Saturday, 13 June 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-123: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-123: 
திருக்குறளில் அரசியல்: 
தெரிந்து தெளிதல்:
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 அரசியலில் ‘இடன் அறிதல்” என்ற அதிகாரத்தின்; அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் ‘தெரிந்து தெளிதல்” என்ற அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களைப் பார்ப்போம். 
தெரிந்து தெளிதல் என்பது வெறும் தனிமனித உறவுகளுக்கானது அல்ல, அது ஒரு நாட்டின் தலைவன் அல்லது அரசு தன் நிர்வாகத்தை எப்படிக் கட்டமைக்க வேண்டும் என்பதற்கான அரசியல் உத்தி மற்றும் ஆபத்துக் குறைப்பிற்கான மேலாண்மை பற்றிய அதிகாரமாக இருக்கிறது. 
இந்த அதிகாரத்தில் என்ன மாதிரியான கோட்பாடுகளை திருவள்ளுவர் விளக்குகிறார் என்பதனைப் பார்ப்போம். 
அரசியலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமானத் தகவலை இந்த அதிகாரத்தின் முதல் குறளிலேயே சொல்கிறார். ஒரு சிறந்த தலைவனைத் தேர்ந்தெடுக்க வேண்டுமெனில் அவரிடம் நாம் என்ன தகுதிகளைக் கவனிக்க வேண்டும் என்று சொல்கிறார்?
முதல் குறளைக் கவனியுங்கள்.
அறம்பொருள் இன்பம் உயிரெச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும் -501 என்கிறார். 
அதாவது, அறவழியிலே உறுதியானவராகவும் பொருள் வழியிலே நாணயமானவராகவும், இன்பத்தைத் தேடி மயங்காதனவராகவும், தன்னுயிருக்கு  அஞ்சாமல் இருப்பவரையே ஆராய்ந்து அறிந்து அவரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிறார். இன்னும் விளக்கமாகக் கூற வேண்டும் என்றால், மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒன்றில் ஒருவர் பலவீனமாக இருந்தால் கூட அவர் நாட்டினுடைய பாதுகாப்பிற்கு மிகவும் பெரிய ஆபத்தானவராக மாறிவிடுகிறார் என்கிறார். ஆகவே, நமக்கு ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புக் கிடைக்கும் போது மேற்கூறிய தகுதியினைக் கண்டறிந்து தேர்ந்தெடுக்க வேண்டும். 
அடுத்தக் குறளில், முந்தைய குறளுக்கு அடுத்த நிலையை விளக்குகிறார். 
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு -502
அதாவது, நல்ல குடியில் (இதில் நல்ல குடி என்பதனை பின்வரும் குணங்களைக் கொள்க) பிறந்து குற்றங்கள் இல்லாதவராகவும் பழிச்சொல்லுக்கு அஞ்சி தவறான செயல் செய்யக் கூடாதவராகவும் இருக்கும் ஒருவரையே பதவிக்குத் தேர்வு செய்ய வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். 
மேலும், ஒரு தலைவனாக இருப்பார் எப்போதும் திறந்த மனதோடு இருக்கவேண்டும். பிறர் கருத்துக்களை கேட்பதற்குத் தாரளமானவராக இருக்க வேண்டும். தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று நினைப்புடன் இருப்பவர் சிறந்த தலைவராக இருக்க முடியாது.  அடுத்தக் குறளைக் கவனியுங்கள்
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு-503 என்கிறார் திருவள்ளுவர்.
அதாவது, அருமையான நூல்களைக் கற்றுத் தேர்ந்து, குற்றங்கள் எதுவும் இல்லாமல் இருப்பவரிடத்திலும், ஆராய்ந்து பார்த்தால், அவரிடம் அறியாமை அறவே இல்லை என்று கணித்து விட முடியாது என்று குறிப்பிடுகிறார். ஆகவே, எதனையும் தெளிந்து அறிதல் வேண்டும் என்பதனை உணர்த்துகிறார் திருவள்ளுவர். 
தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

No comments:

Post a Comment