திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-90:
ஊக்கமுடைமை:
கடந்த வாரம் ஊக்கமுடைமை அதிகாரத்தின் முதல் பகுதியைப் பார்த்தோம். இந்த வாரம் அதன் பிற்பகுதியைக் காண்போம். எண்ணம் போல் வாழ்க்கை என்று கேள்விப்பட்டிருப்போம். பலரும் அதனை உணர்ந்திருப்பர். அதே போல் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடுவர். எதிர்மறையாகப் பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடுவதுண்டு, ஏனெனில் ‘ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்” என்ற நம்பிக்கையின் வெளிப்பாடே அது. ஆதலால், எந்த நிலையிலும் நேர்மறையாக எண்ணும் போதும் செயல்படும் போதும் நமக்கான முன்னேற்றத்தினை கண்கூடாகக் காண முடியும். முன்னேற்றம் என்றால் சிலர் பொருளாதார அளவுகோலையேக் கொள்கின்றனர். எப்போதும் முன்னேற்றம் என்பது தன்னுடைய முயற்சியில் பொருளாதாரத்திலோ, தொழில் ரீதியாகவோ உயர்வினைக் கண்டாலும் மனதளவில் ஏற்படும் முன்னேற்றத்தை அல்லது விளைவுகளை அவர் எவ்வாறு கொள்கிறார் என்பதிலேயே அமைகிறது. ஏனெனில் பணம் நிறைய சேர்ந்தும் மன உளைச்சலுடன் இருப்பவர்களைப் பார்க்க முடிகிறது. இச்சூழலில் இருப்பவர்கள் செந்நாப்போதரின் வார்த்தைகளை புரிந்து கொள்வது சாலச் சிறந்தது. பின்வரும் குறளில் திருவள்ளுவர் குறிப்பிடுவதாவது
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து -596
நமக்கெல்லாம் மிகப் பரிச்சயமான இந்தக் குறளில் நினைக்கக்கூடியவற்றை அல்லது எண்ணக்கூடியவை எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்க வேண்டும், ஒரு வேளை அந்த நிலை கைகூடாத நிலையிலும், அப்படி நினைப்பதை மட்டும் கைவிடவேக் கூடாது என்கிறார். சாலமன் பாப்பையா அவர்கள் உரையில் குறிப்பிடும் போது ‘எண்ணியபடி வேறு காரணங்களால் நிறைவேறாமல் போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவார், ஆகவே அது நிறைவேறியதாக கருதப்படும்” என்கிறார். திருவள்ளுவரை இந்த வகையினர் என்று பிரிக்க இயலாதவாறு பலதுறையிலும் சிறந்து விளங்கியவர். அவருடைய குறளில் தான் எத்தனை அணிகள், உவமைகள், கருத்துக்கள், தத்துவங்கள் மற்றும் ஒப்புமைகள் என்று பலவாறு பெருமைப்படும் அளவிற்கு அடுக்கிக் கொண்டே செல்லலாம், ஒருவருடைய ஊக்கம் என்பது எப்படி இருக்க வேண்டும்? சிலர் வாழ்க்கையில் எவ்வளவு வலியைப் பெறுகின்றனர்? எவ்வளவு சோகங்களை அனுபவிக்கின்றனர்? எவ்வளவு துரோகங்களை எதிர்கொள்கின்றனர்? அவற்றை எப்படிக் கடந்து செல்வது. இதோ, கீழே வள்ளுவர் உரைக்கிறார்...
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு -597
அதாவது போரில், தன்னுடைய உடம்பில் தன் உடம்பே மறையும் அளவிற்கு அம்புகளால் புண்பட்ட போதும், யானையானது தன் தொடர்ந்து முன்னேறிச் சென்று தன் பெருமையை நிலை நிறுத்தும்; அதுபோல ஊக்கம் உடையவர் அழிவிலும் தளர மாட்டார்கள் என்கிறார். எவ்வளவு இடர் வந்த போதிலும் மனதில் திடமான ஊக்கம் உடையவர் முன்னேறிச் செல்வர் என்பதற்கு எவ்வளவு அருமையான ஒரு உதாரணம்! வள்ளல் என்று ஒருவர் எவ்வாறு போற்றப்படுகிறார். இல்லை என்று ஒருவர் வரும் போது தன்னிடம் இருப்பதில் இருந்து கிள்ளிக் கொடுப்பதல்ல கொடை, அள்ளிக் கொடுப்பதே ஆகும். இந்தக் கதையை நான் கேட்டதுண்டு, ஒரு முறை அர்ஜீனன் கிருஷ்ணரிடம், நான் நிறைய கொடைக் கொடுக்கிறேன். ஆனால், கர்ணனைத்தான் எல்லோரும் புகழ்கின்றனர் என்று வருத்தப்பட்ட வேளையிலே, கிருஷ்ணன் அர்ஜீனனை அஸ்தினாபுரம் பகுதி நோக்கி இரதத்தை விட்டார். அப்போது அவருடைய வலிமையால் அங்கு இருந்த மலையை தங்க மலையாக மாற்றினார், பிறகு, அர்ஜீனரிடம் இப்போது இந்த மலை உனக்குச் சொந்தம், நீ விரும்பும் வகையில் கொடையளிக்கலாம் என்றார், உடனே, அர்ஜீனன், ஊருக்குச் சென்று அனைத்து மக்களையும் வரச் செய்து, இந்த மலையில் இருந்து தங்கங்களை வெட்டி எடுத்துக் கொள்ளச் சொன்னார். உடனே மக்கள் மலை மலையாக அங்குக் குவிந்தனர். அனைவரும் அந்த இடத்தில் தங்கம் வெட்டுவதையே குறியாக இருந்தனர். அங்கு அர்ஜீனன் இருந்ததையோ, கிருஷ்ணன் இருந்ததையோக் குறித்துக் கவலைப் படவில்லை. அவர்களுக்கு தள்ளுமுள்ளு ஏற்படும் பிரச்சனையாகிவிடும் என்று சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அர்ஜீனரும் சேர்ந்து அவர்களோடு சேர்ந்து வெட்டி சரிசமமாக பிரிக்க முயன்று களைப்புற்றார். ஆனாலும், அனைவருக்கும் கொடுத்து முடியவில்லை. களைப்போடு கிருஸ்ணரை நோக்கினார். பிறகு, கிருஷ்ணன், கர்ணனை வரவழைத்து, கர்ணனுக்கும் அதே போன்று மலையைப் பரிசளித்தார். கர்ணன் அந்த மலையைப் பார்த்தபிறகு கிருஷ்ணருக்கு நன்றி தெரிவித்து விட்டு வந்து அந்த ஊரில் உணவகம் வைத்திருந்த குடும்பத்தினை வரவழைத்தார். வரவழைத்து இந்த ஊரில் யாரும் பசியோடு இருக்கக்கூடாது. இந்த ஊரைக் கடந்து செல்பவர்களும் வயிறார சாப்பிட வேண்டும் அந்தப் பணியை நீங்கள் தான் செய்ய வேண்டும். இந்தத் தங்க மலை முழுவதும் உங்களுக்குத் தான் உங்கள் சேவைக்கான செலவினத்தை இந்த மலையை வெட்டி மேற்கொள்ளுங்கள் என்று ஆணையிட்டடர். கிருஷ்ணர் அர்ஜீனரைப் பார்த்தார். புhர்த்தாயா, நீ இதை எப்படி பகிர்ந்தளிப்பது என்று உன் அறிவின் மூலம் எண்ணினாய். ஆனால், எந்த வித சிரமம் இல்லாமல் மக்கள் நிலையில் இருந்து நிரந்தத் தீர்வினை உடனே வழங்கி விட்டான்” என்றார். இந்தக் கதை உண்மையில் நடந்ததா என்பது தெரியாது, நான் கேள்விப்பட்டது. அதிலும் நினைவில் இருப்பதை வைத்து எழுதியுள்ளேன். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் வள்ளல் தன்மை தான் உடையவன் என்று எண்ணத்தில் கொடுப்பதில்லை. யோசிக்காமல் வருபவருக்குக் கொடுப்பதேயாகும். பல பேரும், தாங்கள் கொடை வழங்குகிறோம் என்ற பெயரில் கடமைக்கு செய்வதுண்டு. ஆனால், பெருமன்னர்கள் இருந்த போதும், ஏன் கடையேழு வள்ளல்கள் பெயர் பெற்றனர், அவர்கள் தானம் வழங்குகையில் எந்தச் சலனமும் மனதில் ஏற்றிக் கொள்ளவில்லை, பார்த்தனர், உணர்ந்தனர், அளித்தனர் அவ்வளவே. சில சமயம் முட்டாள் தனமாகக் கூடத் தோன்றும். ஏன் முல்லைக் கொடிக்கு ஒரு கம்பை நட்டால் அது அதனைப் பற்றி ஏறியிருக்குமே தேரை ஏன் கொடுத்தார் பாரி?, பாடலுக்காக பாணனுக்கு குறும்பொறை நாட்டையா எழுதி கொடுப்பான் ஓரி ? என்றெல்லாம் நமக்குத் தோன்றும், எந்தச் சலனமும் இல்லாமல் கொடுத்ததால் தான் அவர்கள் வள்ளல்கள் எனப் பெயர் பெற்றனர். இதனையே வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு -598
கலைஞர் அவர்கள் தம்முடைய உரையில் மேற்கண்ட குறளுக்குக் குறிப்பிடுவதுபோல அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை என்கிறார். ஊக்கம் என்பது ஒருவருடைய உருவத்தை வைத்து அமையுமா? இல்லை, ஊக்கம் என்பது உள்ளார்ந்த உணர்வு, அது உருவத்தை வைத்து வருவதில்லை. ஆதலால், ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து இவர் ஊக்கமுடையவர் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. பின்வரும் குறளில் தெளிவாக ஐயன் குறிப்பிடுகிறார்.
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின் -599
என்னதான் யானையானது பெரிய உடலையையும் வலிமையான கூர்மையான தந்தங்களைக் கொண்டிருந்தாலும், மனதில் ஊக்கம் உடைய புலி தன்னைத் தாக்க வரும் போது அஞ்சி நிற்கும் என்கிறார்.
அடுத்தக் குறளில்
உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்
மரம்மக்க ளாதலே வேறு-600 என்கிறார்.
ஊக்கமே இல்லாமல் வாழும் ஒருவரை எப்படி பொருத்துவது என்ற நிலையில் இந்த உதாரணத்தைக் கொடுத்துள்ளார். எல்லோரும் செல்வம் நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மையான செல்வம் என்பது அவர் கொண்டுள்ள ஊக்கமே ஆகும். அப்படி ஊக்கம் இல்லாமல் இருக்கும் ஒரு நபர் உருவத்தால் மனிதராக இருந்தாலும் அவர்கள் மரங்களைப் போன்றோரே ஆவார்.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.
நன்றி
https://www.youtube.com/@AAAInfotainment
தோப்பு
No comments:
Post a Comment