Monday, 30 December 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 50:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 50:
நெஞ்சோடு கிளத்தல்:
கடந்த வாரம் உறுப்பு நலன் அழிதல்; அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; நெஞ்சோடு கிளத்தல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். நெஞ்சோடு கிளத்தல் என்பது காதலரை பிரிந்த நிலையில் நெஞ்சோடு பேசுதல் அல்லது புலம்புதலைக் குறிப்பதாகும். வாருங்கள் நெஞ்சோடு என்ன பேசிக் கொள்கின்றார்கள் என்று பார்ப்போம்...
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து -1241
மேலே உள்ள குறட்பாவில் திருவள்ளுவர், தலைவி தன் நெஞ்சத்தைப் பார்த்துக் கேட்பது போல் அமைத்துள்ளார். ‘ நெஞ்சே! எதனாலும் தீராத எனக்குத் துன்பத்தை ஏற்படுத்தும் காதல் நோயை தீர்க்க, ஏதாவது ஒரு மருந்தை யோசித்து சொல்ல மாட்டாயா?” என்று கேட்பது போல் அமைத்துள்ளார். அடுத்தக் குறளில்,
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு-1242 என்கிறார், அதாவது தன்னை நினைத்துப் பார்க்காதவரை நீ ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று தன் நெஞ்சிடம் செல்லக் கோபமாக பேசுகிறாள் தலைவி, ‘என் நெஞ்சே! நீ வாழ்ந்து போ: அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை எப்போதும் நினைத்து நினைத்து வருந்துவது உன்னுடைய அறிமையே ஆகும்” என்கிறார். 
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல் -1243
மேலே உள்ள குறட்பாவில், தன் தலைவன் தன்னை நினைக்கவில்லையே என்ற ஏக்கத்தின் நீட்சியை நெஞ்சோடு பேசும் உரையில் இருந்து விளங்குகிறது ‘நெஞ்சமே என்னிடம் இருந்து கொண்டே நீ என் அவரை நினைத்து வருந்துகிறாய்? இந்தத் துன்ப நோயை உண்டாக்கியவரிடம் இதுபோன்று அன்பு கொண்டு நம்மை நினைக்கும் தன்னை இல்லையே”

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் 
தின்னும் அவர்க்காணல் உற்று -1244
தன் தலைவனிடம் கோபம் இருந்தாலும் அவரைப் பார்க்க வேண்டும் என்ற தலைவியின் தீராத வேட்கையினை மேற்கூறிய குறளில் தெரியப்படுத்துகிறார் திருவள்ளுவர், “ எனது நெஞ்சே! நீ அவரிடம் செல்லும் போது, என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக, அவரைக் காண வேண்டும் என்று என் கண்கள் என்னைப் பிடுங்கித் தின்கின்றன”
செற்றார் எனக்கை விடல்;;;;;உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர் -1245
தன்னை நினைத்துப் பார்க்காமல் இருக்கும் தலைவனை நினைத்து கவலையுடன் நெஞ்சோடு பேசிக் கொண்டிருக்கிறாள் தலைவி, ‘நெஞ்சே! நாம் அவர்மீது விரும்பி அன்பு காட்டினாலும், நம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியுமோ?” என்கிறார். 
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு -1246
மேற்கூறிய குறளில், தலைவன் மீது பொய்யாகக் கோபம் கொள்ளும் நெஞ்சத்தைக் கடிந்து கொள்வதுபோல் இயற்றியுள்ளார் அய்யன். ‘என் நெஞ்சே! நான் அவருடன் ஊடினால் அந்த ஊடலை கூடி நீக்கும் திறமையுள்ள என் அன்பானவரைக் கண்டால் பொய்யாகவாவது கொஞ்சம் ஊடிய பிறகு ஊடலை விட்டுக் கூட மாட்டோம். இப்போது அதையும் விட்டுவிட்டு அவரைக் கொடியவர் போல ஏன் பொய்யாக வெறுப்பது போல இருக்கின்றாய், இதை விடுத்து அவரிடம் போயேன்...” என்று நெஞ்சத்திடம் ஆணையிடுகிறாள் தலைவி. அடுத்தப் பாடலிலும் தலைவி நெஞ்சிற்குக் கட்டளையிடுவது போலவே அமைத்துள்ளார்.
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு -1247 என்கிறார். ‘நன்னெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு, இல்லையென்றால் நாணத்தை விட்டு விடு, இந்த இரண்டையும் சேர்த்துப் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது” என்று கூறுகிறார். 
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன்  நெஞ்சு-1248
பரிவுத் துயரத்தில் பாவம் , எப்படியெல்லாம் புலம்பித் தவிக்கிறாள், மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று அவ்வை சொன்னதுபோல், ஒருவர் மதிக்காத போது அவரிடம் வலிய சென்று பேசும் போது... என்ன உரைப்போ? ‘உன்னைத் தான் அவன் மதிக்கலையல்லவா.. அப்புறம் எப்படி கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம அவன்கிட்ட போய் பேசுற...அறிவு சுத்தமா இருக்காதா?’ என்போம், தலைவிக்கும் அப்பஇதுவும் அப்படி ஒரு தவிப்புத்தான். ‘என் நெஞ்சமே! நம்முடைய பிரிவுத் துன்பத்தால் நினைத்து அவர் வருந்தி நமக்கு இரங்கவில்லை.. வந்து அன்பு செய்யவில்லை என்று நான் ஏங்கித் திரிந்த காதலரின் பின் செல்கின்றாயே..அறிவற்ற பேதையே” என்கிறார் தலைவிஃகாதலி. 
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு -1249
புலம்பல் முடிகின்ற தருணம், ஆறுதல் வார்த்தைகள் தானே வெளிப்படும், அப்படிப்பட்ட குறளாக அமைந்துள்ளது மேலே உள்ள குறள், ‘என் நெஞ்சரே! என்னுடைய காதலர் என்னுடைய உள்ளத்தில் குடியிருக்கும் போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?” என்று செல்லமாய் பொய் கோபத்தை தன் நெஞ்சிடம் காட்டுவதுபோல் உரைக்கின்றார். 
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின் -1250
அடுத்தது ஆறுதலின் உச்சம், ஒரு படத்தில் கூட கதாநாயகன் சொல்வார், ‘நான் எங்கு அழுகிறேன், கண்ணு வேர்த்திருக்கு” என்று, அதுபோல நெஞ்சோடு பேசுதலையும் இறுதியில் முடித்து வைத்திருக்கின்றார் திருவள்ளுவர். ‘நம்மோடு சேர்ந்திருக்காமல் நம்மை கைவிட்டுச் சென்ற காதலரை நம் நெஞ்சிலேயே வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகிழந்து வருகின்றோமே” ஏன் அழகிழக்க வேண்டும். அவர்தான் நம்மிடம் இருக்கிறாரே பிரிய வில்லையே என்று ஆறுதல் படுத்திக் கொள்கிறார் தலைவி. 
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Monday, 23 December 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 49:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 49:
உறுப்பு நலன் அழிதல்:
கடந்த வாரம் பொழுதுகண்டு இரங்கல்அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; உறுப்பு நலன் அழிதல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். உறுப்பு நலன் அழிதல் என்பது காதலரை பிரிந்த நிலையில் உடல் உறுப்புகள் நலம் கெடும் நிலையை உணர்த்துவதாகும். வாருங்கள் நாமும் சென்று பார்ப்போம்... 
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண் -1231
பிரிவை நினைத்து அழுது அழுது வாடிய காதலியின் கண்கள் எதனைப் பார்த்து வெட்கப்படுகின்றன? ‘பிரிவைப் பொறுக்காத சிறுமையை துன்பத்தை நமக்கு அளித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரே அவர் என்று... அவரை எண்ணி அழுவதால், காதலியின் கண்கள் அழகிழந்து கிடக்கின்றன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட நறுமன மலர்களுக்கு முன்பு இப்போது கண்கள் வெட்கப்பட்டுக் கிடக்கின்றன” 
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண் -1232
தன் காதலர் தன்னிடம் அன்பு காட்டவில்லை என்பதை பிறருக்கு எப்படி காதலி உணர்த்துகிறார்? இதோ திருவள்ளுவர் சொல்வதைக் கேளுங்கள், ‘பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், தாம் விரும்பிய காதலர் தமக்கு அன்பு செய்யாத தன்மையை பிறருக்குச் சொல்வன போல உள்ளன” என்கிறார். பசலை நிறமும் அடைந்து அதில் கண்ணீரும் சேர்ந்து வருகையில் யார்தான் பிரிவுத் துன்பத்தைக் குறித்து உணர மாட்டார்கள்?
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள் -1233
பசலை நிறமும் கண்ணீரும் மட்டும்தான் பிரிவை உணர்த்துமா என்ன? வேறு எது பிரிவை உணர்த்துகிறது. ‘காதலரோடு கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரிப்பால் பருத்த என் தோள்கள், இப்போது மெலிவடைந்து அவருடைய பிரிவை நன்றாக தெரிவிப்பவைப் போல உள்ளன” ஆக, தோள்களும் பிரிவுத் துன்பத்தைக் காட்டுகிறது என்கிறார் அய்யன்  திருவள்ளுவர். 
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள் -1234
மேற்காணும் குறட்பாவில், தோள் மெலிந்ததால் மேலும் என்ன நிலையடைகிறது என்பதைக் கூறுகின்றார், ‘ தமக்குத் துணையான காதலரை விட்டுப் பிரிந்ததனால், பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள்,பருத்த தன்மை கெட்டு இப்போது வளையல்களும் கழலும் படி மெலிந்ததுள்ளன” என்கிறார். 
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள் -1235
படுபாவி, என்னை இப்படி மாற்றிவிட்டானே என்ற புலம்பலை திருவள்ளுவர் காதலியின் வாயிலாக இப்படிச் சொல்கின்றார். ‘வளையல்களும் கழன்று வீழ, என்னுடைய பழைய அழகும் கெட்டுப் போன தோள்கள், இந்தக் கொடியவரின் கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன”. என்கின்றார்.
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து -1236
காதலர் கொடியவர் என்று கூறிவிட்டால் காதலி மனமகிழ்வாரா? ‘வளையல்கள் கழன்று தோள்களும் மெலிந்து வருவதால், என்னைப் பார்ப்வர்கள் அவரைக் ‘கொடியவர்” என்று கூறக் கேட்டு நானும் வருத்தமடைகின்றேன்”. என்று காதலி குறிப்பிடுவதாக திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். இதுவன்றோ உண்மையான காதல்!.
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் 
வாடுதோட் பூசல் உரைத்து -1237 
கண்டுகொள்ளாமல் இருக்கும் காதலருக்கு உரைப்பாயோ நெஞ்சமே என்று கேட்பது போல் மேலே உள்ள குறட்பாவினை அமைத்துள்ளார் வள்ளுவர்,’ நெஞ்சமே! கொடியவராக மாறிவிட்டு என்னுடைய காதலருக்கு என்னுடைய வாடிய தோள்களின் ஆரவாரத்தை எடுத்துச் சொல்லி, நீயும் பெருமை கொள்வாயோ” என்று காதலி கேட்பது போல் அமைத்துள்ளார். 
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல் - 1238
எவ்வளவு வேகத்தில் பசலை நோய் பற்றும்? 
‘முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கைகளைத் தளர்த்திய அப்பொழுதிலேயே, பொன் வளையல்களை அணிந்த என் காதலியில் நெற்றியின் ஒளி குறைந்ததே” என்று காதலியை நினைத்து காதலன் வருந்துவதாகக் குறிப்பிடுகிறார். கண், தோள் மற்றும் நெற்றி வரை இதுவரை பாதிப்பினைக் காட்டியுள்ளார். அடுத்தக் குறளிலும் இதன் நீட்சியாகவேக் கொடுத்துள்ளார். 
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண் -1239 என்கிறார். அதாவது, ‘காதலன் கையை மெல்ல நெருக்கத்திற்கு இடையே குளிர்ந்த காற்று நுழைய, அதையே ஒரு பிரிவு என்று கருதி பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்து துன்புற்றன” 
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு -1240
மேற்கூறிய குறட்பாவில், ‘குளிர்ந்த சிறு காற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, பசலை நிறம் அடைந்தது, அதனைக் கண்டு அவளுடைய கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்தது” என்கிறார். 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Monday, 16 December 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 48:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 48:
பொழுதுகண்டு இரங்கல் :
கடந்த வாரம் கனவுநிலை உரைத்தல்; அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; பொழுதுகண்டு இரங்கல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். பொழுதுகண்டு இரங்கல் என்பது காதலரை பிரிந்த நிலையில் தலைவி மாலை பொழுதினைக் கண்டு வருந்தும் நிலையை உணர்த்துவதாகும். தன் தலைவனை பிரிந்திருக்கும் நிலையில் வருகின்ற ஒவ்வொரு மாலைவேளையும் தலைவிக்கு எவ்வளவு கொடுமையாக நகர்கின்றது என்பதனை திருவள்ளுவர் தலைவியின் பார்வையில் இருந்து விளக்குகின்றார். வாருங்கள் நாமும் சென்று பார்ப்போம்... 
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது -1221
தலைவரைப் பிரிந்திருக்கும் தலைவிக்கு ஒவ்வொரு நாள் மாலைப் பொழுதும் நரகத்தில் இருப்பது போல் நகர்வதை பின்வருமாறு உணர்த்துகிறார் திருவள்ளுவர்,
‘பொழுதே நீ மாலைக் காலமே அல்ல மாறாக காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிவால் கலங்கியிருக்கும் மகளிரின் உயிரை உண்ணும் முடிவு காலம்... நீ வாழ்க!”
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை -1222
மேற்காணும் குறளில், தன் பார்வையில் தலைவி பார்த்து அதற்காக வருத்தப்படும் நிலையை உணர்த்துகிறார். மிகுதியான துன்பத்தில் இருக்கையில் ஒருவருக்கு ஏற்படும் உளவியலை உணர்த்துகிறார் அய்யன். ‘ மயங்கிய மாலைப் பொழுதே என்னைப் போலவே நீயும் துன்பத்துடன் தோன்றுகின்றாயே, உன்னுடைய துணையும் என்னுடைய காதலர் போல இரக்கம் அற்றதோ?”
 பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும் -1223
மாலைநேர பொழுது தலைவர் இருந்தபோது எனக்கு நன்மை செய்தது இப்போது ஏன் துன்பளிக்கிறது என்று தலைவியின் வருத்தத்தைப் பதிவு செய்கிறார் பின்வருமாறு, ‘
என் காதலர் என்னுடன் இருந்தபோது பயந்து பசலை நிறத்தில் வந்த மாலைப் பொழுதானது இப்போது எனக்கு வருத்தும் ஏற்பட்டுத் துன்பத்தை மேன்மேலும் அதிகரிக்கும்படியாக நாளும் வருகின்றது.”
காதலர் இ;ல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும் -1224
மாலைப்பொழுது பயமுறுத்தும் மாலைப்பொழுதாக அமையுமோ? ஏவ்விதம்? காதலியின் கூற்றைக் கேளுங்கள், ‘காதலர் அருகில் இல்லாத காலத்தில் கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவதைப் போல இந்த மாலைப் பொழுது என் உயிரைக் கொல்வதற்காக வருகின்றதே”
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை -1225
காதலர் இல்லாத பொழுது காலையும் மாலையும் எவ்விதம் இருக்கின்றன என்று தலைவியின் பார்வையில் இருந்து பின்வருமாறு சொல்கிறார் வள்ளுவர். ‘காலைப் பொழுதுக்கு நான் செய்த நன்மை என்ன? என்னை இப்படி பெரிதும் வாட்டி வதைக்கின்ற மாலைப் பொழுதிற்கு நான் செய்த தீமைதான் என்ன?”
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன் -1226
‘மாலைப் பொழுது இந்த அளவிற்கு துன்பத்தை ஏற்படுத்தும் என்பதை காதலர் என்னைப் பிரியாமல் என்னுடன் கூடியிருந்த அந்தக் காலத்தில் நான் அறியவே இல்லையே” என்று காதலன் தன்னுடைன் மகிழ்ச்சியாக இருந்த மாலை நேரத்தை எண்ணிப் பார்க்கிறார் காதலி. 
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய் -1227
ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் மாறிப் போனதோ என்பது போல காதலர் இல்லாத பொழுதுகள் எவ்விதம் இருக்கின்றன என்று காதலி உணர்கிறார்? ‘இந்தக் காதல் என்பது காலையிலே அரும்பாகத் தோன்றி பகலெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப் பொழுதிலே முதிர்ச்சியடைந்து மலரும் ஒரு நோயாகும்.” 
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை -1228
மனதிற்கு இனிமை இல்லாதபோது அமைதி இல்லாதபோது நமக்குப் பிடித்தவைகளும் பிடிக்காமல் போவதுண்டு, தலைவனைப் பிரிந்த தலைவி மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? ‘முன்பு எனக்கு இனிதாய் ஒலித்த ஆயனின் இனிமையான புல்லாங்குழலின் இசையானது மாலைப் பொழுதுக்கு தூதாகி வந்தது மட்டும் இல்லாமல் என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது”
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து -1229
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இன்புற்றுறிக்கும் போது சொல்வோம், அதுவே வருத்தத்தின் உச்சத்தில் இருந்தால்? ‘அறிவு மயங்கும் படியாக மாலைப்பொழுது வந்து படரும் வேளையில் இந்த ஊரும் மயங்கி என்னைப் போல துன்பத்தை அடையும்”.
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர் -1230
மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ? ஜோடி குயிலோன்னு பாடி பறந்ததைத் தான் தேடுதோ? என்று தலைவியின் நிலை ஒவ்வொரு மாலையும் நகர்வதின் துன்பத்தை விளக்குகிறார் பின்வருமாறு, ‘பொருளை ஈட்டுவதற்காகப் பிரிந்து சென்ற காதலரை நினைத்துப் பிரிவுத் துன்பத்தாலே போகாமல் இருந்த எனது உயிரானது இந்த மாலைப் பொழுதிலே நலிவுற்று மடிந்து போகின்றதே”.
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி





Monday, 9 December 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 47:







திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 47:
கனவுநிலை உரைத்தல்:
கடந்த வாரம் நினைந்தவர் புலம்பல் அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; கனவுநிலை உரைத்தல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். கனவுநிலை உரைத்தல் என்பது காதலரை பிரிந்த நிலையில் வரும் கனவின் நிலையை உரைப்பதாகும்.இனி பிரிதலினால் எப்படியெல்லாம் காதலர்கள் கனவின் நிலையை எப்படி உரைத்தார்கள்  என்பதைக் காணலாம். 
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து -1211
பிரிவால் வருந்திக் கிடக்கும் காதலிக்கு எதுதான் ஆறுதல்? காதலியின் குறளாகத் திருவள்ளுவர் வெளிப்படுத்துவதை எதனை? ‘யான் பிரிவால் வருந்தி அயர்ந்து கண் உறங்கிய போது, காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு, யான் கைம்மாறாக என்ன விருந்து படைக்கப் போகின்றேன்?
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன் -1212
‘யான் விரும்பும் போது என்னுடைய கண்கள் உறங்குமானால், அப்பொழுது கனவில் தோன்றும் என்னுடைய காதலருக்கு, யான் தப்பிப் பிழைத்திருக்கும் உண்மையைச் சொல்வேன்”
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்;டலின் உண்டென் உயிர் -1213
காதலரைப் பிரிந்து வாழும் நிலையில் எப்படித்தான் உயிர்வாழ்வது? காதலியின் குரலாக திருவள்ளுவர் சொல்வதைக் கேளுங்கள். ‘நேரில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவிலாவது கண்டு மகிழ்வதால் தான் என்னுடைய உயிர் நீங்காமல் இன்னும் நிலைத்திருக்கின்றது. 
  கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
  நல்காரை நாடித் தரற்கு -1214
  நேரில் அன்பு செய்யாத ஒருவரைத் தள்ளி வைப்பது கடினம், இருந்தாலும் அவருடன் மகிழ்ச்சியாக எப்படி வாழ்வது? இதோ, திருவள்ளுவர் சொல்கிறார்.
  ‘நனவில் அதாவது நேரில் இருக்கும் போது அன்பு செய்யாதக் காதலரைத் தேடி அழைத்துக் கொண்டுக் காட்டுகின்ற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கின்றது” 
அடுத்தக் குறளில் தன் தலைவனை எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்ட தலைவியின் நிலையினைச் சொல்கிறார். 
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது -1215
‘முன்பு நான் நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனியதாக இருந்தது, இப்பொழுது நான் காணுகின்ற கனவும், காணும் பொழுதிலே எமக்கு இனியதாகவே உள்ளது” என்கிறார். 
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன் -1216
என்றும் நினைவில் வாழும் என்று இறந்தவர் வீட்டில் இருப்பவர்கள் தான் பதிவிடுவார்கள.; ஆனால், இந்தப் பதத்தைத் திருவள்ளுவர் எங்குப் பயன்படுத்துகிறார் என்று பாருங்கள்..., தலைவி சொல்கிறார்,’ நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லையென்றால், கனவில் வருகின்ற எம் காதலர் எம்மை விட்டு எப்போதுமே பிரியாதிருப்பார் அல்லவோ?” என்கிறார். அதாவது, நனவில் தான் அவர் வருவதும் பின்பும் பிரிவதும் வாடிக்கையாக இருக்கின்றது. அப்படி நனவு என்று இல்லாமல் கனவு மட்டும் தான் உள்ளதெனில் என்றென்றும் பிரியாத நிலை இருந்திருக்குமே என்று தலைவியின் மனதில் நின்று, பிரிவின் கொடுமையை உணர்த்துகிறார்.
நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது -1217
மேற்கண்ட குறளில், தலைவியின் செல்லக் கோபத்தை வெளிப்படுத்துகிறார் திருவள்ளுவர். ‘நனவில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடுமையாளாரான என்னுடைய காதலர், கனவில் மட்டும் வந்து எம்மை வருத்துவது எதனாலோ?” என்று தலைவியின் நிலையாகக் காட்டுகிறார். என்னதான் அன்பிருந்தாலும் பிரிவு கோபத்தையும் ஏற்படுத்தத் தானேச் செய்யும்?
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து -1218
தலைவன் மீது அளவுகடந்த அன்பு கொண்ட தலைவியால் மட்டுமே இவ்வாறு சொல்ல இயலும், ‘தூக்கத்தில் கனவில் வந்து என் மீது தோளில் சாய்ந்து எனக்கு இன்பம் தந்த என்னவர், நான் விழித்துக் கொண்ட உடன் என் நெஞ்சில் தாவி நுழைந்துக் கொள்கிறார்” என்னே அருமையான கற்பனை. காதலரின் நிலையில் இருந்து தனிமையிலும் இனிமை காணும் உணர்வினை ஏற்படுத்துகின்றார். 
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர் -1219
ஒருவர் மீது எந்தளவு அன்பிருந்தால், தன்னைப் பிரிந்திருக்கும் நிலையிலும் அவரை ஏற்று ஆறுதல் அடைய முடியும், இதோ திருவள்ளுவர் சொல்வதை பாருங்கள், ‘எந்த மகளிர் தன்னுடைய காதலரை அல்லது கணவரைத் தம்முடைய கனவில் காணவில்லையோ, அவரே, நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைஃகணவரைக் குறித்து மனம் நொந்து கொள்வார்கள்” என்று காதலி/தலைவி குறிப்பிடுவதாகச் சொல்கிறார். அதாவது தன் தலைவன் தன்னுடன் நனவில் இல்லையெனினும் கனவில் அவருடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றேன். ஆதலால் அவரிடம் எந்தக் கோபமும் இல்லை என்று நினைக்கிறாள். 
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர் -1220
என்னை விட்டு என்னுடைய காதலர் நனவில் விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று இந்த ஊரார் சொல்கின்றார்களே? அவர் நாளும் என் கனவில் வருவதை அவர்கள் காண்பது கிடையாதோ?
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

Monday, 2 December 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 46:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 46:
நினைந்தவர் புலம்பல் :
கடந்த வாரம் தனிப்படர் மிகுதி அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; நினைந்தவர் புலம்பல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். நினைந்தவர் புலம்பல் என்பது காதலரை நினைத்து புலம்புதலைக் குறிக்கின்றது. இனி பிரிதலினால் எப்படியெல்லாம் காதலர்கள் புலம்பியுள்ளனர் என்பதைக் காணலாம். 
முதல் குறளில், இன்று எங்கு நோக்கினும் கள்ளுக்கடைகளில் குவிந்து மக்களைப் பார்க்க முடிகிறது. அப்படி எனில், அவர்கள் அதில் ஏதோ ஒரு இன்பத்தை அனுபவிப்பதற்காக அங்கு குவிந்துள்ளனர் எனலாம், ஆனால், அதனை விட இனிமையானது எது? இதோ கீழே உள்ள குறளைப் பாருங்கள்.
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது -1201
கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்து இருக்கும் போது நினைத்தாலும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்துவதால், உண்டபோது மட்டும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் கள்ளைக் காட்டிலும் காதல் இனிமையானது என்கிறார் வள்ளுவர். 
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல் -1202
மேற்கூறிய குறளில், தாம் விரும்பி இணைந்த காதலரை பிரிவில் நினைத்தாலும் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால், எந்த வகையிலும் காதல் சுகமானதுதான் என்று பிரிவிலும் நினைவில் கிடைக்கும் சுகத்தினைக் குறிப்பிடுகிறார். 
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும் -1203
நாம் எவ்வளவு முறை வேகமாக வரும் தும்மலை அடக்கியிருக்கிறோம் அல்லது தும்மல் வருவது போல இருக்கும் சமயத்தில் வராமால் அடங்கிவிடும், அந்த சமயத்தில் நாம் ஏதாவது நினைத்ததுண்டா? ஆனால் திருவள்ளுவர் என்ன சொல்கிறார் பாருங்கள் மேற்கூறிய குறளில், ‘வருவது போல இருந்து வராமல் அடங்கி விடுகிறதே தும்மல், அது போன்று என்னை நினைப்பது போலிருந்துவிட்டு நினைக்காமல் விடுகின்றாரோ?” என்கிறார். அடுத்தக் குறளில் காதலர்களுக்கே உரிய சந்தேகத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்...
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர் -1204
எம்முடைய நெஞ்சத்தில் காதலராகிய அவர் தொடர்ந்து எப்போதும் இருக்கின்றாரே? யாமும் அவருடைய நெஞ்சத்தில் இருந்து நீங்காமல் எப்போதும் இருக்கின்றோமா? என்கிறார். 
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல் -1205
ஒரு காதல் பிரிவு எப்படி வேண்டும் என்றாலும் நினைக்கத் தோன்றும் நினைத்துப் புலம்பத் தோன்றும், அதனைத் தான் மேலேயுள்ள குறளிலும் குறிப்பிடுகிறார், ‘தம்முடைய நெஞ்சத்தில் எம்மை வரவிடாமல் காவல் காக்கும் என்னுடைய காதலர், எம்முடைய உள்ளத்தில் மட்டும் ஓயாமல் வந்து செல்வதைப் பற்றி வெட்கப்பட மாட்டாரோ?” என்று காதலரின் புலம்பலைக் குறிப்பிட்டுள்ளார். அடுத்து வரும் குறளும் பல காதலர்கள் மட்டுமல்ல உண்மையான அன்பு கொண்டு பிரிந்து இருக்கும் நிலையில் வாழும் அனைத்துத் தம்பதியனருக்கும் பொருத்தமான குறள் ஆகும். 
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான் 
உற்றநாள் உள்ள உளேன் -1206
‘என் காதலரோடு நான் கூடி வாழ்ந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் நான் உயிரோடு இருக்கின்றேன், இல்லையென்றால், வேறு எதனை நினைத்து நான் உயிர் வாழ முடியும்?” என்று காதலர் புலம்புவதாகக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். நான் மேற்சொன்னக் கூற்று சரிதானே?
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும் -1207
‘மறந்தால் தானே நினைப்பதற்கு” என்ற கூற்று பலரும் கூற நாம் ஒருவேளைக் கேள்விப்பிட்டிருக்கலாம், இதை 2000 வருடங்களுக்கு முன்னரே, பிரிவுத் துன்பத்தில் புலம்புதலில் ஒருவர் உள்வாங்கி குறிப்பிடுகிறார் என்றால் அவரை ஞானி என்று குறிப்பிடாமல் வேறு என்ன சொல்வது, இதோ குறளின் அர்த்த்ம். ‘மறதி என்பதே இல்லாமல் அவரை நினைத்துக் கொண்டிருக்கும் போதே உள்ளத்தைப் பிரிவு சுடுகின்றதே, அப்படி இருக்கும் போது அவரை நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?”
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு -1208
உண்மையான அன்பின் சிறந்த உதவி எது என்பதை விளக்கும் குறள், ‘என் காதலரை நான் எவ்வளவு அதிகமாக நினைத்தாலும் அதற்காக அவர் என் மேல் கோபம் கொள்ள மாட்டார். இத்தகைய அன்புள்ளம் கொண்ட அவர் எனக்குத் தரும் சிறந்த உதவியே அதுதான்”. 
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் 
அளியின்மை ஆற்ற நினைந்து -1209
பிரிவின் துயரத்தைக் குறிப்பிடும் குறள் இது, ‘நாம் இருவரும் வேறானவர் அல்ல என்று கூறிய காதலர் கொஞ்சம் கூட இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கின்றது”
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி -1210
பிரிந்திருக்கும் நிலையில் இருக்கும் சிலர் நிலவைப் பார்க்கையில் அதே சமயம் அவருடைய காதலரும் வெளியூரில் இருக்கும் நிலையில் நிலவைப் பார்த்துக் கொண்டிருப்பதாக இருந்தால், அந்த நிலையில் நிலவை ஒரே சமயத்தில் பார்ப்பதன் மூலம் அது இருவரின் பிணைப்பாகவும் தாங்கள் அருகருகே இருப்பதாகவும் நினைக்கும் வாய்ப்பினை ஏற்படுத்துகின்றது, இது போன்ற நிலையினை திருவள்ளுவர் எப்படிக் கையாளுகின்றார்? 
‘நிலவே என் உள்ளத்தில் பிரியாமல் இருந்து இறுதியில் என்னைப் பிரிந்துச் சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் கண்டுபிடிப்பதற்குத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக என்று காதலி கூறுகிறார்”. என்னே திருவள்ளுவரின் ஞானம்!
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி