திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-105: திருக்குறளில் அரசியல்:
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம், அரசியலில் பெரியாரை துணைக்கோடல் என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம்.
தலைசிறந்த ஆட்சியாளர்கள் தன்னுடைய அவையில் எப்போது அறிவு மிகுந்தவர்களை தன்னுடன் உடன் வைத்திருப்பதை நாம் அறியலாம். அவரவருக்கு உரிய மரியாதையையும் கொடுத்து ஆட்சியை எந்தவித சிரமமும் இன்றி நடத்தி வருவதைப் பார்த்திருக்கின்றோம்.
ஊதாரணமாக, ஆட்சியாளருக்கு நிர்வாகத்தில் மிகச் சிறந்தவர் ஆனால், நிதி மேலாண்மையில் இல்லை என்றால், நிதி மேலாண்மையில் திறம்பட கற்றுத் தேர்ந்து சிறப்பாகக் கையாளத் தெரிந்தவரை பதவியில் அமர்த்தி அழகு பார்க்கும் போது, நாட்டின் நிதி நிலைமை உயர்வதற்கும், அரசின் செலவினங்களை திறம்பட கையாண்டு, வலுவான நிலையில் நாட்டினை வைத்திருக்க உதவும். இன்றும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர்கள் இருப்பதைக் காணலாம். அவர்கள் திறன் மிகுந்தவராக இருப்பின் ஆட்சியாளருக்கு தான் மக்களுக்கு நினைத்ததை செய்வது மிக எளிதான ஒன்றாக மாறிவிடும்;. திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை -444
அதாவது, அறிவு ஆற்றல் போன்றவற்றில் தம்மை காட்டிலும் சிறந்த வல்லமைப் படைத்த அறிவுடையோரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, மிகப் பெரிய வலிமையாக அமையும் என்கிறார்.
தொலைநோக்குப் பார்வை உடையவர்கள் நாட்டிற்கு மிக அவசியானவர்கள் ஆவார்கள். அவர்களைப் போன்ற சிந்தனையாளர்களால்; தான் அரசால் தொலைநோக்குத் திட்டங்கள் 5 ஆண்டுகள் திட்டம், 10 ஆண்டுகள் திட்டம் என வகுக்க இயலுகிறது. இதையெல்லாம் முன்பே கணித்த திருவள்ளுவர் நிர்வாக மேலாண்மையில் தொலைநோக்குப் பார்வையுடையவர்கள்எப்போதும் ஆட்சியாளர்கள் தங்களிடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அப்படிப்பட்ட ஆட்கள் இருக்கும் போதுதான் பஞ்ச காலங்களையும் பருவ காலங்களையும் வானியல், புவியல் நிகழ்வுகளையும், இராணுவ நிலைகளையும், உலக நோக்கில் பொருளாதார மாற்றங்களையும் முன்கூட்டியே உணர்ந்து நாட்டினை பாதுகாப்பாக வைத்திருக்க இயலும். நமது ஐயன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் -445
கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளருக்கு நன்மை பயக்கும் என்று குறிப்பிடுகிறார்.
எப்போதும் வரப்போவதை முன் கூட்டியே அறிந்து, அதற்கேற்ப திட்டமிட்டால், வெற்றியினை எளிதாக அடையலாம், தஞ்சாவூர் பெரிய கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பிரமிடுகள் என்பன போன்ற மிகப் பெரிய கட்டிடங்களை உதாரணமாகக் கொண்டோம் என்றால் அதன் துல்லிய வடிவமைப்பு, எவ்வளவு திட்டமிடல்களை அந்த காலத்திலேயே கொண்டிருந்தனர் என்பதனை உணரலாம். உலகிற்கே இன்றும் ஆச்சரியமாய் விளங்கும் கல்லணையைப் பார்த்தோம் என்றால,; 2500 வருடங்களுக்கு முன்பே எவ்வளவு பெரிய திட்டமிடல்? மிகப் பெரிய கோயில்கள், கோட்டைகள் எதிரிகளிடம் இருந்து காக்கும் அரண்களாக அந்தக் காலத்தில் இருந்தன. இதனையே அடுத்தக் குறளில்,
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில் -446 என்றுக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். அதாவது, அறிவும் ஆற்றலும் கொண்ட ஒருவன் தகுதி மிக்க பெரியோரை நட்பாகக் கொண்ட அவர்காட்டும் வழியில் நடந்தால் அவரை பகைவரால் ஒன்றும் செய்ய இயலாது என்கிறார்.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
https://www.youtube.com/@AAAInfotainment
தோப்பு
No comments:
Post a Comment