Wednesday, 24 September 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-88:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-88:
அருளுடைமை:
கடந்த வாரம் அருளுடைமை என்னும் அதிகாரத்தின் முதல் 5 குறட்பாக்களுக்கு விளக்கத்தினைப் பார்த்தோம். இந்த வாரம் பிற்பகுதியைப் பார்க்கலாம். 
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி                                                                                   
அருள்நீங்கி அல்லவை செய்தொழுகுவார் - 246
தன் மனிதில் அருள் இல்லாதவர் எத்தகையர் என்பதனை இக்குறளில் குறிப்பிடுகிறார். அதாவது, அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர்களாக ஆவார் என்றுக் குறிப்பிடுகிறார். 
இந்தப் பூமியான பொருள் ஆசையால் சூழ்ந்துள்ளது, ஆகவே பொருள் சேர்ப்பதற்காக பலரும் எந்த ஒரு எல்லைக்கும் சென்று விடுகின்றார். அவ்வாறு செல்வதின் உச்சக்கட்டம் அதிகப்படியான பணத்தையோ அல்லது சொத்துக்களையோ சேர்ப்பதற்கேயல்லாமல் வேறில்லை. இந்தத் தத்துவத்தை உணர்ந்தவராய் கீழ்க்காணும் குறளை வெளிப்படுத்துகிறார். 
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
 இவ்வுலகம் இல்லாகி யாங்கு -247
பொருள் இல்லாமல் இருப்பவர்களுக்கு இவ்வுலகத்தில் இன்பமான வாழ்க்கை இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்களுக்க மேலுலகத்து வாழ்வும் இல்லையாகும் (கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் குறிப்பிடுகையில் கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது) என்கிறார். 
அடுத்தக் குறட்பாவில்,
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் 
அற்றார்மற் றாதல் அரிது-248
பொருள் இல்லாமல் வறுமையில் ஏழையாக மாறியவர் திரும்பவும் ஒரு காலத்தில் பொருள் வளம் பெற்று விளங்கலாம். அருள் இல்லாமல் போனவரோ, அருளை இழந்தது இழந்ததுதான். மீண்டும் அருள் உள்ளவராய் மாறுவது கடினம் என்று குறிப்பிடுகிறார். 
அடுத்தபடியாக, நாம் பலஇடங்களில் பார்த்திருக்கிறோம், தான் தானம் செய்கின்றேன் பேர்வழி என்று தான் செய்யும் தானத்தை, தான் செய்யும் தானத்தை விட அதனை ஆவணப்படுத்துவதில் புகைப்படம் அல்லது காணொலி எடுத்து பொதுவெளியில் வெளியிடுவதற்கு பலர் நிறைய செலவு செய்வதைக் காணலாம். சுய பகட்டிற்காக இவ்வாறு செய்பவர்கள் பலரைக் கண்டிருக்கிறேன். சிலர் உண்மையிலே சேவை செய்து, இதுபோல் பலரும் செய்ய முன்வர வேண்டும் என்ற நோக்கி;ல் பதிவிடுவார். ஆனால், அம்மாதிரியான செயலைச் செய்பவர் தானத்திற்குத்தான் அதிகம் செலவு செய்வார் பகட்டிற்கு அல்ல, இதுபோல பகட்டிற்காக செயல்களைச் செய்பவர்களை நமது ஆசான் எவ்வாறு விளிக்கிறார்?
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம் -249 என்கிறார். 
அதாவது, அறிவு தெளிவு இல்லாதவன் ஒரு புத்தகத்தைப் படித்து அதன் உண்மைத்தன்மையை அர்த்தத்தை உணர முடியுமா? அதுபோல் தான,; அருள் இல்லாதவன் செய்கின்ற தருமத்தை ஆராய்ந்து பார்த்தோமென்றால் இருக்கும் என்கிறார். 
அடுத்து, 
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து -250 என்கிறார். சிலர் வெறும் எண்ணிக்கையை வைத்து தான் பலம் மிகுந்தவராக நினைத்துக் கொள்வதுண்டு. தன்னைவிட எண்ணிக்கையில் மிகுந்தவரோ அல்லது தன்னை விட அதிகாரம் மிகுந்தவரிடம் பணிந்தும், தன்னிடம் இருப்பவர்களைவிட எண்ணிக்கையில் குறைவாக இருப்பவரிடமோ அல்லது அதிகாரம் அற்றவர் போலத் தெரிபவரிடமோ தன்னுடைய வீரத்தைக் காட்ட நினைப்பதுண்டு. ஆனால், மகாபாரதம் போன்ற இதிகாசங்களைப் பார்க்கும் போதும், செங்கிஸ்கான், அலெக்சாண்டர் போன்ற உண்மையாக வாழ்ந்த வீரர்களின் கதைகளைப் படிக்கும் போது, எண்ணிக்கையை விட அவர்கள் வகுக்கும் உத்தியே அவர்களை உலகப் புகழ் பெறச் செய்தது. எவரேனும், எண்ணிக்கையையும் தனக்குள் உள்ள அதிகாரத்தையும் மட்டும் வைத்துக் கொண்டு சிறியாரை மட்டமாகவோ அல்லது எளிதாகவோ நினைத்துக் கொண்டால், அவர்கள்தான் பிறகு வருத்தமடைய நேரிடும், இந்நிகழ்வினை பல்லாண்டுகளுக்கு முன்னரே, திருவள்ளுவர் தெளிவுபடுத்தியுள்ளார். எப்போதும், யாரையும் இளக்காரமாக எள்ளி நகையாடாமல், சுய பரிசோதனை செய்து கொள்ளும் போது, மனிதர்களை சமமாகவும் சக மனிதனாகவும் மதிக்கும் மனோபாவம் ஏற்படும் என்பதை மேற்கண்ட குறளில் உணர்த்துகிறார். அதாவது, அருள் இல்லாதவன் தன்னை விட எளிய மனிதரைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னை விட பலசாலி முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருக்கு என்பதனை மறந்துவிடக் கூடாது என்கிறார். 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment
தோப்பு

Wednesday, 17 September 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-87:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-87:
அருளுடைமை:
திருவள்ளுவர் அவர்கள் உடைமை என்னும் தலைப்பில் எழுதிய அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றோம். கடந்த வாரங்களில் அன்புடைமை;, அறிவுடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை மற்றும் பொறையுடைமை பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் அருளுடைமை என்னும் அதிகாரத்தைப் பற்றிப் பார்ப்போம்.
அருள் என்பது கருணை, இரக்கம், பரிவு மற்றும் அன்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஆழமான குணமாகும். இது தம்முடையவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து உயிர்களிடத்தும் பாகுபாடின்றி காட்டப்படுவதாகும்.
வள்ளுவர் இதனை "அன்பு" என்பதிலிருந்து கவனமாக வேறுபடுத்துகிறார். அன்பு என்பது குடும்பம் மற்றும் உறவினர்களிடம் காட்டப்படும் அடிப்படையான பாசமாகும். அருள் என்பது அன்பின் முதிர்ச்சியும், அதன் உலகளாவிய விரிவாக்கமும் ஆகும்; குறிப்பிட்ட அன்புஇ அனைத்து உயிர்களையும் அரவணைக்கும் எல்லையற்ற கருணையாக மலர்வதே அருள்.
மரபுப்படி, அருளுடைமை திருக்குறளின் 25-வது அதிகாரமாக, அறத்துப்பாலில், துறவறவியல் என்னும் இயலின் கீழ் அமைந்துள்ளது. இதன் இடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கருணை அனைவருக்கும் இன்றியமையாதது என்றாலும், அதன் முழுமையான வடிவம் ஒரு உயர் அறம் என்பதையும், அறநெறியிலும் ஆன்மீகத்திலும் முதிர்ச்சி பெற்றவர்களின் அடையாளமாகவும் இது விளங்குகிறது என்பதை இது காட்டுகிறது.

செல்வம் என்றால் பலரும் நினைத்துக் கொள்வது பணம் சார்ந்த விடயங்களைப் பலரும் நினைத்துக் கொள்வதுண்டு, அதனை பல இடங்களில் திருவள்ளுவர் அவர்கள் மறுத்துள்ளார். இந்த அருளுடைமை அதிகாரத்திலும் அதனை மீண்டும் வலியுறுத்துகிறார். முதல் குறளில்,
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள - 241
என்கிறார். 
அதாவது, கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம் கூடக் பொருள்களாகிய செல்வங்கள் குவிந்திருக்கிறது. ஆனால், உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும் என்கிறார். இது, பொருளைச் சேர்ப்பதையே நோக்கமாகக் கொண்ட ஒரு வாழ்க்கைஇ இந்த உயர் அறநெறித் தரத்தின்படி, ஒரு ஆழ்ந்த வறுமையான வாழ்க்கை என்பதைக் குறிக்கிறது. ஒரு நபரின்இ அதன்மூலம் ஒரு சமூகத்தின் செழிப்பின் உண்மையான அளவுகோல்இ அவர்களின் அருளுடைமையே ஆகும்.
அடுத்தக் குறளில், 
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை - 242  
நல்ல நெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆராய்ந்து அருளுடன் வாழ வேண்டும். பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே நமது வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும். இங்கே, வள்ளுவர் அருளை குறிப்பிட்ட மதக் கோட்பாடுகளைக் கடந்த ஒரு மீநெறிமுறையாக நிலைநிறுத்துகிறார். இக்குறள்இ குறளின் புகழ்பெற்ற சமயச்சார்பற்ற மற்றும் உலகளாவிய தன்மையின் சான்றாகும். அருள் என்பது ஒரு மதத்திற்கு மட்டும் உரிய கோட்பாடாக முன்வைக்கப்படவில்லைஇ மாறாக பகுத்தறிவின் மூலம் அணுகக்கூடிய ஒரு உலகளாவிய உண்மையாகவும், ஒரு அறநெறி மாறிலியாகவும் முன்வைக்கப்படுகிறது. மதங்கள் அவற்றின் மீபொருண்மை நம்பிக்கைகளிலும், சடங்கு முறைகளிலும் வேறுபடலாம்இ ஆனால் அவற்றின் அறநெறிக் கரு, உண்மையானதாகக் கருதப்பட வேண்டுமானால், அது கருணைக் கோட்பாட்டில் ஒன்றிணைய வேண்டும் என்று இது மறைமுகமாக வாதிடுகிறது. அருள் என்பது மனித வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அனைத்து உண்மையான பாதைகளின் பொதுவான காரணியாகும்.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல் – 243
மேலே குறிப்பிட்ட குறட்பாவில், அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை என்கிறார். சில கிராமங்களில் முன்பெல்லாம் கட்ட பஞ்சாயத்துகள் நடப்பதுண்டு, இன்று ஆங்காங்கே ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் இது போன்று சம்பவங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஏதேனும், ஒரு பிரச்சனை என்று வந்துவிட்டால், சிலர் சாராயத்திற்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டு எளியவருக்கு எதிராக அவர் பாதிக்கப்பட்டிருந்தாலும் தெரிந்தே தவறான தண்டனைகள் வழங்கப்படுவதுண்டு. ஆனால், உண்மையான நீதிமான்கள் தனது குடும்பமே இருந்தாலும், தான் கொண்டுள்ள நியாயத்தன்மையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்று இருப்பர். இவர்கள் சுற்றியுள்ளவர்கள் என்ன சொல்வார்கள் என்று கவலைப்படுவதில்லை. இதுபோன்ற அருளுடையவர்கள் நீதியின் வழிதான் நடப்பார்கள் என்று எண்ணத்தில் தான் மக்கள் இன்றும் கடைசிநிலையில் நீதிமன்றத்தின் மீது அதீத நம்பிக்கைக் கொண்டுள்ளனர். 
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை- 244
ஏல்லா உயிர்களிடத்திலும் கருணைக் கொண்டு அவைகளைக் காத்திடுவதையே கடமையாகக் கொண்டு வாழும் சான்றோர்களை அருளுடையவர்கள் என்றும் தன் உயிரைக் குறித்துப் பயப்படமாட்டார்கள் என்றும் குறிப்பிடுகிறார். ஒருவர் நாய் வளர்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம், அதன் மீது அவர் அதீத பிரியம் கொண்டிருக்கும் போது, அவர் அந்நாய்க்கு திடீரென்று உடம்பு சரியில்லையென்றால், இவரும் பட்டினி கிடப்பதைப் பார்த்திருப்போம். உண்மையான அக்கறையும் எண்ணமும் கொண்டவர்கள் எல்லா உயிர்களிடத்திலும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டில் இருப்பர். பின்வரும் குறளில் அருளை உடைமையாகக் கொண்டவர்களை எவ்வாறு ஒப்பிடுகிறார் என்று அறியும் போது, எந்தளவிற்கு அவர்களை மேன்மைப்படுத்துகிறார் என்பதனை அறியலாம். 
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி – 245
அருளை உடைமையாகக் கொண்டு வாழ்பவர்களுககு எந்தத் துன்பமும் இல்லை, இதற்கு காற்று உயிர் வழங்குவதால் வாழும் வளமான பெரிய உலகமேச் சிறந்த உதாரணம் ஆகும் என்கிறார்.

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

Wednesday, 10 September 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-86:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-86:
பொறையுடைமை:
கடந்த வருடம் பொறையுடைமை அதிகாரத்தின் முற்பகுதியைப் பார்த்தோம், 
இந்த வாரம் அதன் பிற்பகுதியைப் பார்ப்போம்.
விவிலியத்தில் குறிப்பிடப்படுவதுபோல, இயேசுவை சிலுவையில் அறைய வேண்டும் என்று நினைத்தவர்கள், அன்று ஒருநாள் மட்டுமே அவர் இறப்பதைக் கண்டு மகிழந்தனர், ஆனாலும், அவர் உயிர்த்தெழுவார் என்று உரைத்ததால் மகிழ்ச்சி அவர்களுக்கு நீடிக்க வில்லை, ஒருவித உளைச்சலிலேயே இருந்தனர். ஆனால், இவர்கள், இயேசுவை கசையால் அடித்தாலும், முள்முடி சூட்டினாலும், சிலுவையில் அறைந்தாலும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார். ஆதலே, அவர் உலகம் புகழும் புனிதராக மதிக்கப்படுகிறார். இக்கருத்தையே பின்வரும் குறளில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். 
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.   - 156 
ஒருவரை துன்புறுத்துபர்களுக்கு அல்லது தீமையை உண்டாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, அந்தத் தீமையை உண்டாக்குபவருக்கு அன்று மட்டுமே இன்பத்தை அனுபவிப்பர். ஆனால், அதனைப் பொறுத்துக் கொண்டவருக்கு உலகம் அழியும் வரையுமே புகழ் உண்டு என்கிறார். 
அடுத்தக் குறளில், சிலர் அறைகுறையாகப் புரிந்து கொண்டோ அல்லது முழுமையாக விடயத்தை அறியாமலோ, மற்றவர்களைப் புரிந்து கொள்ளாமலோ அல்லது தனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையிலோ பிறரை புரிந்து கொள்ள முயற்சி செய்வதில்லை. அதனாலேயே பல தவறுகள் ஏற்படுவதுண்டு. பலருக்கு தீங்கிளைப்பதற்கும் அதுவே காரணமாகின்றது. ஆனால், உண்மையறிந்தவர்கள் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று உண்மைக்காக பொறுமையாக தன் பக்கத்து நியாயத்தை விளக்குவர், அல்லது வெளிக் கொண்டு வருவர், அந்த நிலையில் கோபமேற்படுத்தும் வகையில் எதிரில் இருப்பவர் செயல்பட்டாதும் பொறுமையாக இருப்பது நல்லது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். 
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.   - 157 என்கிறார். 
அதாவது, தகுதியில்லாதவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், அதனால் மிகவும் மனம் நொந்து அவருக்குத் தீமை செய்யாதிருத்தல் நல்லது  என்கிறார். 
நாம் முன்னரே குறிப்பிட்டபடி மமதையில் செருக்கு மிகுதியில் சிலர் தான் தான் பெரியவர் என்ற ஆணவத்தில் தீங்கிழைப்பது உண்டு. அவர்களை பொறுமையாக கையாள வேண்டும். இதனை பின்வரும் குறளில் முன்னரே தெளிவுபடுத்தியுள்ளார் ஐயன். 
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல். - 158 என்கிறார்.
அதாவது, செருக்கு மிகுதியால் தீமை செய்தவர்களை தாம், தம்முடைய பொறுமை என்னும் தகுதியினால் வென்று விட வேண்டும் என்கிறார். இன்றும் தான் எல்லா வகையிலும் உயர்ந்தவன் என்ற செருக்கில் பலரும் வலம் வருதைக் காண்கிறோம். இவர் அடுத்து, தன்னைக் காத்துக் கொள்வதற்காக எந்த எல்லைக்கும் செல்வார். இதனை நாம் பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் பார்த்திருக்கிறோம். இதனையே அடுத்தக் குறளில் குறிப்பிடுகிறார்.  
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். - 159  என்கிறார். 
எல்லை மீறி நடப்பவரின் வாயிற் பிறக்கும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள், இல்லற வாழ்க்கையில் இருந்தாலும் துறவியர் போலத் தூய்மையாளர் ஆவார் என்கிறார். 
அடு;த்தக் குறட்பாவில், எந்தத் தாய்;க்கும் தன் குழந்தை உண்ணாமல் இருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாது, அரசியல் காரணமாக இருந்தாலும் சரி, சமூக நீதிக்கான தேவை இருந்தாலும் சரி, முக்கிய  செயல்பாடாக உண்ணாவிரதம் இருக்கிறது. அவ்வாறு இருப்பவர், தியாகத்தில் திருவுருவாக போற்றப்படுகின்றனர். உண்ணா விரதம் இருப்பதால் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதையும் உணர முடிகிறது. துறவறம் இருப்பவர்களும் உண்ணா நோன்பைக் கடைப்பிடிப்பதை பிராதானமாகக் கையாளுகிறார்கள். வடக்கிருத்தல் என்பது கூட உண்ணாமல் இருந்து இறப்பதைத் தான் குறிப்பிடுகிறது. ஆனால், திருவள்ளுவர் என்னக் குறிப்பிடுகிறார்?
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்- 160 என்கிறார். 
அதாவது, உணவு உண்ணாமல் நோன்பு கொள்பவர், பிறர் சொல்லும் கொடுஞ்சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையிலே தான் போற்றப்படுவார்கள் என்று குறிப்பிடுகிறார். 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Tuesday, 2 September 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-85:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-85:
பொறையுடைமை:

திருவள்ளுவர் அவர்கள் உடைமை என்னும் தலைப்பில் எழுதிய அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றோம். கடந்த வாரங்களில் அன்புடைமை;, அறிவுடைமை, அடக்கமுடைமை மற்றும்  ஒழுக்கமுடைமை பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் பொறையுடைமை என்னும் அதிகாரத்தைப் பற்றிப் பார்ப்போம். பொறுமையின் அறம் அல்லது பொறுமையாக இருத்தலைக் குறித்து இந்த அதிகாரம் பேசுகிறது. ‘பொறுத்தார் பூமி ஆள்வார்” என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். பொறுமைக்கும் மிகப் பெரிய வலிமை தேவைப்படுகிறது. ஆகவே, பொறுமையினையும் உடைமையாக நமக்கு எடுத்துக் காட்டுகிறார் வள்ளுவர் பெருமான். 
வாழ்வின் அனைவருமே இன்ப துன்பங்களை கடந்து தான் வருகின்றோம், அதனை நம்மால் தவிர்க்க இயலாது, அதில் பெரும்பாலான இன்ப துன்பங்களுக்கு பெரும் பொறுப்பு நமக்கே உரியது. இதனைத் தான் 2000 வருடங்களுக்கு முன்னரே ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்கிறார் கணியன் பூங்குன்றனார். 
அப்படியானால் நிதானமும் பொறுமையும் நமக்கு பல நன்மைகளைத் தருவதை நாம் பார்த்திருக்கின்றோம். பலபேர் செய்யும் தவறுகளுக்கு அவர்களுடைய பொறுமையற்றத் தன்மை காரணமாக இருக்கிறது. அதனால் தான் நமக்கு கோபத்தில் இருக்கும் போதோ பதட்டத்தில் இருக்கும்போதோ ‘தண்ணீர் குடி” என்று நமது பெரியவர்கள் நம்மை ஆசுவாசப்படுத்துவதுண்டு. 
‘என்ன சொல்கிறீர்கள்? எவ்வளவு பெரிய பிரச்சனை இருக்கிறது? எவ்வளவு காரியங்கள் செய்ய வேண்டியுள்ளது? பொறுமையாக இருந்தால் அவ்வளவுதான்...” என்று சொல்வது காதில் விழுகிறது. ஆனால், செந்நாப்போதர் என்ன சொல்கிறார் என்று கொஞ்சம் பாருங்கள், ஒருவர் எந்த மாதிரி பொறுமையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார் பாருங்கள் பின்வரும் குறட்பாவில்...
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. -151 என்கிறார். 
நமது கையில் ஒரு நபர் தெரியாமல் கீறி விட்டால் என்ன ஆகும். சடாரென்று கோபம் கொண்டு நமது கோபத்தைக் காட்டுவதற்கு முயல்வோம். சிலர் மற்றவர் தங்களை நெருங்கி வருவதைக் கூட விரும்புவதில்லை. ஆனால், நிலமானது எப்படி தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்து விடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் இகழ்ந்து பேசுகிறவர்களையும் அவமதிப்பவர்களையும் மதித்துப் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும் என்கிறார். நிலத்தை கிட்டத்தட்ட தாய்க்கு இணையாக பார்க்கிறார். தாய் மட்டுமே தன் மகன் தன்னைத் துன்பத்தில் ஆழ்த்தினாலும் அவர் மீது அக்கறையுடனேயே இருப்பார். நிலமும் அவ்வாறு இருக்கிறது. அதுபோல பொறுமை இருக்க வேண்டும் என்கிறார். 
அடுத்தக் குறளில், 
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று - 152  என்கிறார். 
இன்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் பலரை மிகக் கேவலாமாக பேசுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். விவாதங்களில் உச்சபட்ச கோபம் வரும் அளவிற்கு பேசினாலும் வார்த்தையை சிலர் கவனமாகவும் பொறுப்பாகவும் கையாளுவதை பார்க்க முடியும். அப்படிக் கையாள்பவர்கள் மதிக்கப்படுவதையும் பொறுமையற்று பேசுபவர்களை பார்வையாளர்கள் வசை பாடுவதையும் பார்க்க முடிகிறது. இது போன்ற நீடித்த பொறுமையை அப்போதே சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர். அதாவது மேற்கண்ட குறளில், பிறர் அளவு கடந்து செய்த தீங்கையும் எப்போதும் பொறுத்துக் கொள்ள வேண்டும்; என்கிறார் மேலும் அதனை நினைத்துக் கொண்டிருக்காமல் அதனை மறந்து விடுதல் அதனிலும் நன்மையாகும்  என்கிறார்.  ஒரு பொன்மொழி ஒன்ற ஞாபகத்திற்கு வருகின்றது. ‘மகிழ்ச்சியை தலைக்குக் கொண்டு செல்லாதே, துக்கத்தை இதயத்திற்கு அனுப்பாதே” என்று, அதாவது கெடுதல் ஏற்படுத்துவதை உள்வாங்கி அவதிப்பட வேண்டாம் என்பதும் இதன் அர்;த்தமாகும். நீங்கள் உங்கள் ஆழ்மனதிற்குக் கொண்டு செல்லாமல் பொறுமை காப்பது உங்களுக்கு நலமாக இருக்கும் என்பதை உணர்த்துகிறார். அடுத்தக் குறளில்
இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. – 153 என்று சொல்கிறார்.  வறுமையிலே மிகக் கொடுமையான வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காமல் போகும் நிலையாகும் அதுபோல வலிமையிலும் மிகச் சிறந்த வலிமை என்பது ஒருவர் அறிவு கெட்டத் தனமாக ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொள்ளும் போது அறிவிலாதவரின் செயலை பொறுத்துக் கொள்வது ஆகும். இந்த காலத்திற்கு அவசியம் தேவைப்படும் ஆலோசனையாகும் இது. 
கீழ்வரும் குறளில்,
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.- 154 என்கிறார்.
நிறைகுடம் நீர் தளும்புவது இல்லை என்பது போல தான் சான்றாண்மை விலகாமல் நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு விலகாமல் இருக்க வேண்டும் என்று ஒருவர் விரும்பினால், அவன் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும் என்கிறார். 
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. - 155
விருமாண்டி படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு டயலாக் சொல்லுவார், ‘மன்னிக்கிறவன் பெரிய மனுஷன்” என்று, அதேபோல், விவிலியத்தில் ஒருமுறை இயேசுவின் சீடராக இருக்கும் பேதுரு ஒருமுறை அவரிடம், ‘என் சகோதர சகோதரிகள் எனக்கு எதிராக பாவம் செய்தால், நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? ஏனக் கேட்கிறார். அதற்கு இயேசு ‘ஏழு முறை மட்டுமல்ல, எழுபது தடைவ ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்” என்று பதிலளிக்கிறார். அதாவது, மன்னிப்பதற்கு எண்ணிக்கை இருக்க வேண்டியதில்லை என்பதை உணர்த்துகிறார். நீடித்த பொறுமையை வலியுறுத்துகிறார். இந்தக் கருத்தை முன்னரே மேற்கண்ட குறளில் சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர். தமக்குத் தீமை செய்தவரை பொறுமையிழந்து தண்டித்தவரை ஒரு பொருட்டாக எவரும் மதிக்க மாட்டார்கள், ஆனால், பொறுத்தவர்களை பொன் போல மதித்துப்  போற்றுவார்கள் என்கிறார் திருவள்ளுவர் அவர்கள். 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி