Wednesday, 26 November 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-97:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-97:
திருக்குறளில் அரசியல்: 
அரசியல் என்பது ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு மாதிரியாக பரிணமித்து வருகின்றது. முன்னோர்கள் வாழ்ந்த காலங்களில சிறு குழுக்களுக்கான அரசியல்,; நிலப்பகுதி வாரியான அரசியல் என்று இருந்து, பிராந்தியம் அ;ல்லது நாடு அளவிலான அரசியல் என்று பரிணமித்து, பிறகு பிரிட்டிஷாரிடம் அடிமைப்பட்டு கிடந்த காலங்களில் இருந்த அரசியல் மற்றும் சுதந்திரம் பெறுவதற்காக நடந்த அரசியல், சுதந்திரம் அடைந்த பிறகு நடக்கும் அரசியல், அதிலும், கட்சிக்கு கட்சி மாறுபடும் அரசியல் என்று பல்வேறு அரசியல் சூழல்களை பார்த்திருக்கின்றோம், கேட்டிருக்கின்றோம், கடந்து வந்திருக்கின்றோம், கடந்து கொண்டு இருக்கின்றோம். இப்படிப்பட்ட சூழலில் நமது ஐயன் திருக்குறளில் அரசியல் குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். நாமறிந்த வகையில் நிர்வாகம் என்று வரும் போது இரண்டு நூல்கள் முக்கியப் பங்கேற்கின்றன அவை சாணக்கியர் என்று அழைக்கப்படுகின்ற ‘கௌடில்யரின்” ‘அர்த்தசாஸ்திரம்” மற்றொன்று திருவள்ளுவரின் திருக்குறள். முன்னது சாணக்கியரால் நிலைநிறுத்தப்படும் சமஸ்கிருத மரபு அடுத்தது திருக்குறளில் உச்சம் தொடும் தமிழ் அறநெறி மரபு. அர்த்த சாஸ்திரம் அதிகாரத்தை அடைவதற்கான நடைமுறை சார்ந்த, சில சமயங்களில் ஈவு இரக்கமற்ற அணுகுமுறையாக (பொருள் ஈட்டும் அறிவியல் ) கருதப்படுகிறது. ஆனால், திருக்குறளின் அரசியல் பகுதி- இதற்கு எதிரான ஒரு ஆழமான மாற்றுக் கருத்தை முன்வைக்கிறது. நிலையான அரசியல் அதிகாரம் என்பது அறநெறியுடன் பிரிக்க முடியாதபடி பிணைக்கப்பட்டுள்ளது. 
நாம் நன்கு அறிந்தபடி திருக்குறளை அறத்துப்பால், பொருட்பால், மற்றும் காமத்துப்பால் என மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளார். இதில் இரண்டாவது பிரிவான பொருட்பால், பொருளாதார மேலாண்மைக்கான வழிகாட்டி மட்டுமல்லாமல், அதிகாரம், ஆளுமை மற்றும் நிர்வாகத்திற்கான ஒரு விரிவான சமூகவியல் நூலாகும். 
பொருட்பால் மொத்தம் 70 அதிகாரங்களைக் கொண்டுள்ளது.1 இது நூலின் 133 அதிகாரங்களில் பெரும்பகுதியாகும்
பொருட்பாலில் உள்ள முதல் 25 அதிகாரங்களை (அதிகாரங்கள் 39-63) உள்ளடக்கிய அரசியல் பகுதி, தமிழ் அரசியல் சிந்தனையின் அடித்தளமாக அமைகிறது. இந்த 250 குறட்பாக்களும், இறையாண்மையின் உள்கட்டமைப்பை வளர்ப்பது முதல் அரசின் வெளிப்புற நிர்வாகம் வரை, ஒரு அரசனுக்கான முழுமையான பாடத்திட்டமாக அமைகின்றன. தற்போது மக்களாட்சி நடைமுறையில் இருக்கும் நிலையில், அரசனைத் தலைவனாகக் கொண்டு பார்ப்போம். 
அரிஸ்டாட்டில் போன்ற பல பண்டைய அரசியல் சிந்தனையாளர்கள் தனிமனித அறநெறியையும் அரசாங்கத்தையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்தனர். ஆனால், திருவள்ளுவரின் தனித்துவம் என்னவென்றால், பொருள் (செல்வம்/அதிகாரம் ) நிலைத்திருக்க அறம் அவசியம் என்பதில் அவர் காட்டும் உறுதியாகும். அறமற்ற அடித்தளத்தில் கட்டப்பட்ட ஒரு அரசு, அதன் சொந்த முரண்பாடுகளின் எடையால் சரிந்து விடும் என்று இந்த நூல் வாதிடுகிறது. 
இந்தத் தொடரில் இந்த 25 அதிகாரங்களின் கருப்பொருள் வளர்ச்சி, உலகளாவிய அரசியல் தத்துவத்துடனான அதன் ஒப்பீடு (கௌடில்யர், மாக்கியவல்லி மற்றும் பிளேட்டோ ஆகியோருடன் ) மற்றும் நவீன மக்களாட்சி நிர்வாகம், பெருநிறுவன மேலாண்மை ஆகியவற்றில் அதன் பயன்பாடு ஆகியவற்றைக் காண்போம். 
 "அறநூலில்" அரசியல் மற்றும் பொருளாதார சிந்தனைகள் ஆதிக்கம் செலுத்துவது திருவள்ளுவரின் நோக்கத்தைக் காட்டுகிறது: அறத்தை வெற்றிடத்திலோ அல்லது தனிமையிலோ கடைப்பிடிக்க முடியாது. அதற்கு நிலையான சமூக ஒழுங்கு தேவை, அந்த ஒழுங்கிற்குத் திறமையான அரசு தேவை.
 சமூக ஒழுங்கின் ஸ்திரத்தன்மையும் செல்வத்தை உருவாக்குதலும், ஒரு திறமையான அரசனால் வழிநடத்தப்படும் நெறிமுறையான அரசு இயந்திரத்தைச் சார்ந்தே உள்ளன என்று வள்ளுவர் கருதுகிறார். செங்கோன்மை (நீதி) மூலம் காக்கும் அரசன் இல்லாமல், குழப்பமான உலகில் அறத்தைப் பின்பற்றுவதோ இன்பத்தை அனுபவிப்பதோ சாத்தியமில்லை. இந்த வரிசைமுறை அதிகாரத்தின் படிநிலையைக் காட்டுகிறது: முதலில் ஆட்சியாளர் (அரசு) செப்பனிடப்பட்டு கல்வி கற்க வேண்டும்; தலைவன் சரியானால், உறுப்புகள் (அங்கங்கள்)—அமைச்சர்கள், படை, பொருளாதாரம்—சீராக அமையும்; அரசு பாதுகாப்பாக இருக்கும்போதுதான் குடிமக்கள் (குடி) தங்கள் கடமைகளைச் செழிப்பாகச் செய்ய முடியும்.
பரிமேலழகர் போன்ற வரலாற்று உரையாசிரியர்கள், அறத்துப்பால் தனிமனிதனின் மனசாட்சியைக் கையாாள்கிறது என்றால், பொருட்பால் சமூகத்தின் வெளிப்புறத் தொடர்புகளைக் கையாள்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். அரசியல் என்பது இரண்டிற்கும் இடையிலான பாலமாகும். இதில் 61 குறட்பாக்கள் நேரடியாக அரசனுக்குக் கூறப்பட்டாலும், மீதமுள்ள 189 குறட்பாக்கள் அதிகாரம் வகிக்கும் "அனைவருக்கும்" பொருந்தக்கூடிய பொதுவான மேலாண்மை மற்றும் தலைமைத்துவக் கொள்கைகளை விவாதிக்கின்றன.இந்த உலகளாவியத் தன்மை, மன்னராட்சி காலத்தைத் தாண்டியும் நவீன ஜனநாயகத் தலைவர்களுக்கும் பெருநிறுவன நிர்வாகிகளுக்கும் இந்நூலைப் பொருத்தமானதாக ஆக்குகிறது.
“பொருள்” பகுதியிலேயே அரசியல் சார்ந்த பல அதிகாரங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை:
இறையாட்சி / அரசன் தன்மை – ஒரு அரசன் (இன்றைய வகையில் தலைவர் / ஆட்சியாளர்) எப்படிப் படைக்கப்பட வேண்டும்?
அமைச்சு, அமைச்சர் தன்மை – ஆலோசகர்கள், அமைச்சர்கள், நிர்வாகத் தலைவர்கள் பற்றிய கொள்கைகள்
அரண் – fortification என்பது மட்டும் அல்ல; பாதுகாப்பு அமைப்பு, நாட்டு பாதுகாப்பு
பொருளாட்சி – அரசின் பொருளாதார மேலாண்மை, வரிகளின் நியாயம்
படை, படைச்செருக்கு – படைத்துறை, ராணுவ சக்தி, அதன் ஒழுக்கம்
நீதிநிலை, குற்றவியல் – குற்றம்–தண்டனை, நீதியாளுதல்
பருவ நிலை உணர்தல் / கால நிகழ்வு அறிதல் – leader’s sense of timing, policy decision-making
மக்கள் அன்பு, குடிமக்கள் நலம் – மக்கள் நலன், குடிமக்கள் மைய நிர்வாகம்
பொருள் செல்வம், துறந்தொழுகல் – wealth, detachment, ethical use of resources
இவை அனைத்தும் சேர்ந்து, திருக்குறள் அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், நீதிநெறி, தலைமைப் பண்பு ஆகியவற்றுக்கான ஒரு மதிப்புடை நூலாக அமைகிறது.
தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 19 November 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-96:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-96:
 நாணுடைமை:
கடந்த வாரம் நாணமுடைமை என்னும் அதிகாரத்தின் முற்பகுதியைப் பார்த்தோம். இந்த வாரம் அதன் பிற்பகுதியைப் பார்ப்போம். 
உயர்ந்தோர் என்பவர் யார்? தமக்கென வாழாது பிறர் துயரையும் தன் துயரை போல நினைப்பவர் ஆவார். தன்னுடைய நலனுக்காக பிறரை துயரத்திற்கு உள்ளாக்குபவர் அல்ல. திருவள்ளுவர் உயர்ந்தோர் என்று யாரைக் குறிப்பிடுகிறார்? 
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர் -1016 என்கிறார். 
அதாவது, உயர்ந்தோர் என்பவர்கள் தமக்குப் பாதுகாப்பாக நாணத்தைத் தான் கைக் கொள்வார்களே தவிர, பரந்து விரிந்த இந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார் என்கிறார். இதன் மூலம் எந்தளவிற்கு நாணமுடைமைக்கு திருவள்ளுவர் முக்கியத்துவம் வழங்கியுள்ளதைக் காணலாம். 
மேற்கூறிய குறளின் அடுத்த உயர்ந்த நிலை, இதன் மூலம் திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் நாணத்திற்காக எந்த ஒரு நிலையில் இருந்திருப்பர் என்று அறியலாம். திருக்குறள், திருவள்ளுவர் நமக்குத் தந்த வாழ்வியல் நெறி என்பதோடு நிறுத்த முடியாது. அந்த காலத்தில் எந்தளவுக்கு மக்கள் ஒழுக்க நெறியை மதித்து வாழ்ந்தனர் என்பதை திருவள்ளுவர் படம் பிடித்துக் காட்டியுள்ளார் என்று அறியலாம். ‘மானமா? ஊயிரா?” ஏன்று கேள்வி கேட்டால், இந்த காலத்தில்  பெரும்பாலும் உயிர்தான் என்ற நிலையினைக் காண முடிகிறது. ஒழுக்கக் கொள்கைகள் பற்றி பேசுபவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் அல்லது பழமைவாதிகளாகவும் பார்க்கப்படுகின்றனர். பின்வரும் குறளில், 
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர் -1017 என்று குறிப்பிடுகிறார். 
அதாவது, நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் அடிப்படையில் வாழ்பவர்கள் நாணமா?  அல்லது உயிரா? ஏன்ற நெருக்கடி வரும்போது நாணத்தைக் காக்கும் பொருட்டு உயிரை துறப்பர். ஏந்த சூழலிலும் உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தைக் கை விட மாட்டார் என்கிறார். 
‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்” ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்று சொல்லாடல்களைக் கேட்டிருப்போம். எவர் ஒருவர் ஒழுக்கநெறிகளைத் தீவிரமாக கடைப்பிடிக்கிறாரோ அவர் சிரமப்பட்டாலும், இறுதியில் அவர்களுக்குரிய நீதி கிடைக்கும் என்றும் நீதி தவறுபவர்களுக்கு அறமே தக்க சமயத்தில் தண்டனையை வழங்கும் என்றும் கூற்று உண்டு. அதாவது, எந்த நிலையிலும் நீதி நெறியுடன் வாழ்வதே சாலச்சிறந்தது என்பதுதான் அதன் அர்த்தமாகும். அவ்வாறு இல்லையென்றால்  என்ன ஆகும்?
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து -1018 
மேற்காணும் குறளில், ஒருவன் கேட்டவரும் கண்டவரும் வெட்கப்படும் ஒன்றிக்குத் தான் வெட்கப்படாமல் இருந்தால், அவனை விட்டு அறநெறியே வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும் என்கிறார். 
பெரும்பாலான படங்களில் காணும் காட்சி உங்களுக்கு நினைவிருக்கும். வில்லனுடைய தவறான செயல்பாடுகளால், தன்னுடைய குடும்பத்தைப் பாதிப்பிற்கு உள்ளாக்கி பிறகு தானும் கெடும் நிலையினை இறுதியில் அடைவார், இறுதியில் சிலர் திருந்துவர் சிலர் எந்த நிலையிலும் திருந்துவதில்லை. இதுபோன்று வாழ்பவர்களை 2000 வருடத்திற்கு முன்னரே எச்சரித்துள்ளார்.
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை -1019
ஒருவனுடைய ஒழுக்கக் கேட்டால் அவன் குலத்திற்கு இழுக்கு நேரிடும், அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் அவனுக்கும் கேடு உண்டாகும் நலமனைத்தும் கெடும் என்கிறார். 
வயல்வெளிகளில் பறவைகள் பயிரை சேதம் செய்யாமல் இருப்பதற்காக, மனிதரைப் போன்ற பொம்மைகளை செய்து வைப்பதுண்டு. சோலைக்கொல்லை பொம்மை என்று வழங்கப்படும். சில பறவைகள் உண்மையான மனிதர் நிற்கின்றான் என்று நினைத்து வராமல் போவதுண்டு. ஆனால், அந்த பொம்மையானது உண்மையான உயிருள்ள மனிதருக்கு ஒப்பாகாது. பின்வரும் குறளில்,
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை 
நாணால் உயிர்மருட்டி அற்று -1020 என்கிறார். 
மனதினுள் வெட்கம் இல்லாதவர்களின் நடமாட்டமானது, மரத்தால் செய்த பொம்மை உயிர் ஊட்டியிருப்பதாகக் கூறி மயக்குவது போலாகும் என்கிறார். 
இத்துடன் உடைமை என்னும் தலைப்பில் உள்ள அதிகாரங்கள் முடிகிறது. 

Wednesday, 12 November 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-95:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-95:
 நாணுடைமை:
திருவள்ளுவர் அவர்கள் உடைமை என்னும் தலைப்பில் எழுதிய அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றோம். கடந்த வாரங்களில் அன்புடைமை, அறிவுடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அருளுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை மற்றும் பண்புடைமை பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் நாணுடைமை என்னும் அதிகாரத்தைப் பற்றிப் பார்ப்போம். இதுவே உடைமை என்னும் அதிகாரத்தில் எழுதிய கடைசி அதிகாரம் ஆகும். 
இந்த அதிகாரத்தின் தலைப்பே, அதன் ஆழமான தத்துவார்த்த முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. ‘நாணம்” என்பது வெட்கம், ‘உடைமை” என்பது அதனைக் கொண்டிருக்கும் பண்பு. ஆனால், திருவள்ளுவர் இங்கு குறிப்பிடும் ‘நாணம்” என்பது பொதுவாகப் புரிந்து கொள்ளப்படும் சாதாரண வெட்கம் (shyness) அன்று. இது ஒரு ஆழமான, தீவிரமான தார்மீக உணர்வைக் (ethical conscience) குறிக்கிறது. 
திருவள்ளுவரின் பார்வையில் 'நாணுடைமை' என்பது, தகாத செயல்களைச் செய்யும்போது அல்லது அத்தகைய செயல்களைப் பற்றி சிந்திக்கும்போது ஒருவரின் மனசாட்சியில் எழும் கூச்சம், அருவருப்பு மற்றும் தார்மீக உறுத்தல் ஆகும். இது ஒரு செயலற்ற குணம் அல்ல; மாறாக, தீமையை விலக்கும் ஒரு தீவிரமான, அகக் காவல் (internal deterrent) ஆகும். இது ஒருவரின் நடத்தையைக் கட்டுப்படுத்தும் உள்மனத் தடையாகும்.
'நாணுடைமை' அதிகாரத்தை திருவள்ளுவர் 'அறத்துப்பாலில்' (தனிமனித அறம்) வைக்கவில்லை. மாறாகஇ 'பொருட்பாலில்' (பொது வாழ்வு, அரசு, சமூகம்) வைத்துள்ளார். இது ஒரு நுட்பமான மற்றும் ஆழமான philosophical-political தேர்வாகும்.
இந்த அதிகாரத்தை 'குடியியலில்' வைப்பதன் மூலம், திருவள்ளுவர் ஒரு ஆணித்தரமான கருத்தை முன்வைக்கிறார்: 'நாணுடைமை' என்பது ஒரு தனிப்பட்ட குணம் மட்டுமல்ல, அது ஒரு அத்தியாவசியமான பொது மற்றும் சமூக நற்பண்பு (public and social virtue) ஆகும். ஒரு நிலையான, அறம் சார்ந்த சமுதாயமும் அரசும், திறமை அல்லது செல்வத்தை விட, இத்தகைய தார்மீகப் பொறுப்புணர்வும், தவறுகளுக்கு வெட்கப்படும் மனப்பாங்கும் கொண்ட குடிமக்களாலேயே சாத்தியமாகும். சுருக்கமாகச் சொன்னால், 'நாணுடைமை' என்பது ஒரு சிறந்த குடிமகனின் அஸ்திவாரம்; அதுவே ஒரு சிறந்த சமூகத்தின் ஆணிவேர்.
சரி, இனி குறளுக்குச் செல்வோம். 
முன்னுரையில் குறிப்பிட்டுள்ளபடி, முதல் குறளிலேயே திருவள்ளுவர் நாணுடைமைக்கு விளக்கத்தை அளிக்கிறார். பெரும்பாலான இடங்களில் திருவள்ளுவர் தலைப்பிற்கான வரையறையை முதல் குறளிலேயே வைத்துவிடுகிறார். பின்வரும் குறளிலும் அப்படித்தான் வைத்திருக்கிறார். 
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற -1011 என்கிறார். 
அதாவது, நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் வெட்கமானது நாணமில்லை, ஒருவர்  தனது தகாத செயல் காரணமாக கூனிக்குறுகும் செயலே நாணுதல் ஆகும் என்கிறார். 
பலரும் உணர்வதில்லை, இந்த பூமிக்கு மற்ற உயிர்கள் எப்படியோ அப்படித்தான் மனிதனும், இயற்கையை பொறுத்தவரை மனிதரும் மற்ற விலங்கினங்களைப் போல ஒரு பிராணியே! ஆனால், நாம் எப்படி மற்ற விலங்கினங்களில் இருந்து வேறுபடுகிறோம்? திருவள்ளுவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். 
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல 
நாணுடைமை மாந்தர் சிறப்பு -1012
எல்லா உயிர்களுக்கும் உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்ற எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானவை. ஆனால், நல்ல மனிதருக்கு, சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களை தவிர்த்து வாழக்கூடிய நாணுடைமைதான் என்கிறார். இங்கே, திருவள்ளுவர், மனிதர்களுக்கு தார்மீக மனசாட்சியை பிரகனப்படுத்துகிறார். 
அடுத்தக் குறளில், 
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு -1013 என்கிறார்.
இதன் உட்பொருள் என்னவென்றால், உடம்பு இல்லாமல் உயிர் இவ்வுலகில் இயங்க முடியாது, அதுபோலவே, ‘நாணம்” என்ற தார்மீக மனசாட்சி இல்லாமல், ‘சால்பு” அதாவது ‘சான்றாண்மை” என்ற மேன்மை ஒருவரிடம் இருக்கவோ, வெளிப்படவோ, இயங்கவோ முடியாது. ‘நாணம்” என்பது சான்றாண்மையின் பல குணங்களில் ஒன்று அல்ல் அதுவே சான்றாண்மை தங்கியிருக்கும் அடிப்படை ஆதாரம் ஆகும். 
பல இடங்களில் நாம் பார்த்திருக்கின்றோம், தன்னுடைய சுயநலத்திற்காக பிறரை கெடுத்து பெருமை பீற்றுபவர்களை குறிப்பாக அரசியலில், தன்னுடைய பெயருக்காக, தான் அரசியலில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக, கொலை நிகழ்த்துவது, சாதிய வன்மத்தை தூண்டிவிடுவது, மதக் கலவரத்தை கட்டமைப்பது, நிற பேதத்தை வகுப்பது, என்று பலவிதங்களில் பழிபாவச் செயல்களை செய்துவிட்டு தான் பெருமைக்குரியவர்கள் போல காட்டிக் கொள்பவர்களை இடித்துரைக்கிறார் திருவள்ளுவர். 
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணி அன்றோ பீடுநடை -1014 என்கிறார். 
கலைஞர் அவர்களின் உரையில் இருந்து, ‘நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும் அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடை போட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்” என்று விளக்குகிறார். 
அடுத்தக் குறளில், 
பிறர்பழியம் தம்பழியம் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு -1015 என்கிறார். இதனை ஒரு நல்ல தலைவனுக்கு உரிய பண்பாகக் கொளலாம், ஏனென்றால், அரசியல்வாதிகள் சிலர், தங்களுடைய சுயநலத்திற்காக, தான் எதிர்கொண்ட பிரச்சனையில் இருந்து தப்பிப்பபதற்காக தன்னை நம்பியிருக்கும் ஒட்டு மொத்த மக்களையும் குழியில் தள்ளிவிட தயாராக இருக்கும் போக்கைக் காணலாம். ஆனால், எல்லா அரசியல் வாதிகளும் இவ்வாறு இருப்பதில்லை, தலைவராக இருப்பவர் தனக்கு ஏற்படக் கூடிய பழியைப் பற்றி மட்டும் அல்லாமல் பிறருக்கு ஏற்படும் பழியையும் தம்முடைய பழியாக சமமாக மதித்து நாணுபவரை, உலகத்தார் ‘நாணத்திற்கே உறைவிடம் இவர் தான்” என்று சிறப்பித்துச் சொல்வார்கள் என்கிறார். 
தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Tuesday, 4 November 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-94:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-94:

பண்புடைமை:
கடந்த வாரம் பண்புடைமை அதிகாரத்தில் இருந்து முதற்பகுதி குறட்பாக்களைப் பார்த்தோம். இந்த வாரம் அதன் பிற்பகுதியைப் பார்ப்போம். 
உலகம் எவ்விதம் இயங்கிறது? அறிவியல் விளக்கம் வேறு, ஆனால், மானிடவியலின் அடிப்படையில் பார்த்தோமானால், இந்த உலகம் அமைதியாக இயங்கிக் கொண்டிருப்பதற்குக் காரணம் என்னவென்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன் -996 என்கிறார். அதாவது, பண்புடையவர்கள் வாழ்வதால் தான் மக்கள் வாழ்க்கையானது எப்போதும் நிலைத்து இருக்கின்றது. ஆவர்கள் மட்டும் வாழாது போவார்கள் எனில், மனித வாழ்க்கை மண்ணுக்குள் புகுந்து மடிந்து போகும் என்கிறார். அதாவது, உலக நடைமுறைகள் பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும், இல்லையெனில் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும் என்கிறார். 
அடுத்தக் குறளினை பார்ப்பதற்கு முன்பு எனக்கு கௌதம புத்தர் அவர்களின் புகழ்பெற்ற வாக்கியம் ஞாபகத்திற்கு வருகிறது. ‘கருணையே இல்லாமல் மிகச் சிறந்த அறிவுடன் இருப்பதைக் காட்டிலும், அறிவே இல்லாமல் கருணையாளராக இருப்பது சிறந்தது” என்கிறார். அதாவது பண்பற்றவர் பெற்றிருக்கும் அறிவினால் மக்களுக்குப் பலன் கிட்டாது என்பதை நாம் உணரலாம். இந்தக் கருத்து பின்வரும் குறளில் பிரதிபலிக்கிறது. 
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்-997 என்கிறார். 
அதாவது, நன் மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர்கள், மரத்தை அறுக்கும் அரம் போன்று கூர்மை உடையவராக இருந்தாலும், ஓரறிவு கொண்ட மரத்தைப் போன்றவர்கள் ஆவர் என்கிறார். இதில் மரத்தினால் நிறையப் பயன் உள்ளதே என்று நினைத்துக் கொள்ள வேண்டாம், ஆரறிவு மனிதன் ஓரறிவு மரத்தைப் போல சிந்தனையுடன் தான் அவனுடைய செயல்பாடு பண்பற்று இருந்தால் விளங்கும் என்கிறார். 
நாம், நமது மத்தியில் நிறையப் பண்பாளர்களை பார்த்து வருகிறோம். உதாரணமாக நல்லக்கண்ணு ஐயா அவர்களை எடுத்துக் கொண்டோம் என்றால், எவ்வளவு தீமைகள் தான் எதிர்கொண்ட போதிலும் பொறுமையாக அனைத்தையும் கையாண்டார். ஏந்தச் சூழலில் தன்னிடம் இருந்த மேலான பண்பை அவர் கைவிட வில்லை. இதனையே தம்முடைய அடுத்தக் குறளில்,
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் 
பண்பாற்றார் ஆதல் கடை -998 காட்டியுள்ளார் திருவள்ளுவர்.
நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையேச் செய்து கொண்டிருப்பவரிடத்தில் கூட, நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும் என்கிறார். 
‘தனிமையிலே இனிமை காண முடியுமா? நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா?” என்ற பாடலைக் கேள்விப் பட்டிருப்போம். ஒருவர் மக்களோடு பேசிப் பழகும் பண்பில்லாதவர்களாக இருக்கிறார் என்றால், அவர் வாழ்வு இருள் சூழ்ந்த வாழ்வாகவே இருக்கும். ஒருவருடன் பேசுவதன் மூலம் தான் அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்று தெரிய வரும். இல்லையென்றால், அவர் இப்படி நினைத்திருப்பாரோ?, அல்லது அப்படி நினைத்திருப்பாரோ? ஏன்ற ஐயமே மிகுதியாக இருக்கும். அதுவே ஒவ்வொருவரையும் தவராகவும் நினைக்கவும் தோன்றும். பின்வரும் குறளில் திருவள்ளுவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் 
பகலும்பாற் பட்டன்று இருள் -999
அதாவது, நல்லப் பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவருக்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாமல் இருக்கும் பகல் பொழுதில் கூட இருட்டிலேயே இருப்பது போலவாம் என்று குறிப்பிடுகிறார்.  
ஒரு படத்தில் நகைச்சுவைக் காட்சி ஒன்று பார்த்தேன், அதில் கதாநாயகன் சொல்கிறார் ‘வுடு மச்சான், உனக்கு நேரமே சரியில்லைடா” என்கிறார். அதற்கு பதிலளித்த நகைச்சுவை நடிகர் ‘நேரம்லாம் நல்லாதான் இருக்கு, ஆனா, சரியில்லைடா” என்பார். அதுபோல, ஒரு பேரல் நிறையப் பால் இருந்தாலும் ஒரு துளி விடமானது அதனைக் கெடுத்துவிடும். ஒரு வேளை அழுக்கான பாத்திரத்தில் வைக்கப்பட்டப் பாலும் பயன்படாமல் கெட்டுவிடுகிறது. இதனையே உதராணமாகப் பின்வரும் குறளில் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். 
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று -1000
நல்ல பண்பு இல்லாத ஒருவன் பெற்ற பெரும் செல்வமானது, அழுக்குப்பிடித்தப் பாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும் போது, பாத்திரத்தின் அழுக்குத் தன்மையால் பால் திரிந்து ஒருவருக்கும் பயன்படாமல் போவது போல, அவனுடைய செல்வமும் ஒருவனுக்கும் பயன்படாமல் வீணாக்போகும் என்கிறார். 
தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு