Wednesday, 28 January 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-106:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-106:
 திருக்குறளில் அரசியல்: 
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம், அரசியலில் பெரியாரை துணைக்கோடல் என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம். 

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அடிப்பதற்கு முதன்மைக் காரணம் குழந்தையை வழிநடத்துவதற்கே இருக்கும். அதுதான் உண்மையான பாசம், அதில் தன் குழந்தையைக் குறித்து யாரும் எதுவும் சொல்லிவிடக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். வலிக்க வலிக்க சொல்பவர்களே நம் மீது அக்கறை உடையவர்களாக இருப்பார். இனிக்க இனிக்க சொல்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று. அதின் அர்த்தம் கடினமாக இருந்தாலும் நல்லதை மட்டுமே சொல்வர் நல்லவர்கள் என்பதுதான். நமது ஐயனும் இதனைத் தான் சொல்கின்றார் பின்வரும் குறளில்
இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர் - 447
அதாவது, இடித்துரைத்துக் கூறி திருத்தும் தன்மையைக் கொண்ட பெரியவரின் துணையைக் கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு? என்கிறார். 
அடுத்தக் குறளில், ஒருவன் செல்லமாகவே வளர்க்கப்பட்டான் என்று வைத்துக் கொள்வோம், அவனுக்கு சிறுவயதில் இருந்தே அவர்களுடைய பெற்றோர் அவனை; கண் இமையைப் போலப் பார்த்துக்கொண்டார்கள். அவன் சிறுவர்களுடன் விளையாடினான் என்றால், மற்றொரு சிறுவன் அவனை அடித்தாலோ திட்டினாலோ இவர்கள் போய் இவர்களுடைய மகனுக்காக அவர்களுடன் சண்டையிடுவார்கள் இப்படி அச்சிறுவனை அடைகாத்து அடைகாத்து வளர்த்ததின் விளைவு, அச்சிறுவன் எங்கு சென்றாலும் தன் பெற்றோரின் பாதுகாப்பைத் தேடுகிறான். கல்லூhயிpல் விடுதியில் சேர்க்க வேண்டும் என்றால், ஒருநாள் கூட அவனால் விடுதியில் தங்க இயலவில்லை. இவனுக்காக அவர்கள் வீடு வாடகைக்கு எடுத்து கல்லூரியின் அருகிலேயே தங்குகிறார்கள். ஆனால், எவ்வளவு நாள் அவனுடன் கூடவே பயணிக்க முடியும்? சில நாட்களில் அவனுடைய தந்தை இறந்து விடுகிறார். ஆதனைத் தொடர்ந்து தாயும் இறந்து விடுகிறார். இப்போது, இவன் தனியாக இருக்கின்றான். இவனுடைய பெற்றோர்கள் இவனுக்கான தங்களுடைய சொந்த பந்தங்கள் எல்லோரையும் பகைத்துக் கொண்டார்கள். இவனால், எதையும் செய்ய இயலவில்லை, சமைக்கத் தெரியவில்லை, துணி துவைக்கத் தெரியவில்லை, இவனை ஏதாவது ஒரு சக மாணவன் நையாண்டி செய்தால், அதனை எதிர்த்துப் பேச அவனால் இயலவில்லை, படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. முடிவில் அவன் தற்கொலை செய்து கொள்கிறான். ஆகவே, எந்த பெற்றோர் தங்களுடைய திருத்துவதற்கு கோலை உயர்த்தவில்லையே அந்தக் குழந்தை வெளியுலகத்தால் திருத்தப்படும் சூழல் வரும், சிலர் தங்களுக்குத் தாங்களே குழி வெட்டிக் கொள்ளும் நிலை ஏற்படலாம். இது ஒரு குழந்தை மட்டும் வைத்துக் கருதாமல், ஆட்சியாளர்களுக்கும் இதனைப் பொருத்திப் பார்க்கலாம். மிகப் பெரிய வெற்றிகளையும் திறம்பட மக்கள் நலத்திட்டங்களையும் செய்யும் ஆட்சியாளர்கள் பெரும்பாலும் பெரியோரின் ஆலோசனையைக் கேட்கின்றனர். அவர்களுடைய கடிந்தலை மதிக்கிறார்கள். இதனை பின்வரும் குறளில் விளக்குகிறார். 
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும் - 448
கடிந்து அறிவுரை சொல்லும் பெரியோரின் துணை இல்லாத காவலற்ற அரசனானவன், தன்னைக் கெடுக்கும் பகைவர் இல்லாவிட்டாலும் தானே கெடுவர் என்கிறார், திருவள்ளுவர். அடுத்தக் குறளில், வாணிகத்தோடு தொடர்பு படுத்தி விளக்குகிறார். அதாவது எந்த ஒரு  வணிகத்திற்கும் முதலீடு அவசியம், எந்த ஒரு முதலீடும் இன்றி வணிகம் செய்ய இயலாது. இதனை அரசியலோடு ஒப்பிட்டு எழுதியுள்ளார். 
முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாஞ்
சார்பிலார்க்கு இல்லை நிலை – 449 என்கிறார். 
அதாவது, வணிகத்தில் முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் இலாபத்தால் எந்தப் பலனும் இல்லை, அது போன்று தம்முடைய அரசைத் தாங்கும் பெரியோர்கள் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை என்கிறார். 
இதுவரையிலும் பெரியார் துணையோடு சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகளையும், இல்லையென்றால் ஆட்சியாளரின் நிலையினையும் பார்த்தோம். இறுதியில் நல்லவர்கள் நட்பை இழந்தால் என்ன ஆகும்?
ஒருவர் சிறுவயது முதலே மிகவும் நெருங்கிப் பழகிய தோழன், தனக்கு எதுவென்றாலும் முன்னால் வந்து தட்டிக் கேட்பவன், படிப்பில் நிறைய மதிப்பெண் எடுக்க உதவியவன் என்று பல நிலைகளில் இருப்பவனிடம் சிறு தொகை கடன் கேட்டான் என்பதற்காக நட்பினை இழந்து நிற்கும் போது, காதலில் தோல்வியுற்றபோது தன்னை தேற்றுவதற்கு நண்பன் இல்லையே என்று ஏற்படும் வலி எவ்வளவு கொடியது என்று தனது வாழ்வில் முக்கியமான நபர்களில் இருந்து தொடர்பை விளக்கியவர்கள் உணர்வர். குறிப்பாக திருமணத்திற்குப் பிறகு பெற்றோர் தனியாக வாழ்வதை காண சகியாத ஒவ்வொருவருக்கும் இதன் வலியை உணர்ந்திருப்பர். அதனைப் போன்றதுதான் அரசியலில் நல்லவர்களின் நட்பை இழப்பதுவும், தன்னைச் சுற்றி தனக்குக் குழி பறிப்பவர்களே சிரித்துக் கொண்டு இருக்கும் போது ஒருவருடைய மனநிலை எப்படி இருக்கும். இதோ திருவள்ளுவர் சொல்வதைப் பாருங்கள். 
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல் -450 என்கிறார். 
பலரோடும் பகைத்துக் கொள்வதை விட, நல்லோருடன் கொண்ட தொடர்பைக் கைவிடுதல், பல மடங்கு தீமை உடையதாகும் என்கிறார் திருவள்ளுவர். 
தொடர்ந்து பார்ப்போம்...


குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Tuesday, 20 January 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-105: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-105: திருக்குறளில் அரசியல்: 
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம், அரசியலில் பெரியாரை துணைக்கோடல் என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம். 
தலைசிறந்த ஆட்சியாளர்கள் தன்னுடைய அவையில் எப்போது அறிவு மிகுந்தவர்களை தன்னுடன் உடன் வைத்திருப்பதை நாம் அறியலாம். அவரவருக்கு உரிய மரியாதையையும் கொடுத்து ஆட்சியை எந்தவித சிரமமும் இன்றி நடத்தி வருவதைப் பார்த்திருக்கின்றோம். 
ஊதாரணமாக, ஆட்சியாளருக்கு நிர்வாகத்தில் மிகச் சிறந்தவர் ஆனால், நிதி மேலாண்மையில் இல்லை என்றால், நிதி மேலாண்மையில் திறம்பட கற்றுத் தேர்ந்து சிறப்பாகக் கையாளத் தெரிந்தவரை பதவியில் அமர்த்தி அழகு பார்க்கும் போது, நாட்டின் நிதி நிலைமை உயர்வதற்கும், அரசின் செலவினங்களை திறம்பட கையாண்டு, வலுவான நிலையில் நாட்டினை வைத்திருக்க உதவும். இன்றும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர்கள் இருப்பதைக் காணலாம். அவர்கள் திறன் மிகுந்தவராக இருப்பின் ஆட்சியாளருக்கு தான் மக்களுக்கு நினைத்ததை செய்வது மிக எளிதான ஒன்றாக மாறிவிடும்;. திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை -444
அதாவது, அறிவு ஆற்றல் போன்றவற்றில் தம்மை காட்டிலும் சிறந்த வல்லமைப் படைத்த அறிவுடையோரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, மிகப் பெரிய வலிமையாக அமையும் என்கிறார். 
தொலைநோக்குப் பார்வை உடையவர்கள் நாட்டிற்கு மிக அவசியானவர்கள் ஆவார்கள். அவர்களைப் போன்ற சிந்தனையாளர்களால்; தான் அரசால் தொலைநோக்குத் திட்டங்கள் 5 ஆண்டுகள் திட்டம், 10 ஆண்டுகள் திட்டம் என வகுக்க இயலுகிறது. இதையெல்லாம் முன்பே கணித்த திருவள்ளுவர் நிர்வாக மேலாண்மையில் தொலைநோக்குப் பார்வையுடையவர்கள்எப்போதும் ஆட்சியாளர்கள் தங்களிடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அப்படிப்பட்ட ஆட்கள் இருக்கும் போதுதான் பஞ்ச காலங்களையும் பருவ காலங்களையும் வானியல், புவியல் நிகழ்வுகளையும், இராணுவ நிலைகளையும், உலக நோக்கில் பொருளாதார மாற்றங்களையும் முன்கூட்டியே உணர்ந்து நாட்டினை பாதுகாப்பாக வைத்திருக்க இயலும். நமது ஐயன் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் -445
கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளருக்கு நன்மை பயக்கும் என்று குறிப்பிடுகிறார். 
எப்போதும் வரப்போவதை முன் கூட்டியே அறிந்து, அதற்கேற்ப திட்டமிட்டால், வெற்றியினை எளிதாக அடையலாம், தஞ்சாவூர் பெரிய கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பிரமிடுகள் என்பன போன்ற மிகப் பெரிய கட்டிடங்களை உதாரணமாகக் கொண்டோம் என்றால் அதன் துல்லிய வடிவமைப்பு, எவ்வளவு திட்டமிடல்களை அந்த காலத்திலேயே கொண்டிருந்தனர் என்பதனை உணரலாம். உலகிற்கே இன்றும் ஆச்சரியமாய் விளங்கும் கல்லணையைப் பார்த்தோம் என்றால,; 2500 வருடங்களுக்கு முன்பே எவ்வளவு பெரிய திட்டமிடல்? மிகப் பெரிய கோயில்கள், கோட்டைகள் எதிரிகளிடம் இருந்து காக்கும் அரண்களாக அந்தக் காலத்தில் இருந்தன. இதனையே அடுத்தக் குறளில், 
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் 
செற்றார் செயக்கிடந்த தில் -446 என்றுக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். அதாவது, அறிவும் ஆற்றலும் கொண்ட ஒருவன் தகுதி மிக்க பெரியோரை நட்பாகக் கொண்ட அவர்காட்டும் வழியில் நடந்தால் அவரை பகைவரால் ஒன்றும் செய்ய இயலாது என்கிறார்.
தொடர்ந்து பார்ப்போம்...


குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 14 January 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-104: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-104:
திருக்குறளில் அரசியல்: 
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம், அரசியலில் குற்றங்கூறாமை என்ற அதிகாரத்தில் இருந்து அரசியல் கருத்துக்களை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் பெரியாரை துணைக்கோடல் என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனைப் பார்ப்போம். 
இதில் தலைப்பினை வைத்து 2000 ஆண்டுகளுக்கு, நமது தெய்வப்புலவர்,  முன்பே பெரியார் என்று ஒருவர் வருவார் அவர் தமிழ்நாட்டில் பல சீர்;;திருத்தங்களைச் செய்வார். அவரை துணையாகக் கொள்ளுங்கள் என்று தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார் என்று எண்ணிவிட வேண்டாம். ஆனால், தன்னுடைய கருத்துக்களை உள்வாங்கியவர்கள் அனைவரும் பெரியாராக உயர்ந்திடுவர் என்பதனை நிச்சயம் தீர்க்கமாக உணர்ந்திருப்பார். இல்லையென்றால், இதோ இன்று போகிப் பண்டிகை, பல இலக்கியங்கள், இலக்கண நூல்கள், தமிழ் பாரம்பரியங்கள், மருத்துவம் என்று பலவும் ஓலைச்சுவடியில் இரகசியமாகவும் தொடர் தொடராக குடும்பம் குடும்பமாக கடத்தப்பட்டும் வந்த பல ஓலைச் சுவடிகள் தீயில் கருகின. ஆயினும், அதையெல்லாம், கடந்து, எங்கோ ஓலைச் சுவடியில் பாதுகாக்கப்பட்டு, கம்பராமாயணம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி என்று பல இலக்கியங்களிலும் ஆங்காங்கே திருக்குறள் குறிப்புகள் எடுத்தாளப்பட்டும் கடந்து வந்திருந்தது என்றால், எவ்வளவு பெரிய பொக்கிஷமாக மக்கள் இதனை உணர்ந்திருப்பர். தமிழ் ஆர்வலர்கள் கடந்த 100 ஆண்டுகாலத்தில் இதற்காக தீவிரமாக உழைத்ததால், இன்று பல வடிவங்களில் நாம் திருக்குறளை அனுபவதித்து மகிழ்கின்றோம். இவையெல்லாம் நடந்ததற்கு சரியான பெரியார்கள் தான் காரணம். 
ஆம், அவர் பெரியார் என்றுக் குறிப்பிடுவது. வெறும் வயதி;ல் மூத்தவர்கள மட்டும் குறிப்பிடுவதில்லை, மாறாக, அறிவு, ஒழுக்கம், அனுபவம் மற்றும் துணிச்சல் மிக்க ஆலோசகர்களைக் குறிக்கிறது. ஒரு தலைவன் தன் அதிகாரத்தைத் தக்க வைக்கவும், மக்கள் நலன் காக்கவும் இத்தகையோரைத் துணையாகக் கொள்ள வேண்டும் என்கிறார். 
சரி, இனி திருக்குறள் வாயிலாக சென்று பார்ப்போம்..
முதல் குறளில்,
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை 
திறனறிந்து தேர்ந்து கொளல் -441 என்கிறார். 
அறத்தினை திறம்பட நுண்மையாக அறிந்தவராக முதிர்ந்த அறிவுடையவரின் நட்பினை கொள்ளும் திறன் அறிந்து ஆராய்ந்து அவரைத் துணையாகக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர். அவ்வாறு நட்பு கொள்வது என்பது வெறுமனே நட்புடன் இருப்பதில்லை, அது ஒரு மிகப் பெரிய அரசியல் முதலீடு ஆகும். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மமதை இல்லாமல், திறனுடைய பெரியோரின் அறிவுரையை ஏற்பது, தக்க சமயத்தில் உதவும். 
ஏன் பெரியோரைத் துணையாகக் கொள்ள வேண்டும்? அவரால் ஆலோசனை தவிர வேறு என்ன முக்கியமாகச் சொல்ல முடியும்? அனுபவம் எப்படி அரசியலுக்கு உதவும் என்று நீங்கள் ஒரு வேளை நினைக்கலாம். அடுத்தக் குறளில் சொல்கிறார் பாருங்கள்.
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல் -442 என்கிறார். இதனை விளக்கும் முன், ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். நமக்கானவர் யார்? ஏன்ற கேள்விக்குப் பதில், நமது கடினமான காலங்களில் நம்முடன் யார் துணையாக நமக்கு ஆதரவாக இருக்கிறார்களோ...அவர்களே நமக்கானவர்கள் ஆவார். வசதி வாய்ப்புகள் மற்றும் ஆடம்பரம் இருக்கும் போது நம்மோடு கூடி மகிழ்பவர்கள் நமக்கானவர்கள் இல்லை. அதே போல் தான், பல பெரியோர்கள் அந்தக் காலத்தில் அரசர்களாக இருந்தாலும் சரி, இந்தக் காலத்தில் ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி, எத்தகைய துன்பம் நேரினும் ஆட்சியாளர்களோடு தோளோடு தோளாக நிற்கின்றனர். சிறைக்கும் சென்றுள்ளனர். இப்படிப்பட்டவர்கள் பொறுப்பில் இருக்கும் போது பொறுப்புடனும் செயல்படுகின்றனர். இவர்கள் ஆட்சியாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய அரண் ஆகும். 
இது போன்ற பெரியவர்களையே, திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதாவது, ‘வந்த துன்பங்களை அறிந்து அதனைப் போக்கி, மேலும், துன்பங்கள் வராமல் காக்கின்ற ஆற்றல் மிக்க பெரியவர்களைப் போற்றித் துணையாகக் கொள்ள வேண்டும் என்கிறார். இவர்கள் 
எது ஒருவனுக்கு வலிமை? மல்யுத்தத்தில் எதிரியுடன் நேருக்கு நேர் சண்டை செய்வதா? தன்னை விட எளியவனை தொடர்ந்து ஆளுமை செலுத்தி நசுக்குவதா? 
உடல் வலிமை, மன வலிமை ஆகியவை ஒரு ஆட்சியாளருக்கு முக்கியமான அம்சம் ஆனால், அதனிலும் வலிமை என்பது என்னவென்று திருவள்ளுவர் சொல்கிறார் என்பதைப் பார்ப்போமா?
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் 
பேணித் தமராக் கொளல் -443 என்கிறார். 
அதாவது, துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும் என்கிறார். இத்தகையோரைப் பெறுவது எல்லா வலிமைகளையும் விட ஒரு ஆட்சியாளருக்கு மிகப் பெரிய வலிமையாகும். 

Saturday, 10 January 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-103: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-103:
திருக்குறளில் அரசியல்: 
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம், அரசியலில் குற்றங்கூறாமை என்ற அதிகாரத்தின் முற்பகுதியை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் அதன் பிற்பகுதியைப் பார்ப்போம். 
நாம் சரித்திர நாவல்கள் அல்லது மிகப் பெரிய ஆளுமைகளைப் பற்றி படித்திருப்போமானால் அவர்களின் குறிப்பிடத்தக்க குணாதிசயத்தையும் பார்த்திருப்போம். அது என்னவென்றால், சுய விழிப்புணர்வு (Self Awareness) சுயத்தைத் தெரிந்திருத்தல், அப்படி இருக்கும் போதுதான் தன்னைப் பற்றிய மற்றவர்களின் விமர்சனம் மற்றும் பார்வைகளை சீர்தூக்கி நல்லது எது? அல்லது எது? என்று ஆராய முடியும். அப்படித் தன்னை முழுமையாக அறிந்தவரால் மற்றவரின் உணர்வுகளையும் நடவடிக்கைகளையும் எளிதில் புரிந்து கொள்ள இயலும். இந்த உண்மையினை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஐயன் எடுத்துரைத்துள்ளார். 
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் 
என்குற்ற மாகும் இறைக்கு -436 என்கிறார். 
முதலில் தன்னுடைய குற்றத்தை நீக்கிப் பிறகு, பிறருடைய குற்றத்தை ஆராயவல்ல ஆற்றல் மிக்க அரசனுக்கு எந்த குற்றமும் வராது என்கிறார் திருவள்ளுவர். 
சவேரியார் என்ற திருத்தூதர் ஒருமுறை இப்படிச் சொல்கின்றதாக ஒரு தேவாலயத்தில் பார்த்தேன் ‘ஒருவன் உலகெல்லாம் சுற்றித் திரிந்தாலும் தன் ஆன்மாவை இழந்தால் என்ன பயன்?” என்கிறார். அவர் கடவுள் மீது நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்று அப்படித் தன் கருத்தினை வெளிப்படுத்துகிறார். நான் என் நடைமுறையைப் பார்த்திருக்கிறேன். சுpலர் பெரும் பணக்காரர்களாக இருப்பர், மக்களை வஞ்சித்தும், அதிகாரத்தையும் , ஆக்கிரமிப்பையும் பயன்படுத்தி வறியவர்களை துன்புறுத்தியும் சொத்து சேர்த்து வருகின்றனர். அதுமட்டுமில்லாது தான் சேர்த்த செல்வத்தினை அனுபவிக்க மனமும் இல்லாமல் வழியும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்னர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த ஆய்வில் உயர் அதிகாரி ஒருவர், தன்னுடைய கழிப்பறையில் பணத்தை மறைத்து வைத்துக் கட்டியுள்ளது பெரிய அதிர்ச்சி அளித்தது, அப்படி அந்தப் பணத்தை கழிப்பறையில் மறைத்து வைப்பதால் யாருக்கு என்ன பலன்? இப்படித்தான் சில நாட்களுக்கு முன்னர் மிக உயர்பாக மதிக்கத் தக்கப் பொறுப்பில் உள்ள நீதிபதி அவர்கள் பணத்தினை கட்டு; கட்டுகளாக எரிhத்துள்ளர். 
இதனையே முன்பே உணர்த்தியிருக்கிறார் நமது செந்நாப்போதர்...
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும் -437 என்கிறார். அதாவது, செல்வத்தால் செய்யத்தகுந்த நன்மைகளைச் செய்யாமல், பொருள் மீது கொண்ட பற்றினால், சேர்த்து வைப்பவனுடைய செல்வமானது யாருக்கும் பலனிற்றி வீணே கெட்டு அழியும். 
மேற்கூறியவாறு யாருக்கும் பயன்படாமல் செல்வத்தை வீணாக்குதல் தனிப் பெருங்குற்றம் என்று பின்வரும் குறளில் குறிப்பிடடுகிறார்
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் 
எண்ணப் படுவதொன் றன்று -438
எல்லாக் குற்றங்களையும் விட மிகப் பெரிய குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் ஆர்வங்கொண்டு மற்றவர்களுக்கு ஈயாமல் வாழ்வதுதான் என்கிறார். 
முந்தைய செயலை விடக் கொடியது எது என்பதனை அடுத்தக் குறளில் வழங்குகிறார் திருவள்ளுவர். 
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை -439
எப்போதும் தன்னையே மிக உயர்வாக எண்ணி வியந்து அகங்காரம் கொண்டு பேசக் கூடாது. நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்யக் கூடாது என்கிறார். 
ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளபடி எமோஷனல் இன்டலிஜென்ஸ் ஒரு நபருக்கு குறிப்பாகத் தலைவராக இருப்பவருக்கு அவசியம் என்கிறார் திருவள்ளுவர் அடுத்தக் குறளில். 
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல் -440
ஏவர் ஒருவர் தன்னுடைய விருப்பத்தைப் பிறர் அறியாத வகையில் காத்து வருகிறாரோ நடைமுறைப்படுத்துகிறாரோ அவரை அழிக்க எண்ணுபவரின் எண்ணம் பலிக்காமல் போய்விடும் என்கிறார். 
தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க
தொடர்ந்து பார்ப்போம்...


குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு