Wednesday, 21 May 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-70:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-70:
கடந்த வாரம், தொழில் இயல், தொழிலைத் தேர்ந்தெடுத்தல், தொழில் செய்ய இடம் மற்றும் காலமறிதல் மற்றும் மூலதனமும் செய்யும் கருவியும் குறித்துப் பார்த்தோம். 
தொழில் செய்வதற்கானத் துணையை வினை செய்பவனைத் தேர்ந்தெடுத்தல்:
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்- 651 என்கிறார் திருவள்ளுவர். 
அதாவது ஒருவருக்கு வாய்ந்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும் என்கிறார்.  ஆகையால்
 நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த 
தன்மையான் ஆளப் படும் - 511 என்கிறார். அதாவது நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் ஆளப்படுவான் என்கிறார். ஆதலால் வினை செய்பவனை தேர்ந்தெடு என்கிறார். 
பயனாளர் மனத்தினை அறிதல்:
புயனாளரின் பண்புகைள ஆராய்ந்து, செயல் செய்ய வேண்டும் என்கிறார். 
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை - 469 என்கிறார். 
அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால் நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். 
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் 
நன்றாகா தாகி விடும் - 128 
தீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாக இருந்தாலும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும் என்கிறார். 
செயல் திறமை:
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வார்
திறப்பாட இலாஅ தவர் - 640
(செயல்களை செய்து முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே முறையாக எண்ணி வைத்திருந்தும் (செய்யும்போது) குறைவானவைகளையே செய்வர். 

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் 
சொல்லலும் வல்லது அமைச்சு - 634
(செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.
செயல் திறமை உடையவனாக இருக்க வேண்டும் என்கிறார். 
தொழிலை தொடங்கிய பின்னர் பின்வாங்காமை:

உடைத்த்ம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர் - 473
தம்முடைய வலிமை இவ்வளவு என்று அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர். 

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 
ஏண்ணுவம் என்பது இழுக்கு - 467 
செய்யத் தகுந்த செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும். துணிந்தபின் எண்ணிப் பார்க்கபலாம் என்பது குற்றமாகும். 

நடுவுநிலைமை:
நடுவு நிலைமையுடன் செயல்படுபவரின் வாணிகம் செழிப்புடனும் செம்மையுடனும் வளரும். 
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின் - 120
பிறர் பொருளையும் தம்பொருள் போல போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும். 

அன்போடும் அறத்தோடும் நின்று பொருள் ஈட்டுதல்:
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை - 659
பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும். 

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை - 657
பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தைவிடச் சான்றோர் வினைத் தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது. 
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை -656 
பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக் கூடாது. 


நன்றி: 
முனைவர் வெ. கீதாமீனாட்சி, பட்டதாரி ஆசிரியர் கணிதம், அரசு உயர்நிலைப்பள்ளி, கேகே நகர், திருச்சி

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Tuesday, 13 May 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-69:

திருக்குறள் காட்டும் தொழிலும் பொருளீட்டு முறைமையும்

தொழில் செய்யத் தொடங்கி, அறவழியில், பொருள் ஈட்டல், தொழிலுக்கு உகந்தது என்றும், அதன் வழி வந்த பொருளே, புதிய வேலை உருவாக்கி, தொழில்நுட்ப முன்னேற்றம் கண்டு, உலகளாவிய போட்டி திறன் உருவாக்கி, புதிய கண்டுபிடிப்பிற்கு வித்திட்டு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை பெற்று, சமூக சமத்துவம் தந்து, நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும், நிலைத் தன்மைக்கும், பயன்தரும் என்பதை உலகிற்கே எடுத்துரைக்கிறது திருக்குறள். 
இயல் ஒன்று தொழில்:
ஏந்த ஒரு பொருளாதாரத்திலும் பொருளாதார நடவடிக்கையின் கணிசமான பகுதிக்கு தொழில்கள் இன்றியமையாதவை. வாழ்க்கை என்பது ஓர் அனுபவமாக இருக்கலாம். ஆனால், அதனை அனுபவிக்க சில அடிப்படை இலட்சியங்கள் உள்ளன என்பதைத் திருக்குறள் தெளிவாக எடுத்துரைக்கிறது. 
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு- 247. 
உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லை அதுபோல பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லை என்கிறார் திருவள்ளுவர். 
தொழிலைத் தேர்ந்தெடுத்தல்:
ஒரு செயலைத் தொடங்குகிறவன், செயல்முறை விளக்கத்தினை முன்பே அதைச் செய்து அறிந்தவர்களிடம் தெளிவாகக் கேட்டு செயலாற்றுதல் சிறப்பாகும்.
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல் - 677
செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அந்தச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடைய கருத்தைத் தான் ஏற்றுக் கொள்வதாகும் என்கிறார்.

தொழில் செய்ய இடம் மற்றும் காலமறிதல்:
செயலுக்குத் தேவையான இடத்தையும், காலத்தையும் முறையாகத் தெரிவு செய்ய வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். 
ஏண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின் -494
தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலை நெருங்கிச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்து விடுவார். 
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் 
கருதி இடத்தாற் செயின் -484
ஒரு செயலை முடிப்பதற்கு ஏற்ற காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகவே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும் என்கிறார் திருவள்ளுவர். 

மூலதனமும் செய்யும் கருவியும்:
முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை – 449 
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அது போல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை என்கிறார். 
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை -758
தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தல், மலையின் மேல் ஏறி, யானைப் போரைக் கண்டாற் போன்றது என்கிறார் திருவள்ளுவர். 
தொழில் செய்வதற்குரிய கருவிகளையும், காலத்தையும், செய்யும் முறை, இந்தச் செயலால் ஏற்படப் போகின்ற அரிய பயன் ஆகியவற்றை திட்டமிட வேண்டும்.

கருவியும் காலமும் செய்கையும் செய்யும் 
அருவினையும் மாண்டது அமைச்சு – 631
செயலுக்கு உரிய கருவியும், ஏற்ற காலமும், செய்யும் வகையும், செய்யப்படும் அரிய செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன் என்கிறார். 
மேலும், 
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின் - 483
செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய கருவிகளுடன் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால், அரிய செயல்கள் என்பவை உண்டோ? ஏன்கிறார் திருவள்ளுவர். 
நன்றி: 
முனைவர் வெ. கீதாமீனாட்சி, பட்டதாரி ஆசிரியர் கணிதம், அரசு உயர்நிலைப்பள்ளி, கேகே நகர், திருச்சி

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Wednesday, 7 May 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-68:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-68:
திருக்குறளில் தொழிலாளர் மேலாண்மை-தொடர்ச்சி:

ஒழுங்கமைத்தல்:
மேலாண்மையில் ஒழுங்கமைத்தல் என்பது. ஒரு அமைப்பின் வளங்களை, செயல்பாடுகளை, பணிகளைத் துறைகளாகப் பிரித்து, ஒழுங்குபடுத்தி, அவற்றின் இடையே சரியான தொடர்புகளை ஏற்படுத்தி, குறிக்கோள்களை எளிதாக அடையும் வகையில் பணியாற்றுவதைக் குறிக்கிறது. இதன் மூலம், ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல் பாட்டையும் கட்டமைக்க முடியும். ஒரு செயலைச் செய்யத் தேவையான பணியாட்கள், கருவிகள், பொருள் ஆகியவற்றை ஆராய்ந்து பணியாற்ற வேண்டும் என்ற கோட்பாட்டைத் திருவள்ளுவர் பின்வரும் குறள்களில் குறிப்பிட்டுள்ளார்.
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் 
இருள்தீர எண்ணிச் செயல் (குறள் 675)
ஒரு செயலைத் தொடங்கும்பொழுது அதற்கு வேண்டிய பொருள் தேவையான கருவி, தக்க காலம், செயல், ஏற்ற இடம் ஆகிய ஐந்தைப் பற்றியும் தெளிவாகச் சிந்தித்துப் பிறகு அச்செயலைத் தொடங்கவேண்டும்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து 
அதனை அவன்கண் விடல் (517)
இந்தத்தொழிலை இக்கருவியால் இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு அத்தொழிலை அவனிடம் ஒப் படைக்க வேண்டும்.
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
 தூங்காது செய்யும் வினை ( 672)
திருவள்ளுவரின் தொழிலியற் சிந்தனைகள்
காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச் செய்யக் காலந்தாழ்த்தக் கூடாது.
ஒழுங்கமைத்தலின் மூலம் ஒரு நிறுவனம் தன் திட்டங்களைத் திறம்பட செயல்படுத்த முடியும் என்பதை இக்குறள்கள் உணர்த்துகின்றன.



ஒருங்கிணைத்தல்:
மேலாண்மையில் ஒருங்கிணைத்தல் என்பது, ஒரு நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளையும், பல பிரிவுகளையும், பல்வேறு பணியாளர்களையும் ஒரே நோக்கத்தை நோக்கி இணைத்துச் செயல்படுதலாக விளக்கப்படுகின்றது. சீரான ஒத்துழைப்பு,சரியான தகவல் பரிமாற்றம், நிர்வாகத் தின் செயல்திறன் ஆகியவற்றின் மூலம், நிறுவனத்தின் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கும்,அதன் குறிக்கோள்களை விரைவில் அடைவதற்கும் ஒருங்கிணைத்தல் உதவுகிறது. ஒருங்கிணைத்தலின் முக்கியத்துவத்தை பின்வரும் குறள்கள் விளக்குகின்றன.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் 
அதுநோக்கி வாழ்வார் பலர்-528
அரசன் எல்லோரையும் பொதுவகையாக நோக்காமல் அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர். அதைப்போலவே,ஊழியர்களின் தகுதியினை ஆராய்ந்து,அவர்களைத் தகுந்த நேரத்தில் சிறப்பித்து ஊக்கப்படுத்தும் தலைமையின் கீழ் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவர்.
தன் கருத்தினைச் சொல்லும்போது கேட்டவரைத் தன்வயப்படுத்தும் பண்புகளுடன்,கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறும் ஆற்றல் கொண்டவனாகத் தலைவன் விளங்க வேண்டும் என வள்ளுவர் (குறள்.643) உரைப்பதும், இதனையே தலைமைப் பண்பின் முக்கியத்துவம் வாய்ந்த மேலாண்மை வல்லுனர்கள்எடுத்துரைப்பதும் குறிப்பிடத்
கட்டுப்படுத்துதல்:
கட்டுப்படுத்துதல் என்பது, ஒரு நிறுவனத்தின் செயல் யாடுகனை செயல்திட்டங்களை, குறிக்கோன்களை அடையத் தேவையான வழிமுறைகளை முறையாகக் கண்காணிக்கும் ஒரு முக்கியமான மேலாண்மை செயல்பாடாகும். இது நிறுவனத்தின் நோக்கங்களை அடைவதற்காக அதன் செயல் பாடுகளை மதிப்பிடுவதற்கும், திருத்துவதற்கும் உதவுகிறது.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் 
வல்லறிதல் வேந்தன் தொழில் -582
எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக் காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.
நாடொறும்நாடி முறைசெய்யா மன்னவன் 
நாடொறும் நாடு கெடும்- 553
நான் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறை செய்யாத அரசன், நான் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் 
சொல்லலும் வல்லது அமைச்சு- 634
நிர்வாகச் சிக்கல்குறித்து நன்றாக ஆராய வேண்டும். அதனை முடிக்கும் வழிகளைச் சிந்தித்துச் செய்தல் வேண்டும். எடுக்கும் முடிவினை மற்றவரின் ஐயத்திற்கு இடமின்றித் துணிந்து கூறுதல் வேண்டும். இத்தகைய பண்புள்ள தலைவன் எடுக்கும் முடிவு சிறப்பானதாக அமையும், வள்ளுவர் அன்று மன்னனுக்குக் கூறிய அறிவுரைகள் இன்றைய நிறுவன மேலாளருக்கும் பொருந்தும்!

நன்றி: திருமிகு. மேனகாநரேசு, க்ளைன்ஸ்போரோ, நியூஜெர்சி

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி



திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-67:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-67:
திருக்குறளில் தொழிலாளர் மேலாண்மை:

மேலாண்மைக் கோட்பாடுகளை 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறளில் திருவள்ளுவர் வழங்கி இருக்கிறார். இவர் வகுத்த மேலாண்மைக் கோட்பாடுகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியவை. ஆராய்ந்து செயலைத் தேர்ந்தெடுத்து, திட்டமிட்டுச் செயலை தகுதியானவரிடம் ஒப்படைத்து, அறிவுடையோரின் நட்பை பேணி, தீமை செய்யாது பொருள் ஈட்ட வேண்டும் என்று மனித சமுதாயத்திற்கு வழிகாட்டுகிறது திருக்குறள். 
திருக்குறள் உணர்த்தும் முகாமைத்துவக் கருமங்கள் கணித்தல்:
கணித்தல் என்பது, கடந்த கால நிகழ்வுகள், நிகழ்காலப் போக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்காலத்தைத் தோராயமாகக் கணக்கிடுதல் ஆகும். கணித்தல் இல்லாமல் ஒரு திட்டத்தின் வாய்ப்புகளைப் பற்றி அறிந்து கொள்வது கடினம். 
தெரிந்து செயல்வகை என்ற அதிகாரத்தில் காணப்படும் பின்வரும் குறட்பாக்கள் கணித்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. 
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும் 
ஊதியமும் சூழ்ந்து செயல் - 461
ஒரு செயலைத் தொடங்குமுன் அதனால் அழிவதையும், அழிந்தபின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். 
தெளிவிலதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்  -464 
இழிவு தருவதாகிய குற்றத்திற்கு அஞ்சுகின்றவர், இன்ன ஊதியம் பயக்கும் என்னும் தெளிவு இல்லாத செயலைத் தொடங்க மாட்டார். 
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும் - 535
இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வரும்போது தன் பிழையை நினைந்து இரங்குவான். எனவே, தரவுகளைச் சேகரித்துச் சரியாக கணிப்பது, ஒரு திட்டத்தின் முன்னேற்றத்தை ஊக்குவிக்க உதவும். 
திட்டமிடுதல்:
திட்டமிடுதல் என்பது மேலாண்மையின் மிக முக்கியமானக் கூறுகளுள் ஒன்று. இது நிறுவனத்தின் குறிக்கோள்களை அடைவதற்கானப் பாதையை முன்கூட்டியே வகுத்து, நிறுவனத்தின் செயல்பாடுகளை வழி நடத்துவதற்கான தளமாகச் செயல்படுகிறது. கூன்ட்ஸ், ஓ’டோனலின் ஆகியோர் தங்கள் நூலில் ‘திட்டமிடுதல் என்பது, என்ன செய்ய வேண்டும், எப்பொழுது செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பனவற்றை முன்கூட்டியே தீர்மானிக்கும் செயல். அது நாம் இருக்கும் இடத்திற்கு நாம் செல்ல விரும்பும் இடத்திற்கும் இடையிலான இடைவெளிக்கு ஒரு பாலமாக அமைகிறது என்று குறிப்பிடுகின்றனர். இந்தக் கருத்தை விளக்கும் குறட்பாக்கள் சிலவற்றை இப்பொழுது பார்க்கலாம்.
வகையறச்சூழாது எழுதல் பகைவரைப் 
பாத்திப் படுப்பதோர் ஆறு – 465
 ஒரு செயலைச் செய்யக் கூடிய வகைகளையெல்லாம் முற்றும் ஆராயாமல் அச்செயலைத் தொடங்குவது, பகைவரை (போட்டியாளரை) மேன்மேலும் வலிமைப்படுத்த உதவும் வழியாகும். 
எண்ணித் துணிகக் கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு -467 செய்யத் தகுந்த செயலையும் வழிகளையும் எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும். துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று 
போற்றினும் பொத்துப் படும் - 468
ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும் .சிறந்த திட்டமிடுதலின் மூலம், தொழிலாளர்களின் செயற்திறனை மேம்படுத்த முடியும் என்பதை வள்ளுவர் வலியுறுத்துகிறார். 


நன்றி: திருமிகு. மேனகாநரேசு, க்ளைன்ஸ்போரோ, நியூஜெர்சி

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி