Monday, 30 December 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 50:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 50:
நெஞ்சோடு கிளத்தல்:
கடந்த வாரம் உறுப்பு நலன் அழிதல்; அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; நெஞ்சோடு கிளத்தல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். நெஞ்சோடு கிளத்தல் என்பது காதலரை பிரிந்த நிலையில் நெஞ்சோடு பேசுதல் அல்லது புலம்புதலைக் குறிப்பதாகும். வாருங்கள் நெஞ்சோடு என்ன பேசிக் கொள்கின்றார்கள் என்று பார்ப்போம்...
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து -1241
மேலே உள்ள குறட்பாவில் திருவள்ளுவர், தலைவி தன் நெஞ்சத்தைப் பார்த்துக் கேட்பது போல் அமைத்துள்ளார். ‘ நெஞ்சே! எதனாலும் தீராத எனக்குத் துன்பத்தை ஏற்படுத்தும் காதல் நோயை தீர்க்க, ஏதாவது ஒரு மருந்தை யோசித்து சொல்ல மாட்டாயா?” என்று கேட்பது போல் அமைத்துள்ளார். அடுத்தக் குறளில்,
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு-1242 என்கிறார், அதாவது தன்னை நினைத்துப் பார்க்காதவரை நீ ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று தன் நெஞ்சிடம் செல்லக் கோபமாக பேசுகிறாள் தலைவி, ‘என் நெஞ்சே! நீ வாழ்ந்து போ: அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை எப்போதும் நினைத்து நினைத்து வருந்துவது உன்னுடைய அறிமையே ஆகும்” என்கிறார். 
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல் -1243
மேலே உள்ள குறட்பாவில், தன் தலைவன் தன்னை நினைக்கவில்லையே என்ற ஏக்கத்தின் நீட்சியை நெஞ்சோடு பேசும் உரையில் இருந்து விளங்குகிறது ‘நெஞ்சமே என்னிடம் இருந்து கொண்டே நீ என் அவரை நினைத்து வருந்துகிறாய்? இந்தத் துன்ப நோயை உண்டாக்கியவரிடம் இதுபோன்று அன்பு கொண்டு நம்மை நினைக்கும் தன்னை இல்லையே”

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் 
தின்னும் அவர்க்காணல் உற்று -1244
தன் தலைவனிடம் கோபம் இருந்தாலும் அவரைப் பார்க்க வேண்டும் என்ற தலைவியின் தீராத வேட்கையினை மேற்கூறிய குறளில் தெரியப்படுத்துகிறார் திருவள்ளுவர், “ எனது நெஞ்சே! நீ அவரிடம் செல்லும் போது, என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக, அவரைக் காண வேண்டும் என்று என் கண்கள் என்னைப் பிடுங்கித் தின்கின்றன”
செற்றார் எனக்கை விடல்;;;;;உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர் -1245
தன்னை நினைத்துப் பார்க்காமல் இருக்கும் தலைவனை நினைத்து கவலையுடன் நெஞ்சோடு பேசிக் கொண்டிருக்கிறாள் தலைவி, ‘நெஞ்சே! நாம் அவர்மீது விரும்பி அன்பு காட்டினாலும், நம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியுமோ?” என்கிறார். 
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு -1246
மேற்கூறிய குறளில், தலைவன் மீது பொய்யாகக் கோபம் கொள்ளும் நெஞ்சத்தைக் கடிந்து கொள்வதுபோல் இயற்றியுள்ளார் அய்யன். ‘என் நெஞ்சே! நான் அவருடன் ஊடினால் அந்த ஊடலை கூடி நீக்கும் திறமையுள்ள என் அன்பானவரைக் கண்டால் பொய்யாகவாவது கொஞ்சம் ஊடிய பிறகு ஊடலை விட்டுக் கூட மாட்டோம். இப்போது அதையும் விட்டுவிட்டு அவரைக் கொடியவர் போல ஏன் பொய்யாக வெறுப்பது போல இருக்கின்றாய், இதை விடுத்து அவரிடம் போயேன்...” என்று நெஞ்சத்திடம் ஆணையிடுகிறாள் தலைவி. அடுத்தப் பாடலிலும் தலைவி நெஞ்சிற்குக் கட்டளையிடுவது போலவே அமைத்துள்ளார்.
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு -1247 என்கிறார். ‘நன்னெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு, இல்லையென்றால் நாணத்தை விட்டு விடு, இந்த இரண்டையும் சேர்த்துப் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது” என்று கூறுகிறார். 
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன்  நெஞ்சு-1248
பரிவுத் துயரத்தில் பாவம் , எப்படியெல்லாம் புலம்பித் தவிக்கிறாள், மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று அவ்வை சொன்னதுபோல், ஒருவர் மதிக்காத போது அவரிடம் வலிய சென்று பேசும் போது... என்ன உரைப்போ? ‘உன்னைத் தான் அவன் மதிக்கலையல்லவா.. அப்புறம் எப்படி கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம அவன்கிட்ட போய் பேசுற...அறிவு சுத்தமா இருக்காதா?’ என்போம், தலைவிக்கும் அப்பஇதுவும் அப்படி ஒரு தவிப்புத்தான். ‘என் நெஞ்சமே! நம்முடைய பிரிவுத் துன்பத்தால் நினைத்து அவர் வருந்தி நமக்கு இரங்கவில்லை.. வந்து அன்பு செய்யவில்லை என்று நான் ஏங்கித் திரிந்த காதலரின் பின் செல்கின்றாயே..அறிவற்ற பேதையே” என்கிறார் தலைவிஃகாதலி. 
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு -1249
புலம்பல் முடிகின்ற தருணம், ஆறுதல் வார்த்தைகள் தானே வெளிப்படும், அப்படிப்பட்ட குறளாக அமைந்துள்ளது மேலே உள்ள குறள், ‘என் நெஞ்சரே! என்னுடைய காதலர் என்னுடைய உள்ளத்தில் குடியிருக்கும் போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?” என்று செல்லமாய் பொய் கோபத்தை தன் நெஞ்சிடம் காட்டுவதுபோல் உரைக்கின்றார். 
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின் -1250
அடுத்தது ஆறுதலின் உச்சம், ஒரு படத்தில் கூட கதாநாயகன் சொல்வார், ‘நான் எங்கு அழுகிறேன், கண்ணு வேர்த்திருக்கு” என்று, அதுபோல நெஞ்சோடு பேசுதலையும் இறுதியில் முடித்து வைத்திருக்கின்றார் திருவள்ளுவர். ‘நம்மோடு சேர்ந்திருக்காமல் நம்மை கைவிட்டுச் சென்ற காதலரை நம் நெஞ்சிலேயே வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகிழந்து வருகின்றோமே” ஏன் அழகிழக்க வேண்டும். அவர்தான் நம்மிடம் இருக்கிறாரே பிரிய வில்லையே என்று ஆறுதல் படுத்திக் கொள்கிறார் தலைவி. 
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Monday, 23 December 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 49:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 49:
உறுப்பு நலன் அழிதல்:
கடந்த வாரம் பொழுதுகண்டு இரங்கல்அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; உறுப்பு நலன் அழிதல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். உறுப்பு நலன் அழிதல் என்பது காதலரை பிரிந்த நிலையில் உடல் உறுப்புகள் நலம் கெடும் நிலையை உணர்த்துவதாகும். வாருங்கள் நாமும் சென்று பார்ப்போம்... 
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண் -1231
பிரிவை நினைத்து அழுது அழுது வாடிய காதலியின் கண்கள் எதனைப் பார்த்து வெட்கப்படுகின்றன? ‘பிரிவைப் பொறுக்காத சிறுமையை துன்பத்தை நமக்கு அளித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரே அவர் என்று... அவரை எண்ணி அழுவதால், காதலியின் கண்கள் அழகிழந்து கிடக்கின்றன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட நறுமன மலர்களுக்கு முன்பு இப்போது கண்கள் வெட்கப்பட்டுக் கிடக்கின்றன” 
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண் -1232
தன் காதலர் தன்னிடம் அன்பு காட்டவில்லை என்பதை பிறருக்கு எப்படி காதலி உணர்த்துகிறார்? இதோ திருவள்ளுவர் சொல்வதைக் கேளுங்கள், ‘பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், தாம் விரும்பிய காதலர் தமக்கு அன்பு செய்யாத தன்மையை பிறருக்குச் சொல்வன போல உள்ளன” என்கிறார். பசலை நிறமும் அடைந்து அதில் கண்ணீரும் சேர்ந்து வருகையில் யார்தான் பிரிவுத் துன்பத்தைக் குறித்து உணர மாட்டார்கள்?
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள் -1233
பசலை நிறமும் கண்ணீரும் மட்டும்தான் பிரிவை உணர்த்துமா என்ன? வேறு எது பிரிவை உணர்த்துகிறது. ‘காதலரோடு கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரிப்பால் பருத்த என் தோள்கள், இப்போது மெலிவடைந்து அவருடைய பிரிவை நன்றாக தெரிவிப்பவைப் போல உள்ளன” ஆக, தோள்களும் பிரிவுத் துன்பத்தைக் காட்டுகிறது என்கிறார் அய்யன்  திருவள்ளுவர். 
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள் -1234
மேற்காணும் குறட்பாவில், தோள் மெலிந்ததால் மேலும் என்ன நிலையடைகிறது என்பதைக் கூறுகின்றார், ‘ தமக்குத் துணையான காதலரை விட்டுப் பிரிந்ததனால், பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள்,பருத்த தன்மை கெட்டு இப்போது வளையல்களும் கழலும் படி மெலிந்ததுள்ளன” என்கிறார். 
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள் -1235
படுபாவி, என்னை இப்படி மாற்றிவிட்டானே என்ற புலம்பலை திருவள்ளுவர் காதலியின் வாயிலாக இப்படிச் சொல்கின்றார். ‘வளையல்களும் கழன்று வீழ, என்னுடைய பழைய அழகும் கெட்டுப் போன தோள்கள், இந்தக் கொடியவரின் கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன”. என்கின்றார்.
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து -1236
காதலர் கொடியவர் என்று கூறிவிட்டால் காதலி மனமகிழ்வாரா? ‘வளையல்கள் கழன்று தோள்களும் மெலிந்து வருவதால், என்னைப் பார்ப்வர்கள் அவரைக் ‘கொடியவர்” என்று கூறக் கேட்டு நானும் வருத்தமடைகின்றேன்”. என்று காதலி குறிப்பிடுவதாக திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். இதுவன்றோ உண்மையான காதல்!.
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் 
வாடுதோட் பூசல் உரைத்து -1237 
கண்டுகொள்ளாமல் இருக்கும் காதலருக்கு உரைப்பாயோ நெஞ்சமே என்று கேட்பது போல் மேலே உள்ள குறட்பாவினை அமைத்துள்ளார் வள்ளுவர்,’ நெஞ்சமே! கொடியவராக மாறிவிட்டு என்னுடைய காதலருக்கு என்னுடைய வாடிய தோள்களின் ஆரவாரத்தை எடுத்துச் சொல்லி, நீயும் பெருமை கொள்வாயோ” என்று காதலி கேட்பது போல் அமைத்துள்ளார். 
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல் - 1238
எவ்வளவு வேகத்தில் பசலை நோய் பற்றும்? 
‘முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கைகளைத் தளர்த்திய அப்பொழுதிலேயே, பொன் வளையல்களை அணிந்த என் காதலியில் நெற்றியின் ஒளி குறைந்ததே” என்று காதலியை நினைத்து காதலன் வருந்துவதாகக் குறிப்பிடுகிறார். கண், தோள் மற்றும் நெற்றி வரை இதுவரை பாதிப்பினைக் காட்டியுள்ளார். அடுத்தக் குறளிலும் இதன் நீட்சியாகவேக் கொடுத்துள்ளார். 
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண் -1239 என்கிறார். அதாவது, ‘காதலன் கையை மெல்ல நெருக்கத்திற்கு இடையே குளிர்ந்த காற்று நுழைய, அதையே ஒரு பிரிவு என்று கருதி பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்து துன்புற்றன” 
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு -1240
மேற்கூறிய குறட்பாவில், ‘குளிர்ந்த சிறு காற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, பசலை நிறம் அடைந்தது, அதனைக் கண்டு அவளுடைய கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்தது” என்கிறார். 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Monday, 16 December 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 48:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 48:
பொழுதுகண்டு இரங்கல் :
கடந்த வாரம் கனவுநிலை உரைத்தல்; அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; பொழுதுகண்டு இரங்கல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். பொழுதுகண்டு இரங்கல் என்பது காதலரை பிரிந்த நிலையில் தலைவி மாலை பொழுதினைக் கண்டு வருந்தும் நிலையை உணர்த்துவதாகும். தன் தலைவனை பிரிந்திருக்கும் நிலையில் வருகின்ற ஒவ்வொரு மாலைவேளையும் தலைவிக்கு எவ்வளவு கொடுமையாக நகர்கின்றது என்பதனை திருவள்ளுவர் தலைவியின் பார்வையில் இருந்து விளக்குகின்றார். வாருங்கள் நாமும் சென்று பார்ப்போம்... 
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது -1221
தலைவரைப் பிரிந்திருக்கும் தலைவிக்கு ஒவ்வொரு நாள் மாலைப் பொழுதும் நரகத்தில் இருப்பது போல் நகர்வதை பின்வருமாறு உணர்த்துகிறார் திருவள்ளுவர்,
‘பொழுதே நீ மாலைக் காலமே அல்ல மாறாக காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிவால் கலங்கியிருக்கும் மகளிரின் உயிரை உண்ணும் முடிவு காலம்... நீ வாழ்க!”
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை -1222
மேற்காணும் குறளில், தன் பார்வையில் தலைவி பார்த்து அதற்காக வருத்தப்படும் நிலையை உணர்த்துகிறார். மிகுதியான துன்பத்தில் இருக்கையில் ஒருவருக்கு ஏற்படும் உளவியலை உணர்த்துகிறார் அய்யன். ‘ மயங்கிய மாலைப் பொழுதே என்னைப் போலவே நீயும் துன்பத்துடன் தோன்றுகின்றாயே, உன்னுடைய துணையும் என்னுடைய காதலர் போல இரக்கம் அற்றதோ?”
 பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும் -1223
மாலைநேர பொழுது தலைவர் இருந்தபோது எனக்கு நன்மை செய்தது இப்போது ஏன் துன்பளிக்கிறது என்று தலைவியின் வருத்தத்தைப் பதிவு செய்கிறார் பின்வருமாறு, ‘
என் காதலர் என்னுடன் இருந்தபோது பயந்து பசலை நிறத்தில் வந்த மாலைப் பொழுதானது இப்போது எனக்கு வருத்தும் ஏற்பட்டுத் துன்பத்தை மேன்மேலும் அதிகரிக்கும்படியாக நாளும் வருகின்றது.”
காதலர் இ;ல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும் -1224
மாலைப்பொழுது பயமுறுத்தும் மாலைப்பொழுதாக அமையுமோ? ஏவ்விதம்? காதலியின் கூற்றைக் கேளுங்கள், ‘காதலர் அருகில் இல்லாத காலத்தில் கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவதைப் போல இந்த மாலைப் பொழுது என் உயிரைக் கொல்வதற்காக வருகின்றதே”
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை -1225
காதலர் இல்லாத பொழுது காலையும் மாலையும் எவ்விதம் இருக்கின்றன என்று தலைவியின் பார்வையில் இருந்து பின்வருமாறு சொல்கிறார் வள்ளுவர். ‘காலைப் பொழுதுக்கு நான் செய்த நன்மை என்ன? என்னை இப்படி பெரிதும் வாட்டி வதைக்கின்ற மாலைப் பொழுதிற்கு நான் செய்த தீமைதான் என்ன?”
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன் -1226
‘மாலைப் பொழுது இந்த அளவிற்கு துன்பத்தை ஏற்படுத்தும் என்பதை காதலர் என்னைப் பிரியாமல் என்னுடன் கூடியிருந்த அந்தக் காலத்தில் நான் அறியவே இல்லையே” என்று காதலன் தன்னுடைன் மகிழ்ச்சியாக இருந்த மாலை நேரத்தை எண்ணிப் பார்க்கிறார் காதலி. 
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய் -1227
ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் மாறிப் போனதோ என்பது போல காதலர் இல்லாத பொழுதுகள் எவ்விதம் இருக்கின்றன என்று காதலி உணர்கிறார்? ‘இந்தக் காதல் என்பது காலையிலே அரும்பாகத் தோன்றி பகலெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப் பொழுதிலே முதிர்ச்சியடைந்து மலரும் ஒரு நோயாகும்.” 
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை -1228
மனதிற்கு இனிமை இல்லாதபோது அமைதி இல்லாதபோது நமக்குப் பிடித்தவைகளும் பிடிக்காமல் போவதுண்டு, தலைவனைப் பிரிந்த தலைவி மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? ‘முன்பு எனக்கு இனிதாய் ஒலித்த ஆயனின் இனிமையான புல்லாங்குழலின் இசையானது மாலைப் பொழுதுக்கு தூதாகி வந்தது மட்டும் இல்லாமல் என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது”
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து -1229
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இன்புற்றுறிக்கும் போது சொல்வோம், அதுவே வருத்தத்தின் உச்சத்தில் இருந்தால்? ‘அறிவு மயங்கும் படியாக மாலைப்பொழுது வந்து படரும் வேளையில் இந்த ஊரும் மயங்கி என்னைப் போல துன்பத்தை அடையும்”.
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர் -1230
மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ? ஜோடி குயிலோன்னு பாடி பறந்ததைத் தான் தேடுதோ? என்று தலைவியின் நிலை ஒவ்வொரு மாலையும் நகர்வதின் துன்பத்தை விளக்குகிறார் பின்வருமாறு, ‘பொருளை ஈட்டுவதற்காகப் பிரிந்து சென்ற காதலரை நினைத்துப் பிரிவுத் துன்பத்தாலே போகாமல் இருந்த எனது உயிரானது இந்த மாலைப் பொழுதிலே நலிவுற்று மடிந்து போகின்றதே”.
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி





Monday, 9 December 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 47:







திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 47:
கனவுநிலை உரைத்தல்:
கடந்த வாரம் நினைந்தவர் புலம்பல் அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; கனவுநிலை உரைத்தல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். கனவுநிலை உரைத்தல் என்பது காதலரை பிரிந்த நிலையில் வரும் கனவின் நிலையை உரைப்பதாகும்.இனி பிரிதலினால் எப்படியெல்லாம் காதலர்கள் கனவின் நிலையை எப்படி உரைத்தார்கள்  என்பதைக் காணலாம். 
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து -1211
பிரிவால் வருந்திக் கிடக்கும் காதலிக்கு எதுதான் ஆறுதல்? காதலியின் குறளாகத் திருவள்ளுவர் வெளிப்படுத்துவதை எதனை? ‘யான் பிரிவால் வருந்தி அயர்ந்து கண் உறங்கிய போது, காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு, யான் கைம்மாறாக என்ன விருந்து படைக்கப் போகின்றேன்?
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன் -1212
‘யான் விரும்பும் போது என்னுடைய கண்கள் உறங்குமானால், அப்பொழுது கனவில் தோன்றும் என்னுடைய காதலருக்கு, யான் தப்பிப் பிழைத்திருக்கும் உண்மையைச் சொல்வேன்”
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்;டலின் உண்டென் உயிர் -1213
காதலரைப் பிரிந்து வாழும் நிலையில் எப்படித்தான் உயிர்வாழ்வது? காதலியின் குரலாக திருவள்ளுவர் சொல்வதைக் கேளுங்கள். ‘நேரில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவிலாவது கண்டு மகிழ்வதால் தான் என்னுடைய உயிர் நீங்காமல் இன்னும் நிலைத்திருக்கின்றது. 
  கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
  நல்காரை நாடித் தரற்கு -1214
  நேரில் அன்பு செய்யாத ஒருவரைத் தள்ளி வைப்பது கடினம், இருந்தாலும் அவருடன் மகிழ்ச்சியாக எப்படி வாழ்வது? இதோ, திருவள்ளுவர் சொல்கிறார்.
  ‘நனவில் அதாவது நேரில் இருக்கும் போது அன்பு செய்யாதக் காதலரைத் தேடி அழைத்துக் கொண்டுக் காட்டுகின்ற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கின்றது” 
அடுத்தக் குறளில் தன் தலைவனை எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்ட தலைவியின் நிலையினைச் சொல்கிறார். 
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது -1215
‘முன்பு நான் நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனியதாக இருந்தது, இப்பொழுது நான் காணுகின்ற கனவும், காணும் பொழுதிலே எமக்கு இனியதாகவே உள்ளது” என்கிறார். 
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன் -1216
என்றும் நினைவில் வாழும் என்று இறந்தவர் வீட்டில் இருப்பவர்கள் தான் பதிவிடுவார்கள.; ஆனால், இந்தப் பதத்தைத் திருவள்ளுவர் எங்குப் பயன்படுத்துகிறார் என்று பாருங்கள்..., தலைவி சொல்கிறார்,’ நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லையென்றால், கனவில் வருகின்ற எம் காதலர் எம்மை விட்டு எப்போதுமே பிரியாதிருப்பார் அல்லவோ?” என்கிறார். அதாவது, நனவில் தான் அவர் வருவதும் பின்பும் பிரிவதும் வாடிக்கையாக இருக்கின்றது. அப்படி நனவு என்று இல்லாமல் கனவு மட்டும் தான் உள்ளதெனில் என்றென்றும் பிரியாத நிலை இருந்திருக்குமே என்று தலைவியின் மனதில் நின்று, பிரிவின் கொடுமையை உணர்த்துகிறார்.
நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது -1217
மேற்கண்ட குறளில், தலைவியின் செல்லக் கோபத்தை வெளிப்படுத்துகிறார் திருவள்ளுவர். ‘நனவில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடுமையாளாரான என்னுடைய காதலர், கனவில் மட்டும் வந்து எம்மை வருத்துவது எதனாலோ?” என்று தலைவியின் நிலையாகக் காட்டுகிறார். என்னதான் அன்பிருந்தாலும் பிரிவு கோபத்தையும் ஏற்படுத்தத் தானேச் செய்யும்?
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து -1218
தலைவன் மீது அளவுகடந்த அன்பு கொண்ட தலைவியால் மட்டுமே இவ்வாறு சொல்ல இயலும், ‘தூக்கத்தில் கனவில் வந்து என் மீது தோளில் சாய்ந்து எனக்கு இன்பம் தந்த என்னவர், நான் விழித்துக் கொண்ட உடன் என் நெஞ்சில் தாவி நுழைந்துக் கொள்கிறார்” என்னே அருமையான கற்பனை. காதலரின் நிலையில் இருந்து தனிமையிலும் இனிமை காணும் உணர்வினை ஏற்படுத்துகின்றார். 
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர் -1219
ஒருவர் மீது எந்தளவு அன்பிருந்தால், தன்னைப் பிரிந்திருக்கும் நிலையிலும் அவரை ஏற்று ஆறுதல் அடைய முடியும், இதோ திருவள்ளுவர் சொல்வதை பாருங்கள், ‘எந்த மகளிர் தன்னுடைய காதலரை அல்லது கணவரைத் தம்முடைய கனவில் காணவில்லையோ, அவரே, நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைஃகணவரைக் குறித்து மனம் நொந்து கொள்வார்கள்” என்று காதலி/தலைவி குறிப்பிடுவதாகச் சொல்கிறார். அதாவது தன் தலைவன் தன்னுடன் நனவில் இல்லையெனினும் கனவில் அவருடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றேன். ஆதலால் அவரிடம் எந்தக் கோபமும் இல்லை என்று நினைக்கிறாள். 
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர் -1220
என்னை விட்டு என்னுடைய காதலர் நனவில் விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று இந்த ஊரார் சொல்கின்றார்களே? அவர் நாளும் என் கனவில் வருவதை அவர்கள் காண்பது கிடையாதோ?
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Monday, 2 December 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 46:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 46:
நினைந்தவர் புலம்பல் :
கடந்த வாரம் தனிப்படர் மிகுதி அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; நினைந்தவர் புலம்பல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். நினைந்தவர் புலம்பல் என்பது காதலரை நினைத்து புலம்புதலைக் குறிக்கின்றது. இனி பிரிதலினால் எப்படியெல்லாம் காதலர்கள் புலம்பியுள்ளனர் என்பதைக் காணலாம். 
முதல் குறளில், இன்று எங்கு நோக்கினும் கள்ளுக்கடைகளில் குவிந்து மக்களைப் பார்க்க முடிகிறது. அப்படி எனில், அவர்கள் அதில் ஏதோ ஒரு இன்பத்தை அனுபவிப்பதற்காக அங்கு குவிந்துள்ளனர் எனலாம், ஆனால், அதனை விட இனிமையானது எது? இதோ கீழே உள்ள குறளைப் பாருங்கள்.
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது -1201
கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்து இருக்கும் போது நினைத்தாலும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்துவதால், உண்டபோது மட்டும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் கள்ளைக் காட்டிலும் காதல் இனிமையானது என்கிறார் வள்ளுவர். 
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல் -1202
மேற்கூறிய குறளில், தாம் விரும்பி இணைந்த காதலரை பிரிவில் நினைத்தாலும் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால், எந்த வகையிலும் காதல் சுகமானதுதான் என்று பிரிவிலும் நினைவில் கிடைக்கும் சுகத்தினைக் குறிப்பிடுகிறார். 
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும் -1203
நாம் எவ்வளவு முறை வேகமாக வரும் தும்மலை அடக்கியிருக்கிறோம் அல்லது தும்மல் வருவது போல இருக்கும் சமயத்தில் வராமால் அடங்கிவிடும், அந்த சமயத்தில் நாம் ஏதாவது நினைத்ததுண்டா? ஆனால் திருவள்ளுவர் என்ன சொல்கிறார் பாருங்கள் மேற்கூறிய குறளில், ‘வருவது போல இருந்து வராமல் அடங்கி விடுகிறதே தும்மல், அது போன்று என்னை நினைப்பது போலிருந்துவிட்டு நினைக்காமல் விடுகின்றாரோ?” என்கிறார். அடுத்தக் குறளில் காதலர்களுக்கே உரிய சந்தேகத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்...
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர் -1204
எம்முடைய நெஞ்சத்தில் காதலராகிய அவர் தொடர்ந்து எப்போதும் இருக்கின்றாரே? யாமும் அவருடைய நெஞ்சத்தில் இருந்து நீங்காமல் எப்போதும் இருக்கின்றோமா? என்கிறார். 
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல் -1205
ஒரு காதல் பிரிவு எப்படி வேண்டும் என்றாலும் நினைக்கத் தோன்றும் நினைத்துப் புலம்பத் தோன்றும், அதனைத் தான் மேலேயுள்ள குறளிலும் குறிப்பிடுகிறார், ‘தம்முடைய நெஞ்சத்தில் எம்மை வரவிடாமல் காவல் காக்கும் என்னுடைய காதலர், எம்முடைய உள்ளத்தில் மட்டும் ஓயாமல் வந்து செல்வதைப் பற்றி வெட்கப்பட மாட்டாரோ?” என்று காதலரின் புலம்பலைக் குறிப்பிட்டுள்ளார். அடுத்து வரும் குறளும் பல காதலர்கள் மட்டுமல்ல உண்மையான அன்பு கொண்டு பிரிந்து இருக்கும் நிலையில் வாழும் அனைத்துத் தம்பதியனருக்கும் பொருத்தமான குறள் ஆகும். 
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான் 
உற்றநாள் உள்ள உளேன் -1206
‘என் காதலரோடு நான் கூடி வாழ்ந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் நான் உயிரோடு இருக்கின்றேன், இல்லையென்றால், வேறு எதனை நினைத்து நான் உயிர் வாழ முடியும்?” என்று காதலர் புலம்புவதாகக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். நான் மேற்சொன்னக் கூற்று சரிதானே?
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும் -1207
‘மறந்தால் தானே நினைப்பதற்கு” என்ற கூற்று பலரும் கூற நாம் ஒருவேளைக் கேள்விப்பிட்டிருக்கலாம், இதை 2000 வருடங்களுக்கு முன்னரே, பிரிவுத் துன்பத்தில் புலம்புதலில் ஒருவர் உள்வாங்கி குறிப்பிடுகிறார் என்றால் அவரை ஞானி என்று குறிப்பிடாமல் வேறு என்ன சொல்வது, இதோ குறளின் அர்த்த்ம். ‘மறதி என்பதே இல்லாமல் அவரை நினைத்துக் கொண்டிருக்கும் போதே உள்ளத்தைப் பிரிவு சுடுகின்றதே, அப்படி இருக்கும் போது அவரை நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?”
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு -1208
உண்மையான அன்பின் சிறந்த உதவி எது என்பதை விளக்கும் குறள், ‘என் காதலரை நான் எவ்வளவு அதிகமாக நினைத்தாலும் அதற்காக அவர் என் மேல் கோபம் கொள்ள மாட்டார். இத்தகைய அன்புள்ளம் கொண்ட அவர் எனக்குத் தரும் சிறந்த உதவியே அதுதான்”. 
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் 
அளியின்மை ஆற்ற நினைந்து -1209
பிரிவின் துயரத்தைக் குறிப்பிடும் குறள் இது, ‘நாம் இருவரும் வேறானவர் அல்ல என்று கூறிய காதலர் கொஞ்சம் கூட இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கின்றது”
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி -1210
பிரிந்திருக்கும் நிலையில் இருக்கும் சிலர் நிலவைப் பார்க்கையில் அதே சமயம் அவருடைய காதலரும் வெளியூரில் இருக்கும் நிலையில் நிலவைப் பார்த்துக் கொண்டிருப்பதாக இருந்தால், அந்த நிலையில் நிலவை ஒரே சமயத்தில் பார்ப்பதன் மூலம் அது இருவரின் பிணைப்பாகவும் தாங்கள் அருகருகே இருப்பதாகவும் நினைக்கும் வாய்ப்பினை ஏற்படுத்துகின்றது, இது போன்ற நிலையினை திருவள்ளுவர் எப்படிக் கையாளுகின்றார்? 
‘நிலவே என் உள்ளத்தில் பிரியாமல் இருந்து இறுதியில் என்னைப் பிரிந்துச் சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் கண்டுபிடிப்பதற்குத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக என்று காதலி கூறுகிறார்”. என்னே திருவள்ளுவரின் ஞானம்!
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Sunday, 24 November 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 45:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 45:
தனிப்படர் மிகுதி:
கடந்த வாரம் பசப்புறு பருவரல் அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; தனிப்படர் மிகுதி அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். தனி- தனிமை, படர்-துன்பம், வருத்தம் , தனிமையினால் துன்பம் அதிகரித்து இருக்கும் நிலையினைக் குறிக்கிறது.
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி – 1191
உண்மையான மகிழ்ச்சி காதலர்களுக்கு எது? , இதோ திருவள்ளுவர் சொல்கிறார், ‘தாம் விரும்பும் காதலர், தம்மையும் விரும்பும் பேறு பெற்றவர்கள், காதல் வாழ்வின் பயனாகிய விதையற்ற கனியைப் பெற்றவரே ஆவர்” என்கிறார்.
வாழ்;வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி – 1192
காதலில் ஒருவரையொருவர் விரும்புவது எப்படியென்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் என்று அறிவீர்களா? ‘தம்மை விரும்புபவருக்கு, அவரை விரும்புகிற காதலர் அளிக்கும் அன்பாது, உயிர் வாழும் உலகத்தவர்களுக்கு மேகம் மழைப் பொழிந்து காப்பாற்றுதலைப் போன்றது ஆகும்” என்கிறார்.
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு – 1193
உண்மையான அன்பினை உணர்த்தும் குறள் இது, ‘காதலரால் விரும்பப்படுகின்றவருக்கு, இடையில் பிரிந்து இருக்கக் கூடிய நிலையில் இருந்தாலும், தான் காதலிக்கப்படுவதால், மீண்டும் யாம் இன்பமாக வாழ்வோம் என்று இவருக்கு இருக்கும் செருக்கானது பொருத்தமானதுதான்” என்கிறார்.
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின் - 1194
தாம் மிகவும் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால், உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை – 1195
காதலியின் ஏக்கமாகக் குறிப்பிடுகிறார், அதாவது, நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அதேபோன்று நம்மீது காதல் கொள்ளாதபோது, வேறு என்ன நமக்கு நன்மை செய்து விடப் போகிறார்? ஏன்று காதலி புலம்புவதாhகக் குறிப்பிடுகிறார்.
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது – 1196
காதல் எப்படி இருக்க வேண்டும், இரண்டு பக்கமும் சமமான அன்பு தானே? அப்படி இல்லாத நிலையினை வள்ளுவர் எவ்வாறு விளக்குகிறார். மேற்காணும் குறளில்? ‘காதல் ஒரு தலையானது “ என்றால் மிகவும் துயரமானது, காவடித் தண்டின் பாரத்தைப் போல இரு பக்கமும் ஒத்தபடி இருந்ததானால்  மட்டுமே அது மிகவும் இனிமையானதாக இருக்கும் என்கிறார்.
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான் - 1197
காதல் கடவுளான காமன் இருவரிடத்திலும் சமமாக நடக்காமல் ஒருவர் பக்கம் மட்டும் நின்று நடப்பதால், என் வருத்தத்தையும் துன்பத்தையும் அவன் கண்டுகொள்ள மாட்டான் போலும்! ஏன்கிறார் திருவள்ளுவர்.
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல் - 1198
தான் மிகவும் விரும்பிய தன்னுடைய காதலரின் இனிய சொல்லைக் கூடப் பெறாமல், உலகத்தில் வாழும் தலைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு யாரும் இல்லை என்கிறார். பிடித்தவரிடம் நாள்தோறும் பேசும் வாய்ப்பு இல்லாமல் இருப்பவரின் தவிப்பை உணர்த்துகிறார்.
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு -1199
தனக்குப் பிடித்துவிட்டால் தன்னை அன்பு செய்யாவிட்டாலும் அவர்தன் புகழைக் கேட்டால் மகிழும் தன்மையை சிலர் உணர்ந்திருக்கக்கூடும், வள்ளுவரும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது மேற்கூறிய குறளில் புலப்படுகிறது, ‘நான் விரும்பிய காதலர் மீண்டும் வந்து அன்பு செய்ய மாட்டார் என்றாலும், அவரைப் பற்றி யாராவது புகழ்ந்து சொல்லக் கேட்டதும், காதுகளுக்கு இனிமையாக இருக்கிறது” என்கிறார்.
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு - 1200
காதலியின் புலம்பலாகக் குறிப்பிடுகிறார், ‘நெஞ்சமே!, நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உன் அளவற்ற துன்பத்தை சொல்லிக் கொண்டிருக்கின்றாயே? அங்கு ஆறுதல் எதிர்பார்ப்பதை விட கடலைத் தூர்ப்பது உனக்கு எளிதான வேலையாக இருக்கும்” என்கிறார்.

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி





Monday, 18 November 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 44:





திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 44:
பசப்புறு பருவரல்:
கடந்த வாரம் ; கண்விதுப்பழிதல்; அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; பசப்புறு பருவரல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். பசப்புறு பருவரல்; என்பது பசுமை , தலைவி தலைவனைக் காணாமல் அவளின் உடல் நிறம் மாறிக் கிடத்தல் அல்லது அதனால் ஏற்படும் துன்பம் என்று அர்த்தமாகிறது. இனி குறள்களையும் அதன் அர்த்தத்தையும் பார்ப்போம். 
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற -1181
முதல் குறளில் தன் காதலர் பிரிந்ததால் ஏற்பட்ட பசலை நோயைக் குறித்துத் தெரிவிக்கிறார் காதலி, என்னை விரும்பிய என்னவரைப் பிரிவதற்குச் சம்மதித்த நான் இப்பொழுது அதனால் ஏற்பட்ட பசலை உற்ற தன்மையை யாருக்குச் சென்று எடுத்துச் சொல்வேன்? ஏன்று புலம்புவதாக அமைத்துள்ளார். 
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு -1182
ஏதற்கெல்லாம் இறுமாப்பு என்று கணக்கில்லாமல், நோய் பற்றியதையும் பெருமையாக என்னும் காதலியை என்னவென்று சொல்வது, இதோ, அவள் கூற்றை கேளுங்கள்,’இந்தப் பசலை நிறமானது, எனக்கு என் காதலர் தந்தார் என்னும் பெருமிதத்தோடு என் உடலின் மேல் உரிமையோடு பற்றிப் படர்ந்து என் மேனி எங்கும் நிறைக்கின்றதே!” என்கிறார். 
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும்தந்து -1183
காதலனை நோக்கி காதலி புகார் சொல்வதாக அமைத்துள்ளார் மேற்கூறிய குறளை... 
என் காதலர் என்னுடைய அழகையும் என்னுடைய நாணத்தையும் அவர் தன்னோடு எடுத்துக் கொண்டார். அதற்கு கைம்மாறாக காதல் நோயையும் பசலையையும் தந்து விட்டுச் சென்றுள்ளார் என்கிறார். 
பின்வரும் குறளை...
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு -1184
காதலி செல்லமாக புகார் சொல்வதாக அமைத்துள்ளார் திருவள்ளுவர். ‘அவரையே நான்நினைத்துக் கொண்டிருப்பேன், அவருடைய திறன்களைப் பற்றியே பேசுவேன், அப்படி இருந்த போதும் என்னையறியாமல் பசலை வந்தது வஞ்சனையோ?” 
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனிமேல் பசப்பூர் வது-1185
எவ்வளவு விரைவாக தன் காதலின் பிரிவை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்ற காதலின் நிலையாக மேலே உள்ள குறள் அமைந்துள்ளது, ‘அதோ பார், என் காதலர் என்னைப் பிரிந்து சென்று கொண்டிருக்கிறார், இதோ பார், அதற்குள்ளேயே என் உடலில் பசலையான வந்து பற்றிப் படருகின்றது” என்று பிரிவின் தாக்கத்தினை காதலியின் வாயிலாக விளக்குகிறார். 
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு -1186
மேற்கூறிய குறள் ஒரு உவமைக் குறளாகும், விளக்கு எப்பொழுது ஒளி மங்கும் கவ்விக் கொள்ளலாம் என்று காத்திருக்கும் இருள் போல, என்னுடைய தலைவனின் தழுவலை எப்பொழுது தளரும் அப்பொழுது படர்ந்து விடலாம் என்று பசலை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது என்கிறார் திருவள்ளுவர். 
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளி;க்கொள் வற்றே பசப்பு -1187
சிறிய பிரிவையும் தாங்கிக் கொள்ள இயலாத அன்பின் வெளிப்பாட்டை மேற்காணும் குறளில் குறிப்பிடுகிறார். ‘தலைவனைத் தழுவியபடியே இருந்தேன், பக்கத்தில் சிறிது புரண்டேன், அந்தப் பிரிவிற்கே பசலை நிறத்தை அள்ளிக் கொள்வது போல் என் மீது வந்து பரவி விட்டதே” என்று தலைவி எண்ணுகிறார். 
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் 
துறந்தார் அவர்என்பார் இல் -1188
ஊராரின் பழிச்சொல்லைத் தாங்க முடியாத உணர்வாக காதலி குறிப்பிடுவதாக, திருவள்ளுவர் குறிப்பிடுகிறார், ‘இங்கே இவள் காதலனைப் பிரிந்ததால் பசலை நோய் உற்றால் என்று சொல்கிறார்களே தவிர, இவளைக் காதலர் கைவிட்டு பிரிந்து சென்றார், என்று சொல்பவர் யாரும் இல்லையே?” என்று வருந்துகிறார் காதலி. 
அடுத்தக் குறளில் பிரிந்தாலும், தன் காதலர் நலமாக இருக்க வேண்டும் என்ற காதலின் வெளிப்பாட்டினைக் காட்டுகிறார் காதலியின் கூற்றாக..
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின் -1189
என்னிடம் இருந்து பிரிந்து செல்வதை என்னை ஒப்புக் கொள்ள வைத்து பிரிந்து சென்ற என் காதலர் நலமாக இருக்கின்றார் என்றால்,  என்னுடை மேனி உள்ளபடியே பசலை நோயினை அடைவதாக...
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின் -1190
உண்மையான அன்பென்றால், அன்பானவரை விட்டுக் கொடுப்பதில்லை, மேற்கூறிய குறளிலும் அப்படித்தான் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். தலைவி தனக்குள்ளே கூறிக் கொள்ளும் ஆறுதல் தான் அது, ‘என்னுடைய ஒப்புதலுடன் என்னை விட்டு பிரிந்து போனவரைப் பற்றி தூற்றிப்பேசாமல், நான் பசலைப் பெற்றேன் என்று பேர் வாங்குவது எனக்கு நல்லதே” என்று தன்னுடைய தலைவரை விட்டுக்கொடுக்காமல் தலைவி பேசுவதை உணர முடியும். 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Monday, 11 November 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 43:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 43:
கண்விதுப்பழிதல்:
கடந்த வாரம் ; படர் மெலிந்திரங்கல் அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; கண்விதுப்பழிதல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். கண்விதுப்பழிதல் என்பது; கண்கள் (தலைவனைக் காணாமல் ) துடித்து வருந்துதல் என்பதாகும்;. இனி குறள்களையும் அதன் அர்த்தத்தையும் பார்ப்போம். 
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோதண்டா நோய்
தாம்காட்ட யாம்கண் டது -1171
இந்தக் கண்கள் அன்று அவரைக் காட்டியதால் தானே தீராத இந்தக் காதல் நோய் ஏற்பட்டது. இன்று அதேக் கண்கள் அவரை என்னிடம் காட்டச் சொல்லி அழுவது எதனாலோ? ஏன்று காதலி கேட்பதாகக் குறிப்பிடுகிறார். அடுத்தக் குறளில்,
  தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
  பைதல் உழப்பது எவன் -1172 என்கிறார். 
  அதாவது, வரப்போவதை முன்கூட்டியே ஆராய்ந்து உணராமல், அன்று அவரை பார்த்து மகிழ்ந்த மை தீட்டிய கண்கள் இன்று இந்தத் துயரத்திற்குக் காரணம் தாம் தான் என்று உணராமல், தாமும் துன்பப்படுவது எதனாலோ? ஏன்று கேட்கிறார். 
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து -1173
அன்று தாமாகவே வேகமாக முந்திச் சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள் , இன்று தாமே அழுகின்றன. இதைப் பார்க்கும் போது சிரிப்பாகத் தான் இருக்கின்றது என்று காதலி சொல்கிறார். அடுத்தப் பாடலில், 

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து -1174
அன்று, நான் தப்பிப் பிழைக்க முடியாத தீராத காதல் துன்பத்தை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திய என் கண்கள், இன்று தாமும் அழுவதற்கு இல்லாதபடி நீர் வற்றிப் போய் விட்டன. 
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் 
காமநோய் செய்தஎன் கண் -1175
கடல்கொள்ள முடியாத அளவிற்குக் காமநோயினை எனக்கு உண்டாக்கிய எனது கண்கள், அந்தத் தீவினையால் தாமும் உறங்காமல் இவ்விரவுப் பொழுதில் துன்பத்தினை அடைகின்றன.
ஓஒஇனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தூஅம் இதற்பட் டது -1176
எமக்கு இந்தக் காமநோயை ஏற்படுது;திய கண்கள், தானும் தூங்காமல் இப்படி அழுகையில் ஈடுபட்டுதும் பார்ப்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது என்று காதலி தெரிவிப்பதாகக் குறிப்பிடுகிறார். என்னை காதலில் சிக்க வைத்தது இந்தக் கண்கள் தானே இப்போது நீயும் சேர்ந்தே அனுபவி என்று காதலி சோகத்திலும் ஒரு ஆறுதலாய் பேசிக் கொள்வதாகக் குறிப்பிடுகிறார். 
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண் -1177
அன்று அவரை கண்டு மகிழ்ந்து இழைந்து குழைந்து இரசித்த கண்கள், இன்று தூக்கமில்லாமல் வருந்தி வருந்தி தன்னுடன் உள்ள கண்ணீரும் வற்றி போகட்டும்.
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் 
காணாது அமைவில கண் -1178 
என்னை அரவணைக்கும் எண்ணம் இல்லாமல் வெறும் பேச்சில் மட்டுமே அன்பு காட்டியவர் இவ்விடத்திலே இருக்கின்றார். ஆனால், அதனால் என்ன தான் பயன்? இருந்தாலும் அவரைக் காணாமல் என் கண்கள் அமைதியாக இருக்க மாட்டேன் என்கிறதே?
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண் -1179
காதலர் வராதபோது வழியிலே விழி வைத்து அவர் எப்போது வருவாரோ என்று என் கண்கள் தூங்குவதில்லை. காதலர் வந்தாலும் அவர் எங்கே உடனே பிரிந்து சென்று விடுவாரோ அன்று அஞ்சியே தூங்காமல் கண்கள் விழித்திருக்கின்றன. இவ்வாறு இரண்டு வழியிலும் தூங்காமல் தாங்க முடியாத துன்பத்தை எனது கண்கள் அனுபவிக்கின்றது.
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து -1180
அடிக்கப்படும் பறைபோன்று என்னுடைய மனதினுள் இருப்பதை அழுதே காட்டிக் கொடுத்து விடும் கண்களைப் போன்ற எம்மைப் போன்றவரிடத்தில் இருந்து இரகசியத்தை அறிந்து கொள்வது ஊராருக்கு ஒன்று கடினமான செயல் இல்லை. 

Monday, 4 November 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 42:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 42:
படர் மெலிந்து இரங்கல்:
கடந்த வாரம் படர் மெலிந்திரங்கல் அதிகாரத்தில் இருந்து முதல் பகுதியைப் பார்த்தோம். இந்த வாரம் படர் மெலிந்திரங்கல் அதிகாரத்தில் இருந்து இரண்டாவது பகுதியைப் பார்ப்போம்.
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது -1166
பிரிவுத் துயரமானது சேர்ந்திருக்கும் போது கிடைக்கும் இன்பத்தினை விட மிகப் பெரியது என்பதனை இவ்வாறு குறிப்பிடுகிறார். காமம் மகிழ்விக்கும்போது கிடைக்கும் இன்பமானது கடல் அளவு பெரியது. ஆனால், பிரிவுத் துன்பத்தால் வருந்தும் போது, அவ்வரு




த்தமானது கடலை விட மிகப் பெரியதாக உள்ளது என்கிறார். 
அடுத்தக் குறளில்,
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன் -1167 என்கிறார். 
அதாவது;, இந்த நள்ளிரவிலும், யான் ஒருத்தியே தூங்காமல் வருந்தியபடியே இருக்கின்றேன். அதனால், காமம் என்னும் கடுமையான வெள்ளத்தை நீந்தியும் என்னால் அதன் கரையைக் காண முடியாமல் தவிக்கிறேன் என்று காதலியின் கூற்றாகத் தெரிவிக்கிறார். 
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை -1168 
மேற்கூறிய குறளில், இரவில் தனித்துக் கிடப்பதின் நிலையினை பின்வருமாறு விளக்குகிறார். இரவே!, இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களையும் உறங்கச் செய்துவிட்டு, பாவம் இப்போது என்னைத் தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய் என்று கூறுகிறார். 
கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா -1169
ஒருவருக்கு வயிற்றில் உபாதை என்று எடுத்துக் கொள்வோம், அதுவும் இரவு நேரத்தில் என்றால் அவர் அதனைப் எப்படிக் கழிப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள்! அதுபோல காதலி இப்படிக் குறிப்பிடுகிறார். இப்போதெல்லாம் பிரிவுத் துன்பத்தினால், எனது இரவு நேரம் நீண்ட காலமாகின்றது. இப்படி மிகப் பெரிய இரவின் கொடுமையானது என்னைப் விட்டுப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கடுமையான கொடுமையாக இருக்கிறது என்கிறார். 
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண் -1170
தன் இயலாமையை காதலியால் எப்படி வெளிப்படுத்த முடியும்? நாம் அனைவரும் அறிவோம் மனதின் கற்பனைக்கு எல்லையே இல்லை. இதனை வள்ளுவர் எப்படி உணர்த்துகிறார். இதோ, காதலியின் வார்த்தையாக குறிப்பிடுவதைக் கவனியுங்கள். 
என் மனதைப் போல காதலர் உள்ள இடத்திற்குச் செல்ல முடியுமானால், என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டிய அவசியமில்லை என்கிறார். 

Monday, 28 October 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 41:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 41:
படர் மெலிந்து இரங்கல்:




கடந்த வாரம் பிரிவாற்றாமை அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; படர் மெலிந்திரங்கல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். படர் மெலிந்து இரங்கல் என்பது பிரிவுத் துன்பத்தைத் தாங்க முடியாமல் உடல் மெலிந்து வருந்தி புலம்புதலாகும். இனி குறள்களையும் அதன் அர்த்தத்தையும் பார்ப்போம். 
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும் -1161
என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்து விடக் கூடாது என்று மறைக்கத்தான் செய்தேன். ஆனாலும், அது இறைக்க இறைக்க எப்படி ஊற்றுநீர் பெருகி வருகிறதோ அதுபோல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது என்று விவரிக்கிறார். 
அடுத்தக் குறளில்,
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும் -1162 என்கிறார். 
அதாவது, இந்தக் காதல் நோயினை என்னால் மூடி மறைக்கவும் முடியவில்லை. இந்த நிலையை நோயை ஏற்படுத்திய காதலருக்கு இதைச் சொல்வதற்கும் வெட்கமாக இருக்கிறதே என்று காதலியின் புலம்பலாகக் குறிப்பிடுகிறார். காதலியின் தவிப்பை வெளிப்படுத்துகிறார்.  
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து -1163 என்று மேற்கூறிய குறளில் குறிப்பிடுகிறார். 
நாம் முருகனுக்கு பக்தர்கள் காவடி எடுத்துத்தான் பார்த்திருக்கின்றோம். அந்தக் காவடியினை எங்கு உதாரணமாக பொறுத்துகிறார் என்று பாருங்கள்? காதலியின் தவிப்பை குறிப்பிடுகிறார். அதாவது, பிரிவுத் துயரத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு ஒரு பக்கம் காதல் துன்பத்தையும் மற்றொரு பக்கத்தில் நாணமும் தொங்குகின்றன என்று குறிப்பிடுகிறார். 
அடுத்த உதாரணத்தைப் பாருங்கள்
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல் -1164.
காதலானது கடல் போலச் சூழ்ந்து கொண்டு வருத்துகிறது. ஆனால், அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை என்று காதலியின் பிரிவுத்துயரத்தைக் குறிப்பிடுகிறார். 
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர் -1165 
பிரிவுத் துயரத்தில் காதலியானவர் கற்பனை செய்து பார்க்கிறார். இவ்வளவு அன்பாக இனிமையான நட்பு பாராட்டும் என்னிடமே துயரத்தை ஏற்படுத்தும் என்னுடைய காதலர், பகைமை ஏற்பட்டால் எத்தகையவராய் மாறி விடுவாரோ? என்று காதலி நினைக்கிறார். 
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Tuesday, 22 October 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 40:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 40:
பிரிவாற்றாமை:
கடந்த வாரம் பிரிவாற்றாமை அதிகாரத்தில் இருந்து முதல் பகுதியைப் பார்த்தோம். இந்த வாரம் பிரிவாற்றாமை அதிகாரத்தில் இருந்து இரண்டாவது பகுதியைப் பார்ப்போம்.
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை – 1156
பிரிவு என்பதனை ஏற்றுக் கொள்ளமுடியாத காதலி, பிரிவைப் பற்றிச் சொல்லும் காதலனை கல்நெஞ்சம் கொண்டவராகப் பார்க்கிறார் என்பதைப் பற்றி மேற்கூறிய குறளில் விளக்குகிறார். அதாவது, பிரிவைப் பற்றி தெரிவிக்கும் அளவிற்கு கல் நெஞ்சம் கொண்டவர் என்றால், அத்தகைய தன்மைக் கொண்டவர் திரும்பி வந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது என்று காதலி குறிப்பிடுதாகத் தெரிவிக்கிறார் திருவள்ளுவர். 
அடுத்தக் குறளில், 
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை – 1157 என்கிறார். 
தலைவனின் பிரிவினால் தலைவிக்கு ஏற்படும் வருத்தத்தினால் ஏற்படும் உடல் மெலிவினையும் அதனால் ஏற்படும் விளைவினையும் எடுத்துக் காட்டுகிறார். அதாவது,
என்னை என் தலைவன் விட்டுவிட்டுச் பிரிந்து செல்லும் செய்தியை அறிந்து ஏற்பட்ட என் மெலிவால் என்னுடைய முன்கையிலிருந்து கழலும் வளையல்கள் ஊரறிய எடுத்துக்காட்டி தூற்றி விடாதோ?  என்று குறிப்பிடுகிறார். 
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு – 1158 
என்று மேற்கூறிய குறளில் குறிப்பிடுகிறார். தனிமையிலே இனிமை காண முடியுமா? என்ற பாடலைக் கேட்டிருப்போம். இங்கேயும் தனிமையின் கொடுமையினை காதலி குறிப்பிடுவதாகத் தெரிவிக்கிறார். நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது. அதனினும் துன்பமானது என்னவென்றால், இனியக் காதலரைப் பிரிந்து தனித்திருப்பது ஆகும் என்கிறார். 
அடுத்தக் குறளில், பிரிவின் கொடுமையை மாற்று வழியில் சொல்கிறார். 
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ – 1159
நெருப்பானது, தன்னைத் தொட்டால் சுடும்... ஆனால் காமநோய் போல தன்னை விட்டு நீங்கியபோதும் சுடவல்லதாகுமோ? என்று கேட்கிறார். 
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் 
பின்இருந்து வாழ்வார் பலர் - 1160. 
மேற்கூறிய குறளில், காதலருடைய பிரிவையும் பொறுத்துக் கொண்டு,


அதனால் ஏற்படும் துன்பத்தையும் தாங்கிக்கொண்டு, அதன் பின்னரும்


பொறுத்திருந்து உயிர்வாழ்பவர் பல பெண்கள் இருக்கின்றனர்.  நினைத்துப் பாருங்கள் நம்மைச் சுற்றி எவ்வளவு பெண்கள் தன்னுடைய கணவர் பல காரணங்களால் (பெரும்பாலும் தொழிலின் நிமித்தம்) தன்னை விட்டு வெகுகாலங்கள் பிரிந்திருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு தன்னுடைய குடும்பத்தினை தாங்கி நிற்கின்றனர். அத்தகைய மகளிரின் உள்ளத்தை உணர்ந்தவராய் நிற்கின்றார் அய்யன் திருவள்ளுவர். 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Tuesday, 15 October 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 39:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 39:
பிரிவாற்றாமை:
கடந்த வாரம் அலர் அறிவுறுத்தல் அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; பிரிவாற்றாமை அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். பிhவாற்றாமை என்பது பிரிவை தாங்க முடியாமை என்று அர்த்தமாகும். அ


தாவது தலைவனின் பிரிவை தாங்க முடியாமல் புலம்புதைக் குறிப்பதாகும். 
ஒரு காதலி தன்னுடைய காதலன் பிரிந்து போவதலைத் தாங்க முடியவில்லை என்று எப்படியெல்லாம் உணர்த்த முடியும் என்பதனைக் குறிப்பிடுகிறார். முதல் குறளில்
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை - 1151 என்கிறார். அதாவது தலைவித் தலைவனைப் பார்த்துக் குறிப்பிடுகிறாள்.. நீங்கள் என்னைப் பிரிவதில்லை என்றால் மட்டும் என்னிடம் சொல், ஆனால், என்னை விட்டு பிரிந்து சென்று விரைவில் திரும்பி வருவதுப் பற்றி சொல்வாயானால், அதுவரையில் உயிர்வாழ முடிபவர்களுக்குச் சொல் என்கிறார். அதாவது, உன்னை விட்டு என்னால் பிரிந்திருக்க இயலாது, என்னை விட்டு நீ மிகச் சிறிய காலம் நீங்கினால் கூட நீயில்லாமல் நான் மரணித்து விடுவேன் என்கிறார்.
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு – 1152
மேற்கூறிய குறளில், தலைவனின் அன்பான பார்வைக் கூட இனிமையாக இருந்தது. ஆனால், அவர் என்னை விட்டு பிரிந்து செல்ல இருக்கிறார் என்று நினைக்கும்போது அவரோடு என்னுடைய கூடலும் கூட துன்பமாக இருக்கின்றதே என்று தலைவியின் புலம்பலாகக் குறிப்பிடுகிறார். 
அடுத்தக் குறளில், பிரிவு என்பது எத்தகைத்தன்மையரிடமும் தவிர்க்க இயலாது என்பதனை இவ்வாறு காதலி குறிப்பிடுவதாகத் தெரிவிக்கிறார்.
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான் - 1153
அறிவு நிரம்பியர்களிடம் மத்தியில் உள்ள காதலிலும் பிரிவு என்று இருக்கும்போது, அவர் என்னை விட்டுப் பிரிய மாட்டேன் என்று கூறுகின்ற உறுதியினை என்னால் நம்ப முடியவில்லை என்று காதலி புலம்புகிறார். 
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு – 1154
மணந்த காலத்தில் அன்பு மிகுந்தவராய் அஞ்ச வேண்டாம் என்று கூறி, என்னுடைய அச்சத்தைப் போக்கியவரே இப்போது விட்டுப் பிரிந்து செல்வார் எனில் அவர்கூறிய உறுதிமொழியை நாம் நம்பியதில் என்ன தவறு இருக்க முடியும் என்று காதலி வினவுகிறார். 
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு – 1155 
மேற்கூறியப் பாடலில், தற்காத்துக் கொள்ளலைக் குறிப்பிடுகிறார். என்னைக் காக்க வேண்டும் என்றால், என் காதலர் பிரியாதபடி தடுக்க வேண்டும். அப்படி அவர் ஒருவேளை பிரிந்து விட்டால் மறுபடியும் அவரைச் சேருதல் என்பது அரிதாகிவிடும் என்று காதலியின் கூற்றாகக் குறிப்பிடுகிறார். 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Monday, 7 October 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 38:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 38:
அலர் அறிவுறுத்தல்:
கடந்த வாரம் அலர் அறிவுறுத்தல் அதிகாரத்தில் இருந்து முதல் பகுதியைப் பார்த்தோம். இந்த வாரம் அலர் அறிவுறுத்தல் அதிகாரத்தில் இருந்து இரண்டாவது பகுதியைப் பார்ப்போம். நமக்கு அறிவியலை விளக்குவதற்கு ஆன்மிகத்தில் பல கதைகள் புனையப்பட்டன. அதில் ஒன்று  கிரகணத்தின் போது நிலவினை பாம்பு விழுங்குகிறது என்பது. அதாவது உலகத்தின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும், கிரகணத்தின் போது சந்திரன் மேல் கருப்பு வட்டம் மறைத்து மறுபடியும் விலகுவதைக் காணலாம். இந்த நிகழ்வினை பாம்பு விழுங்குவது போல கற்பனையாக வடித்து அதன் மூலம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வரையறுக்கின்றனர். இந்த நிகழ்வினை ஒட்டி கீழ்வரும் பாடலை வடித்துள்ளார். காதலரை நான் ஒரே ஒரு நாள் தான் பார்த்தேன். ஆனால், அதனை பாம்பு எப்படி நிலவை விழுங்குவது போன்ற கிரகணத்தில் சொல்கிறார்களோ அந்த நிகழ்வு போல அவரைப் பார்த்தது ஊரெங்கும் பரவி விட்டதே என்று காதலி குறிப்பிடுவதாகக் கூறுகிறார். 
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று – 1146
அடுத்தப் பாடலில், வேளாண்மை தெரிந்த அறிஞரின் பார்வையைக் காணலாம், பொதுவாக ஒருவர் சொல்லும் உவமை அவருடைய வாழ்வியலில் இருந்தே பொதுவாக அமையும், ஆனால், இவர் பலதுறையில் இருந்து வழங்கும் உவமை இவரைத் தனித்துக் காட்டுகிறது. சரி, பாடலைக் காண்போம். 
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய் - 1147
அதாவது எங்களுடைய காதலை சொல்லிக் கொண்டிருக்கும் ஊராரின் பழிச் சொல்லே எங்களின் உரமாகும் மேலும் எங்களுடைய காதலுக்கு எனது தாய் செய்யும் தடைச் சொல்லே நீர் ஆகும் என்கிறார். அதாவது ஒரு பயிர் நன்கு வளர்வதற்கு நீரும் எருவும் முக்கியமோ அது போன்று எங்களுடைய காதல் வளருவதற்கு ஊராரின் பழிச் சொல்லும் தாயின் தடைச் சொல்லும் உதவியாக இருக்கிறது என்று காதலர் நினைக்கின்றனர் என்கிறார். 
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல் - 1148
அலர் கூறுவதால் எங்களுடைய காதலை அழித்து விடுவோம் என்று மக்கள் எண்ணுகின்றனர். அவ்வாறு எண்ணுவது நெய்யை ஊற்றி நெருப்பை அணைத்துவிடுவோம் என்பது போன்ற அறியாமையாகும் என்று மேற்கூறியப் பாடலைக் குறிப்பிடுகிறார். 
அடுத்தப் பாடலில்,  அலர்  பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும் போது, பயப்படாதே, உன்னைப் பிரியமாட்டேன் என்று உறுதியாக சொல்லி விட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா என்று தலைவிக் குறிப்பிடுவதாக தெரிவிக்கிறார். 
நான் என்ன விரும்புகின்றேனோ அதனை எனக்குப் பதிலாக பிறர் பேசி அதனால், எனக்கு நன்மை கிடைக்குமானால் நான் எவ்வளவு பாக்கியவாதி! இதனைத் தான் அடுத்தப்பாடலில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். 
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை  - 1149 
அதாவது, யாம் விரும்புகின்ற அலரைத் தான் இந்த ஊர் மக்கள் எடுத்துக் கூறுகின்றனர். அதனால், எம் காதலரும் தாம் எம் உறவை விரும்பி வந்து எமக்கு அருளினைச் செய்வார் என்கிறார். 
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்குமிவ் வூர் - 1150

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Tuesday, 1 October 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 38

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 38:
அலர் அறிவுறுத்தல்:
கடந்த வாரம் நாணுத் துறவுரைத்தல் அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம் அலர் அறிவுறுத்தல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். அலர் அறிவுறுத்தல் என்பது அனைவரும் அறியப் பேசுதல் என்பதாகும் அது பழித்தல் அல்லது வம்புப்பேச்சாக இருக்கலாம். எப்படி ஒரு எதிர்மறையான எண்ணத்தை நேர்மறையாக மாற்றிக் கொள்வது என்று திருவள்ளுவரிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். 
பிள்ளையில் காதலைப் பிடிக்காத பெற்றோர் பல வகைகளில் பிள்ளைகளைத் துன்புறுத்துவதை அதாவது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் என்று கேள்விப்பட்டிருப்போம். சில காதல்கள் ஆணவக் கொலையில் கூட முடிவதுண்டு. இதற்கு முக்கிய காரணம் நாலு பேரு நாலு விதமாக பேசுவார்களே என்பதுதான். அப்படி பலபேரும் பலித்தும் இழித்தும் பேசும் வார்த்தைகளை இவர் எப்படி நேர்மைறையாக மாற்றுகிறார் என்று கீழ்வரும் பாடல்களில் குறிப்பிட்டுள்ளதைப்  பாருங்கள்.  
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் 
பலரறியார் பாக்கி யத்தால் -1141
ஊரே சேர்ந்து என் காதலைப் பழித்துப் பேசியபோதும் அவமானத்தால் என் உயிர் அழிந்து விடவில்லை. அதற்குக் காரணம் நான் செய்த நல்வினைகள் தான் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார். 
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர் - 1142
மலர் போன்ற கண்களை உடைய என்னவளின் அருமையினை அறிந்திராமல் , நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் மக்கள் எங்கள் காதலைப் பற்றியே பேசி எங்களைப் பழித்துப் பேசி எங்களுக்கு மறைமுகமாக நன்மை செய்து விட்டது என்று தலைவன் நினைப்பதாக அமைந்த குறள் இது. 
அடுத்தப் பாடலில், 
உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப் 
பெறாஅது பெற்றன்ன நீர்த்து -1143 என்கிறார். 
காதலை இரகசியமாக வைத்திருக்க வேண்டும், யாரும் அறியாமல் பாதுகாக்க வேண்டும் காலம் கனியும் போது சொல்லிக் கொள்ளலாம் என்று காதலர்கள் பொதுவாக சிந்திப்பது உண்டு, ஆனால், அதனை ஊர் அறிந்து கொண்டால் என்னாகுமோ என்று பயப்படுவதற்குப் பதிலாக பின்வருமாறு தலைவன் யோசிப்பதாகக் குறிப்பிடுகிறார்.
எங்களுக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே. திருமணம் செய்ய முடியுமா என்று இருந்த நிலை போய் இவர்கள் சொல் மூலம் திருமணம் செய்தது போன்ற இன்பத்தைத் தந்து விட்டது. 
கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து -1144
மேற்கூறிய குறளில், ஊராரின் புறணி மற்றும் பழிச் சொல்லால் தான் என்னுடைய காதலும் நன்கு வளர்ந்து நிற்கின்றது, இல்லையெனில் காதலானது தன்னுடைய தன்மையினை இழந்து சுவையில்லாமல் சப்பென்று ஆகிவிடும் என்கிறார். 
பின்வரும் பாடலில், எப்படி கள் உண்பவர் கள் உண்டு மயங்க மயங்க மறுபடியும் அதனை விரும்பி நாடுவது போன்று, காமமும், அலரால் வெளிப்பட வெளிப்பட மேலும் இனிமையானதாக மாறி நிற்கின்றது என்கிறார். 

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது – 1145


தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Monday, 23 September 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 37

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 37:
கடந்த வாரம் காதற் சிறப்புரைத்தல் அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம் நாணுத் துறவுரைத்தல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். காமத்துப்பாலில் கடந்த அதிகாரங்கள் வரை குறிஞ்சித் திணையைச் சார்ந்தது. நாணுத் துறவுரைத்தல் முதல் வரும் 5 அதிகாரங்கள் பாலைத் திணையைச் சார்ந்தது ஆகும். அதாவது பிரிந்து இருத்தலைக் குறிப்பிடுபவை. ஏற்கனவே நான் ஒருமுறை மடலேறுதல் என்பதைக் குறித்து விளக்கியிருக்கின்றேன். ஒருவேளைஅதனைக் குறித்து அறியாதவர்கள் கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கி விவரம் பெறலாம். சரி நாம் குறளைக் காண்போம்...
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி – 1131 என்கிறார். 
அப்படியென்றால் காதலன் வருந்தி யோசிப்பதாக உள்ள கூற்று. அதாவது காதல் நிறைவேற முடியாமல் வருந்தியருக்கு வலிமையானத் துணை என்பது மடலேறுதல் தவிர வேறு ஏதும் இல்லை என்கிறார். காதல் கைக்கொள்ளாதது அவ்வளவு துன்பத்தைத் தருகின்றது என்று உரைக்கின்றார். 
அடுத்தப்பாடலில், காதலியின் அன்பைப் பெறாமல் தவிக்கும் துயரத்தைத் தாங்கமுடியாத என் உடம்பும் உயிரும், என்னுடைய நாணத்தை என்னிடமிருந்து நீக்கி விட்டு மடலூரத் துணிந்து விட்டன என்கிறார். காதலியின் அன்பை பெறத் துடிக்கும் துயரத்தைக் குறிப்பிடுகிறார். 

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து -1132 
அதே போன்று அடுத்தப் பாடலிலும், 
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல் -1133
நல்ல ஆண்மையும் நாணத்தையும் கொண்டிருந்த நான் இப்பொழுதோ காதலியின் பிரிவுத் துயரத்தால் காமநோய் மிகுந்தவர் ஏறும் மடலையே பெற்றுள்ளேன் என்று புலம்புகிறார் காதலன். 
அடுத்தப் பாடலில் காமத்தின் கொடுமையினைக் குறிப்பிடுகிறார். நாணத்தோடு நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்கின்ற கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போகின்றதே, நான் என்ன செய்வது? என்று பிரிதலின் கொடுமையாக காதலன் புலம்புவதைக் குறிப்பிடுகிறார். 
காமம் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை – 1134. 
மலைபோல தொடர்ந்த சிறு வளையல்களை அணிந்திருக்கும் என் காதலி எனக்கு மாலைப் பொழுதில் நான் அடையும் மயக்கத்தையும் துயரத்தையும் அதற்கு மருந்தாகிய மடலேறுதலையும் எனக்குத் தந்துவிட்டாள் என்று வருந்துகிறார். 
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்  - 1135
மேலும், அடுத்தப்பாடலில் அந்தப் பேதைப் பெண்ணை நினைத்து நினைத்து என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன. அதனால் நடுச்சாமத்திலும் கூட நான் மடலேறுதலைக் குறித்தே நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று காதலனின் நிலையாகக் குறிப்பிடுகிறார். நினைத்து நினைத்துப் பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன் பாடல் போல இருக்கிறது அல்லவா..?
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லாப் பேதைக்கென் கண் -1136
அடுத்தப் பாடலில், ஒரு பெண் எந்த அளவிற்குப் பெருமை உடையவள் என்றால், கடல் அளவிற்கு காம நோயால் வருந்திய போதிலும், ஆண்களைப் போலாமல் மடலேறாமல் தன் துயரத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கும் பெண்ணைப் போல பெருமை உடைய பிறவி இல்லை என்கிறார் வள்ளுவர். 
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல் -1137
இவர் மன அடக்கம் மிக்கவர், மனதில் உள்ளதை ஒளித்து வைக்கத் தெரியாதவர், பரிதாபத்திற்கரியவர் என்று பார்க்காமல் இந்தக் காதலானது எங்களுக்கும் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப் போகிறது. 
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும் - 1138
அடுத்தப் பாடலில், 
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு – 1139 என்கிறார், 
அதாவது, என்னுடைய காமநோயானது எனது மன அடக்கத்தால் எல்லோரும் அறிந்திருக்கவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவவெங்கும் தானே அம்பலப்படுத்திச் சுற்றி வருகிறது. 
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு – 1140
மேற்கூறிய குறளில், காதல் நோயினால் நான் பட்ட துன்பத்தை அனுபவித்து அறியாதவர்கள் தான் அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து சிரிக்கின்றனர். 
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Monday, 16 September 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 36

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 36
காதல் சிறப்புரைத்தல்:

கடந்த வாரம் காதல் சிறப்புரைத்தல் அதிகாரத்தில் முற்பகுதியில் இருந்து பார்த்தோம். இந்த வாரம் பிற்பகுதியைப் பார்ப்போம். முற்பகுதியில் காதலன் தன் காதலியை/தலைவியை சிறப்புரைத்தவற்றைப் பார்த்தோம் இந்த வாரம் காதலி/தலைவி தன் காதலன்/தலைவனைக் குறித்து சிறப்புரைத்தலைக் குறித்துக் காணலாம். 
கடந்த வாரம் ஒரு பாடலில், தலைவன் தன் கண்ணின் பாவையையே போய்விடு, ஒளிதரும் என்னவள் எனக்குப் பார்வையாக இருக்கிறாள் அவளுக்கு இடம் கொடு என்று அன்பின் மிகுதியால் கேட்டதைக் கண்டோம். அதே போன்று பின்வரும் பாடலில் காதலி குறிப்பிடுகிறார்,
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர் எம்காத லவர் - 1126
‘என்னுடைய காதலர் என் கண்களில் இருந்து ஒரு போதும் போக மாட்டார், நான் கண்ணை மூடி இமைத்தாலும் அதற்காக வருந்த மாட்டார், ஏனென்றால் அவர் அவ்வளவு நுட்பமானவர்” என்று குறிப்பிடுகிறார். பொதுவாகவே ஒரு சொல்லடை உண்டு ‘அவளைப் பாரு தன் புருசனை கைக்குள்ள போட்டு வச்சிருக்கா, நீயும் தான் இருக்கறியே?” என்று கட்டுக்கு அடங்காத கணவனின் மனைவியிடம் அவர் தோழியர் பிறரைக் காட்டி சொல்வதுண்டு. ஆனால் மேற்கூறிய பாடலில் ‘காதலனை தன் கண்ணுல போட்டு வச்சிருக்கா” என்று சொல்லலாமா...?

அடுத்தப் பாடலில்,
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து -1127 என்கிறார்.
ஏற்கனவே காதலரை கண்ணிலே அடைச்சி வச்சிருக்கா என்று பார்த்தோமல்லவா அதன் நீட்சியாக இப்பாடல் அமைந்துள்ளது. அதாவது, எனக்கே உரிய என் காதலன் என் கண்ணிலேயே இருக்கின்றார். ஆதலால், நான் கண்ணுக்கு மை தீட்டினால் அவர் மறைந்து விடுவாரோ என்று நினைத்து, என்னுடைய கண்களுக்கு நான் மை தீட்ட மாட்டேன் என்கிறார். 
அடுத்தப் பாடல், முந்தைய பாடலின் மிஞ்சிய பாடல் ஆகும்
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து -1128 என்கிறார். 
அதாவது, என்னுடைய காதலர் என் நெஞ்சிலே நிறைந்திருக்கிறார். அதனால், நான் எதைச் சாப்பிட்டாலும் அவருக்கு சூடு உண்டாகும். ஆதலால் அதை நினைத்து சூடாக நான் எதையும் சாப்பிடுவதற்கு அஞ்சுகிறேன் என்று காதலி குறிப்பிடுகிறார். புரிந்து கொள்ள முடிகிறதா காதலின் அளவினை...?
அடுத்தப் பாடலில் அதற்கு அடுத்த ஒரு படி முன்னேறுகிறார். 
இமைப்பின் கரப்பார்க்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர் -1129
தன் கண்ணுக்குள்ளே காதலன் இருப்பதால் தான் இமைத்தால் அதனால் அவன் மறைந்துவிடுவான் என்பதால் நான் இமைக்காமல் இருக்கின்றேன். ஆனால், இந்த அன்பினை புரிந்து கொள்ளாத ஊர் மக்கள் என்னவரை அன்பற்றவர் என்கின்றனர். என்று காதலியின் கூற்றாகக் குறிப்பிடுகிறார். மேலும், 
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர் -1130 என்கிறார். 
அதாவது, என்னவர் என் உள்ளத்திலேயே குடி கொண்டிருக்கிறார். அவரோ உள்ளத்திலே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத்தான் தெரியும். ஆனால், இதனை அறியாத ஊர் மக்கள் அவர் ‘பிரிந்து போய் விட்டார்” ‘அன்பற்றவர்” என்று புரியாமல் திட்டுகின்றனர். இந்தக் கூற்றை மடமை என்பதா? அல்லது காதலின் ஆழம் என்பதா? அது காதலியின் நிலையில் இருந்து பார்த்தால் தான் விளங்கிக் கொள்ள முடியும் என்று உணர்த்துகிறார் ஞானி திருவள்ளுவர். 
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி






Monday, 9 September 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 35





திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 35

கடந்த வாரம் நலம் புனைந்துரைத்தல்  அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம் காதற் சிறப்புரைத்தல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். இது தலைவனும் தலைவியும் தம் காதலின் சிறப்பைச் சொல்லுதல் ஆகும். இனிய சொற்களைப் பேசக் கூடிய ஒருவரை தீயவர் என்றாலும் அவரை தவறாக எண்ணுவதற்கு வாய்ப்புகள் குறைகின்றது. வார்த்தைப் பிரயோகமானது அவ்வளவு வலுவானது ஆகும். அப்படியிருக்கையில் திருவள்ளுவர் இனிய மொழிகளைப் பேசும் பெண்ணை எவ்விதம் கூறுகிறார். கீழ்வரும் குறளைக் காண்போம். 
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்  - 1121
அதாவது இனிய மொழியினைப் பேசுகின்ற தலைவியின் முத்துப் பற்களிடையே வெளிவரும் உமிழ்நீரானது பாலோடு தேன் கலந்த கலவையாகும் என்கின்றார். இதனை இனிய சொற்களைக் கூறுதலின் சிறப்பைக் குறிப்பிடுகிறார். 
அடுத்து வரும் பாடலில், 
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு -1122 என்கிறார். 
அதாவது, இரண்டு நெருங்கிய நட்புடன் அன்புடன் இருப்பவர்களை நாம் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தும் வார்த்தைகள் தான். ஆனால் மேற்கூறிய பாடலைப் பார்க்கும் போது இவருடைய குறளைக் கடனாகப் பெற்றுத்தான் இத்தனை நாட்களாக நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோமா? என்று சொல்லத் தோன்றும். நீங்களே பாருங்கள் என்ன சொல்லியிருக்கிறார் என்று, உடலுக்கும் உயிருக்கும் இடையேயான நட்பு எத்தகைய தன்மை வாய்ந்ததோ, அதே போன்றது தான் என்னவளுடன் எனக்கு இருக்கும் நட்பாகும் என்று தலைவன் கூறுவது போல் அமைத்துள்ளார். நான் சொல்வது சரிதானே?
கருமணியிற் பாவாய்நீ போதாய்யாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம் - 1123
நான் விரும்புகின்ற இவளுக்கு கண்ணில் இருப்பதற்கு இடம் இல்லாமல் இருக்கின்றது, ஆதலால், என் கண்ணின் கருமணியில் பாவையே நீ போய் விடு என்கின்றார். கண்ணிற்கு ஒளியாய் விளங்கும் பாவையையே போ எனது பார்வையே என்னவள் தான் அவளுக்கு இடம் கொடு என்று தலைவனின் காதலைச் சிறப்புரைக்கின்றார். 
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கு மிடத்து -1124
ஆராய்ந்து சிறந்த பண்புகளைக் கொண்ட என்னவள் என்னிடம் சேர்ந்திருக்கையில் உயிருக்கு வாழ்வளிப்பதைப் போன்றும் நீங்குகையில் உயிருக்கு சாவைப் போன்றும் இருக்கிறாள் என்கிறார். 
ஒருவர் மீது மிகுந்த அன்புடன் இருக்கையில் வெளியூரிலோ அல்லது பார்க்க முடியாத இடத்தில் இருந்தாலோ அலைபேசியில் பேசும்போது சொல்ல வாய்ப்புண்டு, ‘என்னிடம் ஃபோன் பேச கூட நேரமில்லையா? எங்களை ஞாபகம் இருக்கா என்ன? என்று கேள்வி எழுமின் சொல்லக் கேட்டிருப்போம் அல்லது சொல்லியிருப்போம்... மறந்தால் தானே நினைப்பதற்கு என்று..” 
பின்வரும் பாடலில், இப்படித் தெரிவிக்கிறார்…
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம் -1125 
அதாவது, ‘ஒளியுடன் கூடிய கண்களை உடைய என்னவளின் குணங்களை நான் மறந்தால் பிறகு நினைக்க முடியும். நான் ஒருபோதும் மறந்ததில்லையே...” 
மறந்தால் தானே நினைக்க முடியும், சரிதானே?

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொருத்துக் கொள்க.
நன்றி