திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-116:
திருக்குறளில் அரசியல்:
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
அரசியலில் ‘வலியறிதல்” என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் ‘காலம் அறிதல்” என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ள கருத்துக்களைப் பார்ப்போம்.
காலம் அறிதல் என்றால், நேரத்தைத் தெரிந்து கொள்ளுதல் என்பதல்ல, நேர மேலாண்மையுடன் ஒரு செயலைச் செய்வதற்கு உகந்த சூழல், எதிரியின் பலவீனம் மற்றும், தனது பலம் ஆகியவற்றை ஒருங்கிணைந்து வரும் ஒரு தருணமாகும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், காலம் அறிதல் என்பது ‘அரசியல் போர் வியூகம்” ஆகும். ஒரு நாட்டின் பலம், படை மற்றும் வளங்களைவிட, காலம் எவ்வாறு வெற்றியைப் பன்மடங்கு பெருக்குகிறது என்பதைக் காணலாம்.
‘காலம் பொன் போன்றது” என்பதனை அனைவரும் அறிவோம், ஒரு விடயத்தை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதனை உணர்ந்து செய்ய வேண்டும். காலம் குறித்து நிறையப் பொன்மொழிகள் பழமொழிகள் தமிழ் மொழி மட்டுமல்ல உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது.
நமது திருவள்ளுவரும் அப்போதே காலம் அறிதலை உவமையுடன் விளக்கியுள்ளார். கீழ்வரும் குறள், அடிப்படையாகக் கொண்டு பஞ்சதந்திரக்கதை ஒன்றைப் படித்திருக்கின்றேன். குறிப்பாக 3வது தந்திரமான ‘அடுத்துக் கெடுத்தல்” அதாவது நம்ப வைத்து கெடுத்தல் அல்லது நம்பிக்கைத் துரோகம் என்ற கருத்தியலின் பிராதனமான கதையே பின்வரும் திருக்குறளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. பஞ்சத் தந்திரக் கதைகளில் ‘கோட்டான் குலத்தைக் கூடிக் கெடுத்த காகம்” கதையைப் படித்தீர்கள் என்றால் புரியும். ஆனால், பின்வரும் குறளில் திருவள்ளுவர் குறிப்பிடும் கருத்தானது எதிரியை வீழ்த்துவதற்கு எப்படி நேரத்தைத் திட்டமிட வேண்டும் என்று குறிப்பிடுகிறார். இனி குறளைப் பார்ப்போம்.
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது -481
அதாவது, காகமானது தன்னை விட வலிமையாக இருக்கும் கோட்டானை பகல் நேரத்தில் சண்டையிட்டு வெற்றி பெற்று விடும். அதே போன்று பகைவரை வெல்லுவதற்கு அரசருக்கு ஏற்ற காலம் வேண்டும் என்பதனைக் குறிப்பிடுகிறார். காலம் அறிந்து செயல்பட வேண்டும் என்று எளிய விளக்கத்தின் மூலம் குறிப்பிடுகிறார்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதனை கேள்விபட்டிருக்கிறோம். அவ்வாறு செய்வதன்மூலம் செயல் எளிமையாக முடியும், செலவு குறையும். இல்லையெனில் பதரைப் பிரிப்பதற்கு அதிக மெனக்கெட நேரிடும், செலவும் அதிகரிக்கும். இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், மின்கட்டணம் போன்ற பல வகையான கட்டணங்களை வரிகளை சரியான சமயத்தில் கட்டப்படும் போது சலுகைகளும் கிடைக்கும் அல்லது தேவையற்ற செலவினைத் தவிர்க்க முடியும். இல்லையென்றால் அதிகக் கட்டணங்களை கட்ட நேரிடும் தேவையில்லாம் பண விரயத்திற்கு வழி வகுக்கும். பின்வரும் குறளில், திருவள்ளுவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு -482
அதாவது காலத்தை உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவ விடாமல் கட்டிப் போடும் கயிறாக அமையும்.
ஏந்த ஒரு செயலையும் சரியாகத் திட்டமிட்டு சரியான நேரத்தில் சரியான கருவிகளைக் கொண்டு செயல்படுத்தினால் வெற்றி எளிமையாக அமையும். ஆகவே, வெற்றியாளர்கள், அதிக வெற்றிகளைக் கொண்ட அரசர்கள், எதிரியின் கூடாரத்தை தாக்குவதற்கு முன்னர்;. ஏதிரியின் பலம் மற்றும் பலவீனங்கள், இடத்தின் சூழல் மற்றும் தன்மை போன்ற அனைத்தையும் அறிந்து கொண்டு அதற்கேற்ப வியூகங்களை அமைத்து திறம்பட போரிட்டு வெல்வர். இதில் வல்லவர்கள் மிகச் சிறிய படையினைக் கொண்டு பெரும் படையை வென்றெடுத்த வரலாறும் உண்டு. விவிலியத்தில் ஆஜானுபாகுவாக உயர்ந்து நிற்கும் கோலியாத் என்ற அரசனை தாவீது என்னும் சிறுவன் வெறும் உண்டி வில்லை வைத்து வீழ்த்திய கதை உண்டு.
நாம் ஏற்கனவே ‘இதனை இதனால் ...” என்ற குறளையும் அறிவோம். அது போன்று பின்வரும் குறளிலும் சரியான முன்னேற்பாடுகள் எப்பேர்பட்ட காரியத்தையும் எளிமையாக்கும் என்கிறார்.
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின் - 483
அதாவது, ஒரு செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய கருவிகளுடன் தகுதியான காலத்தையும் அறிந்து கொண்டு செயலைச் செய்தால், செய்வதற்கு அரிய செயல் என்பதும் உண்டோ ? என்று கேட்கிறார்.
இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு தேர்வுக்கு செல்லும் மாணவன், தேர்வுக்குப் படிக்காமல், எழுதுகோல், அழிப்பான் போன்றவை எடுத்துச் செல்லாமல் இருந்தால் அவன் நிலை என்னவாக இருக்கும். அரசியலில் தற்போதைய சூழலில் சொல்ல வேண்டும் என்றால், நமது முதலமைச்சர் கலந்து கொள்ளும் விழாவிற்கு, அவர் வந்து பேசிக் கொண்டிருக்கும் போதுதான் விழாப் பந்தல் மேற்கூரைகள் அமைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். தொடர்ந்து பார்ப்போம்.
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
https://www.youtube.com/@AAAInfotainment
தோப்பு
No comments:
Post a Comment