Wednesday, 30 July 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-80:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-80:
அருளுடைமை:
திருவள்ளுவர் அவர்கள் உடைமை என்னும் தலைப்பில் எழுதிய அதிகாரங்களைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அவற்றில் கடந்த வாரம் அன்புடைமை என்னும் அதிகாரத்தைப் பார்த்தோம், இந்த வாரம் ‘அருளுடைமை” என்னும் அதிகாரத்தைப் பார்ப்போம். பெரும்பாலான நீதிக் கதைகளில் அருள் நிறைந்தவரே இறைவனாகவோ, புனிதராகவோ, போற்றுதலுக்குரியவராக இருப்பர். அவருடைய தேஜஸை விளக்குவதற்காக ஒளிவட்டங்கள் கூட காட்டப்படுவதுன்டு, கடந்த வாரம் நாம் பார்த்த அன்புடைமையில் அன்புதான் அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறன்றது என்று பார்த்தோம். அந்த அன்பு மிகுந்த மனிதர் மனதில் அருள் நிறைந்தவர் ஆகின்றார். சரி...செந்நாப்போதர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
உலகில் பலரும் தன்னிடம் பணம் இருந்தால் நாம் தான் மிகப் பெரிய சக்தி என்ற இறுமாப்புடன் இருப்பதுண்டு. ஆனால், வள்ளுவர் என்ன சொல்கிறார். 
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள -241 என்கிறார், அதாவது பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் கூட இருக்கிறது ஆனால், (உயர்ந்தவரிடத்தில் மட்டும் உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும். ஆகவே, பொருள் செல்வத்தைக் காட்டிலும் அருட்செல்வமே மேல் என்கிறார். 
நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை -242
சமுதாயத்தில் முன்னேற்றமான நிலை எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அதுவல்ல வாழ்க்கை, தீய வழியில் செல்வது மானிட குலத்திற்கு அழகல்ல என்பதே மேற்காணும் குறளில் விளக்கியுள்ளார். நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும். பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக உள்ளது என்கிறார். அருளுடன் இருப்பதுதான் சிறந்தது அதுவும் நல்வழியில் இருந்துதான் வரவேண்டும் என்கிறார். 
அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல் -243
காந்தியடிகளின் மிகப் புகழ்பெற்ற வாக்கியம், ‘என் அனுமதியில்லாமல் என்னை யாரும் தொந்தரவு செய்ய முடியாது” என்கிறார். நடிகர் ஒரு படத்தில் கூட சொல்லும் ஒரு டயலாக்கில் இறுதியாக இந்த உலகமே எதிர்த்தாலும், நீயா ஒத்துக்கிற வரைக்கும் உன்னை எங்கேயும் எப்போதும் தோற்கடிக்க முடியாது’ என்பது போல ஒரு வசனம் இருக்கும் இதைத்தான் 2000 வருடங்களுக்கு முன்னரே தத்துவார்த்மாக நமது திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் மேலே உள்ள குறளில்... அதாவது அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்க்கு இல்லை. அருள் நிறைந்த ஒருவருக்கு நெஞ்சத்தில் எந்த நெருடலும் இருப்பதில்லை. மேலே சொன்ன வாக்கியங்கள் பார்த்தால் எளிதாக இருப்பது போல் தோன்றினாலும் அது.. யாருக்குப் பொருந்தும் என்பது சுயநலமில்லாமல் வாழ்பவர்களுக்கு மிகச் சிறந்த தெளிவுள்ள சிந்தனையாளருக்குமே ஏற்புடையதாக இருக்கும். இதைத் தான் அடுத்தக் குறளிலும் தொடர்கிறார். 
மன்னுயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு இல்லென்ப
தன்உயிர் அஞ்சும் வினை -244
தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினையானது உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இருப்பதில்லை என்கிறார். அதாவது மனிதன் தெய்வமாக முடியும் என்ற நிலை தான் இது. 
நமக்கு எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் துன்பத்தை உணராமல் இருப்பது எப்படி, அருளாளராக இருப்பது எப்படி? அதற்கு யார் சாட்சி ? என்பதனை அடுத்தக் குறளில் சொல்கிறார். 
அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வாரிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி -245 அதாவது உள்ளத்தில் ஊறி நிற்கும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் மிக வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று என்கிறார். இதில் இரண்டு விடயங்கள் உண்டு ஒன்று வாழ்க்கைத் தத்துவம் மற்றொன்று அவருக்குள் இருக்கும் அறிவியல் ஞானம்.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Wednesday, 23 July 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-79:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-79:
அன்புடைமை 
நாம் தற்போது திருவள்ளுவர் அவர்களால் உடைமை என்ற தலைப்பில் எழுதியுள்ள குறள்களைப் பார்த்து வருகின்றோம். இந்த வாரம் அன்புடைமை அதிகாரத்தின் தொடர்ச்சியினைக் காண்போம். 
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
ஏன்போடு இயைந்த தொடர்பு -73 
உயிருக்கு எப்படி உடம்போடு உறவு பொருந்தி இருக்கின்றதோ, அதைப்போல அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கைத் தான் பயனுள்ளது என்று கூறுவர் என்கிறார். ஒரு மனிதனுக்கு அன்பு என்ற ஒன்று இல்லையென்றால் அது உயிர் இல்லாத உடம்பிற்கு ஒப்பானதாகக் குறிப்பிடுகிறார். ஆகவே வாழ்க்கையின் அம்சமாக அன்பு இருக்க வேண்டும் என்கிறார்.
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு -74 எனக் குறிப்பிடுகிறார். அதாவது அன்பு என்ற ஒன்றுதான் எல்லோரோடும் பழகுவதற்கு வாய்ப்பினை உருவாக்குகிறது. திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும், அது எல்லோரிடத்தும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும் என்கிறார். மனிதர்களால் பிறருடன் தகவல் தொடர்பு கொள்ளாமல் வாழ்வது அரிது, அப்படி பிறரிடம் பழக வேண்டும் என்றால் நட்பு கொள்ள வேண்டும் என்றால் அன்பானது இருக்க வேண்டும். அடுத்தக் குறளில்
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு – 75 என்கிறார். ஒருவர் சிறப்பு வாழ்கிறவர் என்பது என்ன? ‘உலகத்திலே இன்புற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு என்பது அன்பு உடையவராகிப் பொருந்து வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர் எனச் சொல்கிறார். 73, 75 குறள்களில் வழக்கென்ப என்று அவர் குறிப்பிடும்போது, இது என் கருத்தல்ல ஏற்கனவே மக்கள் இப்படித்தான் வழங்கி வருகின்றனர், அதனைத்தான் நான் குறிப்பிடுகிறேன் என்பது போல அவர் சொல்வதாக உணர்கிறேன். ஆப்படியென்றால் அவர் காலத்தில் அப்படிப்பட்ட அறத்துடன் மக்கள் இயல்பாகவே வாழ்ந்து வருகின்றனர் என்று அர்த்தம் கொள்ளலாம். அதற்கு வலுசேர்க்கும் வகையில் அடுத்த குறள் உள்ளது. 
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை- 76 . அகத்திணை புறத்திணை இரண்டு வகையாக இலக்கியங்கள் தமிழர்களின் ஒழுக்கத்தினைப் பிரித்து கொடுத்தாலும், திருக்குறளிலுமே கூட, அறம் பொருள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அன்பு என்று எடுத்துக் கொண்டால், அறத்திற்கு மட்டும் பொதுவானது அல்லது அது வீரத்திற்குமே பொதுவானது என்கிறார் திருவள்ளுவர். 

என்பு இலதனை வெயில்போலக் காயுமே
அன்பு இலதனை அறம் -77
சிலப்பதிகாரத்தில் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற கருப்பொருள் உண்டு. சிலப்பதிகாரத்திலும் திருக்குறள் கருத்துக்கள் ;இழையோடுவது உண்டு. மேற்கூறிய குறலிலும் திருவள்ளுவர் அதனையே குறிப்பிடுகின்றார். எலும்பு இல்லாத புழுப்போன்ற உயிரினங்கள் வெயிலில் இருந்தால் அது அவற்றை வருத்தும் அதுபோல் அன்பு இல்லாத மனிதர்களை அறம் வருத்தும் என்கிறார். அடுத்தக் குறளில்
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று -78
ஒருவன் அன்பு இல்லாதவனனாக இருந்தால் அவனுடைய குடும்ப வாழ்க்கையானது பட்டுப்போன மரத்தில் பூப்பூத்தது போன்று யாரும் பயனளிக்காது என்கிறார். 
புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு -79 
நாம் ஏற்கனவே திருக்குறளின் கல்வியின் பெருமையைப் பற்றி திருவள்ளுவர் குறிப்பிடும்போது கல்வியறிவற்றவர்களின் கண்களானது கண்கள் அல்ல அது புண்கள் என்றார் அதுபோல மேற்கூறிய குறளில் உள்ளத்தில் அன்பு இல்லாதவன் உடம்பின் புறத்து உறுப்புகள் எல்லாம் என்ன பயன் செய்யும் என்கிறார்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு -80
அன்பையும் அறனையும் திருக்குறள் முழுமையும் சிதறவிட்டிருக்கிறார் பொய்யாமொழிப்புலவர், இந்தக் குறளிலும் அன்பு வழியில் இயங்கும் உடம்புதான் உயிர் இருக்கின்ற உடம்பு அப்படி அவர் மனதில் அன்புக் குடியில்லையெனில் அது வெறுமனே எலும்பும் தோல் கொண்டு போர்த்திய வெற்று உடம்பு என்கிறார். 



தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Tuesday, 15 July 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-78:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-78:

உடைமை:

கடந்த வாரங்களில் பெருநாவலர் அவர்கள் கல்வி குறித்துக் கூறியவற்றைப் பார்த்தோம். இந்த வாரம் அவர் நமக்கான உடைமைகளாகத் திருக்குறளில் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம். 
திருக்குறளில் உடைமை என்னும் பெயரில் 10 அதிகாரங்களை இயற்றியுள்ளார். அவையாவன.
1. அடக்கமுடைமை
2. அருளுடைமை
3. அறிவுடைமை
4. அன்புடைமை
5. ஆள்வினை யுடைமை
6. ஊக்கம் உடைமை
7. ஒழுக்கமுடைமை
8. நாண் டைமை
9. பண்புடைமை மற்றும்
10. பொறையுடைமை
இதில் அறத்துப்பாலின் உள்ளடக்கமான இல்லறவியலில் அன்புடைமை, அடக்கமுடைமை, பொறை உடைமை மற்றும்  ஒழுக்கமுடைமை ஆகியனவும், 
துறவறவியலில் அருள் உடைமையும் அடங்கியுள்ளன. 
பொருட்பாலின் உள்ளடக்கமான அரசியலில் அறிவுடைமை, ஊக்கம் உடைமை
மற்றும் ஆள்வினையுடைமை ஆகியவை அடங்கியுள்ளன. மேலும், ஒழிபியலில் பண்புடைமை மற்றும் நாண் உடைமை ஆகியவகை உள்ளன. 
இதில் ஒவ்வொரு பாயிரவியலில் இருக்கும் உடைமைகளைப் பார்ப்போம். முதலில் இல்லறவியலில் உள்ள உடைமை அதிகாரங்களைப் பார்ப்போம். 
அன்புடைமை:
இவ்வதிகாரத்தில் அன்பின் தன்மையினையும் தேவையினையும் குறித்து திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். இன்று உலகில் நாம் எதிர்கொள்ளும் பலவகையான பூசல்களுக்கும் முக்கியக் காரணம் அன்பில் ஏற்படும் வறட்சியேயாகும். ஒருவருக்கொருவர் பூசல் கொண்டவர் நேருக்கு நேர் வெகுநாள்கழித்து சந்திக்கிறார் என்றால், உண்மையாகப் பாசம் கொண்டவராக இருப்பின் அவரைப் பார்த்த கணத்திலேயே கண்களில் நீர் எட்டிப்பார்க்கும்.
அன்பைப் பூட்டி வைக்கமுடியாது, அது எப்படியாவது வெளிப்பட்டுவிடும் அன்பே பிரதானம் என்கிறார். 
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும் -71 
அன்பிற்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே உள்ளே இருக்கும் அன்பை பலரும் அறிய வெளிப்படுத்திவிடும். 
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.. வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்.. வாழைப் போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்.. உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்.. என்ற கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடலை ‘சுமைதாங்கி” என்ற படத்தில் நாம் கேட்டிருக்கலாம். அப்படி மனிதன் என்பவன் நம்முடைய முன்னோர் வழிபாட்டில் தெய்வங்களாக மாறி சாத்தன் வழிபாட்டையும் மூதாதையர் வழிபாட்டையும் நாம் பார்க்கிறோம். அவர்கள் எல்லோரும் தன் இனத்தைக் காப்பதற்காக முன் நின்றவர்கள் தங்களை போர்களத்தில் அல்லது ஏதோ ஒரு வகையில் நின்று இறந்தவர்கள். ஆகவே அவர்களுக்கு நடுகற்கள் வைத்தும், கோயில்கள் கட்டப்பட்டும், கோட்டங்கள் அமைத்தும் வணங்கப்படுகின்றனர். அத்தகையோர் அந்தச் சிறப்பினைப் பெறுவதற்கு தாங்கள் கொண்டிருந்த மிகுதியான அன்பே ஆகும். இதைத்தான் திருவள்ளுவர் 
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு- 72 என்று குறிப்பிடுகிறார். அதாவது அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர். அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர் என்று குறிப்பிடுகிறார்.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Wednesday, 9 July 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-77:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-77:

கடந்த வாரம் கல்லாமை குறித்து திருவள்ளுவர் எவ்வாறு இடித்துரைக்கிறார் என்று பார்த்தோம். உலக அளவில் தமிழர்கள் கல்வியறிவு பெற்றிருந்த விடயத்தை கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகள் போன்றவற்றில் எல்லாம் பத்திரப்படுத்தி வைத்திருந்த பெருமை உடையவர்கள். ஆதலால் தான் பல்வேறு மூடநம்பிக்கைளினால் நமது முன்னோர்கள் எழுதிய ஓலைச் சுவடிகள் எரியூட்டப்பட்டும் ஆற்றில் விசிறியடிக்கப்பட்டும் அழிக்கப்பட்டாலும் எஞ்சி நிற்பது உலகம் வியந்து பார்க்கும் அளவிற்கு நிற்கிறது. அதனால், செம்மொழி அங்கீகாரமும் பெற முடிந்தது. ஆனால், நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்பது போல பல்வேறு அரசியல் காரணங்களால் கல்வி நிலை பாதிப்படைந்து, பின்வந்த ஆங்கிலேயர்கள் கல்வி புகட்டியது போல மாயை ஏற்பட்டுள்ளது. அவர்கள் அந்த முயற்சி எடுக்கவில்லையெனில் அது அவர்களின் தேவைக்கு உருவாக்கிய போதிலும் அதுவும் மறுமலர்ச்சியைத் தான் தமிழகத்தில் ஏற்படுத்தியது. முன்னாளில் பெற்ற கல்வியறிவானது டிஎன்ஏவில் பொதிந்து நிறைந்துள்ளதால், இன்றும் உலகளவில் தமிழர்கள் அசாத்திய திறமைசாலிகளாக இருந்து வருகின்றதைப் பார்க்க முடிகிறது. இதை எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால், கல்லாதவர்களைக் குறித்து திருவள்ளுவர் அவர்கள் இகழ்ந்துரைத்தாலும் அதற்கும் மாற்று வழிகளைச் சொல்கிறார். 
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை- 415
நூல்களைக் கற்கவில்லை என்றாலும், கற்றறிந்தவரிடம் கேடடுத் தெரிந்து கொள்ள  வேண்டும். அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்தபோதும்  ஊன்றுகோல் போல் துணையாக இருக்கும் என்கிறார். மேலும், கற்க கசறட என்று நமக்கு சொல்லிக் கொடுத்த பெருநாவலர் திருவள்ளுவர் அவர்கள், கற்றதிலும் கற்றபடி நின்றவர்களிடம் கற்றுத் தெளிய வேண்டும் அதுதான் உபயோகமாக இருக்கும் என்கிறார். ஏனெனில் ஒரு வரலாற்றினை யார் வேண்டுமானாலும் எழுதலாம், கல்வெட்டில் என்ன இருந்ததோ அதனை அப்படியே எழுதுபவர்களும் உண்டு, அதற்கான விளக்கத்தினை தனது விருப்பத்திற்கேற்ப இட்டு கட்டி எழுதுபவர்களும் உண்டு. ஆகவே கற்றபடி ஒழுக்கமாக நிற்பவர்களிடம் கேட்பதே உபயோகமானதாக இருக்கும் என்கிறார். பின்வரும் குறளில், 
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல் -415 என்கிறார். 
அதாவது, ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச்சொற்களானது வழுக்கல் உடைய சேற்றுநிலத்தில் நடந்து செல்லும் போது விழுந்துவிடாமல் தாங்கிநிற்கும் ஊன்றுகோல்போல் வாழ்க்கையில் உதவும் என்கிறார். அதேபோல், அறிவானது எப்படி இருக்க வேண்டும் என்றால், 
ஏப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு- 423 என்கிறார். 
எப்பொருளை யார்யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்)அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும் என்று விளக்குகிறார் திருவள்ளுவர் பெருமான். மேலும், கல்வியறிவும் உலகஅறிவும் பெற்றவர்களுக்கு பல விடயங்களை முன்னரே யூகிக்க முடியும். ஆதலால், பல துன்பங்களை வராமல் தடுத்துவிட முடியும். இதனை நாம் வீட்டில் பட்ஜெட் போடுவதைக் கூட உதாரணமாகக் கொள்ள முடியும். இந்த மாதம் என்னுடைய வரவு என்ன, நிச்சய செலவுகள் என்னென்ன, சேமிப்பு என்ன? எதிர்பாராத செலவுகள் என்ன என்ன? வரவுக்கு மீறிய செலவுகள் வரும் என்றால் அதனை எதிர்கொள்வதற்கு என்ன செலவுகளைக் குறைக்க முடியும் மற்றும் வருவாயை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் என்ன என்று கொண்டால், எதிர்பாராமல் விபத்தோ, மருத்துப் பிரச்சனையோ வராமல் காத்துக் கொள்ள அல்லது திடீர் பெரும் செலவைக் கையாள காப்பீடு போன்றவையும் வைத்திருப்பது, எதிர்காலத்தில் வரும் எதிர்பாராத இடர்பாடுகளில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள உதவும் என்று ஆணித்தரமாக சொல்லுகிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். 
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதேர் நோய் - 429
வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையார்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை. 
மேலும், பெரியாரைத் துணைக் கோடல் என்ற அதிகாரத்தில் கல்வியறிவு பெற்றதால் அறிஞர் ஆனவரின் சிறப்பினைக் குறிப்பிடுகிறார். 
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் -445 என்கிறார். 
தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும். என்கிறார். அதனைத் தொடர்ந்து, 
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும் -448 என்கிறார். 
அதாவது கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான் என்கிறார்.  
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Tuesday, 1 July 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-76:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-76:
கல்லாமை
எந்த ஒரு விடயத்தைப் பற்றி யோசித்தாலும், பேசினாலும், செயல்படுத்தினாலும் அதன் நன்மை தீமைகள் இரண்டைப் பற்றியும் கவனத்தில் கொண்டு வருவதே ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுப்பதற்கு செயல்படுத்துவதற்கு உதவும். ஆகவே, கற்றலின் பெருமை மட்டும் சொல்வதோடு திருவள்ளுவர் பெருந்தகை நிறுத்திவிடவில்லை. கல்லாமல் இருப்பதைக் குறித்தும் பேசுகிறார். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கல்வியின் அவசியம் பேசியிருப்பது இன்றும் தேவைப்படும் என்றும் தேவைப்படும் என்று உணர்ந்தே வைத்திருக்கிறார். ஆதலால் அவர் தெய்வப்புலவர் என்றும் அழைக்கப்படும் அழகையும் உணரலாம். 
அரங்குஇன்றி வட்டுஆடி யற்றே நிரம்பிய
நூல்இன்றின் கோட்டி கொளல் -401
என்கிறார். நீங்கள் தாயம் அல்லது சதுரங்கம் விளையாடுகிறீர் என்று வைத்துக் கொள்ளுங்கள் தாயம் விளையாடுவதற்கு தாயக்கட்டைகளும் காய்களும் இருக்கின்றன. அதுபோல சதுரங்கத்திற்கு காய்கள் உள்ளன. ஆனால், இரண்டு ஆட்டத்திற்கும் கட்டங்கள் வரையப்படவில்லையெனில் எப்படி விளையாடுவீர்கள்? இதைத்தான் வள்ளுவரும் குறிப்பிடுகிறார். நிறைந்த நூல்களைக் கற்காமல் அறிஞர்க் அவையில் பேசுவது, அரங்கம் அமைக்காமல் வட்டுக்காய் உருட்டி விளையாடுவது போன்றது என்கிறார். என்னே அருமையானதொரு ஒப்புமை!
ஏப்போதும், நமக்கு ஒரு விடயம் தெரியவில்லை என்றால் அமைதியாக இருப்பது தான் சாலச் சிறந்தது. அதை விடுத்து, தெரியாததை தெரிந்தது போல் கூறினார் நமக்கான நம்பிக்கை என்பது இல்லாமல் போய் விடும். அதேபோல் தான் பின்வரும் குறளிலும் குறிப்பிடுகிறார். 
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின் - 403 என்கிறார்.
 அதாவது கற்ற அறிஞர் முன்னர் பேசாமல் அமைதியாக இருக்கப் பெற்றால், கல்லாதவர்களும் நல்லவர்களே ஆவார்கள் என்கிறார். அடுத்தக் குறளில், 
கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவுடை யார் -404 என்கிறார். அதாவது கல்லாதவன் சொற்கள் சில சமயம் நன்மையானதாக இருந்தாலும், அறிவுடையார் அவற்றை ஏற்க மாட்டார்கள் ;என்கிறார். அப்படியானால் இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பே கற்கவில்லையென்றால் உனக்கு மதிப்பில்லை என்பதனை உணர்த்துகிறார். ஆதலால் கற்றல் என்பது எவ்வளவு அவசியம் என்பது நாம் அனைவருக்கும் உணர்த்த வேண்டியது அவசியமாகிறது. 
ஏன்னதான் புத்திசாலியாகத் தன்னைக் காட்டிக்கொண்டாலும், கற்றவர் முன்பு அது எடுபடாது என்பதை
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து 
சொல்லாடச் சோர்வு படும் -405 என்ற குறளில் குறிப்பிடுகிறார். அதாவது, கல்லாதவன் தன்னை அறிஞன் என்று மதித்துக் கொள்வது;, கற்றவருடன் உரையாடும் போது கெட்டு விடும் என்கிறார். 
நம்மைப் பார்த்து எவராவது ‘பொறம்போக்கு” என்று திட்டினால், நமக்குக் கோபம் வரும் அவர்கள் அந்த வார்த்தை குறிப்பிடும் போது தரிசு நிலத்தை அர்த்தமாக வைத்து திட்டுவதுண்டு அதாவது விளைச்சலுக்குப் பயன்படாது அல்லது வேளாண்மை செய்யப்படாத நிலம் என்று பொருள்படும். இதனை அப்போதே திருவள்ளுவர் எடுத்துரைத்திருக்கிறார். 
உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர் - 406 என்கிறார். 
கல்லாதவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுவது அல்லாமல், களர் நிலம் போல யாருக்கும் பயன்பட மாட்டார்கள் என்கிறார். 
 நிறையப்படங்களில் பார்த்திருக்கலாம், நன்கு வாழ்ந்து கெட்டவர்களின் கதைகளையும் கேட்டிருக்கலாம், நிறைய வசதி வாய்ப்புள்ள ஜமீன்தார்கள், நிலக்கிழார்கள் தங்களுடைய கல்வியறிவின்மையால் ஏமாற்றப்பட்டு தங்களுடைய சொத்துக்களை இழந்திருப்பார்கள். இதையேதான் வள்ளுவரும் சொல்கிறார். 
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு -408
அதாவது, கல்லாதவனிடம் உள்ள செல்வமானது கற்றவனிடம் உள்ள வறுமையை விடத் துன்பம் தரும். 
மேல்குடி என்றும் கீழ்குடி என்றும் பலர் அறிவிழியாக பெருமையடித்துக் கொள்வதுண்டு. உண்மையில் பெருமைக்கு உரியவர் யார் என்று 2000 ஆண்டுகள் முன்பு வள்ளுவர் கூறுவதைப் பாருங்கள்.
மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் 
கற்றார் அனைத்திலர் பாடு -409 என்கிறார். 
கல்லாதவர்கள் மேல்குடியில் பிறந்திருந்தாலும், கீழ்க்குடியில் பிறந்தாலும் கற்றாரைப் போன்று பெருமை இல்லாதவரே ஆவார் என்கிறார். 
கற்பதன் அவசியத்தை இதைவிட மூர்க்கமாக யாராலும் சொல்ல முடியாது. பின்வரும் குறளைக் கவனியுங்கள். 
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர் - 410
கற்றவர்களுக்கும் கல்லாதவர்களுக்கும் உள்ள வேறுபாடு மக்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடேயாகும் என்கிறார். விலங்குகளுக்கும் மக்களுக்கும் உள்ள பல வேறுபாடுகளில் முக்கியமானது நாகரிகமாகும். கற்றவரே நாகரீகமடைந்தவர்கள் என்பதே அவர் கூற்று. கற்றலின் முக்கியத்துவத்தை வளரும் தலைமுறைகளுக்கு உணர்த்துவோம்.

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி