‘அஞ்சுவ தஞ்சாமை பேதைமை” என்கிறார். ஏனில், அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுபவரே அறிவாளிகளின் தொழில் என்கிறார். உதாரணமாக ஒரு பெருவெள்ளம் இப்போது சூழப் போகிறது, ஆதலால், பல மக்கள் மடியப் போகிறார்கள் என்ற நிலை வரும் போது, அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பது நல்ல அரசு அல்ல, தம் மக்களை பெரு வெள்ளத்தில் இருந்து எவ்வாறு காப்பது என்று யோசிப்பதே சிறந்த ஆட்சியாளருக்கு அழகு, அப்படியெல்லாம் அந்த பெருவெள்ளத்திற்கு அஞ்ச வேண்டும், அப்போதுதான் மக்களை சரியான நேரத்தில் காப்பாற்ற முடியும் என்ற பதட்டமும் அதை நோக்கிய துரித செயல்பாடுகளையும் அரசால் செய்ய இயலும். இந்த நிலை அவசியம் வேண்டும். 
இதனை எதற்காகச் சொல்கிறேன் என்றால், ஒரு நல்ல ஆட்சியாளர் தன்னுடன் மேன்மையான ஆட்களையே வைத்திருக்க வேண்டும், சிறுமை எண்ணங்களும் வன்மமும் கொண்ட ஆட்களை வைத்திருந்தால் அவர்களால் அவ்வரசுக்கும் மக்களுக்கும் தீங்கு தான் ஏற்படும். 
முதல் குறளில், 
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் 
சுற்றமாச் சூழ்ந்து விடும்- 451 என்கிறார். 
மேலே நாம் சொன்ன உதாரணத்தில் தேவையானவற்றிற்கு அஞ்ச வேண்டும் என்று பார்த்தோம். இக்குறளில், திருவள்ளுவர், ‘பெரியோர்கள் சிற்றினத்தைக் கண்டால் அஞ்சி ஒதுங்குவர் ஆனால், சிறியார்களோ அவர்களைத் தம் இனமாகக் கருதி அவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள்” என்கிறார். இதில் சிற்றினத்தைக் கண்டு அஞ்சி ஒதுங்கி நிற்றல் பெரியவர்களுக்கு அழகு என்று வரையறுக்கிறார். அதாவது, அதுதான் அரசியல் முதிர்ச்சி என்று குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.  
நாம் முன்னரே குறிப்பிட்டுள்ளபடி, ஒரு குழந்தை இயற்கையிலே நல்ல குழந்தையாக இருந்தாலும் பல காரணிகள் அதனை மாற்றிவிடும் என்பது போல, ஆட்சியாளரும் என்னதான் நல்லவராக இருந்தாலும், அவர் எந்தக் கூட்டத்தோடு இருக்கிறாரோ, அதற்கேற்றாற்பால் அவர் தன்மையையும் மாறிவிடும் என்பதனை பின்வரும் குறளில் விளக்குகிறார்.
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு -452
அதாவது, நீரானது தான் நிலத்தில் ஓடி வரும் போது, எந்த மண் பகுதியைக் கடக்கிறதோ, அதற்கேற்றார்போல அதனுடைய நிறமும் அதன் தன்மையும் மாறுவடும். அதுபோல மக்களுடைய அறிவும் அவரவர் சேர்ந்த இனத்தின் தன்மைப் படியே மாறும் என்று குறிப்பிடுகிறார் ஐயன். 
தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

No comments:

Post a Comment