Wednesday, 27 August 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-84

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-84:

ஒழுக்கமுடைமை:

கடந்த வாரம் ஒழுக்கமுடைமை அதிகாரத்தின் முதற் பகுதியை பார்த்தோம் இந்த வாரம் இரண்டு பகுதியைப் பார்ப்போம். எவருமே தமக்கு இழிவு ஏற்படுவதை விரும்புவதில்லை. இருந்தாலும் சிறு சலனத்திற்கும் மதிப்பளிப்பவர்கள் அதனை முறையாக கடைப்பிடிப்பதும் இல்லை. ஆகவே, மன வலிமை அதிகமாக இருப்பவர்கள் ஒழுக்கத்தை தீர்க்கமாக கடைபிடிப்பர் என்பதனை பின்வரும் குறளில் தெளிவுபடுத்துகிறார். ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து -136 என்கிறார். அதாவது, மனவலிமை உடையவர், ஒழுக்கம் தவறுவதால் தனக்கு இழிவு ஏற்படும் என்பதனை அறிந்து கொண்டு, சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் தன்னைக் காத்துக் கொள்வர். சராசரி மனிதர்களே பெரும்பாலும் வாழும் இவ்வுலகில் ஒருவரைப் பற்றிய அவதூறுகள் வெகு எளிதாக வீசப்படுகிறது. அவ்வாறு வீசப்படும் அவதூறுகளைத் தடுப்பதும் ஒருவர் தான் கைக்கொள்ளக் கூடியது ஒழுக்கமே ஆகும். ஆகவே, திருவள்ளுவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி -137 ஒழுக்கத்தால் எல்லோருமே மேன்மை அடைவார்கள், ஒழுக்கத்திலிருந்து தவறுவதால் அடையத் தகாத பெரும் பழியையும் அடைவார்கள் என்கிறார். நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களும் ஒருவர் ஒழுக்கமாக இருக்கிறார் என்பது மகிழ்ச்சியையே கொடுக்கிறது. ஏனெனில், ஒழுக்கமாக இருக்கையில் அதற்கான செலவு குறைகிறது, ஆதலால் சேமிக்க முடிகிறது. ஒழுக்கமின்மையால் ஏற்படும் உடல் உபாதைகளும் தடுக்கப்படுகிறது. உதாரணமாக குடிப்பழக்கம் உடையவரை கற்பனை செய்து பாருங்கள், அவருடைய உடல் நிலையையும் குடிப்பழக்கத்தால் அவருடைய குடும்பம் அடையும் இன்னலையும் கவனித்தால் அது எவ்வளவு கொடியது என்று உணரப்படும். ஆகவே ஒழுக்கம் பேணுவதே சிறந்தது என்பதனை நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பைத் தரும் -138 என்கிறார் திருவள்ளுவர். அதாவது, நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும், தீய ஒழுக்கமோ எக்காலத்திலும் துன்பத்தையே தரும் என்கிறார். அடுத்தக் குறளில், தீவிரமாக ஒழுக்கத்தினைக் கடைப்பிடிப்பதனைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல் -139 மறந்தும் தீயச் சொற்ளைத் தம்முடைய வாயினால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்களுக்கு ஒரு போதும் பொருந்தாத ஒரு பண்பாகும். ஆகவே, கோபமே வந்தாலும் பாவம் செய்யாமல் இருப்பது நலம். அடுத்தக் குறளில் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் -140 என்கிறார். உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் என்னும் பண்போடு வாழக் கற்காதவர்கள், பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே ஆவர் என்கிறார். ஆகவே ஒழுக்கத்துடன் வாழ்வதே சிறந்த வாழ்வு என்பதனை வள்ளுவர் அவர்கள் உணர்த்துகிறார்.

Tuesday, 19 August 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-83:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-83:
ஒழுக்கமுடைமை: 
திருவள்ளுவர் அவர்கள் உடைமை என்னும் தலைப்பில் எழுதிய அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றோம். கடந்த வாரங்களில் அன்புடைமை;, அறிவுடைமை மற்றும் அடக்கமுடைமை பற்றிப் பார்த்தோம். புலன்களைத் தீய வழிகளில் செல்லாமல் கட்டுப்படுத்துவதைப் பற்றி அடக்கமுடைமையில் திருவள்ளுவர் குறிப்பிட்டார். அடக்கம் என்பது பெரும்பாலும் தீயவற்றிலிருந்து விலகி நிற்றல் என்ற எதிர்மறைச் செயலைக் குறிக்க, ஒழுக்கம் என்பது நல்லவற்றைச் செய்தல், சமூகத்தோடு இயைந்து ஒழுகுதல் என்ற நேர்மறையான, செயலாக்க ரீதியான நடத்தைகளைக் குறிக்கிறது. அடக்கம் என்ற அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்படும் அற மாளிகையே ஒழுக்கம் ஆகும். இந்த வாரம் ஒழுக்கமுடைமை அதிகாரத்தினைப் பார்ப்போம். 
திருவள்ளுவரின் அறவியலில் ஒழுக்கம் என்பது மற்ற அறங்களைப் போல ஒருசார்புநிலைப் பண்பாகக் கருதப்படவில்லை. மாறாக, அது ஒரு முழுமுதற் பண்பாக, அனைத்து அறங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது. இந்த அதிகாரத்தின் முதற் குறளே இதை ஆணித்தரமாக நிறுவுகிறது. 
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும் - 131
உயிர்தான் வாழ்வின் அடிப்படை நிபந்தனையாக அனைவரும் கருதி வரும் நிலையில், அதையும் விட மேலானதாக ஒழுக்கத்தை நிலைநிறுத்துகிறார். இதன் உள்ளார்ந்த பொருள், ஒழுக்கமற்ற உயிர்வாழ்வு பொருளற்றது என்பதாகும். இதன் மூலம், மனிதன் ஒரு உயிரியல் தன்மையானவன் என்பதனைத் தாண்டி, ஒரு அறவியல் தன்மையானவன் என்பதனை ஆணித்தரமாக நிறுவுகிறார். ஒழுக்கமே மனிதனை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தும் அடிப்படை பண்பாகிறது. 
அடுத்தக் குறட்பாவில்,
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை -132
எந்தெந்த வழியில்  பலஅறங்களை ஆராய்ந்து அதனைக் கொண்டு தெளிவடைந்தாலும், ஒழுக்கமே உயிருக்குத் துணையாகும், எத்தகைய துன்பத்தை ஏற்றுக் கொண்டாவது அதனைக் காத்துக் கொள்ள வேண்டும். 
அடுத்தக் குறட்பாவில்,
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும் - 133 என்கிறார், அதாவது தங்களை உயர்ந்தக் குடி என்று ஒருவன் சொல்லிக் கொள்ள வேண்டும் என்றால் அவர், ஒழுக்கம் உடையவராக இருப்பது தான் உயர்ந்தக் குடிப்பிறப்பின் தன்மை, அப்படி இல்லாமல் ஒழுக்கம்  கெடுதலாக இருத்தல் இழிந்த பிறப்பின் தன்மையாகி விடும் என்கிறார். 
மீண்டும் உயர்பிறப்பு என்று ஒருவன் தன்னை பெருமை பாராட்டிக் கொள்ள வேண்டும் என்றால் அவன் ஒழுக்கமுடையவராக இருத்தலே ஆகும் என்பதனை அடுத்தக் குறட்பாவில் வலியுறுத்துகிறார்.
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் -134 என்கிறார். அதாவது, கற்றதை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ளலாம், ஆனால், வேதமோதுவான் பிறப்பால் வந்த உயர்வு, அவன் ஒழுக்கம் குன்றினால் கெடும் என்கிறார். 
அடுத்த குறட்பாவில்,
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு -135 என்கிறார், அதாவது
பொறாமை உடையவனுக்குச் செல்வம் அமையாதது போல, ஒழுக்கம் இல்லாதவன் வாழ்க்கையிலும் எந்த உயர்வு என்பதும் இல்லை என்கிறார். 
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி


Thursday, 14 August 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-82:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-82:
அடக்கமுடைமை:
கடந்த வாரம், அடக்கமுடமை அதிகாரத்தின் முதற்பகுதியைப் பார்த்தோம், இந்த வாரம் அதன் பிற்பகுதியைப் பார்ப்போம், தாமதத்திற்கு பொறுத்துக் கொள்க:
மனித வள மேலாண்மையில், அல்லது நிறுவனத்தில் எந்த ஒரு சூழலிலும் பணியாளர்களை அல்லது சக ஊழியர்களை கையாள்வதற்கு முக்கியமாக நெருக்கடியான அல்லது பிரச்சனைக்குரிய நேரங்களில் கையாளுவதற்கு தனித்திறமை வேண்டும் முக்கியமாக வார்த்தைகளில் தனிக் கவனம் தேவைப்படுகிறது மேலும்,  கவனிப்பதும் அவசியமான ஒன்றாகிறது. அதற்குப் பிரதிபலிப்பது என்பது மற்றுமொரு அம்சம், இதனை (Emotional Intelligence) உணர்வுசார் நுண்ணறிவு என்கின்றனர். இதனையே வள்ளுவர் பின்வரும் குறள்களில் விளக்குகிறார். 
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து – 126
ஆமையானது தன்னுடைய நான்கு கால்கள், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு மற்றும் செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு எதிரான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் எனில் அது அவனுக்குப் ஏழு வகையான பிறப்புகளிலும் அரணாக இருந்து உதவும் என்கிறார். 
அடுத்தக் குறளில் வார்த்தைப் பயன்பாட்டின் அவசியம் முக்கியம் என்கிறார். 
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு -127
ஒருவர் எப்படிப்பட்ட காரியம் வேண்டுமானாலும் காத்து நின்றிருக்கலாம். ஒருவேளை காக்க முடியாலும் போயிருக்கலாம். ஆனால், எதனைக் காக்கா விட்டாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு காக்கத் தவறினால் அவர் நாவில் இருந்தும் வார்த்தையே அவரைத் துன்பத்தில் கொண்டு போய் சேர்க்கும். அதனால் வார்த்தைப் பிரயோகம் முக்கியான ஒரு விடயம் என்பதனை உணர்த்துகிறார். 
நிறைய பேர் ‘வெடுக் வெடுக்” என்று பேசுவதைக் கேட்டிருப்போம், அவ்வாறு பேசும் போது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல பேச்சில் நஞ்சையும் ஏற்றுவது உண்டு. தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி விவாதம் சர்ச்சையாக மாறுவதற்குக் காரணம் தீச்சொற்கள் பயன்படுத்துதால் சிலசமயம் அவதூறுகள் பரப்பப்படுவதையும் பார்த்திருப்போம். அந்த மாதிரி தீச்சொல்லையே தவறான சொற்களையோ ஒருவர் பிரயோகிக்கும் போது அவர் குறித்த மதிப்புக் கெடுகிறது. அடுத்த முறை அவர் பேசும்போது அவர் பேச்சை விரும்பிக் கேட்டவர்களே முகத்தைச் சுளித்துக் கொண்டு கடந்து செல்வதுண்டு. இதுபோன்ற விடயத்தை முக்காலமும் உணர்ந்த ஞானி விளக்குகிறார் பின்வருமாறு:
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் 
நன்றாகா தாகி விடும் -128
தீய சொற்களின் பொருளால் விளையும் தீமையானது சிறியதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையும் தீமையாகப் போய்விடும். 
அடுத்தக் குறள் பெரும்பாலானோருக்குப் பரிச்சயமான குறள், ‘ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்” என்று சொல்வடை உண்டு. நாவில் இருந்து வெளிவரும் நாவிற்கு அந்த அளவிற்கு வலு உள்ளது. பாருங்கள்..
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு -129 என்கிறார்.
ஒருவனை தீயினால் சுட்டப் புண்ணால் ஏற்பட்ட  தீ;க்காயமும் வடுவும் வெளியே இருந்தாலும் உள்ளே ஆறிவிடும், ஆனால், நாவினால் உதிர்க்கும் தீய சொல்லானது சுடும் மேலுமம் அதன் வடு புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாமல் இருக்கும் என்கிறார். 
தமிழக அரசின் முக்கிய வாசகமாக ‘வாய்மையே வெல்லும்” என்று பார்த்திருப்போம். எவன் ஒருவன் அறத்துடன் வாழ்ந்து வருகின்றானோ, உணர்வுசார் நுண்ணறிவுடன் வாழ்கின்றாரோ அவருக்கு அவதூறுகள் அநீதியான பொய்யான குற்றச்சாட்டுகள் அவர் மீது வீசப்பட்டாலும், அவருடைய நேர்மை அவரைக் காத்து பொய்யர்களை பொதுவெளியில் தெரியப்படுத்தும். இதற்கு நாம் பல உதாரணங்களை பொதுவாழ்வில் நேர்மையானவர்கள் பெற்ற வெற்றியில் இருந்து உணரலாம். இதனையே
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து -130 என்கிறார். அதாவது
கல்வி கற்று மனதினுள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து நிற்கும் என்கிறார்.

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Tuesday, 5 August 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-81:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-81:
அடக்கமுடைமை
திருவள்ளுவர் அவர்கள் உடைமை என்னும் தலைப்பில் எழுதிய அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றோம். கடந்த வாரங்களில் அன்புடைமை மற்றும் அறிவுடைமை பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் அடக்கமுடைமை அதிகாரத்தினைப் பார்ப்போம். 
அடக்கத்துடன் இருப்பது என்பது பணிவு என்னும் பண்புடன் இருப்பதனைக் இருக்கிறது. பணிவு என்றால் தாழ்ந்து இருப்பது என்று அர்த்தம் இல்லை. முந்தைய அதிகாரத்தில் பார்த்தது போன்று அன்புடனும் அருளுடனும் இருப்பவர்களுக்கு இது எளிதான ஒன்றாக இருக்கிறது. அடக்கம் என்பதுவும் ஒருவருடைய செல்வமாக இருக்கிறது. இதில் சொல்லக்கூடிய செல்வம் என்பது ஒருவருடையத் திறனாகக் கொள்ளலாம். 
சிலர் அறைகுறை அறிவுடன் அதிகப்பிரசங்கித்தனமாக உதார் விடுவதைப் பார்த்திருப்போம், சிலர் கத்தியை வைத்துக் கொண்டு அதுதான் சாதியப் பெருமை என்று கூக்குரல் இட்டுக்கொண்டு சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதைப் பார்த்திருக்கின்றோம், வெளியிலிருந்து பார்ப்பவர்கள், ‘என்னடா, இவன் அடங்கவே மாட்டேங்கறான்?” என்ற தொனியில் அவரைப் பார்த்துச் சொல்வதைப் பார்த்திருப்போம். ஆனால், உண்மையில் அன்பும் அருளும் நிரம்பப் பெற்றிருப்பவர்கள் எதையும் சரியான அணுகுமுறையில் கொண்டு செல்வர். இதைத்தான் ‘குறைக்குடம் கூத்தாடும், நிறைகுடம் நீர்த்தழும்புவது இல்லை” என்ற பழமொழி நிறைகுடம் நீர் தளும்பல் இல்”என்ற பழமொழி நானூறில் இருந்து உருவாகிறது. இதன் அர்த்தம் நிரம்பக் கற்றவர் தேவையற்ற சலசலப்பை ஏற்படுத்துவதில்லை நிதானமாகவே இருப்பர். ‘நிறைகுடம்” பூசையில் முக்கிய இடத்தில் இருப்பது போல, மேற்கூறியவாறு அடக்கத்துடன் இருப்பவர் மதிக்கத்தக்கவர் என்பதனை உணரலாம். 
திருவள்ளுவர் அடக்கமுடைமையில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் -121 என்கிறார். ஏற்கனவே கூறியவாறு ஒருவர் அடக்கத்துடன் இருப்பது அவருக்கு என்றும் அழியாதப் புகழைக் கொடுக்கும், அதற்கு நாம் திருவள்ளுவரையே உதாரணமாகக் கொள்ளலாம். அதேபோல், அடங்காமல் இருப்பது ஒருவர் வாழ்வையே இருளாக்கி விடும். அரைகுறை அறிவோடு உணர்ச்சிவசப்பட்டு தவறிழைத்துவிட்டு தண்டணை பெறுவோர்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அடுத்தக் குறளில், 
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு -122
ஒருவர் அடக்கத்தைச் செல்வமாகப் பேணிக் காக்க வேண்டும் என்கிறார். அதைக் காட்டிலும் ஒருவருக்குப் பெரிய செல்வம் என்று எதுவும் இல்லை. ஆகவே அடக்கத்துடன் இருக்க வேண்டும் என்கிறார். 
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின் -123
ஒருவன் மிக சிறந்த திறன்களைப் பெற்றிருந்தாலும், அதனை அவர் எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதைப் பொருத்தே அவருடைய மேன்மை இருக்கும். உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றாலும், ஒரு பணிக்கு நேர்காணலுக்குச் செல்வோர் அந்தப் பணி சம்பந்தமாக நிறைய விடயங்கள் தெரிந்திருந்தாலும், திறன்கள் இருந்தாலும், மரியாதைக் கெட்டத்தனமாகவும், தலைக்கனத்துடனும் நேர்காணலில் பதிலளித்தால், அவருக்குத் திறமை இருந்தாலும், அவருடைய மனப்பான்மையினையும் அதனால் விளைந்த நடத்தையையும் அடிப்படையாகக் கொண்டு அவருக்கு வாய்ப்பு நிராகரிக்கப்படுகிறது. முhறாக, நிரம்பக் கற்றிருந்தாலும், நிதானமாகவும், பணிவுடனும், பொறுப்புடனும் பதிலளிப்பவர்களுக்கு வாய்ப்புகள் எளிதில் கிடைக்கிறது. இதையே 2000 வருடங்களுக்கு முன்னர், ‘அறிய வேண்டுவனவற்றை அறிந்து வைத்துக் கொண்டு நல்ல வழியிலே அடக்கத்தோடு நடக்கும் பண்பெற்றிருந்தால், அந்த அடக்கம் மேன்மையுடையவர்களால் அறியப்பட்டு அதனால் அவனுக்கு மேன்மை கிடைக்கும்; என்கிறார்” 
எந்த ஒரு நிறுவனமும் ஒருவன் நேர்மைத்தன்மை (iவெநபசவைல) மாறாதவனாக இருப்பதையே விரும்பும். அதனை தொடர்ந்து பின்பற்றுபவர்களை மிகப் பெரிய மரியாதையுடன் நோக்கும் அவருக்கு வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும். இந்த உணர்வை முன்னரே அறிந்துள்ள நமது ஆசான் சொல்கிறார்,
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது -124
அதாவது, தன்னுடைய நிலையில் இருந்து மாறாமல் அடக்கத்துடன் இருப்பவனின் தோற்றமானது, பிறர் மனதில் மலையைக் காட்டிலும் மிகப் பெரியதான உயர்வாக இருக்கும் என்கிறார். 
தமிழர்கள் பொதுவாக வாழ்த்தும் போது ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று சொல்வதுண்டு. இந்தப்16 செல்வங்களை அபிராம்p அந்தாதியில் ; என அபிராமி பட்டவர் குறிப்பிடுவதாவது, கல்வி, அறிவு, ஆயள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நம்பிக்கை, நோயின்மை, முயற்சி மற்றும் வெற்றி ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். இதுபோன்ற அனைத்தையுமோ அல்லது பெரும்பாலானவற்றைப் பெற்றவரை செல்வர் எனக் குறிப்பிடலாம். திருவள்ளுவரும் இத்தகையத் தன்மையுடைய செல்வருக்கு குறிப்பிடுவதாவது.
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து -125
அதாவது பணிவு என்னும் பண்போடு எல்லோருக்கும் நலம் பயக்கும் வகையில் ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பானது,  மேலும் ஒரு செல்வமாகும் என்கிறார்.

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி