Wednesday, 25 June 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-75:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-75:
திருவள்ளுவரின் கல்விக் கோட்பாடுகள்:
கடந்த வாரத்தின் திருவள்ளுவரின் கல்விக் கோட்பாடுகள் என்ற தலைப்பின் தொடர் பகுதியை இந்த வாரம் பார்ப்போம். 
2. கல்வியின் குறிக்கோள்:
‘உடம்பை வளர்த்தேன்.. உயிர் வளர்த்தேனே;” என்கிறார் திருமூலர். உலக மக்கள் ஒவ்வொருவரும் கல்வி கேள்விகளால் தாம் பெற்ற அறிவின் துணையால் தன்னுயிர்க்கு இன்பம் அளிக்கும் உடல் நலத்தைப் பேணி,  மனப் பயிற்சிகளால் மனதில் உள்ள மாசுகளை நீக்கி, தன்னுயிர்க்கும் பிறஉயிருக்கும் இன்பம் நல்கும் மனநலம் பேண வேண்டும். உடல மற்றும் மனநலனை உடைய மனிதர் தன்னைக் காப்பதோடு மட்டுமின்றி தான் சார்ந்த இனத்தையும் காக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்குத் துணைநலம் ஆக்கமும் ஊக்கமும் வழங்கும். துணைநலம் என்று கூறுகையில் வளத்தக்க வாழ்வும் மனைத்தக்க மாண்பும் பொருந்திய துணையோடு, அறத்தோடும் வாழும் முதிர்ச்சி அடைந்த அறிவுடைய நல்வழி காட்டும் பெரியாரின் துணையையும் கொள்ள வேண்டும் என்ற குறிப்பையும் ஐயன் திருவள்ளுவர் அவர்கள் நமக்குத் தருகின்றார். உடல் நலம், மனநலம், .இனநலம், துணைநலம் ஆகிய நான்கின் இறுதிக் குறிக்கோளே செயல். செயல், 
‘உழைப்பு” என்ற வினைநலம் சிற்பதற்கேயாம். உழைப்பில் உடல் உழைப்பு, மூளை உழைப்பு என இருகூறுகள் இருந்நாலும் இரு உழைப்புகளுமே நாட்டின் மேம்பாட்டிற்கு பயன் அளிக்க வேண்டும். அழிவிற்கு பயன் தராமல் ஆக்கத்திற்கே ஊக்கம் அளிப்பதாக இருத்தல் வேண்டும். 
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும் -651 என்ற திருக்குறளில் விளக்குகிறார். 
ஒருவனுக்கு வாய்ந்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், அவன் செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும் என்று விளக்குகிறார். 
3. குடும்பத்தில் கல்வி:
குடும்பம் என்ற சொல்லாட்சி திருக்குறளுக்கு முந்தைய இலக்கியங்களில் கையாளப்பட்டதற்கு சான்று இல்லை என்று சொல்லப்படுகிறது. குடும்பமே இந்த மக்கட் சமுதாயத்தின் அடிப்படை அலகு. அந்தக் குடும்ப உறுப்பினர்கள் இல்வாழ்வான், வாழ்க்கைத் துணை, இல்லறத்தின் பயனாகக் கிட்டும் நன் மக்கட் செல்வங்கள் ஆவர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கல்வி பயில வேண்டிய கடப்பாடு, உடையவர்களாவர். அதுவும் அறிவறிந்த, பழிச்சொல்லுக்கு ஆளாகாத பண்புடைய மக்கட் செல்வங்களே ஒவ்வொரு குடும்பத்தின் விழுமிய செல்வமாகும். 
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும் - 63
தம் மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும். திருவள்ளுவர் அவர்கள் குறிப்பிடுகையில் குடும்பத் தலைவனாக இருப்பவர் தன்னுடைய தாய், தந்தை, மனைவி மூவரையும் (குறள்-41) அயலாராக இருக்கக் கூடிய பற்றற்ற துறவி, வறியவர், குடும்பத்தை விட்டு வெளியேறி இரந்து வாழ்வோர் (குறள் -42) மற்றும் தெளிந்த அறிவுடையவர், வாழ்வாங்கு வாழ்வோர், விருந்தினர், சுற்றத்தாரோடு (குறள் -43) சேர்ந்து தன்னையும் பேணிக் கொள்ள கடமைப்பட்டவராக சொல்கிறார். அதே போல் குடும்பத்தலைவி தன்னை பேணிக் கொண்டு, தன் கணவனையும் பேணி, நாவடக்கம் உள்ளவளாகவும் முயற்சியாளியாகவும் திகழ வேண்டும். கணவர் மனைவி இருவருமே தம் மக்கட் செல்வங்களுக்குக் கல்வி கேள்வி வழங்கிச் சான்றோர் அவையில் முதல்வராகச் செய்தல் வேண்டும் (குறள்-67) என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். 
பிள்ளைகள் பேதைமை, புல்லறிவு, காரறிவு இவற்றை விலக்கி, அறிவைச் செலுத்தி, ஐம்புலனடக்கத்துடன் பகுத்தறிவு, பேரறிவு வாலறிவு என்ற வகையில் உயர்ந்து, அன்பு, நாணம், ஒப்புரவு, அருள், வாய்மை ஆகிய சான்றாண்மைப் பண்புகளுடன் ‘சான்றோன்” எனப் பிறர் பாராட்டும் வகையில் சிறக்க வேண்டும். (குறள்-69,70) அப்போதுதான் பெற்றோரும் அவர்களுடைய தவ வாழ்விற்காகப் பாராட்டப் பெறுவார்கள். 
4. சமுதாயக் கல்வி: 
திருக்குறள் முழுமையுமே வாழ்க்கைக் கல்வியின் வழிகாட்டி. இந்நூலில் இல்வாழ்வான்-துறவி என்னும் இரு நெறியில் வாழும் குடிமக்கள், குடிகளை ஆளும் ஆட்சியாளர், அமைச்சர், தூதர், ஒற்றர், படைஞர், உழவர், மருத்துவர் போன்றோரைச் சுட்டி அவரவர்களுக்குரிய வாழ்வியல் அறங்களைக் கூறியுள்ளார். வாழ்க்கைக்குப் பொருள் முதன்மையாகும். ஆதனால் தான் ‘செய்க பொருளை” என்றும் (குறள்-759), சோம்பலில்லாமல் முயன்றால் அடியளந்தான் விரும்பியதைக் காட்டிலும் கூடுதலாக நிலமாண்டுப் பொருளைக் குவிக்க முடியும் என்றும் (குறள் -610) உழைப்பின் உயர்வை முதன்மைப்படுத்தியுள்ளார். 
கல்வி கற்க நல்ல வாய்ப்பு அமையவில்லையா, கவலைப்பட வேண்டாம், நல்ல செவி மட்டும் இருந்தால் மட்டும் போதுமானது, செவி வழிக் கற்றல் இயலும் எனக் கல்லாதவர்களுக்கும் கல்வி பயில வாய்ப்பு உண்டு என ஆற்றுப்படுத்துகிறார். நன்கு வேகவைத்துப் பக்குவப்படுத்தப்பட்ட அவித்த உணவு நாவிற்கு விருந்தாவது போன்று, ஒழுக்கமுடையார் ஆற்றும் பொழிவைக் கேட்டுச் ‘செவி உணவு’ கொள்ள வேண்டும். குறள்414, 415 ஆகியவற்றில் கற்றுணர்ந்தவர்களிடம் கேட்டறிந்து இன்புறுவதைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
ஆன்ற பெருமை தரும் -416
ஆகவே தோடுகள் உடைய செவிகள் அல்ல, கல்வி கேள்விகளால் தோட்கப்பட்ட செவியே திருவள்ளுவர் விரும்பும் செவியாகும். 
5. ஆன்ம நேயக் கல்வி:
தனி மனிதக் கல்வி வாயிலாக உடல், மன நலம் பேணி, வினை நலம் சிறக்கப் பணியாற்றுவதே வள்ளுவரின் விழைவு. மேற்கண்ட கல்வி வாயிலாகப் பெற்ற அறிவின் பயன் என்ன? அறிவின் பயனாக வள்ளுவர் இயம்புவது யாதெனின் மனித நேயம் போற்றுவதும் அதன் மேல் நிலையாக ஆன்ம நேயம் போற்றுவதும் தான். 
அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல் - குறள் 203
தன்னைத்தான் காதல னாயின் எனைத் தொன்றும்
துன்னற்க தீவினைப் பால் -202
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல் -316
அறிவினா குவதுண்டோ பிறிதின் நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை -315
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர் -997
மேற்கண்ட குறட்பாக்கள் அனைத்தும் மாந்த நேயத்தை வலியுறுத்தும் குறட்பாக்கள் என்றால் மிகையில்லை. 
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை -322
என்கிறார். வள்ளுவர் வழங்கும் கல்வி தனி மனித நலம், குடும்ப நலம், சமுதாய நலம் பேணத் துணை புரிவதோடு கல்லார்க்கும் கல்வி நல்கி, மனித நேயத்துடன், ஆன்ம நேயம் போற்றி, அனைத்து உயிர்களும் வாழ வழிகாட்டும் வாழ்வியல் கல்வி என்றால் மிகையில்லை. 
இக்காலச் சூழலில் திருவள்ளுவரின் கல்விக் கோட்பாடுகள் நாடு, மொழி, இனம், மதம் கடந்து உலக மாந்hர் ஒவ்வொருவரும் பயில வேண்டிய கோட்பாடுகள் தாம். ஆறிவியல் துறைகளில் மாந்த இனம் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டிருப்பினும் மனிதனை மனிதன் நேசிக்கும் மாந்த நேயப் பண்பு பழங்காலத்தில் இருந்து நிலையிலிருந்து எள்ளளவும் முன்னேற்றம் பெறவில்லை என்பது கண்கூடாகத் தெரிகின்றது. 
இந்நிலை மாற்றம் பெறுதல் பொருட்டு ஒவ்வொரு நாட்டு அரசும் திருக்குறளைப் பொதுமறையாக ஏற்று, திருக்குறளின் வாழ்வியல் கருத்துகளை வெகு மக்களுக்கு நவீன தகவல் தொடர்புச் சாதனங்களின் மூலமாகப் பரப்புதல் செய்தல் வேண்டும். திருக்குறள் வாழ்வு வாழ்ந்து வருகின்ற சான்றோர் பெருமக்களை முதன்மைப்படுத்திச் சிறப்பிக்க வேண்டும். தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை திருக்குறளைக் கட்டாயப் பாடமாக வைத்தல் வேண்டும். 
நன்றி: 
திரு. க. கோபால்,இக்கால உலகிற்குத் திருக்குறள், தொகுதி-3, தொகுப்பாசிரியர் முனைவர் தி.சே. சுப்பராமன், முனைவர் சேயோன், பதிப்பாசிரியர் சா கிருட்டினமூர்த்தி, 2004, உலக தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Tuesday, 17 June 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-74:

திருவள்ளுவரின் கல்விக் கோட்பாடுகள்:
திருவள்ளுவர் தம் நூலை இயற்றியதன் நோக்கமே ‘அறன் வலியுறுத்தலாகும்”. தனி நெஞ்சத் தூய்மை என்னும் மாசில்லா மனம் பெறுதலைச் சார்ந்தே அவரின் கல்விக் கோட்பாடுகள் அமைகின்றன. அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. தனி மனிதக் கல்வி
2. குடும்பத்தில் கல்வி
3. சமுதாயத்தில் கல்வி
4. கல்லாதவர்க்கும் கல்வி
5. ஆன்ம நேயக் கல்வி
திருவள்ளுவரின் கல்விக் கோட்பாடுகளின் பயனாக மாந்தர் அனைவரும் முதற் கண் தம் உடல், மன வளத்தைப் பெருக்கி, தம்மைச் சார்ந்த இன நலத்தையும் தூயதாக்கி, ஒட்டு மொத்த சமுதாய நலஞ் சிறக்கும் வகையில் வினை நலம் பேண வேண்டும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் தனி நெஞ்சத் தூய்மையுடன் வினையாற்றுதலை (உழைப்பை) முதன்மைப் படுத்தி உழைப்பால், அறிவால் உலக நலம் சிறக்க வேண்டும் என்பதே அவரின் விழைவு ஆகும். 
1. தனி மனிதனுக்குக் கல்வி:
கண்ணுடைய மக்கடள் பிறவி இரு பாலர்க்கும் கல்வி பொதுவானதாகும். ஆகவே, ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் கல்வி நல்க வேண்டும். ஆனால் பெரும்பாலான நாடுகளில் மக்கள் தொகையில் சரி பாதியாக விளங்கும் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டே வந்திருக்கின்றது. இந்நிலை மாற வேண்டும். கல்லாத மாந்தரைப் பார்த்து முகத்தில் கண்ணுக்குப் பதில் இரு புண்களை உடையோர் எனச் சாடுகிறார் வள்ளுவர். 
‘இன்று ஒரு சமுதாயத்தின் உயர்வு, ஒரு இனத்தின் முன்னேற்றம், அதன் அறிவு வளர்ச்சி நிலையை, அறிவுத் துறைகளில் ஏற்படும் வளர்ச்சியைக் கூர்ந்து கவனிக்கும் விழிப்பை, அதை வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் திறனைப் பொறுத்தது” என்கிறார் அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்கள். 
ஆகவே சமுதாயத்தின் உயர்வு அல்லது மேம்பாடு அச்சமுதாயத்தின் கல்வியறிவையும், துறைசார்ந்த அறிவையும், விழிப்புணர்வையும், அதனைப் பயனாக்கிக் கொள்ளும் திறனையும் சார்ந்தே அமையும் என்பது வெளிப்படை. 
‘அறிவுடையார் எல்லாம் உடையார்” என்பது வள்ளுவம். ஆகவே, கண்ணுடைய இரு பாலரும் ‘எண்” எனப்படும் கணிதக் கல்வியையும் (அறிவியல்) எழுத்து எனப்படும் கலையியல் (இலக்கியம்) கல்வியையும் கற்க வேண்டிய கடப்பாடு உடையவர்களாவர்”
ஏண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு -392
கற்கவேண்டுவன காலத்துக்குக் காலம் வளருபவை, விரிபவை. அதனைக் கருத்தில் கொண்ட வள்ளுவர் இந்தந்த நூல்களைப் படி என்று கூறாமல், ‘கற்பவை கற்க” என்று கற்றலைப் பொதுமைப்படுத்தி, காலம், இடத்திற்குத் தக்கவாறு வேண்டும் நூலறிவைப் பெறுதற்குரிய கல்வியைக் கற்கப் பணிக்கிறார். 
கல்வி கற்கும் முறைகள்:
1. காலம், இடத்திற்கேற்பக் கற்க வேண்டிய நூல்கள் அனைத்தையும் கற்க வேண்டும். 
2. தம் மனத்தில் படியும் மாசுகள் நீங்கும் வகையிலும் தெளிவுபெறும் வகையிலும் கற்க வேண்டும். 
3. கற்று முடிந்த பின்னரும் கற்க வேண்டும். 
4. கசடறக் கற்ற செய்திகளைப் பின்பற்றி நடைமுறைப்படுத்தி வாழக் கற்க வேண்டும்.
5. உடையார் முன், இல்லார் பணிவுடன் திகழ்வது போல், செருக்கற்றுப் பணிவுடன் அமைந்து கற்றல் வேண்டும்.
6. சாகுந் தறுவாய் வரையில் கற்க வேண்டும். சாக்ரடீசு நஞ்சு அருந்தி மரணமடையும் தறுவாயில் கூட நூல் படிக்க விரும்பியதை ஒப்பு நோக்குதல் தகும். 
7. ஒன்றுபட்ட உள்ளத்தோடு (ஒருமையுடன்) கல்வி பயில வேண்டும் (உதாரணம்: வள்ளலாம், விவேகானந்தர் போன்றோர் கற்ற முறை)
8. கற்றோர் அவையில் அஞ்சாமல் மறுமொழி கூறும்பொருட்டு முறையாகவும், அளவறிந்தும் கற்றல் வேண்டும். 
9. பயன் தராத சொற்களைச் சொல்லாதிருக்குமாறு ஆய்ந்து ஆய்ந்து கற்றுப் பயன் தரும் சொற்களை மட்டுமே மொழியுமாறு கற்றல் வேண்டும். ‘பயனில சொல்லாமை” என்ற அதிகாரம் யாத்த வள்ளுவர் கூறுவது அனைத்தும் பயன் கருதியே ஆகும். 
10. தாம் கற்றதைப் பிறர் உணரும் வகையில் மொழியும் நாவன்மை மிக்கவராக அறிவுத் தெளிவுடன் கற்றல் வேண்டும். அத்தகைய நா நலமிக்கார் தம் பொழிவைக் கேட்போரை வயப்படுத்தும் வகையிலும் கேளாதவரையும் கேட்கத் தூண்டும் வகையிலும் மனம் பரப்பும் மலர் போன்று ஈர்க்கும் வகையிலும் கற்றுத் தெளிவு பெறல் வேண்டும். 
11. ஆக்கம் தரும் சொற்களை மட்டுமே பயன்படுத்துதல் வேண்டும். தாம் சொல்லும் சொல்லை வெற்றி கொள்ளும் சொல் இல்லா வகையிலும் திறனறிந்து சொல்லாட்சியைப் பயன்படுத்தும் வகையிலும் மீள மீள ஒதிக் கற்றல் வேண்டும்.
12. சாவாக் கல்வி குறித்தும் பயில்தல் வேண்டும்.
13. ‘உணவே மருந்து”’மருந்தே உணவு” என்கிற சித்த மருத்துவ மரபுப்படி, மிகனும் குறையினும் நோய் செய்யும், மாறுபாடான உணவை மறுத்து உண்க: அற்றது போற்றி உண்க் துய்க்கத் துவரப் பசித்து உண்க் போன்ற உணவுக் கொள்கைகளைக் கடைபிடித்து உடல் நலம்பேணும் கல்வியையும் கற்றல் வேண்டும். 
14. மனநலமே மன்னுயிர்க்கு ஆக்கம் என்பதால் மனதில் எளிதில் பற்றும் மாசுகளான பேராகை, பொறாமை, கடுஞ்சினம், வன்சொல் போன்றவை மனத்தில் படியா வண்ணம் பயிற்சி மேற்கொண்டு மனநலம் பேணும் கல்வியையும் கற்றல் வேண்டும். இத்தகைய குற்றங்கடிதலுக்குச் சிற்றினத் தொடர்பை விலக்கியும், அறத்துடன் வாழும் முதிர்ந்த அறிவுடைய பெரியோரைத் துணைக் கொண்டும் வாழ்தல் நலம் பயக்கும். 
இவ்வாறு குறள் வழிப் பயின்ற கல்வியாளர்கள் அறிவால் அகன்ற ஆன்றோர்களாகவும், பண்பால் மிளிரும் சான்றோர்களாகவும் திகழ்வர். ஆவர்கள் அன்பு, அடக்கம், ஒழுக்கம்;, பொறை, அருள், அறிவு, ஊக்கம்,ஆள்வினை, பண்பு, நாணுடைமை ஆகிய பத்து உடைமைகளைத் தம் அணிகலன்களாகக் கொள்வர். இவர்கள் கல்வி கேள்விகளால் கேட்கப்பட்ட செவி உடையவர்களாகவும், கண்ணோட்டமுள்ள கண் உடையவர்களாகவும், நாவடக்கம் உடைய நா உடையவர்களாகளும், மூக்கிற் கரும்புள்ளி போன்ற அளவு கூட கூடா ஓழுக்கமில்லாதவர்களாகவும், நாறும் மணத்தை முகரும் மூக்கு உடையவர்களாகவும், நிறை குணங்கள் அனைத்தையும் ஒருங்கே கொண்ட, விருப்பு, வெறுப்பற்ற தனக்கு நிகரில்லாத வாலறிவனின் தாளைக் கைக்கூப்பி வணங்கும் தலையுடையவர்களாகவும் திகழ்வதோடு, நன்றியில் பால் செலுத்தவல்ல பகுத்தாயும் மனமுடையவர்களாகவும் பரிணமித்து உயர்வர். 
நன்றி: 
திரு. க. கோபால்,இக்கால உலகிற்குத் திருக்குறள், தொகுதி-3, தொகுப்பாசிரியர் முனைவர் தி.சே. சுப்பராமன், முனைவர் சேயோன், பதிப்பாசிரியர் சா கிருட்டினமூர்த்தி, 2004, உலக தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-73:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-73:

வருவாய் பெருக்குதல்:
வருமானம் வரும் வழிகளை பெருகச் செய்பவன், செயலாற்றத் தகுந்தவன் என்கிறார் திருவள்ளுவர். 
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை -512 என்கிறார் திருவள்ளுவர். அதாவது பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும் என்கிறார். 
புதிய வேலை உருவாக்க முதலீடு:
நல்ல செயலை தொடங்குவதற்கு மேலும் மேலும் முதலீடு செய்து அதன் வழி சமுதாயத்திற்கு உதவுவர் என்கிறார். 
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்- 463
பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது உள்ள முதலை இழந்துவிடக் காரணமான செயலை அறிவுடையவர் மேற்கொள்ள மாட்டார். 

தொழில்நுட்ப முன்னேற்றம்:

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து – 353 என்கிறார் திருவள்ளுவர். ஐயப்பாடுகளை தெளிந்த ஆராய்ச்சி வழியாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்கு பூமியை விட வானம் அருகில் இருப்பதாக ஊக்கம் ஏற்படும். அதன்படி அவர்கள் அரிய செயல்களை செய்பவர் என்று அதற்கான விளக்கமளிக்கிறார் கலைஞர். 

உலகளாவிய போட்டித் திறன்:

மன உறுதி கொண்டவர்கள் தொழில் திறமை, மன்னன் மனதிலும் பதிவதால், உலக மக்கள் பலராலும் மதிக்கப்படும் என்கிறார். 
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும் -665 என்ற குறளில் இதனை வெளிப்படுத்துகிறார். 

புதிய கண்டுபிடிப்புகள்:
 
புதிய கருத்துகள் செரிந்த சீர்மைகளே அறிவியலின் கண்டுபிடிப்புகள். ‘அறிவறிந்த” என்பது அறிவியலைக் குறிக்கும். அக்கால அறிவியலின் அடையாளச் சொல்லாக திருவள்ளுவரால் ஆக்கப்பட்டது என்கிறார் கோவை இளஞ்சேரன் அவர்கள். 

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின் -123
ஆறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப் பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும் என்கிறார். 
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை:

மனித மூலதனத்தைப் பெருக்குவதே சுற்றுச்சூழல் நிலைத் தன்மை. உறுப்புகளில் குறை குறுத்தல் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து, வினை செய்யாது இருத்தலே பழியாகும் என்கிறார் திருவள்ளுவர். 
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி – 618
நன்மை விளைக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி. 

சமூக சமத்துவம்:
பிறப்பினால் அனைவரும் சமம். 
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் -972
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை. 
ஒருவரை புற வடிவங்களை வைத்து மதிப்பிடாமல் வினையைக் கொண்டு மதிப்பிடுக என்கிறார். 
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல் - 279 என்கிறார். 
நேராகத் தோன்றினும் அம்பு கொடியது. வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல் வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும். 

நாட்டின் பொருளாதார மேம்பாடு:
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு – 739
முயற்சி செய்து தேடாமலே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர். தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் அல்ல. 

இத்துடன் சேர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக வந்த கட்டுரையின் தொகுப்புகள்: 
உலகத்திற்கே பொதுவான தொழிலைத் தேர்ந்தெடுத்தல் தொடங்கி, தொழில் சம்பந்தப்பட்ட எந்த ஒரு கூறுகளையும் விடாமல், எந்தெந்த நிலையில் எப்படி தொழில் செய்ய வேண்டும் என்பதை திருவள்ளுவர் எடுத்துரைக்கிறார். 
பொருள் ஈட்டும் அவசியம் தொடங்கி, பொருளீட்டு முறைமையை உலகிற்கே சொல்லி, நல்வழியில் பொருள் ஈட்ட, பொருளும் பெருகும், பொருள் பெற்றவனும் உயர்வான் என்கிறார் திருவள்ளுவர். 
உலகத்திற்கே பொதுவான தொழிலை, பயனீட்டாளர் மனம் அறிந்து நடத்தி, மேலும் முதலீடு செய்து புதிய வேலையை உருவாக்குதல், தொழில்நுட்த்தில் முன்னேற்றம், உலகளாவிய போட்டித் திறன், புதிய கண்டுபிடிப்பு, சுற்றுச்சூழல் நிலைத் தன்மை, சமூக சமத்துவம், வேலைவாய்ப்பு அளித்தல், நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும், நிலைத் தன்மைக்கும் வேலை வாய்ப்பிலிருந்து புதுமைகளை வளர்ப்பது வரை, பல நன்மைகளை வழங்கும் தொழிலை செம்மையாகச் செய்ய, தற்சார்பு பெற உபாயம் கூறி, மக்கள் சமுதாயத்தை, மண் பயனுற வாழ வைத்தல் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். 

நன்றி: 
முனைவர் வெ. கீதாமீனாட்சி, பட்டதாரி ஆசிரியர் கணிதம், அரசு உயர்நிலைப்பள்ளி, கேகே நகர், திருச்சி

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Wednesday, 11 June 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-72:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-72:
கல்வி குறித்துத் திருவள்ளுவர்
திருவள்ளுவர், தனது காலத்தால் அழியாத படைப்பான திருக்குறளில், கல்விக்கு அளப்பரிய முக்கியத்துவம் அளித்துள்ளார். அவர் கல்வியை ஒரு ஆடம்பரப் பொருளாகவோ அல்லது சலுகையாகவோ பார்க்காமல், ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடிப்படைத் தேவையாகக் கருதுகிறார். கல்வி, அதன் நோக்கம் மற்றும் தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் மீதான அதன் தாக்கம் குறித்து அவரது நுண்ணறிவு ஆழமானது.
திருவள்ளுவரின் கல்வி குறித்த போதனைகளிலிருந்து சில முக்கிய கருத்துகளை இங்கே பார்க்கலாம்:
கல்வியே உண்மையான செல்வம்: 
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை -400  என்கிறார்.
அதாவது, ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; மற்றப் பொருள்கள் செல்வமாகாது என்கிறார் திருவள்ளுவர். இதன் மூலம் , கல்விதான் நிலையானதும் அழியாததுமான உண்மையான செல்வம் என்று அவர் தெளிவாகக் கூறுகிறார்; மற்ற பொருள் செல்வங்கள் அழியக்கூடியவை மற்றும் தற்காலிகமானவை என்கிறார்.

கற்றல் ஒரு வாழ்நாள் செயல்முறை:
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்                                      சாந்துணையுங் கல்லாத வாறு-397 என்கிறார்.
அதாவது, ஒருவன் இறக்கும் வரைக்கும் கற்காமல் இருப்பது ஏன்? கல்வி அவனை எல்லா நாடுகளுக்கும், எல்லா ஊர்களுக்கும் சொந்தமாக்குமே என்கிறார்.கற்றல் என்பது ஒருவரின் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியான செயல்முறையாக இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். கற்றறிந்த மனிதன் எங்கும் மதிக்கப்படுவான், அது உலகத்தை அவனுடையதாக்குகிறது.
முழுமையான கற்றல் மற்றும் பயன்பாட்டின் முக்கியத்துவம்:
கற்க கசடறக் கற்பவை கற்றபின்                                                                                       நிற்க அதற்குத் தக-391 என்பதில், கற்க வேண்டிய நூல்களை குற்றமில்லாமல் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு, அக்கல்விக்குத் தகுந்தபடி நடக்க வேண்டும் என்கிறார்.
இந்தக் குறள் மூலம் திருவள்ளுவர் இரண்டு முக்கிய அம்சங்களை நமக்குக் எடுத்துக் காட்டுகிறார்: 
1. கற்றலில் முழுமை: ஒருவர் குறைபாடுகள் அல்லது சந்தேகங்கள் இல்லாமல் கற்றுக்கொள்ள வேண்டும், கற்பிக்கப்படுவதன் சாராம்சத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
2. அறிவைப் பயன்படுத்துதல்: பெற்ற அறிவைப் பயன்படுத்த வேண்டும், ஒருவரின் நடத்தை அவர்களின் கற்றலை பிரதிபலிக்க வேண்டும். கல்வி என்பது வெறும் உண்மைகளைச் சேகரிப்பது மட்டுமல்ல, ஒருவரையும் ஒருவரின் செயல்களையும் மாற்றுவதாகும்.

அறிவே கண்கள்:
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
கண்ணென்ப வாழும் உயிர்க்கு-392"
"எண் என்று சொல்லப்படுபவையும், எழுத்து என்று சொல்லப்படுபவையும் ஆகிய இவ்விரண்டும் வாழும் உயிர்களுக்குக் கண்கள் என்று கூறுகிறார்.
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு                                     புண்ணுடையர் கல்லா தவர்.-393
"கற்றவர்களே கண்களை உடையவர்கள்; கல்லாதவர்கள் முகத்தில் இரண்டு புண்கள் உடையவர்கள்."
அவர் "எண்களையும் எழுத்துகளையும்" (கலைகள் மற்றும் அறிவியல்கள் அல்லது பொதுவாக அறிவைக் குறிக்கும்) ஒரு மனிதனின் இரண்டு கண்களாக உருவகப்படுத்துகிறார், உலகைக் காணவும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. கல்வி இல்லாதவர்கள் முகத்தில் வெறும் "புண்கள்" இருப்பதாக சித்தரிக்கப்படுகிறார்கள், அவர்கள் உண்மையில் உணரவும் புரிந்துகொள்ளவும் இயலாதவர்கள் என்பதை இது குறிக்கிறது.

கற்றலில் கிடைக்கும் உயர்வு:
இன்று பலவகையான தொழில்கள் உலகத்தில் இருந்தாலும், அவர்களை வெற்றிகரமாக மாற்றுவதோ, அல்லது தொழில் செய்யாதவர்கள், பாரம்பரியமாக முன்னேறிய நிலையில் பொருளாதாரத்திலும், சமூக நிலையிலும் இருந்தாலும் ஒருவர் நன்கு கற்றறிந்தவராகஇருந்தால் அவர்கள் நல்ல நிலைமையை அடைகின்றார்கள், சமுதாயத்திலும் வழிப்புணர்வுடன் இருக்கின்றனர். 
"உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்                                      கடையரே கல்லா தவர்-395
செல்வர்முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர் என்கிறார். செல்வம் இருந்தும் கல்லாதவர் இழிந்தவர் என்று குறிப்பிடுகிறார்.

முயற்சியால் பெருகும் அறிவு:
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத் தூறும் அறிவு.-396
தோண்டத் தோண்ட மணற்கேணியில் நீர் சுரப்பது போல, கற்கக் கற்க மனிதர்களுக்கு அறிவு பெருகும்.
இந்தக் குறள் அறிவைப் பெறுவதை மணல் நிறைந்த மண்ணில் கிணறு தோண்டுவதற்கு ஒப்பிடுகிறது: ஆழமாகத் தோண்டத் தோண்ட, அதிக நீர் கிடைக்கும். அதேபோல், ஒருவர் கற்றலில் அதிக முயற்சி செய்யும்போது, அதிக அறிவையும் ஞானத்தையும் பெறுவார்.

மனித குலத்தின் நன்மைக்காக கல்வி:
தனிப்பட்ட குறள்களில் எப்போதும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், திருக்குறளின் ஒட்டுமொத்த தத்துவம், நல்லொழுக்கமான நடத்தை, நெறிமுறை வாழ்க்கை மற்றும் இறுதியில், செழிப்பான சமுதாயத்தை வளர்ப்பதற்கான ஒரு வழியாக கல்வியை ஊக்குவிக்கிறது. கற்றறிந்தவர்கள் உலகின் நல்வாழ்வுக்குப் பங்களிக்க எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
சுருக்கமாக, திருவள்ளுவரின் கல்வி பற்றிய தத்துவம் தொடர்ச்சியான, முழுமையான மற்றும் பணிவான கற்றலை வலியுறுத்துகிறது, இது நடைமுறை ஞானத்திற்கும் நெறிமுறை வாழ்க்கைக்கும் வழிவகுக்கிறது. அவர் உலகளாவிய கல்வியை ஆதரிக்கிறார், அறிவு ஒரு பிறப்புரிமை மற்றும் தனிப்பட்ட அதிகாரமளிப்பதற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் ஒரு சக்திவாய்ந்த கருவி என்று நம்புகிறார்.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Tuesday, 3 June 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-71:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-71:
கல்வி குறித்துத் திருவள்ளுவர்

கடந்த சில வாரங்கள் தொழில் குறித்து திருவள்ளுவர் அவர்கள் கருத்துக்களை திருக்குறளில் இருந்து பார்த்தோம். இன்னும் பல வாரங்கள் கூட தொழில் குறித்தக் கருத்துக்களை மட்டுமே பார்க்க இயலும். ஆனால், தற்போது கல்விச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளதால், கல்வி குறித்து திருவள்ளுவர் பெருந்தகையின் கருத்துக்களைப் பார்ப்போம். இதில் கல்வி என்று நாம் பார்ப்பது கல்வியையும் கற்றலையும் குறிக்கின்றோம். திருக்குறளில் திருவள்ளுவர் நேரிடையாக கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை என்று நேரிடையாக அறத்துப்பாலில் தன்னுடைய கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ள வள்ளுவர் பெருமான். திருக்குறள் முழுமையையும் பல்வேறு விதங்களில் கற்றலைக் குறி;த்துக் குறிப்பிட்டுள்ளார். காலம் அறிதல், இடன் அறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல், கண்ணோட்டம், சொல்வன்மை, குறிப்பறிதல், அவையறிதல், பொருள் செயல்வகை, நட்பாராய்தல் என்று பலநிலைகளிலும் பல்வேறு வகையில் கற்றலைக் குறித்து எடுத்துச் சொல்கின்றார். 
செல்வங்கள் இரண்டு வகையில் அடங்கும் அழியக் கூடியவை, அழியாமல் நிற்பவை. நாம் சேர்த்து வைக்கக் கூடிய செல்வங்களாகக் கருதக் கூடிய பணம், தங்கம், வெள்ளி, வைரம், உயிரினங்கள், நிலம் போன்றவை அழியலாம், பிறர் கை மாறலாம், நம்மிடமிருந்து கையகப்படுத்தப்படலாம். ஆனால், திருக்குறளில் உள்ள கருத்துக்கள், கற்றலின் மூலம் ஏற்படும் அறிவு, நுட்பம் ஆகியவை அழியாத செல்வங்கள் ஆகும். 
பொதுவாக திருவள்ளுவர் அவர்கள் கல்வித் துறையில் பல்வேறு துறை வளர்ச்சியினடிப்படையில் காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம் மாறும் தன்மை கொண்ட விவரங்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து, கற்க வேண்டியவற்றைப் பட்டியலிடவில்லை. ஆகவே, கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்ட போதும் கால மாற்றத்திலும்  அவருடைய கருத்துக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படத் தக்கதாகவே உள்ளது. தனது குறளில் இலக்கண இலக்கியங்கள் குறித்தோ, ஆயக்கலைகளின் அருமை பெருமைகளைக் குறித்தோ அவை அரசனுக்கு உரியது என்றோ குறிப்பிடவில்லை மாறாக மக்கள் அனைவருக்கும் பொதுவாகக் கீழ்வருமாறு கற்ற வேண்டும் என்று குறிப்பிடுகிறார். 
கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குக் தக- 391 
அதாவது அனைவருக்கும் பொதுவானதாகவே கற்பவை கசடறக் கற்க வேண்டும் கற்றவற்றை உள்வாங்கி அதன்படி நடக்க வேண்டும் என்கிறார். 
அறிவியலின் அரசி கணிதம் என்று சொல்லாடல் உண்டு. வாழ்க்கைக் கணக்கிற்கு கணிதம் முக்கியம் என்பதை வள்ளுவர் நன்கு அறிவார். ஆகவேதான் எண்ணும் எழுத்தும் கண்களுக்கு ஒப்பாகும் என்று குறிப்பிடுகிறார். 
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
கண்ணென்ப வாழும் உயிர்க்கு – 392 அதாவது எண்கள் தொடர்புடைய கணிதம் மற்றும் எழுத்துத் தொடர்புடைய இலக்கியம் ஆகிய இரண்டும் வாழும் மக்களுக்கு இரண்டு கண்களாகக் கருதப்படுபவை என்கிறார். அப்படிக் எண்ணும் எழுத்தும் கற்கவில்லையெனில் அவர்கள் முகத்தில் இருப்பவை கண்கள் அல்ல வெறும் புண்களே என்று சாடுகின்றார். 
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் - 393
படிக்கப் படிக்க உனக்கு அறிவு ஊற்றாக பெருக்கெடுக்கிறது என்கிறார் திருவள்ளுவர். ஒருவரைப் பார்த்து நீ ஒரு ஏழை என்றால் கோபம் வருவது குறைவு, சில சமயம் தன்னுடைய ஏழ்மையை ஏற்றுக் கொள்வதும் உண்டு. நம்முடைய மரபு விளையாட்டுகளில் ஒன்றான பல்லாங்குழி விளையாட்டும் அதைத் தான் உணர்த்துகிறது. சுரிசமமாக விளையாடும் இருவர் மத்தியில் ஒருவர் முத்துக்கள் மூலமும் தக்கம் மூலமும் அனைத்துக் காய்களையும் பெற்று வெற்றி பெறும் போது. தோற்றவரைப் பார்த்துக் ‘கஞ்சிக் குடி, கஞ்சிக் குடி” என்று பாடுவது உண்டு. நாம் எப்படி பரங்கியரிடம் அடிமைப் பட்டோம் என்பதில் இருந்து எழுந்த விளையாட்டு. அதில் தோற்றவர் தனது ஏழ்மையை ஏற்றுக் கொள்வார். ஆனால், ஒருவரைப் பார்த்து ‘உனக்கு அறிவு இருக்கா?” என்று கேட்டால் அந்தச் சொல்லை கேட்பவர் ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை. ஆகவே, கல்வி என்பது அறிவின் ஊற்று என்று கல்வியின் மீது ஆர்வத்தை ஊட்டுகிறார் திருவள்ளுவர் பெருமான். 
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத் தூறும் அறிவு -396 என்கிறார். மணற்பாங்கான இடத்தில் உள்ள கிணறு தோண்ட தோண்ட நீர் சுரந்து கொண்டே இருக்கும் அதுபோல பல நூல்களைக் கற்க அறிவு ஊறும் என்கிறார். இவரைப் போன்ற ஒரு ஊக்கமூட்டும் ஒருவர் உண்டா?
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி