திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-98:
திருக்குறளில் அரசியல்:
திருவள்ளுவரின் திருக்குறளில் உள்ள அரசியல் சார்ந்த 25 அதிகாரங்களையும் 4 கருப்பொருட்களாகப் பிரிக்கலாம். இதில் இறைமாட்சிக்கென்று (அரசன்) 5 அதிகாரங்களையும் அமைச்சரவைக்கென்று (குழு) 10 அதிகாரங்களையும் ஆட்சி முறைக்கென்று (நீதி) 5 அதிகாரங்களையும் தன்னடக்கத்திற்கென்று 5 அதிகாரங்களையும் திருவள்ளுவர் நமக்கு வழங்கியுள்ளார். குறட்பாக்களில் திருவள்ளுவர் ஆட்சி செய்பவரின் தகுதிகளை விடவும் அதிகமாக, அவரைச் சுற்றியுள்ள அமைச்சரவை மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பது தெரிகிறது.
அரசியல் பிரிவானது, இராஜ்யத்தின் புவியியல் எல்லைகளையோ அல்லது மன்னரின் தெய்வீக வம்சாவளியோ அல்லது கஜானாவின் செல்வம் குவிப்பது குறித்து துவக்கவில்லை, மாறாக, இது இறைமாட்சி (அரசனின் சிறப்பு) என்கிற அதிகாரத்துடன் தொடங்குகிறது. அதாவது, பொருள் வளங்களைக் காட்டிலும், மனித மூலதனத்திற்கும், தார்மீக அதிகாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கிறது.
அரசின் இலக்கணம்:
அரசியல் பிரிவின் துவக்கக் குறளானது நவீன அரசியல் வரையறைகளுக்கு இணையாக, அரசின் முழுமையான அரசியல் வரையறைகளுக்கு சமமாக, அரசின் முழுமையான அரசியலமைப்பு வரையறையை வழங்குகிறது.
கீழ்க்காணும் குறளை நோக்குகையில்,
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு (குறள் 381) என்று குறிப்பிடுகிறார்.
திருவள்ளுவர் அதிகாரத்தின் முதல் குறளிளேயே பெரும்பாலும் நாம் அதிகாரத் தலைப்பிற்கான வரையறையை கொடுத்துவிடுகிறார். இதிலும் அப்படித்தான். சிறந்த இராணுவம், மகிழ்ச்சியான மக்கள், நிறைந்த கருவூலம், திறமையான அமைச்சர்கள், நல்ல நட்பு நாடுகள் மற்றும் வலிமையான அரண் ஆகியவற்றை உடையவரே அரசர்களுள் சிங்கம் போன்றவர் ஆவார் என்கிறார். மேற்கூறிய அனைத்தும் எளிதாக நடந்து விடுவதில்லை. இப்போது அணி ஒற்றுமைக்கே பெருநிறுவனங்களில் ஏகப்பட்ட நிர்வாக மேலாண்மை பயிற்சிகள் எடுக்கப்படுகிறன்றன. மக்களாட்சி காலத்திலேயே இப்படி என்றால், மன்னராட்சி காலத்தில் இந்த நிலையினை எட்ட வேண்டும் என்றால், அரச பொறுப்பில் இருப்பவர் எத்தகைய நிர்வாக மேலாண்மை கொண்டிருக்க வேண்டும்? கூட இருப்பவர்கள் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் பெரும்பாலும் நாம் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சனைகள் நமக்கு அருகில் இருப்பவர்கள் மூலமே ஏற்படுகிறது. அதிகாரப் பசிக்காக துரோகங்கள் மத்தியில், எதிரிகள் மத்தியில் பிரச்சனைகளை கண்டறிதல் அதனை சரி செய்தல் மட்டுமல்லாது மேற்கூறிய அனைத்தும் கட்டமைப்பது உண்மையிலேயே சாதாரண காரியமல்ல..
மேற்கூறிய ஆறு அங்கங்களும் சாணக்கியரின் ‘அர்த்த சாஸ்திரத்தில்” காணப்படும் சப்தாங்க (ஏழு அங்கங்கள்) கோட்பாட்டுடன் ஒத்துப் போகின்றன. இருந்த போதிலும் கருத்தாக்கத்தில் ஒரு முக்கிய வேறுபாடும் உள்ளது. கௌடில்யர் அரசனை (ஸ்வாமி) முதல் அங்கமாகப் பட்டியலிட்டு, பின்னர் மற்ற ஆறையும் குறிப்பிடுகிறார். ஆனால் திருவள்ளுவர், ஒரு நுட்பமான சொல்லாட்சி மாற்றத்தின் மூலம், அரசனை மற்ற ஆறு கூறுகளையும் உடையவனாக (Pழளளநளளழச) மாற்றுகிறார். அரசன் வெறுமனே ஒரு அங்கம் மட்டுமல்லாமல் ; அவன் மற்ற ஆறையும் ஒருங்கிணைக்கும் உயிருள்ள சக்தியாகக் குறிப்பிடுகிறார். அவற்றை சரியாகக் கையாளும் ‘சிங்கம்” எனக் குறிப்பிடுகிறார்.
இந்த ஆறு கூறுகளின் இடைவினையே திருக்குறளுடைய அரசியல் சூழமைப்பின் அடிப்படையாகும்:
1. படை: வன்முறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசின் முதல் தேவையாக இருக்கிறது. இது வெளிப்புறத்திலிருந்து வரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக இறையாண்மையை உறுதி செய்கிறது.
2. குடி: மக்கள் தொகையே சட்டப்பூர்வமான தன்மை மற்றும் உற்பத்தித் திறனின் ஆதாராமாக இருக்கிறது. மக்கள் இல்லாமல் அரசன் இருக்க இயலாது, முரண்பாடானதாக இருக்கும்.
3. கூழ்: படை மற்றும் நிர்வாகத்தைத் தக்க வைக்கத் தேவையான குறையாத வளத்தைக் குறிக்கின்றது.
4. அமைச்சு: அரசின் விருப்பத்தைச் செயல்படுத்தும் அதிகார வர்க்கம் ஆகும்.
5. நட்பு : எந்த அரசும் தனித்தீவு அல்ல, அரச தந்திரம் ரீதியான செல்வாக்கு என்பதும் ஒரு வகையான அதிகாரம் ஆகும்.
6. அரண்: பாதுகாப்பின் உள்கட்டமைப்பு (சுவர்கள் மற்றும் புவியியல் நன்மைகள்).
மேலும், அரசனுக்கும் அரசுக்கும் என்ன தேவைகள் இருக்கிறது என்பதை வரும் வாரங்களில் பார்ப்போம்.
தாமதத்திற்கு பொறுத்துக் கொள்க...
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.
நன்றி
https://www.youtube.com/@AAAInfotainment
தோப்பு
No comments:
Post a Comment