Wednesday, 1 April 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-115:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-115:    
திருக்குறளில் அரசியல்:
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 அரசியலில் ‘வலியறிதல்”  என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம். 
தலைக்குத் தப்பியதுதான் தானமும் தருமமும் அல்லது தனக்குப் பின்தான் தானமும் தருமமும் என்று சொல்வடைக் கேள்விப்பட்டிருப்போம். அதாவது, எந்த ஒரு தர்மம் செய்வதாக இருந்தாலும், தன்னால் இயன்றதை தன்னிடம் உள்ள அளவை அறிந்து தானம் வழங்க வேண்டும். இல்லையென்றால், அடுத்த முறை தானம் செய்யாத நிலையில் வருந்த நேரிடும். அதே போன்றுதான் அரசியலிலும், அரசினுடைய நிதி நிலையினை உணர்ந்தே நலத்திட்டங்கள் வகுக்கப் பட வேண்டும். அப்படி செய்யும் போதுதான் தடையின்றி நலத்திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும். இது போன்று தான் நிர்வாகத்தைச் செலுத்த வேண்டும் என்று அன்றே சொல்லியுள்ளார் திருவள்ளுவர். 
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி -477 என்கிறார். 
அதாவது, பிறருக்குக் எதனைக் கொடுத்தாலும் அதனை தன்னுடைய வருவாய் அளவை அறிந்து கொண்டு கொடுக்கவும், அப்படிக் கொடுப்பதே பொருளை சிறப்பான முறையில் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.  என்று குறிப்பிடுகிறார். 
அடுத்தக் குறளில், 
வரவு எட்டணா
செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா
கடைசியில்
துந்தனா துந்தனா துந்தனா
என்று பாமா விஜயம் படத்திற்காக கவியரசு கண்ணதாசன் அவர்கள ;எழுதியப் பாடல் கேட்டிருப்பீர்கள். மிக அழகாக வரவுக்கேற்ற செலவு செய்ய வேண்டும். விரலுக்கேற்ற வீக்கம் இல்லையென்றால் சீல் பிடித்து விரலுக்கே பிரச்சனையாகிவீடம் என்ற உண்மையினை அந்தப் பாடலில் உணர்த்தியிருப்பார். நாம் முன்பே பார்த்தபடி ஒரு சிறந்த தத்துவத்தை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், அறநெறிகள் என்று சென்றோமென்றால், அங்கே திருவள்ளுவர் வந்து நின்று விடுகின்றார். இதோ, மேலேயுள்ள கருத்துக்கள் பின்வரும் குறளில்,
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை -478 என்கிறார். 
அதாவது, ஒருவருக்கு பொருள் வரும் வழி சிறியதாக இருந்தாலும், அது செலவாகிச் செல்லும் வழி விரிந்து செல்லாமல் இருந்தால், அதனால் அவனுக்குக் கேடு இல்லை என்று குறிப்பிடுகிறார். அரசியலிலும், வருவாயும் செலவும் ஒருங்கிணைந்து செல்லும் வழியில் திட்டமிடுவது அரசுக்கும் மக்களுக்கும் தொந்தரவு கொடுக்காத நிலையினை உருவாக்கும். சுருக்காமாகச் சொல்ல வேண்டுமென்றால், மேற்கண்ட குறள், இன்றைய காலத்து ‘பட்ஜெட் மேலாண்மை’ (Budgetary Management) மற்றும் ‘நிதிப் பற்றாக்குறை” (Fiscal Deficit) சிக்கல்களுக்கு மிகச் சிறந்த தீர்வாக இருக்கிறது. 
அடுத்து வரும் குறள், நமக்கு நன்கு பரிச்சையமானதும் முந்தைய குறளின் தொடர்ச்சியான நெறிமுறையும் ஆகும். 
தன்னுடைய செல்வத்தின் அளவினை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி வாழாதவனுடைய வாழ்க்கையானது உள்ளது போலத் தோன்றினாலும் இல்லாமல் அழிந்து விடும் என்கிறார். 
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும் -479
மேற்கூறிய குறளின் படி சிலர் அரசியலிலும் தவறான கணக்கிட்டு தனக்கான அழிவினைத் தேடிக் கொள்கின்றனர். இப்போது கூட தவறான கணக்கீடு மூலம் இஸ்ரேல் அமெரிக்காவுடன் எடுத்த முடிவு, இரண்டு நாட்டிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி அவர்களுக்கு மட்டுமல்லாது உலக அளவில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 
அடுத்தக் குறளில், இதற்கு முன்பு கூறிய குறளின் கருத்துக்களை வலுப்படுத்தி சொல்கிறார். 
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும் -480 என்கிறார்.
அதாவது தன்னுடைய பொருளாதார நிலையை அளவை ஆராயாமல் அளவு கடந்து உதவி செய்து வந்தால், ஒருவனுடைய செல்வத்தின் அளவும் விரைவில் கெட்டுப் போகும் என்கிறார். 
சுருக்கமாக வலியறிதல் அதிகாரத்தில், நவீன பொது நிர்வாகத்தில் வலியறிதல் பயன்பாடுகளை குறிப்பிடுகிறார். இன்றைய நவீன மேலாண்மை மற்றும் பொது நிர்வாகத்தில் வலியறிதல் அதிகாரத்தின் கருத்துக்கள் கீழ்க்கண்டவாறு பயன்படுத்தப்படுகின்றன். 

1. ஆதாரங்களின் மதிப்பீடு (Resource Allocation): ஒரு திட்டத்தைத் தொடங்கும் முன் நிதி, மனித உழைப்பு மற்றும் தொழில்நுட்ப வலிமையைச் சரியாகக் கணித்தல்.
2. நெருக்கடி மேலாண்மை (Crisis Management): எதிர்ப்புகளையும் சவால்களையும் (மாற்றான் வலி) முன்கூட்டியே உணர்ந்து தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்தல்.   
3. நிதி நிலைத்தன்மை (Fiscal Sustainability): கடன் சுமையைக் குறைத்து, வருவாய்க்கு உட்பட்ட செலவினங்களை மேற்கொள்வதன் மூலம் நாட்டின் பொருளாதார இறையாண்மையைக் காத்தல்.
4. தலைமைத்துவப் பண்பு: ஆட்சியாளர் தற்பெருமை கொள்ளாமல், தகுதியான அமைச்சர்களின் ஆலோசனைகளைப் பெறுதல்.

‘வலியறிதல்” அதிகாரத்தைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்.
திருக்குறளின் 'வலியறிதல்' அதிகாரம் நமக்கு உணர்த்தும் பாடம் ஒன்றே: "வலிமை என்பது ஆக்கிரமிப்பு அல்ல; அது துல்லியமான மதிப்பீடு." ஒரு ஆட்சியாளர் தனது செயலின் வலிமை, தன் ஆற்றல், எதிரியின் திறன் மற்றும் துணைகளின் வலிமை ஆகிய நான்கையும் சீர்தூக்கிப் பார்த்து, அந்தத் தராசு சமநிலை (Equilibrium) அடையும் போது மட்டுமே செயலில் இறங்க வேண்டும். இத்தகைய அளவிடப்பட்ட அதிகாரமே (Measured Power) ஒரு நாட்டை நீண்ட காலத்திற்கு நிலைபெறச் செய்யும்.   
தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

No comments:

Post a Comment