Monday, 18 November 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 44:





திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 44:
பசப்புறு பருவரல்:
கடந்த வாரம் ; கண்விதுப்பழிதல்; அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; பசப்புறு பருவரல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். பசப்புறு பருவரல்; என்பது பசுமை , தலைவி தலைவனைக் காணாமல் அவளின் உடல் நிறம் மாறிக் கிடத்தல் அல்லது அதனால் ஏற்படும் துன்பம் என்று அர்த்தமாகிறது. இனி குறள்களையும் அதன் அர்த்தத்தையும் பார்ப்போம். 
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற -1181
முதல் குறளில் தன் காதலர் பிரிந்ததால் ஏற்பட்ட பசலை நோயைக் குறித்துத் தெரிவிக்கிறார் காதலி, என்னை விரும்பிய என்னவரைப் பிரிவதற்குச் சம்மதித்த நான் இப்பொழுது அதனால் ஏற்பட்ட பசலை உற்ற தன்மையை யாருக்குச் சென்று எடுத்துச் சொல்வேன்? ஏன்று புலம்புவதாக அமைத்துள்ளார். 
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு -1182
ஏதற்கெல்லாம் இறுமாப்பு என்று கணக்கில்லாமல், நோய் பற்றியதையும் பெருமையாக என்னும் காதலியை என்னவென்று சொல்வது, இதோ, அவள் கூற்றை கேளுங்கள்,’இந்தப் பசலை நிறமானது, எனக்கு என் காதலர் தந்தார் என்னும் பெருமிதத்தோடு என் உடலின் மேல் உரிமையோடு பற்றிப் படர்ந்து என் மேனி எங்கும் நிறைக்கின்றதே!” என்கிறார். 
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும்தந்து -1183
காதலனை நோக்கி காதலி புகார் சொல்வதாக அமைத்துள்ளார் மேற்கூறிய குறளை... 
என் காதலர் என்னுடைய அழகையும் என்னுடைய நாணத்தையும் அவர் தன்னோடு எடுத்துக் கொண்டார். அதற்கு கைம்மாறாக காதல் நோயையும் பசலையையும் தந்து விட்டுச் சென்றுள்ளார் என்கிறார். 
பின்வரும் குறளை...
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு -1184
காதலி செல்லமாக புகார் சொல்வதாக அமைத்துள்ளார் திருவள்ளுவர். ‘அவரையே நான்நினைத்துக் கொண்டிருப்பேன், அவருடைய திறன்களைப் பற்றியே பேசுவேன், அப்படி இருந்த போதும் என்னையறியாமல் பசலை வந்தது வஞ்சனையோ?” 
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனிமேல் பசப்பூர் வது-1185
எவ்வளவு விரைவாக தன் காதலின் பிரிவை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்ற காதலின் நிலையாக மேலே உள்ள குறள் அமைந்துள்ளது, ‘அதோ பார், என் காதலர் என்னைப் பிரிந்து சென்று கொண்டிருக்கிறார், இதோ பார், அதற்குள்ளேயே என் உடலில் பசலையான வந்து பற்றிப் படருகின்றது” என்று பிரிவின் தாக்கத்தினை காதலியின் வாயிலாக விளக்குகிறார். 
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு -1186
மேற்கூறிய குறள் ஒரு உவமைக் குறளாகும், விளக்கு எப்பொழுது ஒளி மங்கும் கவ்விக் கொள்ளலாம் என்று காத்திருக்கும் இருள் போல, என்னுடைய தலைவனின் தழுவலை எப்பொழுது தளரும் அப்பொழுது படர்ந்து விடலாம் என்று பசலை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது என்கிறார் திருவள்ளுவர். 
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளி;க்கொள் வற்றே பசப்பு -1187
சிறிய பிரிவையும் தாங்கிக் கொள்ள இயலாத அன்பின் வெளிப்பாட்டை மேற்காணும் குறளில் குறிப்பிடுகிறார். ‘தலைவனைத் தழுவியபடியே இருந்தேன், பக்கத்தில் சிறிது புரண்டேன், அந்தப் பிரிவிற்கே பசலை நிறத்தை அள்ளிக் கொள்வது போல் என் மீது வந்து பரவி விட்டதே” என்று தலைவி எண்ணுகிறார். 
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் 
துறந்தார் அவர்என்பார் இல் -1188
ஊராரின் பழிச்சொல்லைத் தாங்க முடியாத உணர்வாக காதலி குறிப்பிடுவதாக, திருவள்ளுவர் குறிப்பிடுகிறார், ‘இங்கே இவள் காதலனைப் பிரிந்ததால் பசலை நோய் உற்றால் என்று சொல்கிறார்களே தவிர, இவளைக் காதலர் கைவிட்டு பிரிந்து சென்றார், என்று சொல்பவர் யாரும் இல்லையே?” என்று வருந்துகிறார் காதலி. 
அடுத்தக் குறளில் பிரிந்தாலும், தன் காதலர் நலமாக இருக்க வேண்டும் என்ற காதலின் வெளிப்பாட்டினைக் காட்டுகிறார் காதலியின் கூற்றாக..
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின் -1189
என்னிடம் இருந்து பிரிந்து செல்வதை என்னை ஒப்புக் கொள்ள வைத்து பிரிந்து சென்ற என் காதலர் நலமாக இருக்கின்றார் என்றால்,  என்னுடை மேனி உள்ளபடியே பசலை நோயினை அடைவதாக...
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின் -1190
உண்மையான அன்பென்றால், அன்பானவரை விட்டுக் கொடுப்பதில்லை, மேற்கூறிய குறளிலும் அப்படித்தான் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். தலைவி தனக்குள்ளே கூறிக் கொள்ளும் ஆறுதல் தான் அது, ‘என்னுடைய ஒப்புதலுடன் என்னை விட்டு பிரிந்து போனவரைப் பற்றி தூற்றிப்பேசாமல், நான் பசலைப் பெற்றேன் என்று பேர் வாங்குவது எனக்கு நல்லதே” என்று தன்னுடைய தலைவரை விட்டுக்கொடுக்காமல் தலைவி பேசுவதை உணர முடியும். 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

No comments:

Post a Comment