Tuesday, 25 February 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 58:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 58:
புலவி நுணுக்கம்:
கடந்த வாரம் புலவி அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம் புலவி அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். புலவி என்பது விலகுதல் பிணக்கு, ஊடுதல் போன்றவற்றைக் குறிக்கிறது என்று பார்த்தோம். நுணுக்கம் என்பது இன்னும் ஆழமாகப் பார்ப்பதை உணர்த்துகிறது. புலவி நுணுக்கத்தின் குறட்பாக்களைப் பார்த்தல் எந்தளவுக்கு நுணுக்கமாகச் சென்றிருக்கிறார் என்று தெரியவரும். சரி இப்போதுஇ புலவி நுணுக்கம் அதிகாரத்தில் நுழைந்து பார்ப்போம்...
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு -1311
சில சமயங்களில் நமது விருப்பம் இல்லாமலேயே தொடர்பு இல்லாமலேயே நாம் சிக்கலில் மாட்டிக் கொள்வது உண்டு, மேற்கூறிய பாடலில் காதலனின் நிலையும் அதுதான், காதலனை நோக்கி காதலி இப்படிக் குறிப்பிடுகிறாள், ‘ பரத்தன்மை உடைய என் காதலனே! உன்னைக் காணும் பெண்கள் எல்லாம் உன் மார்பு அனைவருக்கும் பொதுவெனக் கருத்pக் கண்ணால் உன் அழகைப் பருகி மகிழ்வர். எனவே பலரது பார்வைக்கும் விருந்தாகும் உன் மார்பினை நான் தழுவ மாட்டேன்” என்கிறார். 
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து -1312
சாப்பிடும் போது புரை ஏறினால் யாரோ நினைப்பார்கள் என்று தலையைத் தட்டுவோம்இ திருவள்ளுவர் காலத்தில் தும்மினால் வாழ்த்து சொல்ல வேண்டும் போல...’நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன், ‘நீடுழி வாழ்க” என்று சொல்லி அவரோடு பேசுவேன்இ என்று எண்ணி வேண்டும் என்றே அவர் தும்மினார்! நூனா பேசுவேன்?” என்றாள் தலைவி

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் 
காட்டிய சூடினீர் என்று -1313
வீட்டில் பிணங்கிக் கொண்டிருக்கும் போது எப்படி வேண்டுமானாலும் வார்த்தைகள் வருவது சகஜம் தான்...’மரக்கிளையிலிருந்து மலர்ந்த மலர்களைச் சூட்டினாலும்இ நீர் இந்த அழகை எவளோ ஒருத்திக்குக் காட்டுவதற்காகவே எனக்குச் சூட்டினீர் என்று சினம் கொள்வாள்” என்கிறார் திருவள்ளவர் தலைவியின் நிலையில் இருந்து...
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று -1314
தீவிர அன்பு இருக்கும் போது, அடிக்கடி ஊடல் வருவது எதார்த்தம் தான், அப்போது ஒவ்வொரு வார்த்தையும் ஆராய்ச்சி செய்வது தவிர்க்க முடியாதது தான் என்பதை படம் பிடித்துக் காட்டுகிறார். ‘யாரையும் விட உன்னையே நான் மிகுதியாக விரும்புகிறேன்”என்றேன். ஆனால், அவளோ..’யாரையும் விட என்றால்... யாரை விட..? யாரை விட..? என்று கேட்டு ஊடிப் பிணங்கிக் கொண்டாள்”
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் 
கண்நிறை நீர்கொண் டனள் -1315
முந்தைய குறளின் நீட்சியாகக் கூடக் கருதலாம்...இப்படியெல்லாம் பேசினால் என்னதான் செய்வது என்று யோசிக்க வைக்கிறார்... ஆனால், ஆழமான காதலில் இது நடக்கவில்லையென்றால் தான் ஆச்சரியம்...’இந்தப் பிறப்பிலே நாம் பிரியமாட்டோம்” என்று சொன்னேன்இ உடனே அவள் அப்படியெனில் மறு பிறவி என்று உண்டா? அதில் பிரிந்து விடுவோமா? ஏன்று கூறியதாக நினைத்து கண்களில் கண்ணீருடன் இருக்கின்றாள்”
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் 
புல்லாள் புலத்தக் கனள் -1316
காதலுக்கு கண்ணில்லை என்பது போல அன்பின் ஆழம் செல்லச் செல்ல அறிவிற்கும் அங்கு வேலையில்லை...அன்பு மட்டுமே நிரந்தரம் அதற்கு எதுவும் புரியாது இந்தக் குறளைப் போல...’உன்னை நினைத்தேன்” என்று சொன்னதுதான் தாமதம், ‘மறந்தால் தானே நினைக்க முடியும்? அப்படியென்றால் என்னை ஏன் மறந்தீர்? என்கிறாள்” 
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று-1317
வடிவேல் அவர்களின் வார்த்தையில் சொன்னால் கொஞ்சம் ஓவராத்தான் போயிகிட்டு இருக்கு எனலாம்... தலைவன் நிலையை நினைப்பதா? அல்லது தலைவியின் அளவற்ற அன்பை நினைப்பதா? நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்... ‘நான்; தும்மினேன், உடனே அவள் என்னை ‘நூறாண்டு வாழ்க” என்று வாழ்த்தினாள், மறுகணமே... ‘யார் நினைத்ததால் நீங்கள் தும்மினீர்கள்” என்று கேட்டு அழுதாள்” என்கிறார். 
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று -1318
முந்தைய குறளின் தொடர்ச்சி தான் இது, ‘அவள் பிணங்கிக் கொள்வாள் என்று வந்த தும்மலை அடக்கினேன்... அதனைக் கண்ட அவள் ‘உன் ஆள் உன்னை நினைப்பதை எனக்குத் தெரியக் கூடாது என்று மறைக்கிறீரோ” என்று அவள் அழுதாள்” பாவம் இருவரும்...
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று -1319
தலைவன் சமாதானம் படுத்திவிடலாம் என்று முடிவெடுத்து விட்டான். ஆனாலும் அவ்வளவு எளிதாக சரி செய்து விட முடியுமா என்ன? ‘அவள் என்னிடம் ஊடல் கொண்டபோது நான் பணிந்து அவளுடைய ஊடலை நீக்கி சமாதானப்படுத்தினாலும், உடனே அவள், ‘ஓ! அப்படியென்றால் மற்ற பெண்களுக்கும் நீங்கள் இப்படிதான் சமாதானம் செய்வீர்களா?” என்று சினம் கொள்வாள்” என்கிறார். 
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று -1320
பார்த்தது குற்றமாயா? என்று வடிவேல் அவர்கள் கேட்பது போல் இருக்கிறது தலைவனின் நிலை. ‘ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளிடம் எதுவும் பேசாமல் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், ‘யாரை நினைத்து என்னை ஒப்பிட்டு உற்றுப் பார்க்கிறீர்கள்?” என்று கோபம் கொள்வாள்” என்று தலைவி கேட்கிறாள் என்கிறார் திருவள்ளுவர்.

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Wednesday, 19 February 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 57:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 57:
புலவி
கடந்த வாரம் நெஞ்சோடு புலத்தல்அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; புலவி அதிகாரத்தில் இருந்து பார்ப்போம்.; புலவி என்பது விலகுதல், பிணக்கு, ஊடுதல் போன்றவற்றைக் குறிக்கிறது. சரி இப்போது, புலவி அதிகாரத்தில் என்ன புலவிகள் இருக்கின்றது என்று பார்ப்போம்...
.
புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது -1301
ஏங்க வைத்த கண்டு கொள்ளாமல் இருந்து மன வருத்தத்தை ஏற்படுத்திய தலைவன் நெடுநாள் கழித்து வந்து சேரும்போது தலைவியின் மனநிலை என்ன? தலைவியானவள் தனக்குள்ளே சொல்லிக் கொள்கிறாள், ‘நாம் ஊடும் போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம், அதற்காக அவர் வந்ததும், அவரைத் தழுவாமல் இருந்து பிணங்கியிருப்பாயாக” என்று சொல்வது போல் அமைத்துள்ளார் திருவள்ளுவர். 
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல் -1302
உப்பை மிகுதியாகச் சேர்த்தால் என்னாகும்? உண்ண முடியாது, ஆதலால் அதனால் பயனில்லாமல் போகும்! ‘உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்,  ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள கால அளவானது உணவில் இடும் உப்பு போல் ஓரளவு இருக்க வேண்டும், ஊடலை அளவு கடந்து கொஞ்சம் நீட்டினாலும், உப்பின் மிகுதி போல அது கெட்டு விடும்”என்கிறார் ஐயன். ஏன்னே ஒரு ஒப்புமை!
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் 
புலந்தாரைப் புல்லா விடல் -1303
பிணங்கி கொண்டிருக்கும் மனைவியை கண்டு கொள்ளாமல் சென்றால் மனைவியின் நிலை என்ன? இதோ வள்ளுவரே சொல்கிறார். ‘தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே துன்பத்தினால் வருந்தியவரை மேலும் துன்ப நோய்க்கு ஆளாக்கியது போன்ற கொடுமையாகும்” என்கிறார். 
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று -1304
அடுத்த நிலையாக பிணங்கிக் கொண்டிருக்கும் மனைவியை கண்டுக்கொள்ளாமல் இருப்பது எப்படிப் பட்டது என்று திருவள்ளுவர் சொல்கிறார்? ‘தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியிடம் அன்பு செலுத்திடாமல் அவளுடன் கூடாமல் போவது, ஏற்கனவே நீர் இல்லாமல் வாடிய செடியை அடியோடு அறுத்தது போலாகும்” என்கிறார். 
நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணார் அகத்து -1305
காதலர்க்கு எது அழகு சேர்க்கும்? ‘ நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவருக்கு அழகு சேர்ப்பது, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சில் உண்டாகும் ஊடலின் சிறப்பே ஆகும்” என்கிறார். ஊடல் தான் காதலின் அழகு என்பதின் சிறப்பை உணர்ந்தவர் மட்டுமே சொல்ல முடியும். மாபோதகர் இதை தெரிந்து வைத்திருப்பதில் ஆச்சிரியப்படுவதிற்கில்லை…
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும்அற்று -1306
வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் இல்லையென்றால் உப்புச்சப்பு இல்லாததாக மாறிவிடும் என்பதை அழகாக மேற்கூறிய குறளில் விளக்குகிறார். ‘பெரும் பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை இல்லாமற் போனால், மிகக் கனிந்த கனியும், பழுக்காத கருக்காயும் போலப் பயனற்றது ஆகும்” என்கிறார்.
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது 
நீடுவ தன்றுகொல் என்று -1307
சிலர் மிகுந்த சந்தோசத்தில் இருக்கும் போதே அடுத்து என்ன ஆகுமோ? அல்லது அந்தத் துன்பம் என்னை எப்போது ஆட்கொள்ளுமோ? ஏப்படி ஆட்கொள்ளுமோ? ஏன்று வருமுன்னமே யோசித்து வருத்தப்படுவதுண்டு. ‘கூடியிருக்கும் இன்பம் இனிமேலும் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால், ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் உண்டு” என்கிறார் திருவள்ளுவர். 
நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும் 
காதலர் இல்லா வழி -1308
மேற்கூறிய குறள் தற்காலத்தில் தான் பொதுவாக இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால், அப்போதே இதன் வலியினை அழகாக உணர்த்தியுள்ளார் திருவள்ளுவர். ‘நம்மால் இவர் வருந்தினால் என்று அந்த வருத்தத்தை அறியும் காதலர் இல்லாதபோது, வீணாக வருத்தம் அடைவதனால் என்ன பயன்?” என்று எதார்த்தமாகக் கேட்கிறார். 
நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது -1309
மேற்கூறிய கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என்ற பதத்தை விட மேலாக எப்படிச் சொல்ல வேண்டும் என்பதுபோல சொல்கிறார் திருவள்ளுவர். ‘நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும், ஊடலும் கூட அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது” என்கிறார். 
ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்
கூடுவேம் என்ப தவா -1310
‘ஊடல் கொண்ட போது அதனை சரி செய்து கூடாமல் வாட விடுகின்றவரோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் அது கொண்டுள்ள ஆசையே ஆகும்” என்கிறார் தலைவி வழி நின்று. 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Tuesday, 11 February 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 56:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 56:
நெஞ்சோடு புலத்தல்
கடந்த வாரம் புணர்ச்சி விதும்பல்



அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; நெஞ்சோடு புலத்தல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம்.; நெஞ்சோடு புலத்தல்
என்பது காதலர்கள் தன் மனத்தோடு பிணங்தல் அல்லது ஊடல் கொள்ளுதல்  என்பதாகும். மனநலத்தில் ஒரு விடயம் உள்ளது, மற்றவரை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் நிலையில் நின்று பார்க்க வேண்டும் என்பதே அது. இந்த மனிதர் எவ்வாறு அவரவர் மனதில் நின்று இந்தக் குறள்களை வடிக்கிறார் என்பது ஆச்சரியத்தின் உச்சம். நெஞ்சோடு புலத்தல் அதிகாரத்திலும் ஐயன் திருவள்ளுவர் காதலர்கள் மனதில் எப்படி சண்டை போடுகிறார் என்று பாருங்கள்...
முதல் குறளில் காதலியானவள் தன் நெஞ்சைக் கோபித்துக் கொள்வது போல் அமைத்துள்ளார்.
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது -1291
‘என் நெஞ்சமே! என் காதலரின் நெஞ்சமானது நம்மை மறந்து அவர் விருப்பத்தையே மேற்கொள்வதைக் கண்ட பிறகும் நீ எனக்குத் துணையாக நிற்காமல், அவரையே நினைக்கக் காரணம் என்ன?” என்று கோபித்துக் கொள்வது போல் அமைத்துள்ளார். 
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு -1292
முந்தையக் குறளின் அடுத்த நிலையாக இந்தக் குறள் அமைத்துள்ளார். ‘ என் நெஞ்சமே! நம்மீது அன்பு கொள்ளாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்கின்றாயே?” என்ன நியாயம் இது என்று நெஞ்சைப் பார்த்துக் ஊடல் கொள்வது போல் அமைத்துள்ளார். 
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல் -1293
கெட்டவர்க்கு துணையில்லை என்பது போல காதலி புலம்புவதாக அமைத்துள்ளார். ‘என் நெஞ்சமே! நீ என்னிடம் விருப்பம் இல்லாமல் உன் விருப்பத்திற்கு அவர் பின்னாடியே செல்கின்றாயே? துன்பத்தால் கெட்டுப் போனவர்க்கு நண்பராக யாருமே இல்லை என்னும் எண்ணமோ?” என்று நெஞ்சத்திடம் கோபித்துக் கொள்கிறார் காதலி. 
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று -1294
‘என் நெஞ்சமே! நீ அவரைப் பார்க்கும் போது இன்பம் நுகரத்தான் எண்ணுகிறாயே தவிர, அவருடைய தவறுகளை எண்ணி ஊடல் கொண்டு பிறகு உறவு கொள்ள எண்ண மாட்டாய், எனவே அதைப் பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்? நான் பேசுவதாக இல்லை” என்று தன் நெஞ்சத்திடம் பிணங்கிக் கொள்வதாக அமைத்துள்ளார். 
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு -1295
மேற்காணும் குறளைக் காணும் போது தெனாலி படத்தில் கமல்ஹாசன் அவர்களின் எல்லாம் பய மயம் என்ற உரையாடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது. ‘காதலரைக் பெறாத போதும் அஞ்சும், அவரைப் பெற்ற போதும் அவருடைய பிரிவை நினைத்து அஞ்சும், இவ்வாறு என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கின்றது” என்று காதலியின் நிலையாகக் குறிப்பிடுகிறார். 
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் 
தினிய இருந்ததென் நெஞ்சு -1296
உற்ற நண்பன் ஆபத்தில் துணையாக இல்லாத நிலையை என்னவென்று சொல்வது? அப்படி நெஞ்சமே இல்லாத நிலையை விளக்குகிறார் திருவள்ளுவர். ‘காதலர் பிரிவை தனியே இருந்து  நினைத்த போது ,  என் நெஞ்சம் எனக்குத் துணையாகமல் என்னைத் தின்பது போல கொடுமையாக இருந்தது”. 
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு -1297
இந்தப் பொல்லாத நெஞ்சோடு சேர்;ந்ததால் என்னுடைய சிறப்பினை நான் இழந்தேன் என்று காதலி எண்ணுவதாக அமைத்துள்ளார். ‘அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய நிலையில்லாத மட நெஞ்சத்தோடு சேர்ந்து, மறக்கக் கூடாததாகிய நாணத்தையும் மறந்தேனே!” என்று புலம்புவதாகக் குறிப்பிடுகிறார். 
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு -1298
மேற்கூறிய குறளில் காதலின் நெஞ்சத்தில் ஏற்பட்டுள்ள போராட்டத்தைக் காட்டுகிறார். ‘’அவர் மேல் உயிர் போலக் காதல் கொண்ட என் நெஞ்சமானது, ‘பிரிந்து சென்ற கொடுமையாளரை இகழ்ந்தால் அது தமக்கும் இழிவாகும்” என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது”.
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி -1299
தன்னுடன் இருப்பார்கள் என்று நினைத்த நினையில் தனித்து நிற்கும் ஒருவரின் புலம்பல் என்ன என்பதே மேலேயுள்ள குறளாகும். ‘ஒருவருக்குத் துன்பம் வந்த போது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே தமக்குத் துணையாகத போது, வேறு யார்தான் துணையாவார்?”
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி -1300
தம்முடைய உடைமையே நமக்குச் சாதகமாக இல்லாத போது, அயலானாகிய காதலனிடம் மட்டும் எப்படி அன்பு எதிர்பார்க்க முடியும் என்று கேட்கிறார் திருவள்ளுவர் காதலயின் நிலையாக… ‘ஒருவருக்குத் தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே தமக்கு உறவாகாத போது, அயலார் உறவில்லாதவராக இருப்பது என்பது எளிதான ஒன்றேயாகும்” என்கிறார். 
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Wednesday, 5 February 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 55:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 55:
புணர்ச்சி விதும்பல்
கடந்த வாரம் குறிப்பறிவுறுத்தல்   அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; புணர்ச்சி விதும்பல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். புணர்ச்சி விதும்பல் என்பது காதலர்கள் கூடி மகிழ விரைதல்; என்பதாகும். 
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு -1281
‘நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்” என்ற திரைப்பட பாடலைக் கேட்டிருப்போம், மதுவின் மயக்கத்திலே திளைப்பவரின் குரல் அது, திருவள்ளுவர் காலத்திலும் சரி நமது காலத்திலும் கள் களிப்பினை ஏற்படுத்துகிறது. ஆனால், அதனைத் தாண்டிய களிப்பு எது? ‘நினைத்த போது களிப்படைவதும் கண்ட பொழுதிலே மகிழ்ச்சி அடைவது ஆகிய இரண்டு நிலையும் கள்ளுக்குக் கிடையாது, ஆனால், காதல் வயப்பட்டவருக்கு உண்டு”
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின் -1282
காதல் மிகுதியான நிலையில், சின்ன சண்டை கூட வேண்டாம். காதல் நிலை மாறிவிடக் கூடாது என்கிறார். ‘பெண்களுக்குக் காதல் பனையளவாக மிகப் பெரிதாக இருக்கும்போது தினையளவுக்குச் சிறிதாகவேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்” என்கிறார் திருவள்ளுவர். 
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண் -1283
அளவுகடந்த அன்பு தான் புறக்கணிக்கப்பட்டாலும் நிற்பதில்லை என்பதை மேற்கூறிய குறளில் குறிப்பிடுகிறார். ‘என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்களை அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை” என்கிறார். 
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு -1284
மேற்கூறிய குறள், தலைவி தோழியிடம் கூறுவதாக அமைந்துள்ளது. ‘தோழி!, காதலரைக் காண்பதற்கு முன், அவர் செய்த தவற்றை எண்ணி ஊட நினைத்தேன், அவரைப் பார்த்த பிறகு, அதை மறந்து, அவருடன் கூடனே என் மனம் சென்றது”
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து -1285
மேற்கூறிய குறளில் ஒரு சிறந்த கவிஞரைக் காண முடியும், இப்படியெல்லாம் கற்பனை செய்ய இயலுமா? காதலுக்குக் கண்கள் இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அது உண்மைதான் என்கிறார் ஐயன். ‘மை தீட்டும் நேரத்தில் மையைத் தீட்டும் தீட்டு கோலைக் காணாத கண்களின் தன்மையைப் போல, என் காதலனைக் கண்ட போது, அவன் குற்றங்களையும் நான் காணாமற் போகின்றேன்”.
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் 
காணேன் தவறல் லவை -1286
எனக்கு ஒரு நகைச்சுவை ஞாபகத்திற்கு வருகிறது. இரண்டு நண்பர்களுக்கு மத்தியில் நெடுநாள் பகை ஆதலால் அவர்கள் பேசிக் கொள்வதில்லை, ஒருவரையொருபர் பார்த்தால் முறைத்துக் கொள்வதும், இல்லையென்றால் அடித்துக் கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது, அவர்களுக்கான பிள்ளைகள் பிறந்து அவர்களும் பெரியவர்களான பிறகும் பகை தொடர்கிறது. அந்தப் பிள்ளைகளுக்கும் பிள்ளைகள் பிறந்தது. ஒரு நாள் அவர்கள் பேரன் ஒருவன் இரண்டு நண்பர்களில் ஒருவரிடம் கேட்டான். உங்களுடைய பகைக்குக் காரணம் என்ன? அப்போது அந்த இரண்டு நண்பர்களுக்கும் தாம் எதற்காகக் கோபப்படுகிறோம். பகையாக இருக்கிறோம் என்பது ஞாபகத்திற்கு வரவில்லை. அதன் பிறகு தங்கள் பகையை மறந்தனர். தங்களுடைய பழைய நாட்களை நினைத்தனர். அவர்களை விட மிகச் சிறந்த நண்பர்கள் யாரும் இல்லை என்பதை உணர்ந்தனர். இதுபோன்று தான் மேற்கூறிய குறளும், ‘ என்னுடையக் கணவனை நான் காணும் போது அவரது தவறுகள் என் கண்களுக்குத் தெரிவதி;ல்லை. ஆனால், அவரைக் காணாத போதோ தவறல்லாத நல்ல செயல்களையே நான் காண்பதில்லை” என்கிறார். 
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து  -1287
பொய் சண்டையினால் ஏதேனும் பயன் உள்ளதா? ‘பெருக்கெடுத்துச் செல்லும் வெள்ளத்தில் பாய்ந்தால் அது தன்னை இழுத்துச் செல்லும் என்று தெரிந்தும் பாய்கின்றவரைப் போல், தன்னுடைய சினத்தினால் எந்த பலனும் அளிக்காது என்று தெரிந்தும் ஊடுவதால் என்ன பயன்?” என்று கேட்கிறார். 
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் 
கள்ளற்றே கள்வநின் மார்பு -1288
மேற்கூறிய குறளில் , ‘கள்வனே, இழிவு வரத் தகுந்த துன்பங்களையே தந்தாளும், கள்ளுண்டு களித்தவர்க்கும் மேன்மேலும் ஆசையூட்டும் கள்ளைப் போல், நின் மார்பும் ஆசையூட்டுகிறதே” என்கிறார். 
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார் -1289
மேற்கூறிய குறளில், ‘காதல் இன்பமானது மலரை விட மிக மென்மையானது, அந்த உண்மையை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர்கள் உலகத்தில் சிலரே ஆவார்கள்” என்கிறார். 
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று -1290
மேற்கூறிய குறளில், பாசமிகு ஆள் மீது கோபம் இருந்தாலும் நேரில் பார்க்கும் போது தன்னை மறந்துப் பாசப் புன்னகை மலர்வது உண்டு அதனையே காதலர்கள் மத்தியில் எப்படியிருக்கும் என்பதை குறிப்பிடுகிறார். ‘ தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், பிணங்கிய தன்னுடைய நிலையையும் மறந்து வி;ட்டாள்” என்கிறார்.  
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி