Wednesday, 10 December 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-99:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-99:
திருக்குறளில் அரசியல்: 

திருக்குறளில் அரசியல் என்னும் தலைப்பில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். கடந்த வாரம், நல்ல அரசனுக்கு என்னவெல்லாம் பௌதிக ரீதியாக இருக்க வேண்டும் என்று பார்த்தோம். 
அடுத்தபடியாக, அரசின் பௌதிகச் சொத்துகளை நிர்வகிக்கத் தேவையான உளவியல் மற்றும் நடத்தைப் பண்புகளை திருவள்ளுவர் உடனடியாகக் குறிப்பிடுகிறார்.  
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு - குறள் 382
இன்றியமையாத குணங்களாக அஞ்சாமை , ஈகை (கொடை), அறிவு (ஞானம்) மற்றும் ஊக்கம் (விடாமுயற்சி) ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். இதில் 
அஞ்சாமை என்பது வெறும் போர்களத் துணிவினை மட்டுமல்லாது, கடினமான சூழல்களில் முடிவுகளை எடுப்பது குறித்த தார்மீகத் துணிவு மற்றும் எந்த மாதிரியான விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் அறிவுசார்ந்த துணிவைக் குறிப்பிடுகிறார். பயந்து நடுங்கும் தலைவர் தன்னுடைய அரசு முடங்குவதற்குக் காரணமாகி விடுகிறார். 
ஈகை என்று பார்க்கையில் செல்வம் மற்றும் நலத்திட்டங்களைப் பகிர்ந்தளிக்கும் மனப்பான்மையினைக் குறிப்பிடுகிறார். நவீன காலக்கட்டத்தில், இது சமூக நலம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் சமமான பகிர்ந்தளித்தலையும் அர்த்தப்படுத்துகிறது. 
அறிவு (!ஞானம் ) என்பது விமர்சனச் சிந்தனை, கற்றல் மற்றும் பொய்யிலிருந்து உண்மையை அறியும் திறன் ஆகியவற்றினைக் குறிக்கிறது. திருக்குறள் முழுமையையும் பார்த்தால் திருவள்ளுவர் அறிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தெரியவரும். இது நிர்வாக அடிப்படையில் ஒரு அறிவுசார் செயல்பாடு என்பதனைக் காட்டுகிறது. 
ஊக்கம் அல்லது விடாமுயற்சி அல்லது ஆற்றல் என்பது சோர்வற்ற உற்சாகம் மற்றும் உழைப்பினைக் குறிக்கிறது. அரசு என்பது ஒழுங்கின்மையைக் குறைக்கும் ஒரு இயந்திரம், தலைவரிடமிருந்து தொடர்ந்து ஆற்றல் அடிநிலை வரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும். தலைவரிடமிருந்து தொடர்ந்து ஆற்றல் கிடைக்கவில்லை என்றால், ஒழுங்கு குழப்பமாக மாறும் ஆதலால் தொடர் ஊக்கமானது முக்கியமான ஒன்றாகும். 

மேலே அரசனின் தலையாயக் குணநலன்களைக் குறிப்பிட்ட திருவள்ளுவர் அடுத்தக் குறளில் அரசனின் பண்புகளாக இருக்க வேண்டியவற்றைத் தெளிவுபடுத்துகிறார். 
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் 
நீங்கா நிலனான் பவர்க்கு -383 என்கிறார். 
‘தூங்காதே தம்பித் தூங்காதே...” என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடலைக் கேட்டிருப்போம். அதில் தனது கடமைகளை தாமதப்படுத்துவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதனை ‘தூங்காதே” என்று விவரித்திருப்பார். இங்கேயும் திருவள்ளுவர் முன்னரே அவ்விதம் கூறிவிட்டார். நாட்டை ஆளும் மன்னவருக்கு காலம் தாழ்த்தாத தன்மை (தூங்காமை), அனைத்தையும் அறியும் கல்வி, தீயவற்றை எதிர்க்கின்ற போதிலும் நல்லவற்றை செய்வதற்கு ஏற்ற துணிவு ஆகியவை நாட்டை ஆளும் மன்னவரை விட்டு நீங்காமல் எப்போதும் நீடித்து இருக்க வேண்டும் என்கிறார். 
அத்தோடு நில்லாமல் சிறந்த அரசன் எனப்படுபவன் யார்? ஏன்று அடுத்தக் குறளில் விளக்குகிறார். 
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு-384
அதாவது ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் (மக்களின் நலனை முதன்மையாக வைத்து செயல்படுதல்) இருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கியும் (மதுவிலக்கு, மதத் தூண்டுதல்கள் போன்றவை) வீரத்தில் குறைபடாத மானத்தையும் உடையவனே சிறந்த அரசன் என்கிறார். மேற்கூறிய குறளின் மூலம் அறத்தையும், மறத்தையும் ஒருங்கே வலியுறுத்துகிறார் திருவள்ளுவர். 

தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு


Friday, 5 December 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-98:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-98:
திருக்குறளில் அரசியல்: 

திருவள்ளுவரின் திருக்குறளில் உள்ள அரசியல் சார்ந்த 25 அதிகாரங்களையும் 4 கருப்பொருட்களாகப் பிரிக்கலாம். இதில் இறைமாட்சிக்கென்று (அரசன்) 5 அதிகாரங்களையும் அமைச்சரவைக்கென்று (குழு) 10 அதிகாரங்களையும் ஆட்சி முறைக்கென்று (நீதி) 5 அதிகாரங்களையும் தன்னடக்கத்திற்கென்று 5 அதிகாரங்களையும் திருவள்ளுவர் நமக்கு வழங்கியுள்ளார். குறட்பாக்களில் திருவள்ளுவர் ஆட்சி செய்பவரின் தகுதிகளை விடவும் அதிகமாக, அவரைச் சுற்றியுள்ள அமைச்சரவை மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பது தெரிகிறது. 
அரசியல் பிரிவானது, இராஜ்யத்தின் புவியியல் எல்லைகளையோ அல்லது மன்னரின் தெய்வீக வம்சாவளியோ அல்லது கஜானாவின் செல்வம் குவிப்பது குறித்து துவக்கவில்லை, மாறாக, இது இறைமாட்சி (அரசனின் சிறப்பு) என்கிற அதிகாரத்துடன் தொடங்குகிறது. அதாவது, பொருள் வளங்களைக் காட்டிலும், மனித மூலதனத்திற்கும், தார்மீக அதிகாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கிறது.
அரசின் இலக்கணம்: 
அரசியல் பிரிவின் துவக்கக் குறளானது நவீன அரசியல் வரையறைகளுக்கு இணையாக, அரசின் முழுமையான அரசியல் வரையறைகளுக்கு சமமாக, அரசின் முழுமையான அரசியலமைப்பு வரையறையை வழங்குகிறது.
கீழ்க்காணும் குறளை நோக்குகையில்,
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு (குறள் 381)  என்று குறிப்பிடுகிறார்.
திருவள்ளுவர் அதிகாரத்தின் முதல் குறளிளேயே பெரும்பாலும் நாம் அதிகாரத் தலைப்பிற்கான வரையறையை கொடுத்துவிடுகிறார். இதிலும் அப்படித்தான். சிறந்த இராணுவம், மகிழ்ச்சியான மக்கள், நிறைந்த கருவூலம், திறமையான அமைச்சர்கள், நல்ல நட்பு நாடுகள் மற்றும் வலிமையான அரண் ஆகியவற்றை உடையவரே அரசர்களுள் சிங்கம் போன்றவர் ஆவார் என்கிறார். மேற்கூறிய அனைத்தும் எளிதாக நடந்து விடுவதில்லை. இப்போது அணி ஒற்றுமைக்கே பெருநிறுவனங்களில் ஏகப்பட்ட நிர்வாக மேலாண்மை பயிற்சிகள் எடுக்கப்படுகிறன்றன. மக்களாட்சி காலத்திலேயே இப்படி என்றால், மன்னராட்சி காலத்தில் இந்த நிலையினை எட்ட வேண்டும் என்றால், அரச பொறுப்பில் இருப்பவர் எத்தகைய நிர்வாக மேலாண்மை கொண்டிருக்க வேண்டும்? கூட இருப்பவர்கள் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் பெரும்பாலும் நாம் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சனைகள் நமக்கு அருகில் இருப்பவர்கள் மூலமே ஏற்படுகிறது. அதிகாரப் பசிக்காக துரோகங்கள் மத்தியில், எதிரிகள் மத்தியில் பிரச்சனைகளை கண்டறிதல் அதனை சரி செய்தல் மட்டுமல்லாது மேற்கூறிய அனைத்தும் கட்டமைப்பது உண்மையிலேயே சாதாரண காரியமல்ல..
மேற்கூறிய ஆறு அங்கங்களும் சாணக்கியரின் ‘அர்த்த சாஸ்திரத்தில்” காணப்படும் சப்தாங்க (ஏழு அங்கங்கள்) கோட்பாட்டுடன் ஒத்துப் போகின்றன. இருந்த போதிலும் கருத்தாக்கத்தில் ஒரு முக்கிய வேறுபாடும் உள்ளது. கௌடில்யர் அரசனை (ஸ்வாமி) முதல் அங்கமாகப் பட்டியலிட்டு, பின்னர் மற்ற ஆறையும் குறிப்பிடுகிறார். ஆனால் திருவள்ளுவர், ஒரு நுட்பமான சொல்லாட்சி மாற்றத்தின் மூலம், அரசனை மற்ற ஆறு கூறுகளையும் உடையவனாக (Pழளளநளளழச) மாற்றுகிறார். அரசன் வெறுமனே ஒரு அங்கம் மட்டுமல்லாமல் ; அவன் மற்ற ஆறையும் ஒருங்கிணைக்கும் உயிருள்ள சக்தியாகக் குறிப்பிடுகிறார். அவற்றை சரியாகக் கையாளும் ‘சிங்கம்” எனக் குறிப்பிடுகிறார். 
இந்த ஆறு கூறுகளின் இடைவினையே திருக்குறளுடைய அரசியல் சூழமைப்பின் அடிப்படையாகும்:
1. படை: வன்முறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசின் முதல் தேவையாக இருக்கிறது. இது வெளிப்புறத்திலிருந்து வரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக இறையாண்மையை உறுதி செய்கிறது. 
2. குடி: மக்கள் தொகையே சட்டப்பூர்வமான தன்மை மற்றும் உற்பத்தித் திறனின் ஆதாராமாக இருக்கிறது. மக்கள் இல்லாமல் அரசன் இருக்க இயலாது, முரண்பாடானதாக இருக்கும்.
3. கூழ்: படை மற்றும் நிர்வாகத்தைத் தக்க வைக்கத் தேவையான குறையாத வளத்தைக் குறிக்கின்றது. 
4. அமைச்சு: அரசின் விருப்பத்தைச் செயல்படுத்தும் அதிகார வர்க்கம் ஆகும். 
5. நட்பு : எந்த அரசும் தனித்தீவு அல்ல, அரச தந்திரம் ரீதியான செல்வாக்கு என்பதும் ஒரு வகையான அதிகாரம் ஆகும். 
6. அரண்: பாதுகாப்பின் உள்கட்டமைப்பு (சுவர்கள் மற்றும் புவியியல் நன்மைகள்). 
மேலும், அரசனுக்கும் அரசுக்கும் என்ன தேவைகள் இருக்கிறது என்பதை வரும் வாரங்களில் பார்ப்போம். 
தாமதத்திற்கு பொறுத்துக் கொள்க...
தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு