திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-106:
திருக்குறளில் அரசியல்:
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம், அரசியலில் பெரியாரை துணைக்கோடல் என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம்.
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அடிப்பதற்கு முதன்மைக் காரணம் குழந்தையை வழிநடத்துவதற்கே இருக்கும். அதுதான் உண்மையான பாசம், அதில் தன் குழந்தையைக் குறித்து யாரும் எதுவும் சொல்லிவிடக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். வலிக்க வலிக்க சொல்பவர்களே நம் மீது அக்கறை உடையவர்களாக இருப்பார். இனிக்க இனிக்க சொல்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று. அதின் அர்த்தம் கடினமாக இருந்தாலும் நல்லதை மட்டுமே சொல்வர் நல்லவர்கள் என்பதுதான். நமது ஐயனும் இதனைத் தான் சொல்கின்றார் பின்வரும் குறளில்
இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர் - 447
அதாவது, இடித்துரைத்துக் கூறி திருத்தும் தன்மையைக் கொண்ட பெரியவரின் துணையைக் கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு? என்கிறார்.
அடுத்தக் குறளில், ஒருவன் செல்லமாகவே வளர்க்கப்பட்டான் என்று வைத்துக் கொள்வோம், அவனுக்கு சிறுவயதில் இருந்தே அவர்களுடைய பெற்றோர் அவனை; கண் இமையைப் போலப் பார்த்துக்கொண்டார்கள். அவன் சிறுவர்களுடன் விளையாடினான் என்றால், மற்றொரு சிறுவன் அவனை அடித்தாலோ திட்டினாலோ இவர்கள் போய் இவர்களுடைய மகனுக்காக அவர்களுடன் சண்டையிடுவார்கள் இப்படி அச்சிறுவனை அடைகாத்து அடைகாத்து வளர்த்ததின் விளைவு, அச்சிறுவன் எங்கு சென்றாலும் தன் பெற்றோரின் பாதுகாப்பைத் தேடுகிறான். கல்லூhயிpல் விடுதியில் சேர்க்க வேண்டும் என்றால், ஒருநாள் கூட அவனால் விடுதியில் தங்க இயலவில்லை. இவனுக்காக அவர்கள் வீடு வாடகைக்கு எடுத்து கல்லூரியின் அருகிலேயே தங்குகிறார்கள். ஆனால், எவ்வளவு நாள் அவனுடன் கூடவே பயணிக்க முடியும்? சில நாட்களில் அவனுடைய தந்தை இறந்து விடுகிறார். ஆதனைத் தொடர்ந்து தாயும் இறந்து விடுகிறார். இப்போது, இவன் தனியாக இருக்கின்றான். இவனுடைய பெற்றோர்கள் இவனுக்கான தங்களுடைய சொந்த பந்தங்கள் எல்லோரையும் பகைத்துக் கொண்டார்கள். இவனால், எதையும் செய்ய இயலவில்லை, சமைக்கத் தெரியவில்லை, துணி துவைக்கத் தெரியவில்லை, இவனை ஏதாவது ஒரு சக மாணவன் நையாண்டி செய்தால், அதனை எதிர்த்துப் பேச அவனால் இயலவில்லை, படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. முடிவில் அவன் தற்கொலை செய்து கொள்கிறான். ஆகவே, எந்த பெற்றோர் தங்களுடைய திருத்துவதற்கு கோலை உயர்த்தவில்லையே அந்தக் குழந்தை வெளியுலகத்தால் திருத்தப்படும் சூழல் வரும், சிலர் தங்களுக்குத் தாங்களே குழி வெட்டிக் கொள்ளும் நிலை ஏற்படலாம். இது ஒரு குழந்தை மட்டும் வைத்துக் கருதாமல், ஆட்சியாளர்களுக்கும் இதனைப் பொருத்திப் பார்க்கலாம். மிகப் பெரிய வெற்றிகளையும் திறம்பட மக்கள் நலத்திட்டங்களையும் செய்யும் ஆட்சியாளர்கள் பெரும்பாலும் பெரியோரின் ஆலோசனையைக் கேட்கின்றனர். அவர்களுடைய கடிந்தலை மதிக்கிறார்கள். இதனை பின்வரும் குறளில் விளக்குகிறார்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும் - 448
கடிந்து அறிவுரை சொல்லும் பெரியோரின் துணை இல்லாத காவலற்ற அரசனானவன், தன்னைக் கெடுக்கும் பகைவர் இல்லாவிட்டாலும் தானே கெடுவர் என்கிறார், திருவள்ளுவர். அடுத்தக் குறளில், வாணிகத்தோடு தொடர்பு படுத்தி விளக்குகிறார். அதாவது எந்த ஒரு வணிகத்திற்கும் முதலீடு அவசியம், எந்த ஒரு முதலீடும் இன்றி வணிகம் செய்ய இயலாது. இதனை அரசியலோடு ஒப்பிட்டு எழுதியுள்ளார்.
முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாஞ்
சார்பிலார்க்கு இல்லை நிலை – 449 என்கிறார்.
அதாவது, வணிகத்தில் முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் இலாபத்தால் எந்தப் பலனும் இல்லை, அது போன்று தம்முடைய அரசைத் தாங்கும் பெரியோர்கள் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை என்கிறார்.
இதுவரையிலும் பெரியார் துணையோடு சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகளையும், இல்லையென்றால் ஆட்சியாளரின் நிலையினையும் பார்த்தோம். இறுதியில் நல்லவர்கள் நட்பை இழந்தால் என்ன ஆகும்?
ஒருவர் சிறுவயது முதலே மிகவும் நெருங்கிப் பழகிய தோழன், தனக்கு எதுவென்றாலும் முன்னால் வந்து தட்டிக் கேட்பவன், படிப்பில் நிறைய மதிப்பெண் எடுக்க உதவியவன் என்று பல நிலைகளில் இருப்பவனிடம் சிறு தொகை கடன் கேட்டான் என்பதற்காக நட்பினை இழந்து நிற்கும் போது, காதலில் தோல்வியுற்றபோது தன்னை தேற்றுவதற்கு நண்பன் இல்லையே என்று ஏற்படும் வலி எவ்வளவு கொடியது என்று தனது வாழ்வில் முக்கியமான நபர்களில் இருந்து தொடர்பை விளக்கியவர்கள் உணர்வர். குறிப்பாக திருமணத்திற்குப் பிறகு பெற்றோர் தனியாக வாழ்வதை காண சகியாத ஒவ்வொருவருக்கும் இதன் வலியை உணர்ந்திருப்பர். அதனைப் போன்றதுதான் அரசியலில் நல்லவர்களின் நட்பை இழப்பதுவும், தன்னைச் சுற்றி தனக்குக் குழி பறிப்பவர்களே சிரித்துக் கொண்டு இருக்கும் போது ஒருவருடைய மனநிலை எப்படி இருக்கும். இதோ திருவள்ளுவர் சொல்வதைப் பாருங்கள்.
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல் -450 என்கிறார்.
பலரோடும் பகைத்துக் கொள்வதை விட, நல்லோருடன் கொண்ட தொடர்பைக் கைவிடுதல், பல மடங்கு தீமை உடையதாகும் என்கிறார் திருவள்ளுவர்.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
https://www.youtube.com/@AAAInfotainment
தோப்பு