Tuesday, 25 March 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-62:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-62:
தொழில் முனைவோருக்கான எச்சரிக்கைகள்:
தனக்கான அணியினைத் தேர்வு செய்தல், வலுப்படுத்தல் மற்றும் நலம் பயத்தல்:
முதலில் ஒரு தொழிலாளியை அல்லது தனக்கான அணியினைத் தேர்வு செய்யும் போது திறமையின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும், பிறப்பின் அடிப்படையில் கூடாது என்று குறிப்பிடுகிறார். 
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் -972 என்ற குறளின் அடிப்படையில் எல்லா உயிர்களும் பிறப்பினால் சமம். ஆயினும் செய்யும் தொழிலின் தரத்தால், மாறுபாட்டால் அவர்தம் சிறப்பும் மேன்மையும் வேறுபடுகின்றன என்கிறார். 
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் -517 என்று எந்த நபருக்கு என்ன திறமை இருக்கிறதோ அதனை சரியாக உணர்ந்து அந்தப் பணியினை அவரிடம் விட்டாலே வெற்றி நிச்சயம் என்கிறார். இந்த ஒரு குறளே ஒருவனை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதற்கான விடையைத் தந்து விடும். 
தொழில் தெரியாதவருக்கு சோம்பேறிகளுக்குத் தொழிலைக் கொடுத்தால் துன்பம் தான் வந்து சேரும் என்று குறள்களில் 507, 508, 468, 509, 510 திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். உதாரணமாகச் சொல்ல வேண்டுமெனில்
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பைத் தரும் -508 என்ற குறளே போதும். அதாவது, தெளிவாக அறியாமல் ஒருவனைத் துணையாக நம்பியவனுக்கு அவனுக்கு மட்டுமின்றி அவன் வழிமுறைகளில் வருபவர்களுக்கும் தீராத துன்பம் உண்டாகும் என்கிறார். 
மேலும் அடுத்தக் குறளில் 
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் -510 என்கிறார். இந்தக் குறள் ஒரு மிகச் சிறந்த ஆளுமையை அடையாளப்படுத்தும் குறளாகக் கொள்ளலாம். அதாவது ‘ஆராயாமல் நம்புவதையும், அப்படி ஆராய்ந்து நம்பியவனிடத்திலே சந்தேகம் கொள்ளுவதும் தீராத துன்பத்தையே தரும்” என்கிறார். 
தொழிலில் நேர்மையையும், உண்மைத்தன்மையாகவும், வாய்மையுடனும், நாநயத்துடனும், பணிவாகவும் இருத்தல் உயர்த்தும் என்கிறார். அவ்வாறு இருக்கும் நிலையில் மக்களால் போற்றப்பட்டு வியாபாரப் பெருக்கத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதனை உணர்த்துகின்றார். 
வாணிகம் செய்வோர்க்கு வாணிகம் பேணிப் 
பிறவும் தமபோல் செயின் - 120
நடுவு நிலைமை பூண்டு, வாங்கும் பிறர்பொருளையும் விற்கும் தம் பொருள் போலவே மதிக்கப் பழகினால் அதுவே வணிகருக்குப் புகழ் தரும் வாணிகம் என்ற குறளே இதனை தெளிவாக உணர்த்தும். மேலும்,  உதவும் குறள்- 113,115,116,117,118,119,124,125,127,134,198, 200,973,975,978,989 ஆகும். 
தொழிலில் கண்காணிப்பு மற்றும் சரியாகத்திட்டமிடல்;:
நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு – 520 என்ற குறளில் மன்னன் ;நாள்தோறும் அ;வனுடைய நிலைமையை ஆராய வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். இதனைப் போன்றே 429 551, 578, 584, 612, 669,512,516,605 குறள்களில் கண்காணிப்பினைக் குறித்து எடுத்துரைக்கின்றார். 
மேலும், தொழிலில் சரியாகத் திட்டமிடுதலைக் குறித்து 429, 435, 463, 675, 758, 484,461,465,466,467,468,481,482,483, 489,490, 631 குறள்களில் எடுத்துரைக்கின்றார். 
வாடிக்கையாளரின் அதாவது நமது தொழிலுக்கு நன்மை பயக்கும் பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் நன்றியுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தினை 93, 97, 108, 105,813,140,667,1023 என்ற குறள்களில் உணர்த்துகிறார் திருவள்ளுவர். 

Wednesday, 19 March 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-61:






திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-61:
தொழில்முனைவோருக்கானத் தகுதிகள்:
நாட்டில் பல்வகை வளங்கள் இருந்தும் தற்போதைய கால கட்டத்தில் அரசு பல சலுகைகளை வழங்கிய போதிலும் பலர் தொழிலினைத் துவக்கி வருமானத்தைப் பல்மடங்காகப் பெருக்க முயலாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அதற்கான தைரியம் இல்லாமை...
அதனால் தான் ‘எண்ணித் துணிக கருமம்” என்கிறார். சரியான திட்டமிடல் இல்லாமை, மேலும், செய்தக்க அல்ல என்று துவங்கும் குறள் (குறள்:466) குறிப்பிடுவது போல எது செய்யத் தக்கது எது செய்யத் தகாதது என்ற தெளிவு இன்மையும் பயத்தை ஏற்படுத்துகின்றன. இதுவே, தொழில் துவங்காமல் இருப்பதற்கு முதன்மை காரணமாகிறது.
அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும்?
• திட்டமிடல் திறன்:
பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்- குறள்:676 ஒரு செயலைச் செய்ய அதற்குரிய பொருள், கருவி, காலம், செய்தொழில், இடம் ஆகிய ஐந்தையும் தவறாமல் சிந்தித்துச் செய்ய வேண்டும். அதாவது ஒரு தொழில் துவங்கப் போகிறோம் என்றால், அதனைப் பற்றிய அனைத்து நிலைகளையும் நன்கு ஆராய்ந்து அதனைத் துவக்குவதற்கு முயல வேண்டும்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு- குறள்: 467 என்ற வாக்கினுக்கேற்ப ஒரு செயலை நன்கு திட்டமிட்டு ஆழ்ந்து ஆராய்ந்த பின் ஒரு செயலை துவங்க வேண்டும்.
துணிவு
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற- குறள்: 661 என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது போல் மேற்கொண்ட செயலைச் செம்மையாக முடிக்கும் திறமை என்பது ஒருவனது மனவலிமையே ஆகும், பிற வலிமைகள் எல்லாம் சிறந்த வலிமைகள் ஆகாது. ஆதலால், தொழிலுக்கு மனவலிமை முக்கியம் என்பதனை உணர வேண்டும்.
செயல்படுத்துதல் திறன்
தொழில் முனைவோர்களின் செயலுக்கு ஊக்குவிக்கும் புரட்சிகர சிந்தனைகள் என்று பார்த்தால் அவர்கள் எடுக்கும் முயற்சிக்கான விளைவுகளுக்கு ஆதரவளித்தல் ஆகும். அதனை திருவள்ளுவர் செம்மையாக செய்திருக்கின்றார்.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் குறள்: 616 இல். ஒரு படி மேலே சென்று,.
தெய்வத்தா னாகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் -619 என்று! குறிப்பிடுகிறார். உதவும் பிற குறள்: 620, 670
• விடாமுயற்சி
தமிழ்நாட்டில் தொழில் துவங்கியவரில் 30-40 சதவீதத்தினரே வெற்றிகரமாக தொழிலை செய்து வருகின்றனர் என்று ஒரு அறிக்கைக் குறிப்பிடுகிறது. ஆதலால், விடாமுயற்சி மிகவும் அவசியம்., செயலைத் தொடங்கி இடையில் விட்டவரையும் திருவள்ளுவர் இடித்துரைக்கிறார்.
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு- 612
ஒரு செயலைச் செய்து முடிக்காமல் இடையிலேயே கைவிட்டவரை உலகமும் கைவிடும் என்கிறார். .
• வாய்மை:
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொரு
கோடாமை சான்றோர்க்கு அணி -118.
தூலாக் கோல் என்னும் ஒருவகையான தராசு எவ்விதம் நடுநிலையாக இருக்கின்றதோ அதேபோல் எந்நிலையிலும் ஒருபக்கம் சாயாமல் நடுநிலை தவறாமல் இருப்பது சான்றோர்க்கு அழகாகும். உதவும் பிற குறள்: 113
• இன்சொல் மற்றும் பேச்சுத் திறன்:
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம் -93
மலர்ந்த முகம் காட்டி மகிழ்ச்சி தரும் இனிய சொற்களைக் கூறுவதே தலை சிறந்த அறமாகும். தன்னைக் காண வருவோரை தூரத்தில் கண்டவுன் முகம் மலர இனிதாக நோக்கி பக்கத்தில் வந்ததும் இனிய சொற்களைச் சொல்லுதல் அறத்தின் கூறுகளாகும். உதவும் பிற குறள்: 97, 291,294,295,296,
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Thursday, 13 March 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-60

கடந்த வாரம் வரை காமத்துப்பாலின் அதிகாரங்களில் உள்ள குறள்களின் விளக்கங்களைப் பார்த்தோம். இனி தொழில் குறித்த திருவள்ளுவரின் சிந்தனைகளைப் பார்ப்போம். இந்த வாரம் எனது ஆராய்ச்சிக் கட்டுரையின் சில பகுதிகளை திருக்குறளின் தொழில் புரட்சி சிந்தனைகளாக வழங்குகின்றேன். 
வால்டேர், ரூசோ, மாண்டெஸ்கியூ, திதரோ போன்ற தத்துவஞானிகள் பிரெஞ்சுப் புரட்சியில் பிரான்சின் குடிமக்களை தங்கள் புரட்சிகர சிந்தனைகளால் ஊக்குவித்து, அநீதிகளுக்கு எதிராகப் போராட அவர்களைத் தயார்படுத்தினார். மக்களிடையே மாற்றம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் மக்களிடையே ஏற்படுத்தும் விழிப்புணர்வு ஆகும். நம்மிடையேயும் தத்துவஞானி இருக்கிறார். அவர், அரசன் முதல் அனைத்து மக்களுக்கும் பொதுவான அறத்தினை திருக்குறள் மூலம் விளக்கியுள்ளார். அதில் பல்வேறு தலைப்புகள் குறித்து கருத்துக்கள் பதிந்திருப்பதைப் போலவே தொழில் வளர்ச்சிக்கும் தொழில் மேம்பாடு குறித்த பதிவுகளையும் இட்டுச் சென்றுள்ளார். திருவள்ளுவர் அவர்கள் திருக்குறளில் 65ற்கும் மேற்பட்டதொழில்களை குறிப்பிட்டுள்ளார். பல்வேறு தொழில்கருவிகளையும் பதிவிட்டுள்ளார். 
உழவே முதன்மைத் தொழில்:
இன்றைய நவநாகரீக உலகில் உழவுத் தொழிலையும், உழவர்களையும் இழிநிலையில் பார்க்கும் மனிதர்கள் உண்டு. மேலும், மருத்துவம், பொறியியல் போன்றவையே உயர்நிலைத் தொழிலாக பார்க்கும் பாங்கும் உள்ளது. ஒருவர் எந்த நிலைத் தொழிலினை மேற்கொண்டாலும் அவர் தனது பசிக்கு சாப்பிட்டாக வேண்டும். அந்த உணவிற்கு ஆதாரம் உழவே ஆதலால். சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் (குறள்:1031) என்று துவங்கும் குறளிலேயே உழவையும், உழவர்களையும்; தாழ்வாகப் பார்க்கும் அத்துணை மனநிலைக்கும் சம்மட்டி அடி என்றே கூறலாம். இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சென்று உழுதுண்டு வாழ்வாரே ..(குறள்:1033) என்று துவங்கும் குறளில்  உழுபவர்களே உயர்ந்தவர்கள் மற்றவரெல்லாம் அவர்களைத் தொழுதுண்டு பின் செல்வார்கள் என்ற ஒற்றைக் குறளில் மொத்தமாக வக்காலத்து வாங்கி நிற்கின்றார் திருவள்ளுவர். மேலும், இன்றும் பல்வகையான உரங்களை மண்ணில் இட்டு மண்ணையும் அதில் உள்ள உயிர்களையும் பாழ்படுத்தி வருகின்றனர். ஆனால், தொடிப்புழுதி கஃசா ..(குறள்:1037) என்று துவங்கும் குறளில் ஒரு பலப் புழுதியானது காற்பலமாக ஆகும்படி உழுது காயவிடுவானானால், அதனிடம் செய்த பயிர், ஒரு பிடி எருவு இடுதலையும் வேண்டாமலே நன்றாக விளையும் என்கிறார். இதனால் மண்ணைப் பாழ்படுத்தும் தன்மையும் இல்லை, உழவருக்கான செலவும் குறைகின்றது. 
உழவுத் தொழில் மட்டுமல்ல கல்விக்கும் தனி அதிகாரம் வழங்கியுள்ளார். அதில், ஒருவன் கற்கவில்லையென்றால் அவனுக்கு இருப்பது கண்கள் அல்ல வெறும் புண்களே என்று இடித்துரைக்கிறார். (குறள்: 391-340)
இனி வரும் வாரத்தில் தொழில்முனைவோருக்குத் தேவையான புரட்சிகர சிந்தனைகள் என்னவெல்லாம் பதிவிட்டுள்ளார் எனக் காண்போம்...
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
ஒரு நாள் தாமதப் பதிவிற்கு பொறுத்துக் கொள்க




Tuesday, 4 March 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 59





திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 59
ஊடலுவகை:
கடந்த வாரம் புலவி நுணுக்கம் அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; ஊடலுவகை அதிகாரத்தில் இருந்து பார்ப்போம்.; புலவியின் பின்பு கிடைக்கக் கூடிய இன்பத்தினைக் குறிக்கின்றது. 
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு -1321
பிணங்கிக் கொள்வதும் ஒருவகையில் அன்பு செலுத்துதல் தானே? இதோ தலைவி சொல்வதைக் கேளுங்கள்...’ அவர் மீது தவறே ஏதும் இல்லையென்றாலும், அவரோடு பிணங்கிக் கொள்வது, அவர் நம்மீது மிகுதியாக அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லதாகும்” என்கிறார். 
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும் -1322
இந்த ஐயனைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை...உங்களுக்குப் புரிகிறதா என்று பாருங்கள்... ‘அவருடன் நான் கொண்ட ஊடல் காரணமாக தோன்றும் துன்பம், அந்தப் பொழுதிலே அவர் செய்யும் நல்ல அன்பினை வாடச் செய்வதற்குக் காரணமான இருந்தாலும், பின்னர் பெருமை பெறும்” என்கிறார். 
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து -1323
நீரானாது எத்தகைய நிலத்தினை அடைகின்றதோ அத்தகைய நிறத்தினைப் பெறுகின்றது. அதுபோன்றே எது உள்ளது என்று வள்ளுவர் எடுத்தியம்புகிறார் என்று பாருங்கள் ‘நிலத்தோடு நீர் பொருந்தினாற் போல அன்புடைய என்னுடைய காதலரிடத்தில் ஊடிப் பெறும் இன்பத்தைப் விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?” என்று கேட்கிறார். 
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை -1324
ஊடல் என்ன தான் செய்யும்? பதில் வள்ளுவர் உரைக்கிறார் தலைவி வழி நின்று...
‘என் காதலனை இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது. அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியை உடைக்கும் படைக்கலனும் இருக்கிறது”
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து -1325
‘தவறே செய்யாமல் இருந்த நிலையிலும் கூட தன் தலைவியின் ஊடலுக்கு ஆளாகித் அவளுடைய மெல்லிய தோள்களை கூடிப் பெறாத போது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது” அன்பின் ஆழத்தை நன்கு உணர்ந்த ஒருவரால் மட்டுமே இதுபோன்று எழுத இயலும். 
உணலிலும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது -1326
சாப்பிட்ட சாப்பாடு செரிக்காமல் இருந்தால் அந்த நிலையில் அடுத்த வேளை சாப்பாடு சாப்பிடும் நிலை வந்தால் அதன் நிலைமைய அனுபவிக்கும் போது தான் புரியும். ‘உண்பதைக் காட்டிலும் ஏற்கனவே உண்டது செரித்தலே இன்பமாகும், அதுபோல, கூடிக் கலப்பதை விட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம் உண்டு” என்கிறார்.
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் 
கூடலிற் காணப் படும் -1327
கணவன் மனைவிக்கும் அன்னியோனியம் கூடுவதற்கு விட்டுக் கொடுத்தல் முக்கியமாகக் கைகொடுக்கும் இதனை வள்ளுவர் எவ்விதம் எடுத்துரைக்கிறார் என்பதைப் பாருங்கள். ‘ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆகிறார், அந்த உண்மையை, ஊடல் முடிந்த பின் கூடி மகிழும் இன்பத்தில் அறியலாம்” என்கிறார். வள்ளுவர் ஞானி தானே?
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு -1328
ஊடலும் நல்லதுதானோ காதலரின் கூற்றைக் கேட்கும் போது...
‘நெற்றி வியர்க்கும் படியாக கூடும்போது உண்டாகும் இன்பத்தை, மறுபடியும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியும் அல்லவா?”
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப 
நீடுக மன்னோ இரா -1329
காதலில் அடங்கிப் போதல் என்பது இதுதானோ? 
‘ஒளி மிகும் அணிகலன்களை அணிந்த இவள் இன்னும் என்னுடன் ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக் கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்”
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின் -1330
இன்பத்தில் இன்பம் ஊடலா? கூடலா? பதில் கீழே:
‘காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அது அந்த ஊடலுக்கு மிகுந்த இன்பமாகும்” என்கிறார்.
இத்துடன் காமத்துப் பால் அதிகாரம் முற்றிற்று. 
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி