Tuesday, 17 February 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-109:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-109:  
திருக்குறளில் அரசியல்:

திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 அரசியலில் சிற்றினம் சேராமை என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம். 
கடந்த வாரம் சிற்றினத்துடன் சேர்வதனால் என்ன மாதிரியான துன்பங்களை சிறந்த ஆளுமை உடையவராக இருந்தாலும் அனுபவிக்க நேரிடும் என்பதனைப் பார்த்தோம். இந்த வாரம், சரியான இனத்தாரோடு இனங்கியிருப்பதில் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம்.
ஒருவர் எப்பேர்பட்ட அவதூறுகளை எதிர்கொண்டாலும், தான் வயதான காலத்தில் தன்னுடைய பெற்ற பிள்ளைகளே அவரை சுயநலத்தால் ஒதுக்கினாலும், தான் செய்த நல்ல காரியங்கள், சாதனைகள் எப்போதும் அவரை உத்வேகமாகவே வைத்திருக்கும். சோர்ந்து விட மாட்டார். 
அதே போன்று ஒருவர் துவக்கத்தில் இருந்தே மனதளவில் உண்மையாகவும் அதனை நோக்கியே தன் அணியையும் வழிநடத்தும் போது, அவருக்கு அவராலும் அவருடைய அணியினாலும் இருவருக்குமே பெருமை சேர்க்கும். ஆவர்கள் அனைவருக்குமே இதனால் நன்மை பயக்கும் என்பதனை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். 
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை -456 என்கிறார். அதாவது, மனத்தூய்மையாக உள்ளவர்களுக்கு எஞ்சி நிற்பது அவருடைய புகழ் ஆகும். அவர் சேர்ந்த இனத்தின் தூய்மையால் அவருக்கு நன்மை இல்லாமல் போகாது என்கிறார்.  
மேலும், அரசியல் வாதியின் மனம் தெளிவாகவும் நல்ல நிலையில் இருந்தால் தான் அவரால் நல்ல பல திட்டங்களை இயற்ற முடியும், அதன் மூலம் மக்களுக்கும் நன்மைகள் நடந்தேறும். அவர் சார்ந்த இனத்தினால் அதன் மூலம் பெரும் புகழ் கிடைக்கும் என்கிறார் பின்வரும் குறளில்,
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் 
எல்லாப் புகழும் தரும் -457
அதாவது, மனத்தின் நலம் உயிர்களுக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் கொண்டு வரும் என்கிறார். 
சிற்றினம் சேராமை அதிகாரத்தின் முற்பகுதியில் நாம் கண்டவாறு ஒருவர் எவ்வளவு திறமையாளராக இருந்தாலும் சேராத இடத்தில் சேரும் போது, அவரால் சிறப்பானவராக இருக்க இயலாது என்பதனை மீண்டும் வலியுறுத்துகிறார். கர்ணன் படத்தில் ஒரு பாடல் வரிகளை நாம் கேட்டிருப்போம், ‘செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயாடா, கர்ணா...” என்று, கர்ணன் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும், கதையின் படி அவன் தவறான இடத்தில் சேர்ந்ததனால், அவன் பலவீனப்படுத்தப்பட்டு வீழ்த்தப்பட்டான் என்கிறது இதிகாசம்.  இதுபோன்ற, அக்பர் சிறந்த ஆட்சியாளராக இருந்தாலும், அவருடைய அமைச்சரவையில் இருந்தவர்கள் அனைவரும் மிகுந்த திறமைசாலிகளாக இருந்ததால் மிகப் பெரிய வலிமையுடன் இருந்தார். இக்கருத்தை, திருவள்ளுவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.  
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து -458
மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே  வலிமை வந்து சேரும் என்கிறார். 
அடுத்தக் குறளில் இந்த நிலையை மேன்மைப் படுத்துகிறார்.
மனநலத்தின்  ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து -459 என்கிறார். 
ஒருவனுக்கு மனநலத்தின் செம்மையாலே மறுமை இன்பம் உண்டாகும். அதுவும் கூடஅவர் சேர்ந்துள்ள இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும் என்று குறிப்பிடுகிறார். 
அடுத்தக் குறளில், ஒட்டுமொத்தமாக இவ்வதிகாரத்தின் குறட்பாக்களை தொகுத்து சுருக்கமாக ஒரே குறளில் குறிப்பிடுகிறார். 
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல் -460 என்கிறார். 
ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையாக இருப்பதும் இல்லை, தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் கொடுப்பதும் எதுவும் இல்லை. 
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நாம் எப்பேர்பட்டவர்களாக இருந்தாலும் நம்முடைய சேர்க்கை நம்முடைய நிலையை உணர்த்தும் எனக் கொள்ளலாம். 
தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 11 February 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-108: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-108:  
திருக்குறளில் அரசியல்: 
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 அரசியலில் சிற்றினம் சேராமை என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம். 

உன் நண்பன் யாரென்று சொல், நீ எப்படிப்பட்டவன் என்று சொல்கிறேன் என்ற சொல்லாடலைக் கேள்விப்பட்டிருப்போம். உளவியலில் Peer influence என்போம். ஏதார்த்தமாக பேசுவதென்றால் சேர்க்கை என்று வைத்துக் கொள்ளலாம். குற்றவாளிகள் குற்றம் செய்து தப்பிக்கும் போது முதலில் அவர்கள் ஆய்வு செய்வது அவர்கள் செய்கையையும் சேர்க்கையையும் கொண்டே அமைகிறது. இதைத் தான் திருவள்ளுவரும் குறிப்பிடுகிறார். பின்வரும் குறளில்,
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல் -453
மனிதர்க்கு உணர்ச்சி என்பது அவருடைய மனத்தின் தன்மையால் உண்டாகிறது. ஆனால், அவர் இப்படிப்பட்டவர் என்பது உலகத்தாரால் அழைக்கப்படுவது அவர் சேர்ந்திருக்கும் இனத்தால் உண்டாகிறது என்கிறார். இது கூட்டணி அமைப்பதற்கும் பொருத்தமுடையதாக இருக்கின்றது. ஆனால், இது அரசியலுக்கு மட்டும் பொருத்தமானதாக ஒன்று என்று முடிவிற்கு வந்துவிட வேண்டாம். இது பிள்ளைகளைக் கவனிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் பெற்றோருக்கு உதவும் என்பதனை மறந்து விட வேண்டாம். ஏனென்றால், என்னதான் பிள்ளைக்கென்று தனியாக அறிவு இருந்தாலும், முடிவெடுக்கையில் சேர்ந்துள்ள கூட்டத்தின் அடிப்படையிலே எடுக்கும் சூழல் ஏற்படும். சேர்ந்திருக்கும் கூட்டம் தவறானதெனில் விளைவுகளும் அபாயகரமானதாக இருக்கும். அரசியலிலும் அப்படித்தான் இதனை இன்னும் கூடுதலாக அடுத்தக் குறளில் குறிப்பிடுகிறார், ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு, ‘Student is good, students are bad” இதனை பின்வரும் குறளில் முன்னரே விளக்கியுள்ளார் திருவள்ளுவர்.
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு -454
அதாவது, ஒருவனுடைய அறிவு என்பது அவனுடைய மனதின் இயல்பு என்பது போலத் தோன்றினாலும், உண்மையில் அது அவர் சேர்ந்துள்ள கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவது ஆகும் என்கிறார். ஆக, சரியான கூட்டத்தோடு இல்லையென்றால், விளைவுகள் சரியானதாக இருப்பதில்லை.
அப்படியெனில், ஒருவன் இயல்பில் எப்படிப்பட்டவனாகிலும், அவன் சேர்க்கையே அவனை முடிவு செய்கிறது என்பதனை தெளிவாக விளக்குகிறார். 
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்-455 என்கிறார், அதாவது ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தொடர்பு தூய்மையானதாக இருந்தால் தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானதாக அமையும் என்கிறார். பல படங்களில் நாம் பார்த்திருப்போம், தன்னுடைய எதிரியை பழிவாங்க, அவருடைய மகனையோ மகளையோ நல்லவர் போல நடித்து நம்ப வைத்து அவருக்கு எதிராக அவர்களை தூண்டிவிடும் உத்தி!. சிலர் இந்த உத்தியை நட்பிலும் காட்டுகின்றனர். அரசியலில் பலர் மிகச் சிறப்பாகச் செய்கின்றனர். 
தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 4 February 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-107: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-107:  திருக்குறளில் அரசியல்: 
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம், அரசியலில் பெரியாரை துணைக்கோடல் என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் சிற்றினம் சேராமை என்னும் அதிகாரத்தில் அரசியல் சார்ந்த என்ன கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளார் என்று பார்ப்போம். 

பிறக்கும் போது அனைத்துக் குழந்தைகளுமே நல்ல குழந்தைகள் தான் ஆனால், அவர் எப்படிப்பட்டவராக வளருகிறார் என்பதை பல விடயங்கள் தீர்மானிக்கின்றன, அவர்களின் டி.என்.ஏ, வளர்க்கும் விதம், கூடும் நட்பு, கலாச்சாரம், சுற்றுச்சூழல் (இயற்கை மற்றும் வாழும் சூழல்) ஏற்படுத்தும் தாக்கம் என்று பல வித காரணிகள் ஒரு நபரின் பண்புகளைக் கட்டமைக்கின்றன. ஒவ்வொரு தனிமனிதருக்கும் இவ்வளவு விடயங்கள் இருக்கும் போது அரசிற்கும் அது போன்ற தாக்கங்கள் என்ன விளைவுகளைக் கொண்டுவரும்? ஒரு அரசு திறமையானதாகவோ அல்லது திறமையற்றதாகவோ இருப்பதற்கு எவை காரணமாக அமைகின்றன?
இந்த வாரம் நாம் காணும், 'சிற்றினம் சேராமை', என்னும் இந்த அதிகாரத்தில் ஒரு தலைவன் அல்லது ஆட்சியாளன் தன் இலக்கை அடைவதற்கும், தன்னுடைய புகழைத் தக்கவைப்பதற்கும் அவனது சுற்றுப்புறம் எவ்வளவு முக்கியமானது என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்குகிறது.  நாம், சிற்றினம் சேராமையின் அரசியல் முக்கியத்துவத்தையும்இ அதன் உளவியல் தாக்கங்களையும்இ நவீன மேலாண்மைக் கோட்பாடுகளுடன் அதன் தொடர்பையும் விரிவாகப் பார்ப்போம். 
அரசியல் களத்தில் சிற்றினம் சேராமை: ஒரு அறிமுகம்
திருக்குறளின் பொருட்பால்இ ஒரு நாட்டின் நிர்வாகம்இ தூதுஇ அமைச்சரவை மற்றும் ஒரு அரசனின் தனிப்பட்ட பண்புகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. இதில் 46-வது அதிகாரம்இ ஒரு ஆட்சியாளன் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களைத் தேர்ந்தெடுப்பதில் காட்ட வேண்டிய விழிப்புணர்வை வலியுறுத்துகிறது. 'சிற்றினம்' என்பது அறிவில் குறைந்தவர்களையோ அல்லது வறுமையில் உள்ளவர்களையோ குறிப்பதல்ல; மாறாகஇ குறுகிய நோக்கம் கொண்டவர்கள்இ அறநெறியில் நம்பிக்கையற்றவர்கள் மற்றும் ஒரு தலைவனின் சிந்தனையைத் திசைதிருப்பக்கூடிய 'கீழ்மைக் குணம்' கொண்டவர்களைக் குறித்தே இது குறிப்பிடுகிறது.    
ஒரு ஆட்சியாளனின் வெற்றி என்பது அவனது தனிப்பட்ட திறமையை விடஇ அவன் யாரை ஆலோசனைக் குழுவில் வைத்திருக்கிறான் என்பதிலேயே தங்கியுள்ளது என்பதை வள்ளுவர் இந்த அதிகாரத்தின் பத்து குறட்பாக்களின் மூலம் நிறுவுகிறார். சிற்றினத்தைச் சேர்ந்தவர்களைக் கண்டால் பெரியோர்கள் அஞ்சி ஒதுங்குவார்கள் என்ற கருதுகோளில் தொடங்கிஇ நல்லினத்தைச் சேர்வதே ஒருவனுக்குப் பெரிய துணை என்ற இறுதி உண்மை வரை இந்த அதிகாரம் ஒரு முழுமையான அரசியல் தத்துவத்தை முன்வைக்கிறது.
அரசியல் சூழலில் 'சிற்றினம்' யார் என்பதைப் புரிந்துகொள்வது மிக அவசியம். பரிமேலழகர் உரையின்படிஇ "சிற்றினம்" என்பது அறிவைத் திரித்துஇ இம்மைக்கும் மறுமைக்கும் பலன் இல்லாமல் செய்பவர்களைக் குறிக்கும். இது வெறும் தனிப்பட்ட நட்பு சார்ந்தது மட்டுமல்லஇ ஒரு நாட்டின் கொள்கை முடிவுகளை எடுக்கும் ஆலோசனைக் குழுவில் இடம்பெறும் 'தவறான நபர்களை' இது குறிக்கிறது.
இனி சிற்றினம் சேராமை அதிகாரத்தில் திருவள்ளுவர் என்ன குறிப்பிட்டுள்ளார் என்று காணலாம். 
பொதுவாகவே, பயமறியான் என்று தன்னைச் சொல்லிக் கொள்வதை ஒவ்வொருவரும் விரும்புவதுண்டு. ஆனால், திருவள்ளுவர் அறிவுடைமை என்னும் அதிகாரத்தில் ‘அஞ்சுவ தஞ்சாமை பேதைமை” என்கிறார். ஏனில், அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுபவரே அறிவாளிகளின் தொழில் என்கிறார். உதாரணமாக ஒரு பெருவெள்ளம் இப்போது சூழப் போகிறது, ஆதலால், பல மக்கள் மடியப் போகிறார்கள் என்ற நிலை வரும் போது, அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பது நல்ல அரசு அல்ல, தம் மக்களை பெரு வெள்ளத்தில் இருந்து எவ்வாறு காப்பது என்று யோசிப்பதே சிறந்த ஆட்சியாளருக்கு அழகு, அப்படியெல்லாம் அந்த பெருவெள்ளத்திற்கு அஞ்ச வேண்டும், அப்போதுதான் மக்களை சரியான நேரத்தில் காப்பாற்ற முடியும் என்ற பதட்டமும் அதை நோக்கிய துரித செயல்பாடுகளையும் அரசால் செய்ய இயலும். இந்த நிலை அவசியம் வேண்டும். 
இதனை எதற்காகச் சொல்கிறேன் என்றால், ஒரு நல்ல ஆட்சியாளர் தன்னுடன் மேன்மையான ஆட்களையே வைத்திருக்க வேண்டும், சிறுமை எண்ணங்களும் வன்மமும் கொண்ட ஆட்களை வைத்திருந்தால் அவர்களால் அவ்வரசுக்கும் மக்களுக்கும் தீங்கு தான் ஏற்படும். 
முதல் குறளில், 
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் 
சுற்றமாச் சூழ்ந்து விடும்- 451 என்கிறார். 
மேலே நாம் சொன்ன உதாரணத்தில் தேவையானவற்றிற்கு அஞ்ச வேண்டும் என்று பார்த்தோம். இக்குறளில், திருவள்ளுவர், ‘பெரியோர்கள் சிற்றினத்தைக் கண்டால் அஞ்சி ஒதுங்குவர் ஆனால், சிறியார்களோ அவர்களைத் தம் இனமாகக் கருதி அவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள்” என்கிறார். இதில் சிற்றினத்தைக் கண்டு அஞ்சி ஒதுங்கி நிற்றல் பெரியவர்களுக்கு அழகு என்று வரையறுக்கிறார். அதாவது, அதுதான் அரசியல் முதிர்ச்சி என்று குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.  
நாம் முன்னரே குறிப்பிட்டுள்ளபடி, ஒரு குழந்தை இயற்கையிலே நல்ல குழந்தையாக இருந்தாலும் பல காரணிகள் அதனை மாற்றிவிடும் என்பது போல, ஆட்சியாளரும் என்னதான் நல்லவராக இருந்தாலும், அவர் எந்தக் கூட்டத்தோடு இருக்கிறாரோ, அதற்கேற்றாற்பால் அவர் தன்மையையும் மாறிவிடும் என்பதனை பின்வரும் குறளில் விளக்குகிறார்.
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு -452
அதாவது, நீரானது தான் நிலத்தில் ஓடி வரும் போது, எந்த மண் பகுதியைக் கடக்கிறதோ, அதற்கேற்றார்போல அதனுடைய நிறமும் அதன் தன்மையும் மாறுவடும். அதுபோல மக்களுடைய அறிவும் அவரவர் சேர்ந்த இனத்தின் தன்மைப் படியே மாறும் என்று குறிப்பிடுகிறார் ஐயன். 
தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு